Monday, May 19, 2008

ஏன் இந்தக் கோடை…

ஜெய்சிங்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பான். ஆனால் பாடத்தில் படு சுட்டி. ஒரு தரம் சொன்னால் உடனுக்குடன் பிடித்துக் கொள்ளும் பஞ்சு மூளை அவனது. ரஜினி ஸ்டைல் போல, ‘ஒரு தரம் கேட்டால் ஓராயிரம் கேட்டது மாதிரி’ அவனுக்கு. அடுத்த முறை அதே பாடத்தை, அதே சொல்லைக் கேட்க போரடிக்கும் போலும், மீண்டும் மீண்டும் சொல்லித் தரப்படும் எதையும் அமர்ந்து காது கொடுத்து கேட்க மாட்டான். ஆனாலும் கூரிய மூளை; இந்த உலகத்தில் அதீத அறிவாளிகள் படும் எல்லா பிரச்சனைகளையும் இந்த வயதிலேயே படத் தொடங்கிவிட்டான் என்று நினைக்கையில் வருத்தம் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. மெல்ல எல்லாரையும் போல் சராசரி குழந்தையாக மாறிவிடுவான். :(
சாந்திக்கு தமிழ் வகுப்புக்கு வந்தால், தமிழைத் தவிர எல்லாம் பேசப் பிடிக்கும். தியா அல்லது நேகா பக்கத்தில் அவளை அமர்த்தவே கூடாது. ‘என் டோரா ஷூக்களை அப்பா வாங்கிக் கொடுத்தார். உன்னுடைய டிரஸ் புதிதா என்ன? எங்கே வாங்கினாய்?’, ‘இந்த தலையலங்காரம் உனக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. அம்மா செய்து விட்டார்களா?’ என்று விசாரிக்கவென்றே அவளுக்கு நிறைய விசயம் இருக்கும். டீச்சர் என்று பார்க்காமல் என்னிடம் கூட, ‘இந்த வெள்ளைக் காதணி ரொம்ப அழகாக இருக்கிறது. உங்க அம்மா வாங்கி கொடுத்தாங்களா?’ என்று கேட்டிருக்கிறாள். தப்பித் தவறி கூட ‘இ’க்கு அப்புறம் என்ன வரும் என்று கேட்டோ, இலையின் நிறம் பச்சை என்று சொல்லியோ நான் கேட்டதில்லை. அவள் புது ஷூவின் நிறத்தைத் தமிழில் சொல்லச் செய்து தான் நிறங்கள் பற்றி விளக்க முடியும் அவளுக்கு.
நேகா எனக்கு ரொம்பவும் பிடித்தமான மாணவி. இன்னுமொரு குறும்புக்காரி. கண்களால் நடிக்கவும், அழுதோ, அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டோ வேண்டியதை சாதிப்பது அவளின் கைவந்த கலை. படிப்பு என்பதை விட தமிழ்வகுப்பு அவளுக்கு பெரிய விளையாட்டுக் கூடம் தான். அந்த அழகான கண்களை உருட்டி அவள் கேட்கும்போதில் மறுக்க மனமின்றி பலநாள் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறையில் நின்றிருக்கிறேன். கடைசியாக பள்ளி இறுதி நாளில், தன் ரப்பர் பாண்டை எடுத்து வந்து தலையில் போட்டு விடச் சொன்ன அன்று, அந்தக் குட்டித் தலைக்குப் போட்டுவிடத் தெரியாமல் நான் முழிக்கவும், சிரித்துக் கொண்டே தன் அப்பாவிடம் ஓடிப் போனதை மறக்கவே முடியாது.
நிரஞ்சன் ரொம்பவும் கவனம் கேட்கும் குழந்தை. ஐந்து நிமிடங்களுக்கு ஒருதரம் அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்லும் பாவனையிலும், அழும் விதமாகவும் அது சட்டென மாறிவிடும். நல்ல பதில் சொன்னதற்காக சாஷ்வத் ஒரு ஹைபை(hi5) வாங்கினான் என்றால் அடுத்த கேள்விக்கு நிரஞ்சன் டாண் என்று யாரும் சொல்லுமுன் பதில் சொல்லிவிடுவான். எழுந்து குதித்ததற்காக வர்ஷா டைம் அவுட் வாங்கினாள் என்றால், அந்தக் கவனம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தானும் குதித்து டைம் அவுட் வாங்கினால் தான் அவனுக்கு மனசு ஆறும். ரொம்பவும் அதிக கவனம் கேட்கும் குழந்தை என்றாலும் புத்திசாலிப்பையன்.

ரித்விக்கும் வர்ஷாவும் ரொம்ப புத்திசாலி. ரித்விக்குக்கு கொஞ்சம் பூஞ்சை உடம்பு, வர்ஷா, வகுப்பின் மற்ற பிள்ளைகளை விட அதிகம் நல்ல தமிழ் பேசுபவள். ஆனால் இருவரும் சுலபமாக சமத்திலிருந்து குறும்புக்காரப் பிள்ளைகளாக மாறுவதில் வல்லவர்கள். யாராவது ஒரு சின்ன பொறியைக் கிளப்பிவிட்டால் போதும், டக்கென எழுந்து விழுந்து புரண்டு, அடுத்தவர்கள் மேல் குதித்து கலவரத்தை உண்டாக்குவது அவர்களுக்குக் கைவந்த கலை. ‘நல்ல பையன் யாரு??’ ‘நல்ல பொண்ணு தானே நீ?’ என்ற ஒற்றைக் கேள்வியில் சட்டென உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சாஷ்வத், ப்ரீத்தி, தியா, சூர்யா இவர்கள் நால்வரும் பிள்ளைகள் தானா என்று சந்தேகம் ஏற்படுத்தும் விதமான அமைதியான குழந்தைகள். சாஷ்வத் எல்லா நாளும் வகுப்புக்கு வந்துவிடுவான். ரொம்பவும் நல்ல பையன். சொன்னதைக் கேட்டு, ரொம்பவும் குறும்பு செய்யாமல், எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லி, அந்தந்த வாரப் பாடங்களைச் சரியாக கவனித்து, வகுப்பில் முதல் மாணவன் என்றால் மிகையில்லை.
ப்ரீத்தியும் ரொம்ப அமைதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வகுப்பு கவனிக்கக் கூடியவள் அவள் மட்டும்தான். மேலே வந்து விழுந்து விளையாடும் பிள்ளைகளையும் தள்ளாமல், தான் நகர்ந்து உட்கார்ந்து படிக்கக் கூடியவள்.
தியா பொதுவாக தனி உலகத்தில் இருப்பாள். சாந்தி, வர்ஷா என்று வேறு பெண்கள் அருகில் அமர்ந்தால் மட்டும் கொஞ்சம் கதை பேசுவதுண்டு. மற்றபடி அமைதிக் கடல் தான் அவளும். எண்கள் சொல்ல வைக்க வேண்டும் என்றால் கூட அவளின் உடையில் உள்ள பூக்களையோ, செருப்பில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளையோ தான் எண்ண வைக்க வேண்டும். ஆனாலும் அதுவும் ஒரு பஞ்சு மூளை தான்; என்ன, தன்னுடைய சின்ன உலகத்தை விட்டு வெளியே வந்து நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தான் நேரமெடுக்கும்.
சூர்யா அடுத்த வித்தியாசமான பிள்ளை. சொல்வதைக் கேட்டு அப்படியே கிரகித்து, நினைவில் இருத்தி பதில் சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால் யாராவது தொடங்கி வைத்தால் குதிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜே பாடினால் கூட சேர்ந்து பாடுவான், வர்ஷா குதித்தால் கூட சேர்ந்து குதிப்பான். வருண் அறையின் விளக்கை அணைத்தால், தானும் செய்வான். கலவரத்தில் யாராவது கீழே தள்ளினால் கூட அழத்தெரியாத பிள்ளை அவன்.
வாரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இது போன்ற ஒரு சூழ்நிலையில், இந்த அழகான பூக்களின் நடுவில் இருந்து குதிக்கும்போது குதித்து, பாடும்போது பாடி, ஒருங்கிணைத்து வேலைசெய்து என்று அது ஒரு நல்ல ஓய்வு நேரமாக இருந்தது இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் இங்கே கோடை விடுமுறை. இன்னும் மூன்று மாதங்களுக்குப் பள்ளி இல்லை. இந்தப் பிள்ளைகளை இனி் பார்க்க செப்டம்பர் வரை பொறுக்க வேண்டும். அப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு நான் இனி ‘ப்ரீஸ்கூல் ஒன் டீச்சர்’. அடுத்த வருடம் வேறு வகுப்பு, வேறு ஆசிரியர், புதிய பாடங்கள், வேறு புதுப் பாடல்கள்.
ஆனால் செப்டம்பரில் வேறு புதிய மனிதர்கள் எனக்கும் கூடத் தான் அறிமுகமாவார்கள், என்றபோதிலும், இந்த வகுப்பு இப்போது கொஞ்ச நாட்களுக்கு இருக்காது என்பது பெரிய வருத்தம் தான். ‘மூஊஊஊன்று மாதங்களா கோடை விடுமுறை தருவார்கள்? அதிகமாக இல்லை?!’ என்று குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதுவரை இந்த உயிரற்ற, ஓடாத கணினிப் பெட்டிகளைத் தட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்!
பின்குறிப்பு: கலிபோர்னியா தமிழ் அகதமி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்மொழி சொல்லிக் கொடுக்கும் மகிழ்ச்சியான வேலையைப் பற்றித் தான் இந்த இடுகை. தென்றலில் அகதமி.
Hi5 - இங்கே வளரும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாராட்டு போல. நம் கைகளை நீட்டினால் அவர்கள் தம் பிஞ்சு கைகளால் அதை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்
TimeOut: தண்டனை தான். நம்ம ஊரில் ‘கிளாஸுக்கு வெளியே நிறுத்திவிடுவேன்’ என்று சொல்வதை இங்கே வகுப்புக்கு உள்ளேயே தனியே சேர் போட்டு ஐந்து பத்து நிமிடம் உட்கார வைத்து தண்டிப்பது.

Sunday, May 18, 2008

Beyond the Gates - அந்தக் கதவுகளுக்கு அப்பால்

எதேச்சசையாகத் தான் கையிலெடுத்த படம், ஆனால், தூக்கத்தை முழுமையாக மறக்கடித்துவிட்ட படம்- Beyond the Gates
1994இல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 1994இல் ருவாண்டாவில் ஈகோல் என்ற ஐரோப்பிய நாடுகளால் நடத்தப்பட்டப் பள்ளி ஒன்றைச் சுற்றிய படம்.

கிறிஸ்டோபர் என்ற பாதிரியார் நடத்தும் இந்தப் பள்ளியின் வேலை செய்யும் ஜோ என்ற ஆசிரியர் தான் நாயகன்; ஒரு விதத்தில் ஜோவின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர அவனிடம் எந்த கதைநாயக குணத்தையும் திணிக்காமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ருவாண்டாவின் டூட்ஸி மற்றும் ஹூடு இனத்தின் இரு பிரிவாரும் படிக்கும் இந்தப் பள்ளியில் எல்லா விதமான பாடமும் எடுக்கும் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியர் ஜோ. ஆசிரியருக்குப் பிடித்தமான மாணவி மரியா, ஒரு டூட்ஸி; ஓட்டப் பந்தைய வீராங்கனையும் கூட. நாடு அமைதியாக இருந்த போது எல்லாம் நன்றாக இருக்கிறது. கள்ளங்கபடமில்லாத ஆப்பிரிக்க மக்களுடன் ஜோ கலந்து பழகி மகிழ்ச்சியாக வாழ்கிறான். பாதிரியார் கிறிஸ்டோபர் அந்தப் பக்கத்து மக்களுக்கு மட்டுமின்றி ஜோவுக்கும் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
மெல்ல நிலமை மாறுகிறது. ஹூட்டு இனத்தவரான ருவாண்ட ஜனாதிபதி சுட்டுக் கொல்லப்படுகிறார். உலக நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை ஈகோல் பள்ளியில் தனது மையத்தை அமைத்துக் கொள்கிறது. அமைதிப் படை தளபதி, ‘தன்னுடைய வேலை அமைதி காப்பது மட்டுமே அன்றி (இந்த விவகாரத்தில் தலையிட்டு) அமைதி உருவாக்குவது இல்லை’ என்பதில் தெளிவாக இருக்கிறான். இந்த நிலையில் ஹூட்டூ இனத்தவர்கள் டூட்ஸி இனத்தவர்களைத் தேடித் தேடிக் கொல்லும் இனப்படுகொலை மெல்ல தொடங்குகிறது. டூட்ஸி மக்கள் பாதுகாப்பு வேண்டி ஈகோல் பள்ளிக்கு வந்து சேருகிறார்கள். முதலில் ஜோவுடன் கூடவே இருக்கும் ஹூட்டூ இனத்தவனான பிரான்ஸுவா மக்கள் அதிகம் வர வர விடுவித்துக் கொண்டு வெளியேறிவிடுகிறான். ஹூட்டூக்களுக்கும் டூட்ஸிக்களுக்குமிடையில் இருக்கும் பகைமையும் பரஸ்பர நம்பிக்கையின்மையும், வெறுப்பும் ஜோவுக்கு அதிசயமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் அறையும் நிஜமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் பள்ளியில் சிக்கியிருக்கும் வெள்ளைக் காரர்களை மட்டும் அழைத்துப் போக பிரஞ்சு அரசாங்கத்தின் இராணுவ வண்டிகள் வருகின்றன. பிரான்ஸுவா, உயிர்காக்கும் மருந்து விற்கும் மருத்துவக் கடைக்காரன் என்று ‘நல்லவர்களாக’ அறியப்பட்ட ஹூட்டூக்கள் கூட கூட்டத்துடன் சேர்ந்து இனப் படுகொலை நிகழ்த்துவதைப் பார்த்து ஜோ திகைத்துப் போகிறான். இத்தனையும் பார்த்துக் கொண்டு ‘தற்காப்புக்காக மட்டுமே எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அமைதிப்படைத் தளபதியோடு அவ்வப்போது பேசினாலும் தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது.
கடைசியாக உலக நாடுகள் சபை, தனது அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கும் போது, ஜோ மற்றும் கிறிஸ்டோபரால் எதுவும் செய்ய இயலாமல் போகிறது. உயிர்ப் பயம் மேலோங்க ஜோ மட்டும் அவர்களுடன் கிளம்புகிறான். கிறிஸ்டோபர் மிச்சம் இருக்கும் ஒரே ஒரு வண்டியில் குழந்தைகளை மட்டும் ஏற்றிக் கொண்டு அவர்களையும் மறைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறுகிறார். பள்ளியின் எல்லைக் கதவுகளுக்கு அப்பால் இதற்காகவே காத்திருந்த ஹூட்டூக் கொலைகாரக் கும்பல் கூச்சலோடு உள்ளிருப்பவர்களை ஒரேயடியாக வெட்டிச் சாய்க்க முன்னேறுகிறது.
குழந்தைகளுடன் வண்டி ஓட்டிச் சென்ற கிறிஸ்டோபரை அவருடைய நண்பனான மருந்துக் கடைக்காரனே ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து பேச்சு வார்த்தை முற்றுகையில் கொன்று விடுகிறான். இந்தப் பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் மெல்ல தப்பித்து வெளியேறும் மரியா மட்டும் தப்புகிறாள்; உயிருக்காக ஓடுகிறாள். தடகள வீராங்கனையாக பயிற்சி பெற்றது இப்போது உயிர்காக்க, ஐந்து வருடங்கள் கழித்து ஆசிரியர் ஜோவை எங்கெல்லாமோ தேடி கண்டுபிடிக்கிறாள்.
‘அன்னிக்கு எங்களை ஏன் விட்டுட்டு வந்தாய் ஜோ?’ என்று அவள் கேட்கவும்,
‘உயிர்ப்பயம் தான் காரணம்’ என்கிறான் ஜோ.
‘கடவுள் நமக்கு வாழக் கொடுத்திருக்கும் வாய்ப்பே ரொம்ப சின்னது. அதில் முடிந்தவரை அதிகம் அடுத்தவங்களுக்காக உதவி செய்யப் பார்க்கணும்’ என்று மரியா சொல்வதோடு படம் முடிகிறது.
1994 இனப் படுகொலைகளில் எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்தும் உயிர்தப்பிய ஒரு சிலரின் உதவி கொண்டே இந்தப் படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. குடும்பம் முழுவதையும் இழந்தவர்கள், தாயை, தந்தையை, கணவனை, பெற்ற பிள்ளையை இழந்தவர்கள், வன்புணரப்பட்டவர்கள் என்று இழப்புகளை மீறிச் சாதித்துக் காட்டிய திரைப்படக் குழுவினரையும் இறுதியில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
இனம், மதம் போன்ற பிரிவினைகள் படுகொலை அளவுக்குப் போகும்போது அவற்றின் உள்ளார்ந்த வெறி, மனிதனின் நல்ல பக்கத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு விடுகிறது. நேற்று பிறந்த குழந்தை வரை கையிலிருந்து பிடுங்கிக் கொல்லத் தோன்றுகிறது. கொலை நடந்த நாட்களில் உதவாத மற்ற தேசங்கள், அந்த நேரம் தனது அமைதிப் படைகளை திரும்ப அழைத்துக் கொண்ட உலகநாடுகள் சபை என்று எல்லாம் முடிந்த பின்னர் வந்து துக்கம் கேட்கும் வழக்கம் தனி மனிதருக்கு மட்டுமில்லை, அமைப்புகளுக்கும் அதே தான். முக்கியமாக உலக நாடுகள் சபை, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை என்று உணர்ந்தும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்ததையும், ‘ருவாண்டாவில் நடந்ததை ஒரு இனப் படுகொலை என்ற பெயரிட்டு அழைக்க முடியாது. அது ஒரு உள் நாட்டுக் கலவரம் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும்’ என்று விளக்கம் வேறு சொல்வதையும் முதற்கருத்தாக எடுத்துக்காட்ட வந்த படம், இன்னும் மேலே போய், பிபிசி போன்ற உலக அளவில் பெயர்பெற்ற தொலைக்காட்சி நிருபர்கள் கூட ‘எங்கள் பள்ளியில் நிறைய வெள்ளையர்களும் உயிருக்காக ஒளிந்திருக்கிறார்கள்’ என்று சொன்ன பின்னர் தான் அதைப் படம் பிடிக்க வரவே தயாராக இருக்கிறார்கள் என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியும் அழகாக, உண்மையை அப்படியே எடுத்திருப்பது போல இருக்கிறது. பிபிசி நிருபரை அழைத்து வரப் போய் அரிவாள் முனையில் நிறுத்தப்பட்டு பல நாள் பழகிய நண்பனையே கொலைகாரனாக பார்த்து அதிர்ந்துபோய் ஓடிவரும் ஜோ, இந்தக் களேபரத்தில் பிறந்த குழந்தையின் உடல்நலத்துக்காக உயிரைத் திரணமாக மதித்து வெளியே போய் ” ஒரு ஹூட்டூ இனக் குழந்தைக்கு’ என்று பொய் சொல்லி மருந்து வாங்கி வரும் பாதிரியார் கிறிஸ்தோபர், கடைசியாக ஜோவும் கிளம்பும்போது, ‘நீயும் போறியா ஜோ?’ என்று கேட்டுக் கலங்கவைக்கும் மரியா, தன் மகள் பற்றிய கவலையின்றி மற்ற குழந்தைகளை முதலில் காப்பாற்ற வண்டி ஏற்றிவிட்டு பின்னர் இடமிருந்தால் மரியாவுக்கும் என்று கேட்கும் அவளின் தந்தை..இதைப் படிப்பதை விட, படம் பார்த்தால் தான் அதன் தாக்கத்தை உணர முடியும்.
விட்டுப் போன ஒரே கேள்வி என்னைப் பொறுத்தவரை, இத்தனை டூட்ஸிக்கள் பள்ளியில் மொத்தமாக கூடி நிற்கும்போது அவர்களால் சேர்ந்து சண்டை போடக் கூட முடியாதா என்ன? இப்படி அடிவாங்கிக் கொண்டே இருக்க எந்த மனித இனத்தாலும் முடியாது. ஏதாவது ஒரு சின்ன டூட்ஸி கூட்டமாவது திருப்பி அடிக்காமலா இருந்திருக்கும்? அந்தப் பகுதியை ஏன் இந்த இயக்குனர் சேர்க்கவே இல்லை?!
ரூவாண்டாவின் சரித்திரம் பற்றி மேலும் படிக்கவேண்டும் என்ற ஆவலை இந்தப் படம் கிளப்பி விட்டிருக்கிறது. முடிந்தால் டூட்ஸிக்கள் திருப்பி அடித்தார்களா? ஏன் ஹூட்டுக்களுக்கு மட்டும் உலகநாடுகள் சபை பரிய வேண்டும்? ரூவாண்டாவின் இன்றைய நிலை என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடி எடுக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், இன்னும் எத்தனை இனப்படுகொலைகள் இதே போல் உள் நாட்டுப் போர் என்று மூடி மறைத்துக் கொண்டு, எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ‘உண்மைக் கதை’ எடுத்துக் கொண்டிருக்கப் போகிறோமோ? என்ற கேள்வியை எழுப்பிய வகையின் இயக்குனர் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்…
இயக்குனர்: மைக்கல் கான்டன் ஜோன்ஸ்( Michael Caton-Jones)
கதையாசிரியர்: டேவின் வோல்ஸ்டன்க்ராப்ட் (David Wolstencroft)
வருடம் : 2007

Friday, May 16, 2008

ராஜபாட்டை..

The Man who founded California - The Life of Blessed Junipero Serra

தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம்.
கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில் முதன்முதலில் பிரிட்டனிடமிருந்து ‘சுதந்திரம் பெற்ற’ அமெரிக்காவில் இருக்கவில்லை. ஸ்பானியர்கள் கண்டுபிடித்த ‘கலி’யை அதன் செல்வச் செழிப்பைப் பார்த்து, பிற்பாடு மெக்ஸிகோவிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியவர்கள் அமெரிக்கர்கள். ஸ்பானிய மக்கள் வருவதற்கு முன்னரே இந்த ஊரில் அமெரிக்காவின் பூர்வ குடிகளான சிவப்பிந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் இனத்தவரைப் போல் இல்லாமல், ஸ்பானிய மக்கள் இந்த இந்தியர்களைப் போரிட்டு கொல்லாமல், அவர்களுடன் கலந்து பழகி கூடியவரை அவர்களைப் பயன்படுத்தி தன்னுடைய செல்வத்தைப் பெருக்க முயன்றிருக்கிறார்கள். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பனி போல கலியைப் பொறுத்தவரை, ஸ்பானியர்கள் முக்கியமாக வந்தது தம் மதபிரச்சாரம் செய்யவே. அப்படி மெக்ஸிகோ வந்தவர் தான் யூனிபரோ செர்ரா (ஸ்பானிய மொழியில் Jயை H போல படிக்கவேண்டுமாம், அதிலும் சொல்லின் முதலில் வரும்போது அது யூ ஆகிவிடுகிறது). மெக்ஸிகோ தொடங்கி மெல்ல மெல்ல மேலேறி வந்து முதலில் சான் டியாகோ, அப்புறம் மாண்டரி என்று வடக்கே வந்திருக்கிறார்.
யூனிபரோ வந்த போது இந்த நாட்டுக் குடிமக்கள் உடை கூட அணியாத ஆதிவாசிகளாக இருந்தார்கள் என்கிறது புத்தகம். ஆனால் ஒவ்வொரு குழுவும் தனித்தனி மொழி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தந்தை யூனிபரோ அந்த மொழிகளைக் கற்றுத் தான் அவர்களுடன் நட்பாகி மதமாற்றத்துக்கும் மொழி மாற்றத்துக்கும் வழிகோலி இருக்கிறார். கற்கால ஆயுதங்களைப் பயன்படுத்தி வேட்டையாடி வாழ்ந்திருக்கிறார்கள். திருமணம் போன்ற சடங்குகள் கூட அவர்களுக்குள் இருந்திருக்கும் போல இருக்கிறது. அப்புறம் என்னத்தை நாகரிகம் சொல்லிக் கொடுக்க இந்த ஸ்பானிய கனவான்கள் தேவைப்பட்டார்கள் என்று புரியவில்லை.
போகும் வழியெங்கும் Mission எனப்படும் வழிபாட்டு, வாழ்விடங்களை அமைத்தாராம் யூனிபரோ. கலிபோர்னிய கடலோரம் நூல்பிடித்தாற் போல் செல்லும் முக்கிய சாலை ‘எல் கமினோ ரியால்’ - El Camino Real. இந்த ஸ்பானிய சொல்லுக்குப் பொருள் - ராஜபாட்டை. எல் கமினோ ரியாலின் சாலையோரங்களில் நம்ம ஊர் பல்லவ மன்னர்கள் சத்திரங்கள் கட்டிய கணக்காய் மிஷன்கள் கட்டி இருக்கிறார்கள் ஸ்பானியர்கள். ஒவ்வொரு ஏரியாவாக பிரித்துக் கொண்டு கலியின் முழு நிலப்பரப்பையும் ஆண்டு கொண்டிருந்தன இந்த மிஷன்கள். விவசாயம் செய்யவும், படிக்கவும், பானை செய்யவும், ஆடை நெய்யவும் இன்னும் பல விசயங்கள் செய்யவும் இந்த ஊரின் இந்தியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களை ‘நாகரிக குடிகளா’க்கியதில் இந்த மிஷன்களுக்குப் பெரும்பங்குண்டாம்.

மொத்தம் 21 மிஷன்களைத் தொட்டுத் தான் அந்த ராஜபாட்டை ஓடுகிறது. நம்ம ஊர் பன்னிரண்டு லிங்கம் கணக்காக இந்த மிஷன்களையும் அதன் சர்ச்சுகளையும் புனித, மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களாக எண்ணி வந்து பார்த்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம்.
எல்லா வரலாறுகளைப் போலவும், மிஷன்களைக் காக்க வந்த ஸ்பானிய வீரர்கள் ‘நாகரிகமில்லாத’ இந்தியப் பழங்குடிப் பெண்களை வன்புணர்ந்த, அதைத் தடுக்க வந்த அவர்தம் கணவன்மார்களைக் கொன்ற இரத்தம் தோய்ந்த பக்கங்கள் மிஷன் வரலாற்றிலும் உண்டு. அத்தோடு, ஐரோப்பியர்களின் வருகையினால், அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத செவ்விந்திய இனம் புது நோய்களுடன் போராட முடியாமல் மெல்ல அழிந்து பட்டது என்கிறார்கள்.
மெக்ஸிகோ ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்று மதவேறுபாடற்ற ஆட்சியாக மலர்ந்த போது, இந்த மிஷன்களின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவற்றை அரசுடைமையாக்க முயற்சிகள் நடந்தது என்றும் சொல்கிறது புத்தகம். எல்லா மதங்களின் கோயில்களிலும், சொத்துப் பிரச்சனை தான் பெரிய பிரச்சனை! ராஜபாட்டையில் இருந்த கொண்டு அரசாங்கத்தை நம்பாவிட்டால் எப்படி?!
இந்த மிஷன்களில் இந்தியர் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, மேலும் சில மிஷன்களைப் பார்த்து வர எண்ணி இருந்தேன். ஆனால் புத்தகம் படித்தபின்னால், உண்மையான இந்தியர்களின் வாழ்க்கையை அறிய மிஷன்களைத் தாண்டிய காடுகளுக்குத் தான் போக வேண்டும் என்று தோன்றிவிட்டது.