Saturday, September 27, 2008

bike ஓட்டலியோ bike

எங்க ஊர் ஒரு Biker friendly Community தெரியுமா? அதென்னங்க பைக்கர் friendly? பைக் ஓட்டுறவங்க எல்லாம் நட்பா ரோட்ல போற மத்தவங்களைப் பார்த்துப் பத்திரமா ஓட்டுவாங்களான்னு கேட்டுறாதீங்க….
முதல் விசயம் என்னன்னா, அமெரிக்காவல பைக்னா நம்ம ஊர்ல சைக்கிள் - அதாங்க மிதிவண்டி. மோடார்னா அது கார். அப்ப நம்ம ஊரு மோட்டார் பைக்குக்கு என்ன பேர் சொல்லுவாங்கன்னு கேட்காதீங்க.. அதை நான் இன்னும் கண்டுபடிக்கலை.
ஆக Biker friendly Communityன்னா, சைக்கிள் ஓட்டுறவங்களை ஊக்கப் படுத்தும், அவங்க சேதாரமில்லாம வீட்டுக்குப் போக உதவும் ஊருன்னு அர்த்தம். இவ்வளவு பாசக்கார பசங்களா இருக்காங்களேன்னு நானும் ஒரு சைக்கிள் ஓட்டுறதுன்னு முடிவு பண்ணேன்.
சரியா ஆறு மாசத்துக்கு முன்னால் தினமும் சைக்கிளில் வரும் எங்க அலுவலக நண்பர் அந்தப் பெரிய உதவியை எனக்குச் செய்ய முன்வந்தார். அவரும் நானுமா போய் பக்கத்து அண்ணாச்சி கடையில் (அதாங்க வால் அண்ணாச்சி கடை) நல்லதா ஐம்பது டாலருக்கு ஒரு சைக்கிள் வாங்கியாந்தேன். ஆன விலை கம்மி, அங்குசந்தான் விலை அதிகம்ங்கிற மாதிரி, அதுக்கு வாங்கின சுத்துப்பட்டு சாதனங்கள் எல்லாம் சேர்ந்து நூத்துப்பத்து டாலராகிடுச்சு. அப்படி என்னத்த சுத்துப் ‘பட்டு’ சாதனங்கள்னு கேட்டீங்கன்னா,
- முன்னாடி, பின்னாடி பாட்டரி விளக்கு
- தலைக்கவசம்
(இது ரெண்டும் இங்க விதிப்படி இருந்தாகணும். )
- குளிர்காலத்துல போட்டுகிட்டு ஓட்ட ஒரு கையுறை
- சீட் கொஞ்சம் நல்லா இல்லாததினால அதுக்கு ஒரு பஞ்சு வைத்த உறை
- வண்டியில் ஏதாச்சும் சின்ன பிரச்சனைன்னா சரி பண்ண ஆயுத பொட்டி
- பஞ்சர் ஒட்ட, டயரை கழற்ற ஒரு ஸ்பானர்
- காத்தடிக்க பம்பு
- பூட்டு
From பொன்ஸ் பக்கங்கள்
இது தவிர அப்புறமா இந்த பைக்கைத் தொடர்ந்து ஓட்ட வாங்கினது:
- வண்டியில் முன்புறம் மாட்ட ஒரு பை
From பொன்ஸ் பக்கங்கள்
வேலைக்குப் போக இந்த வண்டி தான் இப்ப.. வாரத்துல ரெண்டு நாள் தான் ஓட்ட முடியுது, மத்த நாள் எல்லாம் ஆத்திர அவசரமா மீட்டிங் பேசிகிட்டே ஓடிகிட்டிருக்கேன்.
இங்க எல்லாம் சைக்கிளே நாலஞ்சு வகையில் கிடைக்குது. முக்கியமா எனக்குத் தெரிஞ்சி மூன்று பெரும்பிரிவுகள்:
1. சாதாரண சாலைக்கான வண்டி - Road bike
2. மலைகளுக்கான வண்டி - Mountain Bike
3. ரெண்டும் கலந்த கலவை - Hybrid
சாலை வண்டி மெல்லிசா பஞ்சத்துல அடிபட்டதாட்டம் ஒல்லியா இருக்கும். ஆனா சாதா சாலைகளில் நல்லா வழுக்கிகிட்டு போகும். ரொம்ப பலமா மிதிக்க வேண்டாம். அதோட கைப்பிடி கொஞ்சம் வளைவா இருக்கும். படுத்துட்டு ஓட்டுறது மாதிரி இருக்கும் ஆனா அதுவும் முதுகுக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க.

மலை மிதிவண்டி நல்லா பெரிய பெரிய டயர்களோட குண்டா இருக்கும். ஏறி மிதிக்கவே கொஞ்சம் கடினம் தான். ஆனா இந்த ஊர்ல அந்த வண்டியை வச்சிகிட்டு நல்லா பெரிய பெரிய மலைகளே ஏறுறாங்க. ஏறுவதற்கு தனி கியர், இறக்கத்துக்கு தனி கியர். வித்தியாசமான வண்டி. சாதா சாலையில் ஓட்ட கொஞ்சம் கஷ்டம் தான்

ரெண்டுங்கெட்டான் வண்டி (அதாங்க hybrid) இது ரெண்டும் கலந்திருக்கும். வண்டி சக்கரம் பருமனுமில்லாம, ஒல்லியுமில்லாம நம்ம ஊரு சக்கரம் சைசுக்கு இருக்கும். கைப்பிடி வளைவா இருக்காது, படுத்துட்டு ஓட்ட வேண்டாம். சாலை, மலை ரெண்டுத்துலயும் நல்லா போகும்.

வண்டி வாங்கப் போனபோது இத்தனையும் தெரியாது.. வாங்கி வந்து ஓட்ட சிரமப்பட்டபோது ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சிகிட்டேன். வாலண்ணாச்சி கடையில் வாங்குறதும் அவ்வளவு சரியில்லைன்னு வண்டி மாசத்துக்கு ஒரு தரம் பிரேக் வேலை செய்யாம போகும்போது தான் புரிஞ்சது. அடுத்து வாங்குறவங்களுக்கு வாலண்ணன் வேண்டாம் வேண்டாம், டார்கெட் தம்பி கடையை முயற்சி பண்ணுங்கன்னு சொல்லிகிட்டிருக்கேன்.
நம்மை மாதிரி இந்தியாவிலிருந்து வரும் மென்பொருள் கூலிங்களுக்கு ஓரளவு கட்டிவரும் விலையில் இருக்கும். அது தவிர இந்த பைக் விற்கிறதுக்குன்னே கடை கண்ணி இருக்கும், அங்க எல்லாம் போய் பைக் விலை கேட்டா, ரெண்டு பைக் வாங்குற விலையில் ஒரு பழைய காரே வாங்கிடலாம்னு தோணும். ஓவர் சீன் உடம்புக்காகாதுன்னு வண்டி ஓட்டும் யோசனையை விட்டுட்டு வந்துடுவீங்க..
ஆக ஒரு வழியா வண்டி வாங்கியாச்சா. அடுத்து முக்கியமா கவனிச்சது என்னான்னா, இந்த ஊர் வண்டிகளுக்கு
- பின்னாடி கேரியர் கிடையாது
- மட்கார்ட், செயின் கார்ட் ஒரு மண்ணாங்கட்டி கார்டும் கிடையாது. அதனால நீங்க கண்டிப்பா பாண்ட் போட்டுத் தான் வண்டி ஓட்டணும். நம்மூர்ல பொண்ணுங்க சேலையை இழுத்து சொருகிட்டு ஓட்டுறதை எல்லாம் இவங்க ஜிம்னாஸ்டிக்ஸ்ல சேர்த்துருவாங்கன்னு நினைக்கிறேன். அங்க துப்பட்டாவை மட்டும்தான் பிடிக்கிற வேலை. ஆனா இங்க முதல்ல கட்டவேண்டியது உங்க காலை. அதாவது கணுக்கால் பக்கத்தில் கொஞ்சம் freeயா துணி இருந்தா அது கண்டிப்பா கருப்பாகிடும். அதனால அதை முதலில் ஒரு ரப்பர் பேண்ட் வச்சி கட்டணும்.
அடுத்து குளிர் காலத்துல வண்டி ஓட்டணும்னா ஒரு ஜெர்கின் போட்டாகணும். வெயில் காலத்துல அலுவலகம் போகிறதுக்குள்ள தொப்பலா நனைஞ்சிடுவோம்ங்கிறதினால அதுக்கு முன்னாடி வேற சட்டை போட்டுகிட்டு பையில் ஒரு துண்டு வச்சிகிட்டு போகணும். சிலர் வண்டி மிதிச்சிகிட்டு போனதுக்காகவே அலுவலகம் வந்து குளிக்கிறவங்களும் இருக்காங்க.

இங்க பல சாலைகளில் பைக்குக்குன்னு தனி lane உண்டு. அதில் ஓட்டலாம். அது இல்லாத சாலைகளில் ஓரமா, கடைசி லேனில் ஓட்டலாம். சைக்கிள் காரங்களுக்கு வழி விட்டு மரியாதையா நடக்க வேண்டியது வேகமா ஓடும், பாதுகாப்பான மற்ற வண்டி ஓட்டுனர்களோட (கார், பேருந்து, ட்ரக்) கடமை. நடைபாதைகளிலும் பைக் ஓட்டலாம். அப்ப முன்னாடி பின்னாடி பார்த்து, நடக்கிறவங்க மேல மோதாம ஓட்டுறது பைக் ஓட்டுனரோட கடமை.
பைக் ஓட்டுறது ஒரு நல்ல உடற்பயிற்சி. இங்க நல்லா வெகு தூரம் ஓட்டுறவங்க கூட இருக்காங்க. அதே போல பைக் ஓட்டுறதுங்கிறது ஒரு குடும்ப நிகழ்வாவும் பயன்படுத்துறாங்க. அப்பா, பையன், அம்மான்னு எல்லாமா வண்டி எடுத்துகிட்டு விடுமுறை நாளில் ஓட்டக் கிளம்பிடறாங்க. எங்க அலுவலகத்துக்கே ஒரு குடும்பம், அம்மா, அப்பா, ரெண்டு பசங்க எல்லாமா சைக்கிளில் வருவாங்க. அப்பாவும் அம்மாவும் தனித் தனியா வண்டி ஓட்ட, பசங்க ரெண்டுத்துக்கும் ஒரு குட்டி பல்லக்கு மாதிரி வண்டியில் வச்சி அப்பா வண்டியில் கட்டி அதையும் இழுத்துகிட்டு ஓட்டுறார் அவர். பசங்க ரெண்டும் சிறுசு, அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைகள் காப்பகத்துக்குத்தான் வருது.
இந்த ஊரு ரயில், பேருந்து எல்லாத்துலயும் பைக்கை ஏத்துவாங்க. நம்ம பைக்கை நாமே ஏத்தி ரயிலில் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் தூக்கி மாட்டிரணும்.
From பொன்ஸ் பக்கங்கள்
நமக்கான இறங்குமிடம் வரும்போது அதை நாமே எடுத்துகிட்டு இறங்கிட வேண்டியது. பேருந்திலும் இதே தான்- என்ன பைக் மாட்டுமிடம் பேருந்துக்கு வெளியில். உயரமான பேருந்தாச்சா, அதன் முன் பக்க கண்ணாடிக்கு கீழே ஒரு பைக் மாட்டுமளவுக்கு இடம் இருக்கும். மக்களுக்கு அதிக அவசரமே இல்லை. பேருந்து ஓட்டுனர் நம்ம பைக்கை ஏற்றி இறக்கும் வரை காத்திருப்பாரு - பயணிகளும்.
புத்தகசாலைகள், பணியிடங்கள், விற்பனையகங்கள்னு எல்லா இடத்திலும் பைக் நிறுத்துமிடங்கள் இருக்கும். நிறுத்துமிடம்னா பெரிசா ஏதாவது கற்பனை பண்ணாதீங்க. சும்மா ரெண்டு மூணு வளைவு இருக்கும். அந்த வளைவுகளில் நம்ம வண்டியை தள்ளி பூட்டிக்க வேண்டியது தான
From பொன்ஸ் பக்கங்கள்
இது தவிர சில Park&Ride ரயில் நிலையங்களில் வண்டியை வச்சிப் பூட்ட பூட்டு சாவி கூட கொடுக்கிறாங்களாம். என்ன பூட்டினாலும் வண்டியை அடிச்சிட்டு போகிறவங்க இந்த ஊரிலும் இருக்காங்க.. ஒண்ணும் செய்ய முடியாது.. எங்க அலுவலகத்தில் சில சமயம் ‘என் பைக் விளக்கை எல்லாம் எடுத்துட்டுப் போனவங்க பத்திரமா கொண்டு வந்து வச்சிடுங்க, மக்கள் கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க’ன்னு போர்ட் எல்லாம் வைப்பாங்க
எல்லா விளையாட்டும் போல சைக்கிளுக்கும் இவங்க காலம் வச்சிருக்காங்க. வெயில் காலம், வசந்த காலம், ஏன் இலையுதிர் காலம் வரை சைக்கிள் நல்லா ஓட்டறாங்க. அப்புறம் குளிர் காலத்துல ஓட்டணுமானா அதுக்கு காலை மட்டும் தனியா சூடாக்கும் பேண்ட், மேலுக்கு ஜெர்க்கின்னு ரெண்டாளு சைசுக்கு உடை மாட்டிகிட்டுத் தான் சைக்கிள் மிதிக்க முடியும்.
From பொன்ஸ் பக்கங்கள்
ஏப்ரல் போல சைக்கிள் நிறைய கடைக்கு வரும். மே, ஜூன் எல்லாம் கேட்டாலும் கிடைக்காது. நான் நல்ல வேளையா பிப்ரவரியை ஒட்டி வாங்கிட்டேன். நல்ல சைக்கிளே கிடைச்சது அப்ப. இப்ப முயற்சி பண்றவங்களுக்கே சரியா கிடைக்கிறதில்லை.
நம்மளை மாதிரி அலுவலகத்துக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு மிதிவண்டி ஓட்டிப் போறவங்களை விட, குடும்பமா வெளிய கிளம்பி பக்கத்து தீவுக்கோ, ஊருக்கோ போய் வண்டி ஓட்டுறவங்க இருக்காங்க. வண்டியை கார்ல மாட்ட தனியா ஒரு accessory கிடைக்குது.. அதில் ரெண்டு மூணு மிதிவண்டியைக் கூட எடுத்து மாட்டிகிட்டு குடும்பத்தோட கிளம்பிடறாங்க.. ரெண்டு சின்ன வண்டி, ரெண்டு பெரிய வண்டின்னு கார் பின்னால அது தொங்குறதைப் பார்க்கிறப்ப நல்லா இருக்கும்..

எப்படியோ, அப்பப்ப, ‘நாங்க எல்லாம் பத்து மைல் தொலைவு வண்டி மிதிச்சி படிச்சிட்டு வந்தமாக்கும்’னு எங்கப்பா சொல்லும்போது, நானும் இப்ப எல்லாம், ‘நாங்களும் அஞ்சரை மைல் வண்டி மிதிச்சுத் தான் ஆபீஸ் போறம்’னு நெட்டி முறிக்கிறேன்ல..

Sunday, September 14, 2008

குவியம்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு.
‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லிய கடைக்காரர் கொடுத்த பெருமை.
கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.
‘விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..
அன்று தொடங்கி சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை நான் புதுக்கண்ணாடி போட்டிருக்கிறேன். ப்ளாஸ்டிக் frame, உலோக frame, ஆமை ஓட்டு frame, என்று விதம் விதமாகவும், கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள தலைக்கயிறு, என்று உடன்பொருட்களாகவும் என் அப்பாவும் வெவ்வேறு முறைகளைக் கையாண்டு பார்த்து அலுத்துத் தான் போய்விட்டார்.

இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.
நினைவு தெரிந்து கல்லூரிக் காலத்தில் தான் போட்டுவிட்ட கண்ணாடியை நான்கு வருடம் போல மாற்றாமல், உடைக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அதன் பின் நான் உடைக்காவிட்டாலும், கண்ணின் குறைபாடு அதிகமாக ஆக, வருடா வருடம் கண்ணாடி மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டே பிறந்தவள் போல நான் செய்யும் அழும்பு தாங்காமல், அம்மா லென்ஸுக்கு மாறச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார். கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள் இந்திய தூசியில் படும் கஷ்டத்தைப் பார்த்த பின்னால் அந்த முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இங்கே வந்து அதையும் முயன்று பார்ப்போமே என்று தோன்ற, இதோ, இத்தோடு இரண்டு மாதமாக வெற்றிகரமாக கண்ணாடி இல்லாத பூர்ணாவாகிவிட்டேன்.
இந்த ஊர் மருத்துவர்கள், குவியத்தை முயன்று பார்க்கவென்றே ஒரு வாரம் தருகிறார்கள். முயன்று ‘பொருந்துகிறது, உறுத்தவில்லை’ என்று நாம் சொன்னால் தான் அடுத்து மருந்துச் சீட்டே எழுதித் தருகிறார்கள். ஆரம்பத்தில் கண்ணுக்குள் போட்டு எடுப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரம் கண்ணாடி முன்னால் செலவு செய்யவேண்டிய அவசியம் இருந்தது. இப்போதெல்லாம் அப்படியே ஒரே நொடியில், பாட்டு பாடிக் கொண்டே, கார் கண்ணாடியைப் பார்த்தபடியே என்று சுலபமாக எடுக்கவும் போடவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
முதல் நாள் லென்ஸ் போட்டு விட்டுவிட்டு,அந்த டாக்டரம்மா தன்னுடைய உதவியாளரை அழைத்து எனக்கு போட்டுக் கழற்றச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கம்பவுண்டர் பெண்ணும் வந்து, வலது கண் லென்ஸை கழற்றி மாட்டுவது எப்படி என்று விளக்கினாள், என்னையும் செய்ய வைத்தாள். அடுத்து இடது கண்ணுக்கும் சொல்லித் தருவாள் என்று பார்த்தால், ‘நாங்க ஒரு கண்ணுக்குத் தான் சொல்லித் தருவோம், வேணும்னா நீயே கழற்றிப் போட்டுக்கோ’ என்றுவிட்டுப் போய்விட்டாள்.
நான் இடது கண் லென்ஸை வெகு சுலபமாக ஒரே முயற்சியில் கழற்றிவிட்டு ‘குட் ஜாப் பூர்ணா’ என்று என் தோளை நானே தட்டிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போட முயன்றேன். இடது கை நடுவிரலால் கண்ணின் மேல்பக்கத்தைத் தூக்கி, வலது கை நடுவிரலால் கீழ்ப்பக்கத்தை இழுத்து, ஆட்காட்டி விரலில் இருந்த லென்ஸைப் போட முயன்றால், கண் தானாக மூடிக் கொள்கிறது! ஒரு முழு லென்ஸ் போடும் அளவுக்கு அங்கே இடம் இருந்தால் தானே!

நான்கு முறை முயன்றுவிட்டு அந்தப் பெண்ணைப் பரிதாபமாக பார்த்தேன். அவளே கொஞ்சம் நேரம் கிடைத்த போது வந்து ‘என்ன?’ என்றாள். பிரச்சனையைச் சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தேன். ‘ஓகே, நீ என்ன தப்பு பண்றேன்னு எனக்குப் புரியுது… நீ இடது கண் கிட்ட லென்ஸைக் கொண்டு போகிறப்போ, வலது கண்ணை மொத்தமா மூடிடறே. அதனால உனக்கு கண்ணே தெரியாம போயிடுது(!).. அதான் லென்ஸைப் போட முடியலை.. முதல்ல ரெண்டு கண்ணையும் திறந்து வச்சிகிட்டு முயற்சி பண்ணு’ என்றாள். என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே மறுபடி முயன்று ஒருவழியாக போட்டு முடித்தேன்.
‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்பிவைத்தவளை அடுத்த இரண்டே நாளில் அழைக்க வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. புதன்கிழமை காலை எட்டு மணி கூட்டத்துக்காக அவசர அவசரமாக குளித்து, வேக வேகமாக தயாராகி கண்ணில் மீண்டும் லென்ஸ் போட்டால், இடது கண் ரொம்பவும் கரித்தது, ஒரே உறுத்தலும் கூட. கொஞ்ச நேரத்தில் அந்தக் கண் சரியாக தெரியாமல் வேறு போய்விட்டது. வேறு வழியின்றி வீட்டிலிருந்தே கூட்டத்தை முடித்து அடுத்த வேலையாக கண்ணாடி முன்னால் நின்று கண்ணிலிருந்து லென்ஸை எடுக்க முயன்று கொண்டே இருந்தேன்.
நானும் மேல் இமையைத் தூக்கி, கீழ் இமையை இழுத்து பாப்பாவுக்கு அருகில் கிள்ளினால், அந்த லென்ஸ் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. தொடர்ந்து செய்யச் செய்ய கண் சிவப்பாகி எரிவது தான் மிச்சம். ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த முறை எப்படியும் இந்த லென்ஸ் போடும் வித்தையை வென்றே தீருவது என்றே முடிவெடுத்து தொடர்ந்து போட்டு ஒரு வார சோதனைக் காலமும் கடந்தபின் என் அப்பாவிடம் போன் செய்து சொன்னேன்.
  • - லென்ஸ் போட்டு
  • * குளிக்கக் கூடாது
    * தூங்க கூடாது
    * முகம் கழுவக் கூடாது
    * அழக் கூடாது
    * நீஞ்சக் கூடாது
  • கையை கூடியவரை சுத்தமா வச்சிக்கணும்
  • நகத்தைச் சின்னதா வச்சிக்கணும்.
  • என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத் தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி சோதனை எல்லாம் செய்தாச்சா?’