Tuesday, December 19, 2006

மெகா தொடர்கள் 2006

விரைவில் முடிந்து விடும் என்று நம்பவைக்கப்படும் செல்வி போன்ற மெகா தொடர்களை இங்கே எதிர்பார்த்து வந்திருந்தால், சாரி; இந்தப் பதிவு, 2006இல் என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவுத் தொடர்களைப் பற்றிய ஒரு பார்வை. அதிகம் தொடர்கள் படிக்காத நான் படித்த, ரசித்த தொடர்களின் பட்டியல் இது:

* கல்யாணமாம் கல்யாணம் - இளவஞ்சி
கல்யாணத்திற்குத் தயாராகும்/தயாராக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இளைஞர்களுக்கான தொடர். வாராவாரம் ஆரவாரம் என்ற பதத்திற்குப் பொறுத்தமாக அடுத்த இடுகை எப்போது வரும் என்று ஆவலுடன் காக்கவைத்தார் வாத்தியார்.. அப்புறம் எங்கே போனார் என்று தான் தெரியவில்லை.. வாத்தியார்! எங்கே இருக்கீங்க?!!

* பாலியல் கல்வி- பெற்றோருக்கு - எஸ் கே
மருத்துவர் எஸ்கேவின் பாலியல் கல்வி பற்றிய தொடர். பாலியல் கல்வி என்பதற்கும் மேலே, பொதுவாக குழந்தை வளர்ப்புக்கே பயனுள்ள தொடர் இது. கண்டிப்பாக படிக்க வேண்டியது

* அறிவியலும் ஆன்மீகமும் - செந்தில் குமரன்
கூடியவரை இந்தத் தொடரைப் படித்துவிடுவது என் வழக்கம். இன்னும் இதில் சமீபத்துப் பதிவுகள் சில விட்டுப் போய்விட்டன. இடுகைகளின் நீளம், அதீத ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு, வருத்தங்கள் இருந்தாலும், தொடர்ந்து படிக்க நல்ல தொடர் இது. இப்போது தமிழோவியத்திலும் இடம்பெற்றுவிட்டது போலும்.. வாழ்த்துக்கள் செந்தில்!

* வலைபதிவர்களுக்குப் பட்டமளிப்பு விழா - வரவனையான்
வலைபதிவர் கூட்டங்களை இத்தனை அற்புதமான கற்பனை கலந்து, விளையாட்டாக எழுத முடியுமா என்று வியக்க வைத்த தொடர் இது. இந்தப் பதிவின் மூலம் தான் வரவனையின் பிற பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாயிற்று. அத்துடன் இந்தத் தொடர் மூலம் எங்கள் பா.க.சவிற்கு ஒரு நிரந்தரத் தலைவரும் கிடைத்தார்.

* அமானுஷ்ய வாசகி - நாமக்கல் சிபி
நான் முதன்முதல் பதிவுகளில் அடியெடுத்து வைத்த போது வந்த தொடர் இது. விறுவிறுப்பான நடையும், சஸ்பென்ஸான அத்தியாயமுமாக போன தொடரை மிக வேகமாக படித்து முடித்தேன். முடிவு தான் மனதுக்கு அத்தனை சாந்தியாக இல்லை. (ஆவி கதையில் சாந்தம் வேறா? :) ) ஏனோ சிபி இது போல் இப்போதெல்லாம் எழுதுவதில்லை.. பேசாம, இன்னுமொரு அமானுஷ்ய தொடர் போட வேண்டியது தானே?! ஆவிகள் உலகம் உங்களுக்கு உதவும் ;)

* நேரில் வந்து சந்தித்த பதிவர் - கோவி கண்ணன்
உருக்கமான ஒரு பதிவர் சந்திப்பு.. பொதுவாக காமெடியும் கலாட்டாவாகவுமே பதியும் சந்திப்புகளைக் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார் கோவி.

* ஜோதிடத் தொடர் - தருமி
ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து என்று பக்கம் பக்கமாக பிரித்தெடுக்கும் இந்தத் தொடர் 2005லேயே தொடங்கப்பட்டிருந்தாலும் முடிவுக்கு வந்தது 2006இல் என்பதாலும், நான் இப்போது தான் படித்தேன் என்பதாலும் இந்த வருடத்தில் சேர்கிறது. தொடர் தொடும் பல பகுதிகளைப் பேச எனக்கு விஷயஞானம் இல்லாவிட்டாலும் இந்தப் பதிவின் காரணமாகவே தருமியை இணைய ஜோதிடர் என்று விளையாட்டாய் அழைக்கப் போய், நண்பர் ஒருவர் அவரிடம் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் நின்றதாக கேள்வி :)

* நானும் சாய்பாபாவும் - சதயம்
சாய்பாபா பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சதயம் போன்ற தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்பவரும் சாய்பாபா பக்தராக இருப்பது பற்றி எழுதிய இந்தத் தொடரை ஆவல் காரணமாகவே தொடர்ந்து படித்தேன். எழுதும் விதத்தில் அடுத்தப் பதிவைப் படிக்க வைக்கும் திறனும், சின்னச் சின்ன இடுகைகளும், என்று நல்லதொரு வாசிப்பனுபவம் இந்தத் தொடர் - பதிவுகள் சொன்ன கருத்துக்கள் முரணாக இருந்தாலும்.

* சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க - வெட்டிப் பயல்
தமிழ்ப்பதிவுகளை ஆனந்த விகடனில் பார்த்தது நட்சத்திரம் வெட்டிப்பயலால் தான். சாப்ட்வேர் இஞ்ஜினியர் பதிவுகள் மிகவும் தெளிவாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்த ஒன்று. இது போன்ற தொடர்கள் இன்னும் எழுதலாமே..

இன்னும் செந்தழல் ரவியின் இன்னும் முடியாத திவ்யா கதை, கடல்கணேசனின் தொடர்ந்து கொண்டே இருக்கும் கப்பல் பயணங்கள், உஷாவின் "ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை", பெனாத்தலாரின் டாகில்லி கோடு, தமிழ்சசியின் சதுரங்க ஆட்டத்தில் தமீழீழம் போன்றவையும் தொடர்ந்து படித்ததுண்டு.. அவை பற்றி இன்னுமொரு சமயம்...

விட்டுப் போன முக்கியமான தொடர் காசியின் சில முயற்சிகள், சில அனுபவங்கள். தமிழ்மணம் உருவானது எப்படி என்பதைப் பற்றிய நல்லதொரு தொடர் இது. இன்று தமிழ்மணத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டியது..
(பதிவின் உரல் தெரியாமல் முதலில் எழுதியபோது குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்..)

11 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னுடைய தொடரை குறிப்பிட்டதற்கு நன்றி. எழுத இன்னும் நிறைய இருப்பதால் நீங்கள் சொன்ன குறைகளை களைய முயற்சி செய்கிறேன்.

தமிழோவியம் பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.

தமிழோவியத்தில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. செந்தில் குமரன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

என்னை குறிப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை ஆனால் நான் எழுதுவதை விட நேர்த்தியாக எழுதி இருக்கிறார்கள்.

நானே பல இடங்களில் இருந்து குறிப்பெடுத்து எழுதுவதால், தமிழோவியத்தில் எழுதுபவர்கள் என்னுடைய பெயரை(ஒரு வேளை என்னுடைய பெயராக இருந்தால்)அதற்காக குறிப்பிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

யார் எழுதுகிறார்களோ அவர் பெயரிலேயே சொல்லலாம்.

சதயம் தொடரை மட்டும் படித்ததில்லை மற்ற எல்லா தொடர்களையும் படித்திருக்கிறேன்.

புதியவர்களுக்கு இந்தப் பதிவு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

பொன்ஸ்,

விரைவில் எதிர்பாருங்கள்,

சென்ஷியிடமிருந்து

பத்மன் - பத்மினி
புதிய கலாய்த்தல் தொடர்

யப்பா, தமிழ்மணத்துல பதிவே சேரல. இது உனக்கே ஓவரா தெரியல.


பாலா பாய் கோச்சுக்கப் போறாரு

சென்ஷி

ilavanji said...

பொன்ஸ்,

என் பதிவை சுட்டியமைக்கு நன்றி.

கொஞ்சநாளாக வெளியூர் வாசம். வழக்கமில்லாத வழக்கமா என்னை வேலை செய்யச் சொல்லி மெறிக்கறாங்க! நானும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வேலை பாக்கற மாதிரியே நடிச்சுக்கிட்டிருக்கறேன்.

தமிழ்மணம் படிக்கவே நேரமில்லை. எங்க இருந்து எழுதறது?! பார்க்கலாம்... புது வருசத்துலயாவது ஏதாவது நடக்குதான்னு...

சேதுக்கரசி said...

உபயோகமான பதிவுகளை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. (அப்புறம்.. உங்க பதிவுல ஏதோ என்கோடிங் பிரச்சினை போலிருக்கு.. பதிவர்கள் பெயர்கள் சரியா தெரியல)

தருமி said...

ரொம்ப நன்றிங்க...

பொன்ஸ்~~Poorna said...

நன்றி செந்தில்குமரன், தமிழோவியத்தில் எழுதுவதும் நீங்கள் தான் என்று நினைத்தேன்..

சென்ஷி, எங்கப்பா? கலாய்த்தல் தொடர்? கோயிந்து-ஆசான்னு மாத்தியாச்சா? :))

வாத்தியார், வந்துட்டீங்களா!! ஆஹா ஆஹா.. வேலை பாட்டுக்குக் கெடக்கு, சீக்கிரம் வலைப்பதிவுக்கு வாங்க.. :)))

சேது, பீட்டா மாற்றம். அம்புட்டுத்தேன்.. :))

தருமி? என்னாச்சு?? :)

Meenapriya said...

எப்படியோ தமிழ் எழுத பழகிட்டேன்... இனிமே தமிழ் பின்னூட்டம் தான்..

நாமக்கல் சிபி said...

பொன்ஸக்கா,
நம்ம தொடரையும் சேர்த்ததற்கு நன்றி!!!

இன்னும் அதை போல் தொடர் எழுத எண்ணமிருக்கிறது... சீக்கிரமே தொடங்குவேன்!!!

அப்படியே ஒரு சின்ன விளம்பரம்... நெல்லிக்காய்னு ஒரு தொடர் கதை 12 பகுதி போட்டிருக்கேன்...

சென்ஷி said...

//சென்ஷி, எங்கப்பா? கலாய்த்தல் தொடர்? கோயிந்து-ஆசான்னு மாத்தியாச்சா? :))//

இல்லைக்கா, இது வேற, அது வேற
சேர்த்துடாதீங்க.
ஆனாலும் பத்மன் பத்மினியில தல தலய காட்டுனா கோச்சுக்கக்கூடாது

சென்ஷி

நாமக்கல் சிபி said...

ஆஹா! இத்தனை நாள் பார்க்காம போனேனே இந்தப் பதிவை!

//நான் முதன்முதல் பதிவுகளில் அடியெடுத்து வைத்த போது வந்த தொடர் இது. விறுவிறுப்பான நடையும், சஸ்பென்ஸான அத்தியாயமுமாக போன தொடரை மிக வேகமாக படித்து முடித்தேன்//

படித்து முடித்ததோடு நில்லாமல் முடிக்கவும் வைத்தீர்கள். :))


//பேசாம, இன்னுமொரு அமானுஷ்ய தொடர் போட வேண்டியது தானே?! //

ஆலோசனை பரிசீலிக்கப் படுகிறது!

மிக்க நன்றி! தொடர் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தும் பதிவு!

நாமக்கல் சிபி said...

//நண்பர் ஒருவர் அவரிடம் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் நின்றதாக கேள்வி//

அது யாருன்னு எனக்குத் தெரியுமே!