Sunday, December 02, 2007

டிக்கட் வாங்கி இருக்கீங்களா?

இவ்வளவு தாமதமாகிடுச்சே, எப்படி வீட்டுக்குப் போவே?’
‘என்னோட வண்டியில் தான்!’
‘என்னது வண்டி வாங்கிட்டியா? ‘
‘ஓட்டவும் ஆரம்பிச்சிட்டியா?’
‘freewayல ஓட்ட தொடங்கிட்டியா?’
எல்லா கேள்விகளுக்கும் பெருமையாக ‘ஆமாம்’ சொல்லிவிட்டு வந்த அந்த வார இறுதியில் தான் தலையில் தட்டி உட்கார வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. காய்கறி வாங்க கடைக்குப் போய்க் கொண்டிருந்த ஞாயிறு இரவு திடீரென்று பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் முன்விளக்கு கண்கூசவைக்கும் விதமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.. ‘யாருப்பா அது ??!’ என்று எரிச்சலுடன் கண்ணாடியைப் பார்த்தால், இங்கே செல்லமாக காப் என்று அழைக்கப் படும் போலிஸ் மாமா தான் வந்து கொண்டிருந்தார்.
காவல்காரர் இப்படி விளக்கை அணைத்து அணைத்து ஒளிர வைத்தால், வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டும் என்பது வரை நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் நிறுத்திவிட்டு கதவைத் திறந்து இறங்க முயலக் கூடாது என்று எந்த புத்தகத்திலும் கூட எழுதப்படவில்லை என்பதால், அந்த மிகத் தவறான செயலை நான் செய்ய முற்பட்டேன்.
‘இறங்காதே! கீழே இறங்காதே!’ என்று மிரட்டலாக கேட்கவும் இறங்கும் யோசனையைக் கைவிட்டு, ‘என்ன கேட்டுவிடப் போகிறார், லைசன்ஸ், இன்சூரன்ஸ், எல்லாவற்றையும் எடுத்து வைப்போம்’ என்று பையைத் துழாவினேன். நல்ல வேளையாக, அதற்குள் காவலரே இறங்கி அருகில் வந்தார். என் பக்கத்து சன்னலைத் திறக்கச் சொன்னார்.
‘நீங்கள் ஓட்டும் வண்டியில் ஒரு பக்க விளக்கு எரியவில்லை.. ‘ என்றவர், ‘இது யாருடைய வண்டி?’ என்றார்.
‘என்னுடையது தான்..’ என்றபடி கோப்புகளை எடுத்துக் காட்டினேன்.
‘இப்போது தான் வாங்கி இருக்கிறீங்களா?’ என்றவர், அடுத்து என் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டார்.
சென்னையில் பலபேர் சொல்லி, மிகவும் நல்ல பெண்ணாக நான் வாங்கிவைத்திருந்த ‘அகில உலக ஓட்டுனர் உரிம’த்தை கெத்தாக எடுத்து நீட்டினேன். தலைவர் ஆடிப் போய்விட்டார்.. அத்தோடு நில்லாமல் ‘இதெல்லாம் இங்க செல்லாதும்மா.. கலிபோர்னிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் கொடு, இந்த அகில உலகம் எல்லாம் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் தான் செல்லுமா இருக்கும்’ என்று சொல்லி என்னையும் கலவரப்படுத்திவிட்டார். ‘இருந்தாலும் நான் இதை விசாரித்துச் சொல்கிறேன்’ என்று போனவர், போனும் கையுமாக கொஞ்ச நேரம் பேசித் தீர்த்துவிட்டு,என்னிடம் ‘இந்த ஊருக்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆச்சு?’ என்றார்
‘மூணு வாரம் ஆச்சு’ என்றேன்.
‘கலிபோர்னிய சட்டப்படி நீங்க வந்து பத்து நாளில் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேணும். இல்லைன்னா வண்டி ஓட்டக் கூடாது. ‘ என்று தொடங்கினார்.
‘அதுக்கான வேலையெல்லாம் தொடங்கிட்டேன். இதோ பாருங்க, போன வாரம் பரிட்சை எழுதி பெயில் ஆகிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் படிச்சி எழுதி பாஸ் பண்ணி ‘ஓட்டப் பழகும் உரிமம்’ வாங்கிடுவேன்’ என்று இடையில் குறுக்கிட்டுச் சொன்னேன்..
ம்ஹூம். போயும் போயும் இந்த பரிட்சையிலா பெயிலாகணும் என்று ஏற்கனவே நான் புலம்பிக் கொண்டிருக்கும் அந்த பரிட்சைத் தாளை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்துவிட்டு, விட்டேனா பார் என்று ஒரு அடையாள டிக்கட் போட்டுவிட்டுத் தான் போனார் அந்தக் காவலர்.
‘அடுத்த 45 நாட்களுக்குள்,
1. எரியாத விளக்கைச் சரிசெய்துவிட்டு
2. ஒழுங்கான ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட்டு
3. வண்டிக்குள் வைக்காத வாகனக் காப்புப் பத்திரங்களை வைத்துவிட்டு
போக்குவரத்து வழக்காடு மன்றத்துக்கு நேரில் போய் பத்து டாலர் கட்டி இதெல்லாம் செய்ததாக நிருபிக்க வேண்டும் ‘
என்றது அந்த டிக்கட் எனப்படும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்குக் கொடுக்கப்படும் குற்றப் பத்திரிக்கை போன்ற சீட்டு.
திரைப்படங்களில் என்னதான் நீதிமன்ற காட்சிகளை விரும்பிப் பார்ப்பேன் என்றாலும், சொந்த நாட்டிலேயே கோர்ட்டுப் படியேறாத என்னை (அதுக்காக தாண்டி குதித்துப் போயிருக்கிறேன் என்று பொருளில்லை ;-) ), அயல்நாட்டுக்கு வந்து நீதிமன்றம் போக வைத்த அந்த போலிஸ்காரனையும், உலக உரிமம் பெற்றாலே எல்லா இடத்திலும் செல்லும் என்று சொல்லி கொடுத்த தென்னிந்திய வாகன சங்க அலுவலரையும் திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
அதன்பிறகு ஒரு இரண்டு வாரம் வண்டியைக் கையால் தொடவும் ஒரே பயம். என்னைப் பிடிக்கவென்றே இந்த ஊர் போலிஸ் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருப்பது மாதிரி…
அவசர அவசரமாக படித்து அடுத்த வாரமே எழுத்துத் தேர்வில் தேறி, அதற்கடுத்த வாரமே வண்டி ஓட்டிக் காட்டி அதிலும் தேறி, நீதிமன்றத்துக்குப் போய் அங்கே குமாஸ்தாவிடம் எல்லாவற்றையும் காட்டி நிருபித்து.. இது போதாதென்று, விளக்கை சோதனை செய்யவந்த போலிஸ்காரர் வேறு ‘டிக்கட் வாங்கினதுனால தான் இந்த பர்மிட்டை அவசரமா வாங்கினீங்களா?’ என்றார்.
‘அட, எங்க ஊர்ல டிக்கட் வாங்குறதுன்னா அர்த்தமே வேறய்யா… ‘என்று புலம்பிக் கொண்டே பணம் கட்டிவிட்டு வந்து சேர்ந்தேன்.
நீதி
1. அகில உலக ஓட்டுநர் உரிமம் என்று பெயர் வைத்திருந்தாலும், எங்க ஸ்வாசினேகர் ஊரில் ஒண்ணும் செல்லுபடியாகாது.. அதை எல்லாம் நம்பி இங்கே வராதீங்க.
2. போலிஸ்காரர் வண்டியை நிறுத்தினால் அனாவசியமா பதற்றப்பட்டு நம்ம ஊர் மாதிரி எல்லா டாகுமெண்டையும் தேடும் வேலை எல்லாம் வேண்டாம். என்னவோ துப்பாக்கி தான் தேடுகிறோம் என்று சுட்டுப் போட்டுவிட்டுப் போகும் வழக்கம் அதிகமாம் இங்கே… சும்மா உட்கார்ந்து அவர் கேட்கும் போது பதில் சொன்னாலே போதும்.
3. டிக்கட் வாங்குவது, கொடுப்பது எல்லாம் நம்ம ஊர் டவுன் பஸ்ஸில் நடப்பது போல் தான். அதனால், அதை நினைத்தோ நினைக்காமலோ கவலைப்படாமல், இருந்தாலே போதும். பொதுவாக வாழ்க்கையில் எதுக்குமே கவலைப்படாத அலட்சிய மனோபாவம் கொண்ட என்னையே டிக்கட் பற்றிப் பேசிப் பேசிப் பயமுறுத்திவிட்டதால், ரொம்பவும் பயந்து நடுங்கிக் கொண்டு தான் காவற்காரரிடம் நடந்து கொண்டேன். அதெல்லாம் பிரச்சனையே இல்லை என்பது புரிய கொஞ்ச நாள் ஆனது..
அப்புறமென்ன.. மேலே இருப்பவற்றுடன்,
‘என்னது, அதுக்குள்ள டிக்கட் கூட வாங்கிட்டியா?’
என்ற கேள்வியும் சேர்ந்துகொண்டுவிட்டது ;-)

Friday, November 09, 2007

அடங்க மாட்டம்ல!

சென்னையில் இருந்த காலங்களில் ஏனோ மாவட்ட பொது நூல் நிலையங்களைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை. நூலகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய எங்கள் பள்ளியிலோ, பள்ளிப் பாடங்களைத் தவிர மற்றவற்றைத் தொட்டுப் பார்ப்பதும் பாவமாக கருதப்பட்டது. இந்த ஊரில் ஒவ்வொரு தொகுதியிலும் நூலகங்கள் இருப்பதும் அவை பொதுவான அந்த வட்ட நூலகத்துடன் இணைந்து பணியாற்றுவதும் என்று நல்ல நூலகப் பின்னலாக கொஞ்சம் வியப்பேற்படுத்துவது உண்மை.
ஐஐடி நூலகத்தில், மிஞ்சி மிஞ்சிப் போனால் இருக்கும் புத்தகப் பட்டியலைச் சேமிக்கவும் அதில் தேடவும், ஒரு உள்வலைப்பின்னலுடனான கணினியைப் பார்த்திருக்கிறேன். எங்கள் கல்லூரி நூலகத்தில் அது கூட இருக்கவில்லை! ஆனால் இங்கே நூலகத்துக்கென்றே தனி இணையப் பக்கமும், இருக்கும் புத்தங்களை இணையத்திலேயே கண்டுபிடிக்கும் விதமும், தேவையான நூல்கள், பக்கத்து வட்டத்துக்குட்பட்ட நூலகத்தில் இருந்தாலும், இணையத்தில் பதிந்தாலே தருவித்துக் கொடுப்பதும், புத்தகம் திருப்பவும், நம் அட்டையில் எடுக்கவும் கூட பார் கோடுகளைப் படிக்கும் கணனி இயந்திரங்களும்… என்று கணனியை முழுமையாக பயன்படுத்துபவர்கள் இவர்கள் தான்.
சாண்டா க்ளாரா கவுண்டி லைப்ரரி புண்ணியத்தில், இதுவரை படிக்காத, படிக்க வாய்ப்பில்லாத நிறைய பழைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் படித்துவிட்டேன். துணைப்பாடமாக ‘செவ்வாழை’ படித்த நாளிலிருந்து ‘வேலைக்காரி‘யும் படிக்க வேண்டும் என்று அதீத ஆவல். எடுத்துப் படித்தபோது அண்ணா ரொம்பவும் ஏமாற்றிவிட்டார். மேடைப்பேச்சுக்குகந்த அவரின் தமிழ் நாடகத்தில் அதிகம் சோபிக்கவில்லை. பராசக்தி சினிமா போன்ற கொஞ்சம் அதீதமான கதைக்கரு; அப்பா செய்த தப்புக்குப் பழிவாங்க, அவரின் மகளைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தும் கதாநாயகன். அறியாத வயதில் நான் எழுதிய அமெச்சூர் நாடகம் கூட இதைவிடத் தேவலை என்று தோன்ற வைத்துவிட்டார். நல்ல வேளையாக இரண்டு நாடகம் மட்டும் தான் எழுதியிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது.
அகிலனின் ‘கொள்ளைக்காரன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதிர்பார்க்கக் கூடிய கதைதான் என்றாலும் கதை சொன்ன விதம் அருமை. அழகான கதை. துணைப்பாடப் பகுதியில் அகிலனின் ‘புயல்’ என்ற கதை படித்த போது, ‘ஏன் அகிலன் கதையெல்லாம் சேர்த்துவைக்கவில்லை?’ என்று எங்கள் வீட்டு நூலக உரிமையாளரான பாட்டியிடம் வருத்தப்பட்டதுண்டு. இப்போது புதையல் மாதிரி, அடுத்து ‘சித்திரப்பாவை’ சிக்கி இருக்கிறது.
ஏதேச்சையாக எடுத்து அதிசயமாக கிடைத்த இன்னொரு புத்தகம் சிவசங்கரியின் ‘அப்பா’. இரா.நடராசனின் ஆயிஷா படித்த பின்னர் சில நாட்களுக்கு, ‘சர் சி.வி.ராமனுக்குப் பிறகு நம் ஊரில் ஏன் ஒரு ஆராய்ச்சியாளர் உதிக்கவே இல்லை’ என்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருந்ததுண்டு. அப்போது தான் என் அப்பாவிடம் திடீரென்று நம்மூருக்கு மட்டுமே உரிய இட்லி தோசை மாவரைக்கும் இயந்திரங்களை யார் கண்டுபிடித்தார்கள்? என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ‘பூர்ணா, என்னாச்சு உனக்கு?! இதெல்லாம் பாடத்துல படிச்சிருப்பியே!’ என்று குட்டிவிட்டு ‘ஜி.டி.நாயுடு’ என்றார். ‘அட, ஆமாம்ல,’ என்பதோடு மேலும் துருவ அப்போதைக்கு நேரமில்லாமல் போய்விட்டது. திடீரென்று இங்கே வந்து ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கவும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எழுதியவிதம் அவ்வளவாக ருசிக்கவில்லை.

முக்கியமாக நாயுடுவின் மகன் கோபாலின் பார்வையில் எழுதி இருக்கிறார் சிவசங்கரி. அப்பாவின் குறைகளாக கோபால் பார்ப்பவற்றை நிறைகளாகவும், நிறைகளாக அவர் குறிப்பிடுபவனவற்றை குறைகளாகவும் தான் என்னால் பார்க்க முடிகிறது என்பதால் கூட இந்தப் புத்தகம் திருப்திகரமாக இல்லாதிருக்கலாம். எப்படியும் நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தோண்டித் துருவ ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை. அதிலும், ஃபோர்டு போல, பில் கேட்ஸ் போல ஐடியாக்களைப் பணமாக்கும் ஆர்வம் நாயுடுவுக்கு இருந்தது. மக்களுக்குப் பயன்படும் உபகரணங்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும். வேறு நாட்டில் பிறந்திருந்தால் இன்னும் நிறைய செய்திருப்பாரோ என்னவோ. அவரின், பாதியில் நிறுத்திவிட்டுப் போன ஆராய்ச்சிகளை யாராவது தொடர்கிறார்களா என்ன?
இரண்டு மாதம் முன்னால் விமான நிலையத்தில் வாங்கி இங்கு வந்த முதல் வாரத்தில் படித்து முடித்தது வேல. ராமமூர்த்தியின் ‘கூட்டாஞ்சோறு‘. 1957இல் நடந்த முதுகுளத்தூர்க் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு, கலவரத்துக்கு முன்பான கள்ளர் சாதி மக்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும் நாவல். விறுவிறுப்பான கதை தான். ஆனால் கொஞ்சம் ஆங்காங்கே வேகம் குறைந்தாற்போல் இருக்கிறது. கதையில் வரும் ஒரு சாமியார், சாமியார் வளர்க்கும் பெண் போன்ற பாத்திரங்கள், இயல்பான வரலாறு என்று படித்துக் கொண்டிருப்பவர்களைத் தலையில் தட்டி, ‘இது ஒரு கற்பனைக் கதை’ என்று சொல்லிப் போகின்றன. திருடுவது தம் குலத் தொழில் அதில் எந்தத் தப்பும் இல்லை என்று நம்பும் வெள்ளந்தியான மனிதர்களைப் பற்றிய கதை. வெள்ளைக்காரர்கள் ஆண்ட இந்தியாவில் இந்த இனம் எப்படி ஒடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய வரலாற்றுப் பதிவு என்னும் வகையில் நன்றாகவே எழுதி இருக்கிறார்.
இடையில் இங்கே கூட கொஞ்சம் சீரியசான தமிழ் இலக்கியம் படிக்கும் தோழியைக் கண்டுபிடித்து அவரின் குட்டி நூலகத்திலிருந்து தாத்தா கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து மக்களை’ லவுட்டிக் கொண்டு வந்துவிட்டேன். முன்பு ‘செந்நெல்’ நாவல் இரவல் கொடுத்த நண்பர், ‘ உண்மையைச் சொல்லுங்க, இந்தக் கதை உங்களுக்குப் புரிஞ்சதா? இந்த அளவுக்கு வட்டார வழக்கு சென்னைப் பொண்ணான உங்களுக்குப் பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லையே’ என்று நம்பிக்கையின்றி கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. தாத்தா எனக்குப் பரிச்சயமான தமிழ் கொஞ்சம் கூட தலைகாட்டிவிடாமல் கவனமாக எழுதி இருக்கிறார். ஆனாலும் புதிய வார்த்தைகளை அவ்வப்போது பழக்கிக் கொடுப்பதும், விளக்குவதுமாக அழகாக கதை சொல்கிறார்.

மற்ற புத்தகங்களையாவது அவ்வப்போது இடைவெளி கொடுத்துப் படித்தேன். ‘கோபல்லபுரத்து மக்கள்’ கையில் எடுத்தது கீழே இறங்காமல் ஒவ்வொரு பாகமுமாக இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன். என்னுடைய இப்போதைய வேகத்துக்கு இதுவே ரொம்ப அதிகம் தான் :). தாத்தாவின் மற்ற புத்தகங்களை அடுத்து தேட வேண்டும்..
துணிகர முயற்சியாக அதே தோழியிடமிருந்து ‘ம்‘ வேறு வாங்கி வந்திருக்கேனாக்கும். இந்த வருட நன்றி நவிலும் தினங்களில் நான் பயங்கர பிஸி இப்பவே சொல்லிக்கிறேன் ;-)

Friday, November 02, 2007

எங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்

இந்த ஊருக்கு வந்த பின்னர் அதிகம் செய்யும் அதி முக்கியமான வேலையைத் தான் அன்றும் செய்து கொண்டிருந்தேன் - தொலைபேசியில் தோழியுடன் அரட்டை!. இதே ஊரைச் சேர்ந்த தோழி என்பதால், பொதுவாக அடுத்த நாள் வரப் போகும் ஹாலோவீன் பண்டிகை பற்றியும், அதற்கு என்னென்ன ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் அது நடந்தது
எங்கள் வீட்டை யாரோ ஒருவர் இரண்டு கைகளாலும் அப்படியே தூக்கிப் பிடித்து ஆட்டுவது போல் சுவரெல்லாம் ஆடியது. மரத்தாலாகிய வீடாதலால், சத்தமும் அதிகமாக இருந்தது. அத்துடன் உலுக்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.
பொதுவாகவே இந்த வீட்டில் துணி உலர்த்தும் இயந்திரங்களையோ, பாத்திரம் கழுவும் இயந்திரத்தையோ இயக்கினாலே பெரிய சத்தம் கேட்பது இயல்பாக இருப்பதால் அப்படி ஏதோ ஒரு புதிய இயந்திரத்தைத் தான் அறைத்தோழி தவறுதலாக போட்டுவிட்டார்களாக்கும் என்று முதலில் நினைத்தேன். போனை முடித்துக் கொண்டு அவரை அழைத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில், எதிர்முனையில் தோழியும், “ஏய் என்ன ஆடுது?! ஹே, Earthquake! earthquake!!” என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் வீட்டாரை எச்சரிக்கச் சென்றுவிட்டார்.
ஒருமாதிரியாக விசயம் புரிந்து கதவைத் திறந்து வெளியே வந்தேன். இணையத்தில் பேசிக் கொண்டிருந்த அறைத்தோழியும் என்னுடனேயே வெளியே வந்தார். ‘என்னங்க, இப்படி ஆடுதே!’ என்று பயந்து கொண்டே இருந்த அவரைச் சமாதானப்படுத்தி கொஞ்சம் ஆட்டம் நின்றவுடன் மீண்டும் வீட்டுக்குள் போனோம். அலுவலகம் முடிந்து திரும்பிவிட்டிருந்த அருகாமை வீட்டு மனிதர்களும் கூட ஒன்றிரண்டு பேராக வெளியேறி வந்து நின்றுகொண்டிருந்தனர்.
வாழ்நாளில் அனுபவிக்கும் முதல் நிலநடுக்கம் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்தச் சேதமும் இல்லாமல் லேசாக குலுக்கிக் காட்டிவிட்டுப் போய்விட்டது.
‘அட! நமக்குக் கூட பூமி இப்படி குலுங்கி நடுங்கி வேடிக்கை காட்டுகிறதே’ என்று மலர்ச்சி வேறு.
உடனே கூகிளாண்டவரைப் பிடித்து விவரம் கேட்டால், எதிர்பார்த்தது போலவே கட்டம் போட்டுக் காட்டிவிட்டார். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவுக்குப் பதிவாகி இருந்ததாம். எந்தச் சேதமும் இல்லாமல் சாதாரண நடுக்கம் தானாம்.

படித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.. ‘என்னம்மா, நல்லாக்கீறியா?’ என்பதிலிருந்து, ‘என்னங்க, ரெண்டு வருடமா இங்க இருக்கேன், இன்னி வரை இப்படி பூமி ஆடிப் பார்த்ததில்லை.. நீங்க வந்த உடனே இதெல்லாம் கூட்டி வந்துட்டீங்க?’ என்பதுவரை வரிசையாக அழைப்புகள்..
ஓடும் ரயிலில் இருந்தவர்கள் ரயில்கள் நின்று போய் பூமி நிற்க காத்திருந்ததைச் சொன்னார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிலருக்கு தெரியவே இல்லையாம். ஒரு நண்பனை அலுவலகத்தில் வெளியேறச் சொன்னதாகவும் அத்தோடு விட்டால் போதும் என்று வண்டி எடுத்து ஓடி வந்துவிட்டதாகவும் நிலநடுக்கத்துக்கு நன்றியோடு சொன்னான்.
‘ஏங்க, aftershocks எல்லாம் வரும்னு சொல்லுவாங்களே! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் போய் இருந்துட்டு வருவோமா?’ என்றார் அறைத்தோழி.
‘அதெல்லாம் இதை விட சின்னதா இருக்கும். என்னங்க, சும்மா 5.6 ரிக்டர் தானே! இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க!’ என்று ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் போல மீண்டும் லேசான நடுக்கம். எனக்குத் தான் ஏதோ தலைசுற்றும் உணர்ச்சி போலும் என்று நினைத்தால், முதல்நாள் மாலையிலிருந்து பூமி நடுங்கிக் கொண்டே தான் இருந்திருக்கிறது! சின்னச் சின்ன அதிர்வுகள், 2 ரிக்டருக்கும் கீழான அதிர்வுகளை யாரும் கண்டு கொள்ளாததில் கோபப்பட்டு அடுத்த ஒரு 3.7 ரிக்டர் அதிர்வைக் காட்டிப் பயமுறுத்தி இருக்கிறது!
ம்.. இன்னும் கூட அவ்வப்போது நடுங்கி நடுங்கி, இந்த நிமிடம் வரை 165 தொடர்நடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன. இன்னும் கூட பெரிய நிலநடுக்கம் வரலாம் என்பதற்கு இது ஒரு அறிகுறி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கலிபோர்னிய ஆளுநர் தான் பாவம், தெற்குப் பக்கம் இப்போது தான் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய நெருப்பை அரும்பாடுபட்டு அணைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக வட பகுதியில் நிலம் வேறு நடுங்கி பீதியைக் கிளப்புகிறது. எனக்கென்னவோ ஹாலோவீன் பேய்த்திருவிழாவைப் பூமியும் கொண்டாடி சும்மா வம்பு பண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அடுத்த பெரிய நடுக்கம் வரும்வரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியது தான் :-)

Saturday, October 20, 2007

ஊர்சுத்திப் பார்க்கலாமா?..

இது தொடரெல்லாம் இல்லை.. ஆனால் புதிதாக வந்து வாழத் தொடங்குவதால், இந்த ஊரைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஒரு ஆசையில்…
ஏற்கனவே போன வருடம் அமெரிக்கா வந்த போதும் சரி, இந்த வருடமும் சரி, தினசரி ஏதாவது ஒரு அதிசயம் எனக்குத் தெரிவதுண்டு. எல்லாமே எழுதவும் பகிரவும் ஆசைதான் என்ற போதும், இது நாள் வரையிலான தயக்கத்துக்கு முக்கிய காரணம், இன்றைக்கு இந்தியர்களுக்கு அமெரிக்கா பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. ஒரு விதத்தில், பூனாவிலோ ஹைதராபாத்திலோ கூட நான் கேட்காத அளவு, தமிழும் இந்தியும் கேட்கிறது இந்த ஊரில்..நம்ம சிவாஜி அங்கிள் வேற இங்கிருந்து 250கோடி சம்பாதித்துக் கொண்டு போகும் அளவுக்கு நம்மவர்களுக்குப் பரிச்சயமான நாடாக இருக்கிறது. இதைப் பற்றிப் புதிதாக நான் எழுத என்ன இருக்கிறப் போகிறது என்ற எண்ணம் தான். . ஆனால் என்னைப் போலவே இன்னும் மிட்டாய்க் கடைகள் அதிகம் பார்க்காத ஆட்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில்… எழுத ஆரம்பிக்கிறேன்..
சரி.. பில்டப் போதும்.. இனி விசயத்துக்கு வருவோம். ஒரு மாதம் முன்னால், சென்னையை விட்டு கிளம்பியது நேற்று நடந்தது போல் தான் இருக்கிறது. சென்னை- சிங்கை - ஹாங்காங் - சான் பிரான்ஸிஸ்கோ - என்று இந்த முறை கிழக்காசிய வழிப் பயணம். சிங்கை விமான நிலையத்தில், சிங்கையில் காலையில், தூங்கோ தூங்கென்று தூங்கி வழிந்தேன்.. நடக்க வேண்டிய அவசியமேயின்றி தானாகவே நகரும் பாதை போட்டு வைத்திருக்கிறார்கள். பொருட்களைச் சேகரித்துக் கொண்டு அதில் ஏறி நின்று விட்டால், அதுவே அழைத்துப் போய் தேவையான புறப்பாடு வாசலில் இறங்கச் சொல்லிவிடுகிறது. நல்லவேளையாக தூங்கிக் கொண்டே இதில் ஏறி தூங்கிக் கொண்டே என் விமான புறப்பாட்டு வழிக்குப் போய் அப்புறமும் தூங்கிக் கொண்டே இருந்தவளை, பக்கத்தில் இருந்த பெண்மணி தட்டி எழுப்பி விமானத்துக்கு அழைத்துப் போனார்.

ஹாங்காங்கில் தூக்கம் வரவில்லை. ஆனால் நல்லகாலமாக வண்டி சீக்கிரமே கிளம்பிவிட்டது. “சும்மா ஹாங்காங் விமான நிலையத்துக்கு அந்நியச் செலாவணி கொண்டுவரத் தான் அங்க நிறுத்தி எல்லாத்தையும் மாத்தறாங்க.. இல்லைன்னா, அங்க தரையிறங்கவே வேண்டாம்.. ” என்று அடிக்கடி பயணிக்கும் - இந்தமுறை பிலிப்பைன்ஸ் செல்லும் சகபயணி, சென்னை விமான நிலையத்திலேயே சொல்லி அலுத்துக் கொண்டிருந்ததால், ஹாங்காங் வெறும் பணம் பிடுங்கி நிலையமாகவே எனக்குத் தெரிந்தது.. ஆனாலும் பத்து டாலரை ஹாங்காங் பணத்துக்கு மாற்றி, கேவலமான ஒரு காப்பியை வாங்கிக் குடிக்காமலிருக்க மனம் வரவில்லை.

சிங்கையின் நகரும் நடை மேடை மாதிரி இங்கே ஒரு வண்டியே வைத்திருக்கிறார்கள். ஏறி உட்கார்ந்தால் வேண்டிய இடத்தில் கொண்டுவிட பணம்.

சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையம் பரவாயில்லை. போன முறை நியூயார்க்கில் இறங்கியபோது மூன்று டாலர் கொடுத்தால் தான் சாமான் தள்ளும் வண்டி கிடைக்கும் என்று கறாராக சொல்லிவிட, முதல்முறைப் பயணமாதலால், அலுவலகத்தில் கொடுத்த சில்லறையில், பத்துக்குக் குறைவாக இல்லாமல் போக, நானே எல்லாவற்றையும் தோளில் தூக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு கஸ்டம்ஸைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. இந்த முறை இலவசமாகவே சாமான் தள்ளும் வண்டி கிடைக்கவும், நிம்மதியாக வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.
வழி நெடுக கண்ட முக்கிய ஆச்சரியம், எப்படித் தான் ஆங்கிலம் கூட தெரியாத தாய்-தந்தையரைத் தைரியமாக இத்தனை தூரம் அனுப்பி வைக்கிறார்களோ/ அழைத்துக் கொள்கிறார்களோ! முதல் பயணத்துக்காவது உடன் இருந்து கூட்டி வரலாம் இல்லையா! கிட்டத்தட்ட மூன்று பேருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் immigration formஐ மொழிபெயர்த்து எழுதிக் கொடுக்கும் வேலைக்குத் தனியாக ஏதாவது காசு வாங்கி இருக்கலாம்.. இந்த ஊர்க்காரர்கள் வாங்கி இருப்பார்களாக இருக்கும்! பழைய காலத்தில் கிராமத்தில் தபால் எழுதிக் கொடுப்பவள் போல் நான் உட்கார்ந்து எழுதுவதைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சர்தார்ஜி குடும்பம் வருவதற்குள் நான் ஜூட்.. (பஞ்சாபி அவ்வளவாக தெரியாதே.. )
கலிபோர்னியா முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்குக் கூட்டம் தான். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தியேட்டரில் இன்னமும் சக் தே இந்தியா ஓடிக் கொண்டிருக்கிறது. தெருவில் முக்குக்கு முக்கு ஒரு இந்திய கடை, இந்திய உணவகம். அட நம்மூரூ மாதிரி, இந்த ஊரின் ஆளுநரும் ஒரு முன்னாள் சினிமா நடிகர் தானே!
மற்ற அமெரிக்க நகரங்கள் போல் இல்லாமல் இங்கே பொது போக்குவரத்து வசதி அதிகம். VTA, BART, Caltrain பல பெயர்களில் ஊர் பூராவும் ரயில், பஸ்ஸில் போய் வரலாம். இணையத்தில் வழிபார்த்து வண்டி ஓட்டலாம். - கூகிளாரே தெய்வம் :)அப்படியே, இணையத்தில் வழிபார்த்து பேருந்து கூட பிடிக்கலாம். அரை மைல் நடக்கத் தயாரா, அதற்கேற்ற மாதிரி வழிசொல்ல ஒரு பக்கம். அட, நீங்க கால் மைல் தான் நடப்பீங்களா, அதுக்கும் பேருந்து இருக்கு, ஆனா காத்திருக்கும் நேரம் அதிகரிக்கும் எப்படி வசதி? என்று விரும்பிய வகையில் பயணிக்கலாம்.
எல்லாமே நம்மூரைவிடப் பெரிது பெரிதாக கிடைப்பதால், ரயிலும் நம்ம ஊரைவிட பெரிய ரயிலாக இருக்கும் என்று ஆசைப்பட்டு பார்த்தால் தண்ணீர்ப்பாம்பு மாதிரி சின்னதாக, ரெண்டே ரெண்டு பெட்டியோடு, நடுத்தெருவில் ஓடுகிறது ரயில்! சுத்தமாக இருக்கிறது என்றபோதிலும், நிறைய பேர் பயன்படுத்துவதாக தெரியவில்லை.. எங்கள் அலுவலகத்தில் பாஸ் கொடுக்கிறார்கள் என்பதால் வருபவர்கள் நிறைய. மற்றபடி மதியமும், மாலை, இரவுகளிலும், இந்தப் பேருந்துகள் ரயில்களை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் இல்லை தான். இரண்டு பெட்டி என்பது வார இறுதிகளில் ஒற்றைப் பெட்டியாக குறைந்தும் விடுகிறது.

ஆங்காங்கே தெரு நடுவில் ரயில்பாதைகள் மட்டுமல்ல, ரயில் நிலையங்களும் கட்டி வைத்திருக்கிறார்கள்! ரயில் நிலையத்துக்குப் போக ஒருபக்கத்து வாகனப் போக்குவரத்தைக் கடந்து வர வேண்டும்.


இது ஊர்விட்டு ஊர் ஓடும் பெரிய வண்டி..
வீடு வாடகைக்கு எடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி போன இடுகையில் எழுதி இருந்தேன். சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு தோழி ‘வீட்டு சொந்தக்காரர் எங்கே இருக்கார்?’ என்று கேட்டபோது தான் வாடகை என்ற பதமே தப்பு என்று தோன்றியது. வீடுகள் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் காரர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்க, அவற்றிலிருந்து ஒரு வீட்டை ஆறு அல்லது பத்து மாத லீஸுக்கு (இதுக்குத் தமிழில் என்ன?) விடுகிறார்கள். ஆக சொந்தக் காரர் கட்டுமான நிறுவனம் தான். வாடகை வீட்டுக்கு ஒரு காப்பீடு வேற எடுக்கச் சொல்லி, அது வேறு செலவு.

எங்கள் வீட்டுப் புழக்கடை :) இந்த ஊரில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் இது தான்..
மின்சாரம், வீட்டு தொலைபேசி எல்லாம் ஏற்கனவே கனெக்ஷ்ன் இருக்கிறது. ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் ‘இன்ன தேதியிலிருந்து இவை வேலை செய்யும்’ என்கிற அளவுக்கு சொல்லிவிடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் வாங்க ஆளுநர் படம் போட்ட புத்தகத்தை நெட்டுரு போடச் சொல்லி விட்டார்கள். இந்தியாவிலும் நாம் பின்பற்றும் பல உருப்படியான போக்குவரத்து விதிமுறைகள் ஏன் செய்கிறோம் என்று தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கும் அந்தப் புத்தகத்தை ஏதோ தேர்வுக்குப் படிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஆர்வமாக படிக்க முடிந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த மத்திய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த மேற்கு அமெரிக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. பெருநகரங்கள் தவிர்த்த இடங்கள் பச்சை பசேலென்று ‘புதர’கமாகவே இருந்த மத்திய அமெரிக்க வாசம் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே ஆங்காங்கு நம் மொழியும், உணவும் கிடைத்துக் கொண்டே இருந்தாலும், நெருக்கமாக மனிதர்கள் வாழும் நகரங்களைத் தாண்டி மற்ற இடங்கள் மொட்டை மலைகளாகவும், பாலைவனமாகவும் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இல்லை தான். சென்னையை ஒப்பிடுகையில் ஊர் கொஞ்சமே கொஞ்சம் குளிருகிறது எனக்கு.. ‘இந்த ஊரே குளிரினால் நீ அமெரிக்காவுக்கு லாயக்கே இல்லை’ என்ற வாக்கியத்தை இப்போதெல்லாம் எல்லா மொழியிலும் கேட்டுவிடுகிறேன் :).
ஊர்ப் பெயர், தெருப்பெயர் என்று எல்லாமே ஸ்பானிஷ் மொழிப் பெயர்களாக இருக்க, பேருந்து, விமான நிலையங்களில் வியட்னாம் மொழியில் வேறு எழுதி வைத்திருக்கிறார்கள். போர்க் கைதிகளாகவோ அகதிகளாகவோ வந்திருப்பார்களோ என்னவோ, நிறைய வியட்னாமியர்களும் தென்படுகிறார்கள். சீனர்கள், ஜப்பானியர், தாய் மக்கள், பாக் என்று ஆசியர்களும் நிறைய..
அப்புறம் முக்கியமான விசயம் மறந்து போச்சே! இங்கே சாண்டா க்ளாரா மாநில அரசு நூல் நிலையங்கள் தமிழைத் தன் சிறப்பு பிற மொழியாக கருதுகின்றன.. நிறைய தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கிறது, அரசு நூலகத்தில்… என்ன கொஞ்சம் அரதப் பழையதாக, சாண்டில்யன், கல்கி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா என்று நான் படித்ததாகவே இருந்தாலும், இந்த ஊரில் தமிழ் என்ற ஒரே காரணத்துக்காக வாராவாரம் போய் அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறேன். ஒரு உறுப்பினர் அட்டைக்கு எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எடுத்து மூன்று வாரங்களுக்குள் திருப்பலாம். அதே போல தமிழ்ப் பட குறுந்தகடுகளும் கிடைக்கின்றன. அவற்றையும் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து ஒரு வாரத்தில் திருப்பலாம்.. சரி சரி, நூலகம் மூடுவதற்குள் கிளம்பவேண்டும்.. அப்புறம் வந்து மிச்சம்..

Sunday, September 16, 2007

உங்க வரலாறு என்ன?

அப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்றால் அது கடன் தான். கடன் வாங்குவது மட்டுமல்ல.. யாருக்காவது கடன் கொடுப்பது என்றாலும் சுத்தமாக பிடிக்காது. சின்ன பென்சில் பேனா கடன் வாங்கினாலே, ஒழுங்காக அதே நாள் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தான் வீட்டுக்கு வர வேண்டும் என்பார். யாராவது கைமாற்றாக பணம் கேட்டால் கூட ‘கடனெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அவர் கேட்ட பணத்தை ‘இதோ வச்சிக்குங்க’ என்று சும்மாவே கொடுத்துவிட்டு வந்து ஏமாளி பட்டம் வாங்கும் ரகம் அவர்.
அவர் பெண் என்ற முறையில் நானும் கூட யாருக்கும் ஒரு ரூபாய் கடன் கொடுக்கவோ வாங்கவோ ஆயிரம் முறை யோசிப்பேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வங்கிக் கணக்கோடு இலவசமாக கடன் அட்டையும் தருவதாக சொன்னார்கள். கடன் என்ற சொல் வருவதாலேயே அதை வாங்க மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டேன். வங்கி அலுவலர்கள் அதன் சிறப்பியல்புகளை எல்லாம் பயங்கரமாக விளக்கியபோதும் ‘நோ சான்ஸ்’ என்று முரண்டு பிடித்ததில் ‘ஆளை விடு!’ என்று ஓடி விட்டார்கள்.
அதன்பின்னர் முதல் மூன்று மாதங்களுக்குள் எங்களுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தது.. நண்பன் பொதுவாக சங்கோசப் பேர்வழி. நான் உட்பட வெகு சிலரே அவனுக்கு அந்த ஊரில் தெரிந்தவர்கள். நானும் மற்றொரு தோழருமாக மாலை அந்த அம்மாவைப் பார்க்கப் போகவும், அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துப் போக வேண்டியதாகிவிட்டது. அலுவலகத்தில் எங்கள் எல்லாருக்கும் குடும்ப சகிதம் மெடிக்ளெய்ம் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த ஆஸ்பத்திரி இந்த மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராது என்பது நண்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை (என்று நினைவு).. இக்கட்டான அந்த நொடியில் மற்றொரு நண்பர் தனது கடன் அட்டையைத் தேய்த்து மருத்துவச் செலவுகளைக் கொடுத்து ஒருவழியாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது.
அன்றைக்கு முடிவெடுத்து ஒருவழியாக எங்கள் அலுவலக சிபாரிசில் கடன் அட்டை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினேன். அப்போதெல்லாம், இப்போது போல் நொடிக்கு மூன்று பேர் அழைத்து ‘எங்க வங்கி கடன் அட்டை வாங்குங்களேன்..’ என்று கூவி விற்கும் காலமில்லை.. ஆனால் கடன் அட்டையை பயன்படுத்தாவிட்டால் அதை திரும்ப எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்று பயந்தே அதை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை.. ‘உனக்கெல்லாம் கடன் அட்டையே தேவையில்லை’ என்று தோழிகளும், ‘கடன் அட்டைன்னு பேர் இருக்கும் போது, அதைப் போய் பயன்படுத்தலாமா?’ என்று வீட்டிலும் என இரு பக்கமும் எனக்கு இடி தான் ;-)
இப்ப என்னத்துக்கு இந்தக் கதையெல்லாம்ங்கிறீங்களா? ம்ஹூம்.. இந்த ஊரில் இப்பத்தைய என் மிகப் பெரிய பிரச்சனையே கடன் வரலாறு இல்லாதது தான்.. வீடு கொடுப்பதானாலும், போன் இணைப்பு கொடுப்பதானாலும், அட கரண்ட் கனெக்ஷனுக்குக் கூட கடன் வரலாறு இருக்கான்னு கேட்கிறாங்க இங்க..
‘ஐயா, பணமா கொடுத்துடறேன்.. கடனே வேண்டாம்னு’ சொன்னால்.. ‘பணமெல்லாம் வாங்க மாட்டோம். உங்க கடன் அட்டை எண்ணைக் கொடுத்தாலே போதும்.. அப்புறம் நாங்க உங்க கடன் வரலாற்றைக் கண்டு பிடிச்சிகிட்டு வரோம்.. அதுக்குக் கூட அதிகம் சார்ஜ் பண்ண மாட்டோம்’ என்று ஒரு உதார்.
‘எனக்கு இந்த ஊரில் கடனும் இல்லை அதனால் வரலாறும் இல்லை, இந்திய கடன் அட்டை நம்பர் கொடுக்கவா? அதோட வரலாற்றைத் தெரிஞ்சிகிட்டு வரீங்களா? ‘
‘அந்நிய நாட்டு விவரங்களை நாங்க நம்ப மாட்டோம். உங்க பாஸ்போர்ட் எண்ணையே எங்க அரசாங்க முத்திரை இருந்தா தானே நம்புவோம்.. ‘
‘ம்கும்.. இப்ப நான் என்னதான் பண்ணனும்?’
‘எங்க நாட்டில் நல்ல கடன் வரலாறு இருக்கிற ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தா உங்களுக்கு வீடு தரோம்.. ‘
‘இல்லைன்னா?’
‘இல்லைன்னா, சரியான கடன் வரலாறு இல்லைங்கிறதுனால நீங்க இன்னும் அதிக டெபாசிட் கட்ட வேண்டி இருக்கும். ‘
“கடன் அன்பை முறிக்கும்” என்று விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்த அப்பாவிடம் சொல்லிக் கத்த வேண்டும் போலிருந்தது.. கடனுக்கு -இல்லை- கடன் வரலாறுக்கு இங்கே எத்தனை மதிப்பு என்பதைப் பற்றி..

Sunday, August 26, 2007

‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)

ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு என்றவுடன் ‘ஓ! வச்சிக்கலாமே!’ என்று பெரிதாக தலையாட்டியது நான் தான். ஆனால், அன்றைய மிக முக்கியமான சில அப்பாயிண்டமெண்ட்கள், அந்த நாள் முழுவதையுமே அடித்துக் கொண்டு போகக் கூடியவை என்பது அப்போது தெரியவில்லை…
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று கிட்டத்தட்ட பத்து வருடம் ஒன்றாக பழகிய ஒரு தோழனின் திருமணம், அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன், ஒரு சமயம் அறைத்தோழியாகவும் இருந்த நெருங்கிய தோழியின் அண்ணன் திருமணம் என்று இரண்டு முக்கிய நிகழ்வுகளும், இந்த இரண்டிலும் கலந்துகொள்ள இவர்கள் போலவே இன்னும் நெருங்கிய தோழி சென்னை வந்திருந்ததுமாகச் சேர்ந்து ‘வலைப்பதிவர் சந்திப்புக்குத் தலைகாட்டவும் முடியுமா?’ என்றே சந்தேகமாகிவிட்டது..
எப்படியோ தோழியிடம் அனுமதி பெற்று, ஐந்தேகாலுக்கு சந்திப்புக்குப் போய்ச்சேர்ந்து, ஆறேகாலுக்கு கிளம்பவேண்டியதாகிவிட்டது.
யார் என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.
* நான் போனபோது மா.சிவகுமார் பதிவர் பட்டறை குறித்து எல்லாரையும் பேச வைத்துக் கொண்டிருந்தார். இராம.கி ஐயா, சொர்ணம் சங்கரபாண்டி, சுந்தரவடிவேல் என்று வரிசையாக எல்லாரும் பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்துப் பேசினர். கருத்து சொல்லும் அளவுக்கு அவர்களின் பேச்சைப் பின்பற்றவில்லையாதலால், அறிமுகம் கொடுக்க நேர்ந்த போது பேசிவிட்டு வெளியே வந்து காபிக்கு ஆர்டர் கொடுத்தேன்.
* சங்கரபாண்டி பதிவர் இல்லையாம்! பின்னூட்டம் மட்டுமே இடுவாராம்! அவரின் கூர்மையான பின்னூட்டங்களைப் பலவிடங்களிலும் படித்திருந்ததால், என்னால் நம்பவே முடியவில்லை.
* சுந்தரவடிவேலிடம் கடைசியாகச் சொல்லிக் கொண்டு கிளம்பவே நேரமிருந்தது. போன ஒரு மணி நேரத்திற்கு தமிழ்மணம் டீசர்ட் லாபம்! ;)
* தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க வேண்டிய அவசியமின்மையையும் இந்திய நேரத்தில் தமிழ்மண தொழிற்நுட்ப உதவி கிடைக்காமல் போவது பற்றியும் சொல்லிவிட்டு ஓடவேண்டியதாகவிட்டது..
* அங்கும் இங்கும் சித்தார்த் துபாயிலிருந்து வந்திருந்தார். சில வார்த்தைகள் பகிர்ந்து கொண்டதுடன் தொலைபேசுவதாக சொன்னேன்.. பேச வேண்டும்
* நந்தாவின் புத்தகங்களைத் திருப்பிவிட்டு வேறு ஒரு புத்தகம் பெற்றுக் கொண்டேன்.
* அண்ணன் உண்மைத்தமிழன் அமைதியாக அமர்ந்திருந்தார். எங்கள் எல்லாரையும் விட அவரின் விவரக் குறிப்பு தெளிவாகவே வரும் என்று நம்புகிறேன்.
* அதியமான் வழக்கம் போல சலம்பிக் கொண்டிருந்தார் ;). நதியக்காவின் புத்தகம் என் கைக்கு வரும்முன்னரே வாங்கிப் பார்க்க முயன்றார். “கவிதைப் புத்தகம், உங்களுக்கு உதவாது” என்று நான் சொல்லவும், ” ஏன், இப்ப கூட மாசி வச்சிருக்கார் பாருங்க அந்தக் கவிதைப் புத்தகம் நான் படிச்சிட்டு கொடுத்தது தான்” என்றார். அப்படி என்ன புத்தகம் என்று பார்த்த போது அது சுஜாதாவின் புறநானூறு… !
* நதியக்காவின் சூரியன் தனித்தலையும் பகல் எப்படியும் நண்பர்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். அக்காவுக்காவது ஒரு காப்பி மிச்சமாகும் என்று நினைத்து சொன்னேன்.. ஆனால் “இல்லை இல்லை உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கணும். நீங்க முக்கியமானவர்” என்று சொல்லி கையில் கொடுத்துவிட்டார்..
* இரண்டு மூன்று புதிய பதிவர்கள், சில பின்னூட்டக்காரர்கள், பதிவர் பட்டறையில் பதிவு தொடங்கிய நண்பர்கள் சிலர் என்று புதியவர்களும் வந்திருந்தார்கள்.
* சொந்த சோகம் இருந்தாலும், பதிவர் சந்திப்பை விட்டுக் கொடுக்காமல் வந்திருந்தார் லக்கிலுக். சீக்கிரமே கிளம்பிவிட்டதாக சொன்னார்கள்.. ஆனால் அவரை விட சீக்கிரமாக நான் கிளம்பிவிட்டேன்..
* வினையூக்கியின் அதிர்ச்சி பரவாயில்லை என்னுமளவுக்கு எனக்கு அதிர்ச்சி - பதிவர் பட்டறை அன்று வினையூக்கி சொன்னாரே என்று, நான் தமிழ்99 சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது சுரதாவுக்கும் அவரின் தம்பிக்கும் தான் என்று அறிந்த போது…
“எனக்குத் தமிழ்த்தட்டச்சு தெரியும், தமிழ்99 எண்டால் நாங்கள் மீண்டும் சொல்லிக் கொள்ள வேணுமோ?” என்று அவர்களில் ஒருவர் கேட்ட போது, “தட்டச்சு தெரிந்தால் நீங்கள் பாமினி முறைப்படி தட்டலாம்.. ஆனால் அது எனக்குப் பழக்கமில்லையே!” என்றேன். “எனக்கு பாமினி தெரியும். நான் அப்புறம் சொல்லிக் தாரேன்” என்று அப்போதைக்கு காப்பாற்றியவரும் சுரதா தான்.
அகிலனைப் பற்றி அவர்கள் விசாரித்ததால், இவர்கள் அகிலனின் நண்பர்கள் என்றும் அது காரணமாகத் தான் பதிவர் பட்டறைக்கு வந்திருக்கிறார்கள் என்றும் நினைத்திருந்தேன். காசியைப் பார்க்க வேண்டும் என்று பட்டறையன்று சுரதா கேட்டதற்காக அவருடன் கொஞ்சம் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிய போதும், இவர் சுரதாவாக இருக்கக் கூடும் என்று நினைத்திருக்கவில்லை..
இப்படி ஒரேயடியாக, சுரதாவுக்கே தமிழ் தட்டச்சக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்தது கூட இல்லை! சந்திப்பன்று ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ என்று கேட்டால், “என்ன அக்கா, உங்கள் மாணவன் எண்டால் பெருமை தானே! ” என்று சேம் சைட் கோல் வேறு!
சுரதாவுக்கு எங்களின் முக்கியமான வேண்டுகோள்: மாறுவேடத்தில் வந்து நல்லா பீதியைக் கிளப்பிட்டீங்க.. ஊருக்குப் போன பின்னாடி, பட்டறையைப் பற்றிய உங்க அபிப்பிராயத்தை எழுதினால், செப்பனிட எங்களுக்கு உதவியாக இருக்கும்..
பிகு: பதிவர் சந்திப்புகள் திகட்டும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறதாக எனக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.. இந்தமுறை அதிகம் கலந்துரையாடல் இல்லாத சந்திப்பாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம். பதிவர் பட்டறை போன்ற பெரிய அளவிலான நிகழ்வுகள் நடந்தபின் சந்திப்புகள் மிகவும் தேக்கமடைந்ததாக தோன்றுகிறதோ என்னவோ..
எனவே பொன்ஸின் கருத்து கந்தசாமி சொல்வது என்னவென்றால்,
* கூடியவரை அதிக இடைவெளி விட்டு அடுத்தடுத்த சந்திப்புகள் நடத்தலாம்.
* பதிவர் பட்டறையை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ஏற்கனவே பதிந்து கொண்டிருப்பவர்களுக்கான கணினிப் பயிற்சியையும் பதிவர் சந்திப்பையும் சேர்த்து ஏற்பாடு செய்தால் ஒருவேளை இன்னும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையலாம்..

Monday, August 06, 2007

பதிவர் பட்டறை - என் பார்வை..

எங்க அக்கா (பெரியம்மா மகள்) கல்யாணம் நடந்து முடிந்த அன்று இருந்தது போன்ற, நிறைவு, மகிழ்ச்சி, சலசலப்பு, களைப்பு, நிம்மதி, கூட இன்னும் கூட நல்லா செய்திருக்கலாமே என்ற ஏக்கமும் நிறைந்திருக்கிறது… சனி மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான் ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்..
வாங்க வேண்டிய டேப், பிசின், கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், சார்ட் பேப்பர் என்று லக்கி மற்றும் இவானுக்குப் பட்டியல் போட்டுக் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டு, feedback formகளுக்கான கேள்விகளையும், ஒழுங்கையும் டிசைன் செய்து நிமிருகையில் குறுவட்டுக்கள் வந்திறங்கின. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஒன்றிலிருந்து இருநூற்றைம்பது எண்ணியது இப்போதான் முதல் முறை ;) வாங்கி வைத்துவிட்டு பார்த்தால் பேனர்கள் வந்திறங்கின. பிரித்துச் சரிபார்த்துவிட்டு அவற்றை ஆட்டோவில் போட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒழுங்கு செய்திருந்த பின்னூட்ட பாரத்தை அச்செடுக்க பதிப்பகம் போனேன்.
‘கிளம்பும் நேரம் வரீங்களே’, என்று அலுத்துக் கொண்டே அச்சிட்டுக் கொடுத்தார்கள் மாணவர் மறுபதிப்பு அச்சகத்தில்.. பிரதிகளை எடுத்துக் கொண்டு பல்கலைக்கழகம் வந்த போது,
1. கணினிக்கள் தயாராக இருந்தன. ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார்கள் ஜேகேவும் வினையூக்கியும்
2. செல்லா, நந்தா, அருள்குமார், ஜெய், சிவகுமார், சுந்தர் எல்லாம் சேர்ந்து மறுநாள் கொடுக்க வேண்டிய பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்
3. பாலாவும் லக்கியும் குறுவட்டுகளையும் இன்னும் விடுபட்ட பேனர் முதலானவற்றையும் எடுத்து வந்துகொண்டிருந்தனர்.
4. விக்கி அடுத்த நாளுக்கான கலந்துரையாடல் திட்டத்தை மாற்றி, மறுசீரமைத்துக் கொண்டிருந்தார். புதிய பேச்சாளர்களிடமும் பேசி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்
என் பங்குக்கு நானும் சில கணினிக்களைச் சோதித்து பார்த்து, இகலப்பை, பையர்பாக்ஸ் என்று மென்பொருள் நிறுவிவிட்டு கிளம்பி வீடு சேர்ந்த போதே பதினொன்றாகிவிட்டது.. செல்லா முதலானோர் கிளம்ப இன்னும் தாமதமாகிவிட்டதாக கேள்வி…
காலை எழும்போதே ஜெயா போன் செய்து என் பொறுப்பில் நான் எடுத்து வர வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டார். ஜேகே தன் பங்குக்கு, ‘நீங்க வராட்டாலும் பரவாயில்ல, அந்த எக்ஸ்டெசன் கேபிளை அனுப்பி வச்சிடுங்க’ என்று பீதியைக் கிளப்பினார்..
ஏழரைக்கே கணினிகள் இணைப்புகளுடன் தயாராக இருந்தன. வினையூக்கி இன்னமும் சோதனை செய்து கொண்டிருந்தார். பரிமேலழகர் அறையில் செய்முறைப் பயிற்சியும், திருவள்ளுவர் அறையில் செய்முறை விளக்கமும் என்று எழுதி ஒட்டிவிட்டு, நிகழ்ச்சி நிரலையும் எழுதி வைத்தோம். கிழக்குப் பதிப்பகத்தின் ப்ரோஜக்டரை நிறுவி சோதித்தோம். இதற்குப் பிறகு கீழே அரங்கத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது எனலாம்..
முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.
அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!
HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!
காலை சென்னை வந்திறங்கி வூட்டம்மாவைக் கூட பார்க்கப் போகாமல் நேரே பதிவர் பட்டறைக்கு வந்த பெனாத்தல் சுரேஷ், பிளாஷ் அறிமுகம் கொடுத்தார். செய்முறை விளக்க வகுப்புகளில் இறுதி வகுப்பாக அமைந்த இந்த நிகழ்வையும் மக்கள் அதி ஆர்வத்துடன் கவனித்து கேட்டார்கள். மற்ற வகுப்புகளைவிட இந்த வகுப்புக்கு கூட்டம் அதிகம். மேசைகள் ரொம்பிப் போக, தரையில் அமர்ந்தெல்லாம் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
சுழற்சி முறையில், வினையூக்கி, நான், ஜேகே, சுந்தர், ஜெயா, கோபி, ஸ்ரினிவாசன் என்ற கடலூர்க்காரர் எல்லாரும் பரிமேலழகர் அறையில் பதிவு தொடங்கிக் கொடுப்பது, ஜிமெயில் கணக்கு, தமிழ்99 தட்டச்சு என்று ஆரம்ப பாடம் எடுத்தோம். கற்றுக் கொண்ட சில மாணவர்கள், தாமே நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுத்த போது நிறைவாக இருந்தது. டோண்டு சார் கூட யாருக்கோ பதிவு தொடங்கச் சொல்லிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தேசிகனும் சிலருக்கு பதிவுகள் தொடங்கிக் கொடுத்தார்.
கலந்துரையாடல் அரங்கமும், செய்முறை விளக்க வகுப்பும் - இரண்டுமே போரடிப்பதாக தோன்றம் நபர்கள் வந்து கற்றுக் கொள்ளவே செய்முறை பயிற்சி அறையான பரிமேலழகர் அறையை வைத்திருந்தோம். மதியத்திற்கு மேல் பரிமேலழகரில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது.. மக்கள் கலந்துரையாடலையும், செய்முறை விளக்கத்தையும் ரசித்துக் கேட்பதற்கான அறிகுறியல்லவா அது?!
மாலை வலைப்பதிவுகள் சார்ந்த புதிய முயற்சிகள் பற்றி அரை மணியில் தொகுத்து, அடுத்த அரை மணியில் அறிமுகம் கொடுத்து என்று அதுவும் ஒரு த்ரில்லாகி விட்டது.. எழுத்துரு மாற்றப் பயிற்சி, ஏற்கனவே தமிழிணையத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் என்றுவிட்டார் கோபி. கடைசியாக அதில் ஆர்வம் காட்டிய எனக்கும், க்ருபாசங்கருக்கும் மட்டும் தனி பயிற்சி வகுப்பாக exclusiveஆக சொல்லிக் கொடுத்தார் கோபி..
சுவையான சில:
* லக்கியின் புகைப்படம் சீர்ப்படுத்துதல் வகுப்பை ஆர்வமாக விரும்பிய டோண்டு சார் மதியத்திற்கு மேல் கிளம்பிவிட்ட படியால் அந்த வகுப்பு நடத்தும் ஆர்வம் லக்கிக்கும் குறைந்துவிட்டது.
* மேலிருந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஓடிக் கொண்டிருந்தபோது, ‘என்னம்மா, நின்னு பேச மாட்டேங்கறீங்க!’ என்றார் அருணா ஸ்ரினிவாசன். ‘அவங்க கல்யாண வீட்டுக்காரங்க.. அப்படித்தான் பரபரப்பா இருப்பாங்க’ என்று பதில் சொல்லி கலாய்த்தார் காசி
* புதுவையிலிருந்து இரா. சுகுமாறன் வந்திருந்தார்.
* ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் - இவற்றில் செய்தியைப் பார்த்துவிட்டும் சிலர் வந்திருந்தார்கள். அதிலும் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் மாலதி பதிவுகளைக் கவனிப்பதாக சொன்னார்.
* நமது கல்வித்திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ரிடையர்டு ஆசிரியர் ஒருவர் தம் மனைவியுடன் வந்திருந்தார். பதிவுகள் தொடங்க ரொம்பவே ஆவலாக இருந்தார்
* நாளிதழ்களில் எழுதும் மற்றுமொரு எழுத்தாளர், முதியவர், வலைப்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வந்திருந்தார்
* ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஆங்கிலத் தளம் ஒன்றில் அங்கமாக இருக்கும் பெண் ஒருவர் தமிழில் இதை எப்படிச் செய்வது? என்று கேட்டுக் கொண்டு வந்திருந்தார்
* மாணவ, மாணவிகள் அதீத ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள்.. காலை சிஃபி இணைப்பு மிகவும் மோசமாக இருந்த போதும், கிட்டத்தட்ட 50 புதிய வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் உருவாக்கி இருப்போம்..
* சி என் என், விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், உண்மை, ஜெயா டீவி நிருபர்கள் வந்தது மட்டுமே எனக்குத் தெரியும்.. வேறு யார் யார் வந்தார்கள் என்று கலந்து கொண்டவர்கள் சொன்னால் தான் உண்டு
இப்போதைக்கு இவ்வளவு தான்.. மற்றவை அவ்வப்போது நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்…
ஆரம்பத்துல இத்தினி அமைதியாத்தான் இருந்திச்சு அரங்கம்

அப்பாலிக்கா தான் இப்படி ஆகிடுச்சு….

அஜண்டா எல்லாம் எளுதி பக்காவாக் கீது பாரு..






ஞாயித்திக் கிழமை சென்னையில் நில நடுக்கம்னு நியூஸ் வந்திருக்குமே?!

ஓ… இட்லிவடை சுடத் தான் இத்தினி வேகமா?!

பாலபாரதியின் நண்பர் கார்ட்டூன் பாலா எங்க பக்கத்தில் உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசினார்.. அதுக்குள்ள அவர் விரல்கள் பேசியது தான் கீழே பார்ப்பது..

இந்தப் படம் பார்த்து எங்க அம்மாவின் கமெண்ட் : இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் கொண்டுவர கார்ட்டூன்ல தான் முடியும்..

செந்தில், சுகுணா.. இதைத் தாண்டி உள்ளே வரவே இல்லையே!

புறமுதுகு காட்டுவது அருள்

பேராசிரியர் தமிழி ;)

Monday, July 02, 2007

என்று தணியும்?! - ஒழுங்கற்ற சில சிந்தனைகள்..

எங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் போன வாரம் வீடு காலி செய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாவது படிக்கும் அவர்களின் மகனை மந்தைவெளியில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் சேர்த்திருக்கிறார்களாம். அந்தப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் பள்ளிக்கு ஐந்து கி.மீ சுற்றளவிலிருந்து வருபவர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். இந்த ஒரே காரணத்துக்காக, இவர்கள் விசாலமான சொந்த வீட்டைக் காலி செய்து கொண்டு அதிக வாடகையில், பள்ளிக்கருகில், சின்னதொரு வீட்டுக்கு குடி போகிறார்களாம். வருத்தத்துடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் விடைபெறவும், எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ‘தனியார் கல்வி நிறுவனங்கள் கூட இது போல் நல்ல விசயங்களை வற்புறுத்துகிறதே!’ என்ற வியப்பு தான். கொஞ்சம் தூரத்திலிருந்து பிள்ளைகள் வந்தால், பேருந்து, காலை உணவு, மதிய உணவு என்று பள்ளியிலேயே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து யானை விலை, குதிரை விலையில் கொடுத்து லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள் இப்படி மனம் மாறி நல்ல விசயங்களை வற்புறுத்துகின்றன எனில், புது தில்லி உயர்நீதி மன்றம் சில மாதங்களுக்கு முன்னால் வெளியிட்ட ஒரு தீர்ப்பு தான் காரணமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் மாணவர் சேர்க்கையில், தன் வளாகத்தை ஒட்டிய அருகாமை வீடுகளைச் சார்ந்த பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் தலைநகர் தில்லியைச் சார்ந்த பள்ளிகளுக்கு மட்டுமே விதித்திருந்தது. நாட்டின் மற்ற பள்ளிகளும் இதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றும் கருத்தாக தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த சட்டம் நாடு முழுவதும் அமலில் வந்து விட்டால் என்ன செய்வது என்று இப்போதே இது போன்றவற்றைத் தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கி விட்டன போலும்.
நாங்கள் மாணவிகளாக இருந்த காலகட்டத்தில், எங்கள் அப்பா அருகில் இருந்த பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டுவிட்டார். கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரியும் வயதில் அடுத்த கிராமத்தில் இன்னும் நல்ல பள்ளி இருப்பதும், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கூட அந்தப் பள்ளிக்குப் போய்ப் படித்து வருவதும் தெரிந்த போது, எங்களை ஏன் அந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பா சொன்ன பதில் இன்னுமும் நினைவிருக்கிறது. ‘பள்ளி என்பது மாணவர்களுக்கு நடக்கும் தூரத்தில் இருக்க வேண்டும். நாளைக்கு பள்ளியிலோ, ஊரிலோ ஏதும் பிரச்சனை என்றால், உடனுக்குடன் வீட்டுக்கு நீங்களே தானாக திரும்பி வரும் அளவுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளே சிறந்தவை. அப்படி ஒன்றும் பெரிய தர வித்தியாசம் வந்துவிடப் போவதில்லை. கல்வித்தரத்தை விட பள்ளியின் அருகாமை மிகவும் முக்கியம்’ என்றார். அப்போது அது ஏதோ சாக்கு போக்கு போலத் தான் தோன்றியது. ஆனால், மிதிவண்டியில் ஐந்து நிமிடத்தில் சென்றடையக் கூடிய பள்ளியில் படித்ததால், படிப்பைத் தவிர்த்த பொழுதுபோக்குகளுக்கு எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. தங்கைக்கு ஒருமுறை பள்ளியில் உடல்நிலை சரியில்லாமல் போன போது, அவர்களே ஆட்டோ வைத்து வீட்டில் கொண்டுவிட ஏதுவாக இருந்தது. சில சமயம் மறந்து விட்ட புத்தகங்களை மதியம் வீட்டுக்கு வந்து எடுத்துப் போக முடிந்தது. அப்பா சொன்னது போல், பெற்றோரை எதிர்பார்க்காது, நாங்களே சுயமாக எங்கும் போய் வரும் பழக்கம் உண்டானது இந்தப் பள்ளிக் காலங்களில்தான். இன்றைய பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு ஏனோ இது போன்ற யோசனைகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
போன வாரம், மழைக்கால இரவில், பிய்ந்த செருப்பைத் தைத்துக் கொள்ள ஒதுங்கியபோது, செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குடிசைக்குள்ளிருந்து அறிவியல் பாடங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தலையை உள்ளே விட்டு படிப்பது யாரென்று பார்த்தேன். சின்ன பையன் ஒருவன், அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக் குழல்விளக்கின் வெளிச்சத்தைப் பகிர்ந்து கொண்டு படித்துக் கொண்டிருந்தான். தெருவில் ஓடிக் கொண்டிருக்கும் வண்டிகள், அப்பாவைப் பார்க்க வந்து பேசிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், பக்கத்து தேநீர்க்கடையின் வானொலிச் சத்தம், எதுவுமே தன்னைப் பாதிக்காது அறிவியலில் மூழ்கி இருந்தான். ‘தம்பி என்ன படிக்குது?’ என்று பேச்சு கொடுத்தேன்.. ‘எட்டாவது’ என்றார் அவன் அப்பா. ‘எந்த ஸ்கூல்?’ என்றதற்கு, ‘பல்லாவரம் அரசுப் பள்ளி’ என்றார். அடக் கொடுமையே! இந்த வயதில் அரும்பாக்கத்திலிருந்து பல்லாவரம் போய்ப் படிக்க வேண்டுமா! பக்கத்திலேயே ஏன் சேர்க்கவில்லை என்று கேட்க நினைத்து, அதற்குள் அவருக்கு வேறு ஒரு வாடிக்கையாளர் வந்துவிடவே வேலையைக் கெடுக்க வேண்டாம் என்று நகர்ந்துவிட்டேன். தமிழ்வழி அரசுப் பள்ளிகள் அருகில் இல்லை என்று திருவான்மியூரிலிருந்து ஆலந்தூருக்குப் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்த தோழி ஒருவர் நினைவில் வந்து போனார்.
சாக்கு மூட்டைகளாக மாணவர்களை நிரப்பிக் கொண்டு செல்லும் ஆட்டோக்கள், நாளைய தலைமுறையினரை அழைத்துச் செல்வதை மறந்து வேகம் மட்டுமே குறியாய் ஓடும் பள்ளி வேன்கள், பெரிய மூட்டைகளைச் சுமந்து கொண்டு பேருந்துகளின் இடிபாடுகளிடையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்.. தில்லியின் அண்டைவாழ் மாணவர்கள் திட்டம் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்து சேருமோ? என்று அங்கலாய்க்கலாம் என்றால், அடுத்த பிரச்சனை பள்ளிகள்.
நம் நாட்டில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? அதில் எத்தனை குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள்? காலனிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும்போதே பள்ளிகளுக்கான இடங்களும் அதில் குறிக்கப்படுகின்றனவா? நூறு வீடுகள், அதிகபட்சம் ஐநூறு குடும்பங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளிக்கும் இடம் விட்டு நகரத்திட்டம் போட்டால் தான் ஓரளவுக்காவது இதை நடைமுறைப்படுத்த முடியும்.
சரி, பள்ளியை விட்டு அடுத்த கேள்வி, இத்தனை பிள்ளைகள் படிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
சமீபத்தில் கோவை அருகே மருதமலைக்குப் போயிருந்தோம். கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் கல்வீரன்பாளையம் அரசினர் பள்ளியில் பகல் பன்னிரண்டு மணிக்கு எட்டிப் பார்த்த போது பிள்ளைகள் ஆசிரியர் இல்லாமலே படித்துக் கொண்டிருந்தனர். ஒரு மாணவி புத்தகத்தைப் பார்த்து ஏதோ ஒரு பகுதியை உரத்துச் சொல்ல, மற்ற பிள்ளைகள் அதையே திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்ததைக் கண்டுகொண்ட பள்ளியின் சத்துணவுப் பிரிவு சமையற்காரர் தாமே வந்து என்ன ஏது என்று விசாரித்தார். சும்மா பிள்ளைகளைப் பார்க்க வந்தோம் என்று வழிந்து விட்டு, ஆசிரியர்களைப் பற்றி விசாரித்தால், ஒன்பது மணிக்குத் தொடங்கும் பள்ளிக்கு, அவர்கள் இன்னும் வந்து சேரவில்லையாம். ‘பஸ் கெடச்சிருக்காது.. கீழேருந்து வரணுமில்ல!’ என்று வெள்ளந்தியாக சொன்னார். சுமார் இருபது பிள்ளைகள் படிக்கும் அந்தப் பள்ளியில் வேலை செய்ய இரண்டு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஊருக்குள் யாரும் தங்கவில்லை, கீழே நகரத்திலிருந்து வந்து போகிறார்களாம்.
போகட்டும்; இன்றைக்கு இந்த மட்டும் வந்து போகவாவது ஆசிரியர்கள் இருக்கிறார்களே! நாளை நிலை இன்னும் கஷ்டமாகிவிடும் அபாயம் அதிகம் இருக்கிறது. என் தாத்தா காலத்தில் புனிதமானதாக கருதப்பட்ட ஆசிரியர்கள் தொழில் இன்றைக்கு வேறு வேலை கிடைக்காமல், ‘சரி, இதைத்தான் செய்வோமே!’, என்று அரைகுறை மனதோடு செய்யப்படும் தொழிலாக மாறிவிட்டது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் கூட மென்மேலும் படித்துவிட்டு வேறு பொருளாதார நிறைவளிக்கும் வேலை கிடைக்குமா என பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் தாம். அவர்களையும் குறை சொல்ல முடியாதபடி நமது கல்வி நிறுவனங்கள் உண்மையாகவே ஆசிரியர்களை மதிக்காமல் தான் செயல்படுகின்றன.
Business Process Outsourcing ஐ அடுத்து வந்து கொண்டே இருக்கும் Education Process Outsourcing ஆசிரியர்களுக்கு ஒரு வரம்; நம் மாணவர்களுக்குத் தான் எமனாக வரும் போலிருக்கிறது.. உட்கார்ந்த இடத்திலிருந்தே கணினியில், முன்னேறிய நாட்டு மாணவன் ஒருவனுக்கு பாடம் எடுத்து சந்தேகங்களை மட்டும் நிவர்த்திக்கவே ஐந்திலக்கச் சம்பளம் என்றால் ஆசிரியர்களுக்கு கசக்கப் போகிறதா என்ன? இந்த கல்வி ஏற்றுமதி இன்னும் கொஞ்சம் நாட்களில் அதிக பிரபலமாகி எல்லா ஆசிரியர்களையும் ஈர்த்துக் கொள்ளும் போது, இரண்டு விதமான நிலைகள் வரலாம், கல்வி நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ள அதிகம் சம்பளம் கொடுக்க நேரிடலாம். இன்றைக்கு லட்சங்களில் விலை பேசப்படும் இருக்கும் கல்வியின் விலை கோடிகளுக்கு உயரலாம். அல்லது, இளைய வகுப்பினருக்கு பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லாமல், மருதமலை அரசினர் பள்ளி போல பெரிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இளையவர்களுக்கு ஆசிரியராகிப் போகலாம்….
சுதந்திரமடைந்து ஐம்பது வருடங்கள் கழித்து, அனைவருக்கும் கல்வி என்பதை திட்டமாக பேசிக் கொண்டே இருக்கிறோம். போகிற போக்கில் அந்த கல்வியும் காணாமல் போய் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டியதாகிவிடும்..
பேசாமல், அரசாங்கமே Education Process Outsourcingஐ பள்ளிகளுக்கு வாடகைக்கு விட்டு, ஒரு பகுதி அயல்நாட்டு வருமானமாகவும், சரிபாதி நம்நாட்டுப் பிள்ளைகளுக்கான கல்வியாகவும் பராமரிக்கலாம்..
பிகு: கும்பகோணம் தீ விபத்து குறித்த பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் ‘என்று தணியும்’ ஐப் பார்த்தது, மற்றும் சொந்த அனுபவங்கள் என்று சில தொடர்பற்ற சிந்தனைகளின் விளைவு இந்த இடுகை.. அத்தனை தூரம் கிராமங்களிலிருந்து வந்த பிள்ளைகளாக இல்லாமல், பள்ளிக்கு அருகாமையிலேயே பெற்றோரும் அவர்தம் வீடுகளும் இருந்திருந்தால், தினசரி கவனித்திருப்பார்களோ என்னவோ.. அத்தோடு, ஏதும் பிரச்சனை என்றால் உடனுக்குடன் அணுகி உதவும் முடிந்திருக்கும்..

Thursday, May 24, 2007

இங்க வாங்க

தனிக் காடு...

Thursday, May 17, 2007

கெளம்புறேங்க..


'வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் வீடு வாங்கிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.' என்று சமீபத்தில் எங்கோ படித்த நினைவு.. நிஜத்தில் எப்படியோ, மெய்நிகர் உலகமான இணையத்தில் சொந்த வீடு சுலபமான விசயம் தான் என்பது வாங்கிப் போட்டபோது தான் தெரிந்தது..

கூகிளின் தீவிர விசிறியாதலால், கூகிள் ஆப்ஸ் மூலம் முதலில் தளம் வாங்கிப் போட்டாச்சு.. ஆனால் வோர்ட்பிரஸ் மென்பொருளுக்குத் தான் அதில் இடமிருக்கவில்லை :(



சரியென்று, உள்நாட்டு இடம்வழங்கித் தளமான தமிழாவிடமிருந்து இடம் வாங்கி ஒருவழியாக மென்பொருளும் நிறுவியாச்சு..

பழைய இடுகைகளுக்குத் தான் இடமில்லை அங்கே.. அதனால் கொஞ்சகாலத்துக்கு பழைய இடுகைகளை இங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் இப்ப

கெளம்புறேங்க..



அங்க வந்து கண்டுக்கோங்க :)

Tuesday, May 08, 2007

சற்றே பெரிய சிறுகதை

"கற்பகம், வர்ற பதினஞ்சாந்தேதி, எம் மூணாவது மருமவ சாந்திக்கு வளைகாப்பு சீமந்தம் வச்சிருக்கேன். நீ வீட்டுக்கு மூத்தவளா ஒரு வாரம் முந்தியே வந்திருந்து நல்லபடியா நடத்திக் கொடுக்கணும். பஸ்ஸு கெடைக்கல, ரயில்ல சீட்டெடுக்க மறந்திட்டோம்னு ஏதாச்சும் சொன்னே பாரு, கெட்ட கோவம் வரும் எனக்கு"

சமையலறையில், இரவு சாப்பாட்டுக்காக காய் அரிந்து கொண்டிருந்த சந்தனாவுக்கு, சின்ன மாமியார் இதைச் சொன்ன உடனே புரிந்து போனது, இவர்களது பேச்சுவார்த்தை அடுத்து எந்தப் பக்கம் போகும் என. பெருமூச்சு விட்டுக் கொண்டாள். கேட்டுக் கேட்டு மரத்துப் போன விசயம் தான். ஆனாலும், அவளுடைய அத்தை, புதிய விசயம் மாதிரி பேசும் போது கோபம் வந்து விடுவது வழக்கம்.

"ம்ம். என்னாத்தச் சொல்லுறது?! வீட்ல ஒரு மலட வச்சிகிட்டு இப்படி வளைகாப்பு, புள்ள பொறப்புக்கெல்லாம் போக முடியுமா? வர்றவ போறவ எல்லாம் இதையே கேட்டு உசிர வாங்குவாளுக. உங்கிட்ட சொல்றதுக்கென்ன, போன மாசம் நம்ம ரேவதி இல்ல, அவளோட, நாலாவது பேத்திக்குக் காதுகுத்து. இந்தப் பொண்ணையும் கூட்டித்தான் போயிருந்தேன். எனக்குன்னு வந்து சேர்ந்திருக்குது பாரு! நேர போய் சின்னக் கொழந்தைய தூக்கிடுச்சு. ரேவதி என்னடான்னா, என்ன தனியா கூப்பிட்டு சொல்லுது.. 'யக்கா, தப்பா நெனக்காதே, புள்ளைக்கு எதனா ஆகிடப் போவுது. கொஞ்சம் எறக்கி வுடச் சொல்லுன்னு'.. " மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள் கற்பகம்மாள்..

வெங்காயம் அரியத் தொடங்கும் முன்பே, சந்தனாவுக்கு கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அன்றைக்கு அவள் செய்த பிழை என்ன என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை. ரேவதியின் மகள் சசிகலாவே தான் அந்தக் குழந்தையை அவள் கையில் கொடுத்து, "கொஞ்சம் பார்த்துக்க சந்தனா!" என்று சொல்லியிருந்தாள். அவளுடைய அம்மா அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்த போது கூட, சந்தனாவுக்கு ஆதரவாகப் பேசியது சசி தான். இங்கே இந்தப் பேச்சு பேசும் அவளுடைய அத்தை தான், அன்றும் ரேவதி மதனியையும் தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது.

"ஆமாங்க்கா, கண்ணாலமாகி ஆறு வருசம் இருக்குமில்ல? செந்தில் கல்யாணத்துக்கு முன்னாலயே வந்திடிச்சில்ல சந்தனா? இன்னுமா ஒரு புழுபூச்சி உண்டாகலை?" அக்காவுக்குச் சளைக்காத தங்கை தான்.

"அதையேங் கேக்குற? போகாத கோயில் இல்ல.. பார்க்காத வைத்தியமில்ல. எல்லா வைத்தியரும், சொல்லி வச்ச மாதிரி இதுகிட்ட எந்தக் கொறையும் இல்லங்குறானுங்க.. இவுக அப்பன் நெசமாவே சொல்லி வச்சிருப்பான் போலன்னு திடுதிப்னு கெளம்பி நமக்கு வேண்டிய டாக்டரிட்ட கூட போய்ப் பார்த்திட்டோம். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. என் பரம்பரை குமரனோட முடிஞ்சிடும் போலக் கிடக்கு!"

"ஏங்கா, ஒருவேளை, குமரனுக்கு ஏதாச்சும் கொறை..." சந்தேகத்தை முடிக்கும் வரை கூடப் பொறுக்கவில்லை கற்பகத்துக்கு..

"பல்லப் பேத்துப்புடுவேன். ஆரப் பார்த்து என்ன கேட்ட? அவன் சிங்கம்டீ. அவுக அப்பா மாதிரியே அவனும் நல்ல ரோசக்காரன். இதே மாதிரி இந்தக் கிறுக்கச்சியோட அப்பன் கேட்டான்னு ஒருநா போய் நல்ல டாக்டர்கிட்ட சொல்லி சர்டிபிகேட் வாங்கியாந்து காட்டிட்டானில்ல.. அதெல்லாம் அவனுக்கு ஒரு கொறையும் இல்ல."

சிரித்துக் கொண்டாள் சந்தனா. இவள் அப்பா 'சொல்லி' இருக்கக் கூடாதென்று இவர்கள் டாக்டரை முடிவெடுப்பார்கள். அவன் டாக்டர் தோழனிடம் 'சொல்லியே' வாங்கிவரும் சர்டிபிகேட்டை இவளுடைய அப்பா சட்டம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல கதை!

"சரி, அது போவட்டும், சந்தனா காலு எப்படி இருக்கு?"

"ஆமாமாம். அப்படியே துள்ளி குதிச்சு ஓடுவாளாட்டம் தான். ஏமாத்தி கட்டிவச்சிட்டானுவ.. எல்லாம் என் தலையெழுத்து" முந்தியை எடுத்து, இல்லாத கண்ணீரைத் துடைக்கலானாள் கற்பகம்.

இதற்கு மேல் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று சந்தனாவுக்கு நன்றாக தெரியும். ஊரெல்லாம் தேடி கட்டிவைத்த தன் மகனுக்கு எப்படி ஊனமுற்ற ஒருத்தி வந்து சேர்ந்தாள் என்பதை உருக்கமாக விவரிப்பாள். அதெல்லாம் கைதேர்ந்தவள். கடந்த ஆறு வருடங்களாக இந்தக் 'கொடுமையை' அவளும் வந்து போகிறவர் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறாள். பாவம், சந்தனா எந்த ஒரு கணத்திலும் பொறுமை இழந்து கத்துவதில்லை. அவள் மாமியாருக்குத் தான் பொறுமை இல்லாமல் போய்விடுகிறது.

************************
எல்லா திருமணங்களும் போல, சந்தனா-குமரன் கல்யாணமும் சொர்க்கத்தில் பெரியோர் ஆசிகளுடன் தான் நிச்சயிக்கப்பட்டது. கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணாதலால், பத்து சவரன் நகையும் குமரனுக்கு ஒரு பைக்கும் என்று குறைவான பேரத்துடனேயே முடிந்தும்விட்டது. எல்லாப் பெண்களையும் போல, நிறைய கற்பனைகளுடன் தான் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தாள் சந்தனா. ஒரேயடியாக அவை அனைத்தும் பொய்யாகவுமில்லை.

குமரன் சராசரி கணவனாக இருந்தான். காதலை அளவுக்கதிகமாக, பொழியவும் இல்லை; இப்போது போல் முகம் பாராமல் போனதும் இல்லை. ஒரே மகனானதால், தன் தாய்க்குரிய பணிவிடைகளைச் செய்யும் மனைவியைத் தான் விரும்புவான் என்பதையும் முதலிரவிலேயே தெளிவாக்கி இருந்தான். கற்பகம் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுமையாக போக வேண்டும் என்பதில் கறாராக இருந்தான் குமரன். 'ஓஹோ!' என்றில்லாவிட்டாலும், சசியின் வாழ்வு போல், சராசரியாகவாவது அமைந்திருக்கும், அந்த விபத்து மட்டும் நேராமல் இருந்திருந்தால்...

தினசரி ஒரு மணி நேர மின்தொடர்வண்டி பயணத்தில் இருந்தது சந்தனாவின் அலுவலகம். திருமணமான நான்காம் மாதம், அதிகாலை எழுந்து பரபரப்பாக சமைத்துவைத்து, கற்பகத்துக்கு மதிய காப்பியும் போட்டு பிளாஸ்கில் வைத்துவிட்டு, (இப்படி காலை போடும் காப்பி மதியம் பழசாகிவிடுகிறதென நொள்ளை வேறு!), அவள் திடீரென கேட்ட தோசைக்கு மாவரைத்ததில் சில நொடிகள் தாமதமாகிப் போய்விட்டது அன்று. அவசர அவசரமாக ரயில்வே ட்ராக்கைக் கடந்த ஒரு இக்கட்டான தருணத்தில் சந்தனாவின் வலது கால் மீது ரயில் ஏறி இறங்கி போய்விட்டது. நல்லவேளையாக நிறைய ரத்த சேதம் ஆவதற்குள், சந்தனாவின் தோழி பார்த்து, ஆம்புலன்ஸ் அழைத்து ஆஸ்பத்திரிக்கே கொண்டு போய்விட்டாள்.

அந்த ஒற்றை விபத்து, சந்தனாவின் மனதையும் குமரனுடன் எப்படியும் சேர்ந்து கட்டிவிடலாம் என்று அவள் நினைத்திருந்த அழகான கூட்டையும் சுழற்காற்றாக, கலைத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது.

அவசர அவசரமாக காலில் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அணுகுகையில், யாரை அழைப்பது என்று குழம்பி, அவள் தோழி சந்தனாவின் கணவனுக்குப் போன் செய்தாள். "அய்யய்யோ அப்படியா! பெரிய விபத்தா? நான் இப்போ ஒரு மீட்டிங்கில் இருக்கேன். அவங்க அப்பாவுக்குச் சொல்லிடறீங்களா?" என்று குரலில் மட்டுமே பதற்றத்தைக் காட்டிச் சொன்னானாம் குமரன்.

சந்தனா கண் முழித்துப் பார்த்தபோது அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆதுரமாக முடியைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள். அப்பா தான் பணம் செலுத்தி ஆபரேசனுக்கு முடிவு செய்யும் பேப்பரில் கையெழுத்து போட்டார் என்பதையும் குமரனோ கற்பகமோ இன்னும் ஒருமுறை வந்து அவளைப் பார்க்கக் கூட இல்லை என்பதையும் அறிந்த போது சந்தனாவுக்குச் 'சீ' என்றாகிவிட்டது.

அம்மாவோ அப்பாவோ கவலைப்படக் கூடாது என்பதால், இரவுகளில் மட்டுமே ஆஸ்பத்திரி தலையணைகளை நனைத்தாள். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்ற நிலையில் அப்பா போய் கற்பகத்திடம் நேரடியாக பேசிவிட்டு வந்தார். "நோயாளியப் பார்த்துக்கிடற அளவுக்கு எனக்கு ஒடம்பு முடியாதுங்க.. நானே சந்தனா இல்லாததுனால, தொணைக்குச் சொந்தக்காரப் பொண்ண ஊர்லேர்ந்து கூட்டியாரலாம்னு இருக்கேன். நீங்களே அழைச்சிட்டுப் போய் நல்லா ஒடம்பத் தேத்தி அனுப்பிவிடுங்க.." என்று பரிதாபமாகச் சொன்னாளாம் அத்தைக்காரி. குமரன் ஒருவார்த்தை பேசினால் தானே! ம்ஹும்..

அம்மா வீட்டில் இருக்கும் நாளெல்லாம் இது பற்றிய யோசனை அவளை ரொம்பவும் வருத்தமாக்கிவிட்டது. நல்லவேளையாக அப்பாவுக்குப் பாரமில்லாமல், சந்தனா வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்திருந்ததால், ஆஸ்பத்திரி, ஆபரேசன், மற்ற செலவுகள் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். தோழி சசி தான் அத்தனையும் அவளுக்காக ஓடியாடி வாங்கிக் கொடுத்ததும்.

அம்மாவுக்குத்தான் பாரம். படுக்கையிலிருந்த அவளைக் குளிப்பாட்டுவது தொடங்கி, மீண்டும் குழந்தையாக பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். நடுவில் சந்தனாவின் அக்கா மஞ்சுளா வேறு பிரசவத்திற்கு வந்துவிட, இரண்டு பெண்களுக்கும் வேண்டியதைச் செய்து, அப்புறம் மீண்டும் ஆஸ்பத்திரி, சிசேரின் என்று அல்லாடிப் போனாள் அம்மா.

மஞ்சுவின் கணவன் செந்தில், ரொம்பவும் பாசக்காரனாக இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் ஓடோடி வந்துவிடுவான் அவளைப் பார்க்க. இரவு வரை இருந்து, வாங்கிவந்த பழங்கள், குங்குமப்பூ, ஹார்லிக்ஸ் என்று மாலைகளில் அவளுக்குக் கரைத்துக் கொடுத்து, தானும் கரைந்து போய் அமர்ந்திருப்பான். இதற்காகவே மஞ்சுளா, சந்தனா இருவருக்குமான அறையிலிருந்து சந்தனாவை அவள் தங்கை இந்திராவின் அறைக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்திரா பாடம் படிக்கையில் சந்தனா கண்ணீருடன் படுத்திருப்பாள். சில சமயம் அவள் அம்மா வந்து தேற்றுவாள். சில சமயம் அப்பா வந்து பார்த்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். இந்திரா இவற்றைப் பார்த்து தானும் அழத் தொடங்கிவிடுவாள். படிக்கிற பெண்ணை இப்படி தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வும் சந்தனாவுக்கு வரும்.

ஒருவழியாக உடல் தேறி, நடக்குமளவுக்கு வந்தபோது, அந்தப் பெரிய இடி விழுந்தது. சந்தனாவால் இனிமேல் முன்னால் மாதிரி நடக்க முடியாது. அவளின் வலது கால் இடது காலை விடக் கொஞ்சம் குட்டையாகிவிட்டது. இனிமேல், சந்தனா அந்தக் காலை இழுத்து இழுத்து தான் நடக்க முடியும். அல்லது, ஆயிரத்தி சொச்சத்துக்குக் கிடைக்கும் ஒரு செருப்பை வாங்கிப் போட்டால் அவளால் ஒருவேளை சரியாக நடக்க முடியலாம்!

இடிந்து போக இருந்தவளை, பழையபடி அம்மாவும் அப்பாவும் தேற்றினார்கள். ஊனமுற்ற பின்னரும் ஜெயித்து வந்த பெண்களைச் சுட்டிக் காட்டினார்கள். என்னென்னவோ சொன்னார்கள்.. இவளும் மனம் தேறினாள். வேலைக்குப் போகத் தொடங்கினாள். கொஞ்ச நாள் வரை வாழ்க்கை இனிமையாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்திராவும் சந்தனாவுமாக திரைப்படங்களுக்குப் போவதென்ன, மஞ்சுளா கணவன் டாக்ஸி வைத்து சகோதரியர் மூவரையும் கடற்கரைக்கு அழைத்துப் போவதென்ன, என்று சந்தோசங்கள் அனைத்தும் மீண்டுவந்துவிட்டது போல் இருந்தது, அப்பா அவள் புகுந்த வீட்டுப் பேச்சை எடுக்கும் வரை.

"என்னம்மா, உங்க வீட்டுக்கு எப்போ போகலாம்?" என்று அவர் கேட்டபோது, சந்தனா கண்கள் நீர்த்திரையிட்டது.

"ஏம்பா? இது என் வீடு இல்லையா?!" என்று மகள் தழுதழுத்ததும் அவர் கூட கொஞ்சம் அதிர்ந்து போனார்.

"இல்லம்மா.. ஒலக வழக்கம்னு ஒண்ணு இருக்கில்லையா?" என்று தொடங்கி, அம்மா, அக்கா வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவளும் கற்பகம், குமரனுடன் தான் இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தினார் அப்பா. அம்மாவும் தன் பங்குக்கு சந்தனா தன் கணவன் வீட்டுக்குப் போனால் தான், இந்திராவுக்கு நல்ல வரன் அமையும் என்று கோடிக் காட்டினாள்.

அடிபட்டு ஒன்றரை மாதம் அம்மா வீட்டில் இருந்த காலத்தில் ஒரு பேச்சுக்குக் கூட போன் செய்து எப்படி இருக்கிறாள் என்று அறிய விரும்பாதவர்களின் வீட்டுக்குப் போய் அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? சந்தனாவுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய கேள்விக் குறியாக தோன்றியது.

அப்பா கணவன் வீட்டுக்கு, அழைத்து போய் விட்டார். தன்னை எப்படி கடந்த ஒரு வாரத்தில் ஜுரமும் தலைவலியும் வாட்டி எடுத்தன என்பதையும், மருமகள் சீக்கிரமே வந்திருந்தால், தனக்கு வசதியாக இருக்கும் என்றும் கற்பகப் ரொம்ப வருத்ததுடன் சொன்னாள். அப்போதும் சந்தனா சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரை பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. சசி மூலம், இரண்டு வாரம் முன்பே சந்தனா அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டது தெரிந்திருந்த காரணத்தால், வீட்டுக்கு வர அந்த இரண்டு வாரம் தாமதமானது கற்பகத்துக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனாள்.

வந்தவுடன் சமையலறைப் பொறுப்பை சந்தனா ஏற்றுக் கொண்டதில், கொஞ்சம் மனம் ஆறுதலடைந்தாலும், புலம்பிக் கொண்டே டீவியில் ஆழ்ந்தாள். பெற்றோரின் தொடர்ந்த போதனைகளால், 'குமரன் ஒருவேளை தன்னைப் பார்க்க வரவேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, அவன் அம்மா தான் அதை அனுமதிக்கவில்லையோ என்னவோ' என்று நல்லவிதமாக நினைத்துக் கொண்டு, அவனுக்காக எதிர்பார்க்கத் தொடங்கினாள் சந்தனா.

சமையலறைக்குள் வந்து அவன் அம்மாவுக்குத் தெரியாமல் கட்டி அணைத்து குசலம் விசாரித்துவிட்டு, அம்மா தன்னை எப்படி வீட்டோடு கட்டிப் போட்டுவிட்டாள் என்பதையும், அலுவலக வேலைகள் எப்படி அவன் காலைக் கட்டி இழுத்தன என்பதையும் அவன் சொல்லப் போவதைக் கற்பனை செய்தபடி அவனுக்குப் பிடித்த உணவு வகைகளாக செய்தாள். துவைக்கிற இயந்திரத்தின் முன்னால் ஒரு மாதத் துணிகள் குவிந்து கிடந்தன. துணி உலர்த்தக் கூட நேரம் செலவழிக்க விருப்பமில்லாத மாமியாரை மனதுக்குள் திட்டிக் கொண்டே அதை இயக்கினாள்.

ஒருவழியாக இரவு வெகுநேரம் கழித்து குமரன் வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். 'நல்லா இருக்கியா?' போன்ற விசாரிப்புகளாவது அவளை ஆசுவாசப்படுத்தியிருக்கக் கூடும். ஒன்றுமில்லாமல், அவளைப் பார்த்து அதிகபட்சமாக புன்னகைத்தான். 'ரொம்பவும் கீழ்ப்படிதல் உள்ள மகன்!' என்று நினைத்துக் கொண்டாள்.

கற்பகமும் வழக்கம் போல் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தாள். சந்தனா மெல்ல ஒவ்வொரு பதார்த்தமாக மேஜைக்குக் கொண்டுவந்தாள். அப்பளத்தை எடுத்துவரும் போது கற்பகத்திடமிருந்து வந்தது அந்தக் கத்தல்.

"ஏய்.. நில்லு!" என்றாள் அதட்டலாக. அதிர்ச்சியில் ஒரு அப்பளம் கீழே விழுந்து உடைந்து சிதறியது.

"என்னம்மா?" என்றான் மகன்.

"நட!" என்றாள் அம்மா.

நடந்தாள் சந்தனா. அடுத்து வருவது என்ன என்பது சொல்லாமலே புரிந்து போனது.

"ஏன் விந்தி விந்தி நடக்குற?" என்றான் குமரன், அம்மாவின் பார்வை போன இடம் புரிந்ததில்.

"இந்தக் கால்ல தானே ஆபரேசன் பண்ணாங்க.. அதுல கொஞ்சம் கூடக் கொறைய ஆகிடுச்சு. " என்று விளக்கினாள் சந்தனா.

"என்னது?! கூடக் கொறைய ஆகிடுச்சா! என்னவோ பூ வியாபாரம் மாதிரி சொல்லுற!? உண்மையாச் சொல்லு, இது கல்யாணத்துக்கு முன்னாலயே இருந்தது தானே? விபத்து அது இதுன்னு சொன்னதெல்லாமே பொய்தானே!?" மாமியார் கத்த தொடங்கியதும், சந்தனாவின் பொறுமை கரை கடந்து விட்டது. பதில் சொல்லாமல் குமரனைப் பார்த்தாள். அவன் இதெல்லாம் தனக்குத் தொடர்பில்லாதது போல் அவள் கொண்டு வந்து வைத்த அப்பளத்தில் இருந்து ஒன்றெடுத்து நொறுக்கினான்.

"சொல்லுடி அழுத்தக்காரி!, வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இதையேன் உங்கப்பன் இன்னிக்கு கொண்டு விடும்போது சொல்லல?"

"அப்பவே சொல்லி இருந்தா, என்ன பண்ணிருப்பீங்க?"

"உள்ள வராதேன்னிருப்பேன். எம்புள்ளைக்கு இன்னோரு நல்ல பொண்ணா, நொண்டி முடமில்லாம பார்த்து கட்டி வச்சிருப்பேன்!"

"நான் உயிரோட இருக்கும் போது அதை நீங்க செய்ய முடியாது." அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சந்தனா.

"அதுக்காக எம்புள்ள ஒரு நொண்டியோட எத்தினி நாள் குடும்பம் நடத்த முடியும்?"

"ஏன், நீங்க இல்ல, உங்களுக்கு ஒடம்புல இல்லாத வியாதியே இல்ல. அப்படியும் உங்களை வச்சி நாங்க குடும்பம் நடத்தல?! எத்தனை நாளா இருந்தாலும் செய்யத் தானே போறம்?"

"ஏய்.., அம்மாவை எதிர்ப்பேச்சு பேசாதேன்னு உனக்கு முதல் நாளே சொல்லி இருக்கேன். அவங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. இல்லைன்னா, வாய மூடு. புரியுதா?" - ஒருவழியாக மௌனம் கலைத்தான் குமரன்!

அதன்பின் சந்தனா பேசவே இல்லை. அந்த இரவு தனிமையில் கூட குமரன் அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்லவில்லை. பல நாட்களாக அவள் இல்லாமல் தனியாக உறங்க நேர்ந்த ஆத்திரத்தை அவள் உடல் மேல் காட்டினான். ஆபரேசன் ஆன உடம்பு என்பது ஏனோ அவனுடைய மரமண்டைக்கு உறைக்கவே இல்லை. அவன் நிம்மதியாக உறங்கத் தொடங்கிய போது அவள் கசங்கிய பூ போல் வாடிப் போய் படுத்திருந்தாள். அழுகை, கழிவிரக்கம், யோசனை, வலிகளை மீறி தூக்கம் தழுவக் கூடிய நேரம் வந்த போது, அவள் எழுந்து சமைத்தால் தான் வேலைக்குப் போக முடியும் என்றானது.

இந்திராவைப் பற்றிய நினைப்பு மட்டும் தான் அவளை இன்னும் இந்த வீட்டில் பிடித்து வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல. தினசரி குத்தல், குறை சொல்லுதல். கணவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கற்பகத்துக்குப் பதில் சொல்லுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாள் சந்தனா. கற்பகம் எங்கே அழைத்தாலும் போனாள். குமரன் எப்போது அழைத்தாலும் இணங்கினாள். உணர்ச்சிகள் இல்லாமலே போய்விட்டது அவளுக்கு.

மஞ்சுளா குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுப் போனபோது ரொம்ப வருத்தப்பட்டாள். அம்மாவிடம் போய்ச் சொல்லி இருப்பாள் போலும், ஒரு நாள் அம்மா இந்திராவுடன் அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். அம்மாவைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. தானாக ஏதும் வீட்டுக்குச் சொல்லாத போதும், மஞ்சுளா கணவன் ரொம்ப வருத்தப்பட்டு குமரனுக்குத் தொலைபேசினான். அன்றும் ஒரு பஞ்சாயத்து வைத்தாள் கற்பகம்.

"ஏண்டீ, உன்னை என்ன நாங்க அப்படிக் கொடுமைப்படுத்திட்டம்னு அவன் இந்தக் குதி குதிக்கிறான்? எம்புள்ள என்னிக்காவது எந்தக் கெட்டப் பழக்கத்துக்காவது போயிருப்பானா? கை நீட்டி உன்ன அடிச்சிருப்பானா? இல்ல நாந்தான் உன்னைத் தொட்டிருக்கேனா? என்ன ....க்கு அவன் போன் போட்டு சமாதானம் பேசுறான்?" என்று தொடங்கி மஞ்சுளா கணவன் செந்திலையும் வைத்து வாங்கினாள். சந்தனா ஒரு வார்த்தை பேச வேண்டுமே. ம்ஹும். கை நீட்டி அடிப்பது மட்டுமே வன்முறை என்ற அவளது வாதம் சந்தனாவுக்குச் சிரிப்பைத்தான் கொடுத்தது. சசி ஒருத்தி தான் சந்தனாவுக்கு ஆதரவு. அலுவலகத்தில் அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுவிட்டால் கொஞ்சம் மனசு லேசாகும். அவளும் பிள்ளைப் பேறுக்காக லீவில் போன பின்னர் சந்தனா தனிமரமாகி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

*******************************

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

இப்படி எல்லாம் பேசினால், சந்தனா கொதித்துவிடப் போகிறாளா என்ன? கற்பகத்தை எதிர்த்துப் பேசாத வரை தான் அவள் குமரனின் மனைவி. குமரனின் மனைவியாக அவள் இருந்தால் தான் இந்திராவுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அவள் பெற்றோருக்கு உறவினர் மத்தியில் மரியாதை இருக்கும். அத்தனை பேரின் மானம் மரியாதையைக் காக்க வேண்டுமென்றால், கற்பகத்தின் முன்னால் அவள் மரியாதை எதிர்பார்க்கக் கூடாது.

சந்தனா எப்போதோ இயந்திரமாகிவிட்டாள். இயந்திரங்கள் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை; அன்பான வார்த்தையையோ, பாசத்தையோ எதிர்பார்த்து ஏங்குவதில்லை. கற்பகத்திற்குக் கைகால் பிடித்துவிட, சமைத்துப் போட, துணிதுவைக்க, என்று அவள் ஒரு ரோபோ. குமரனுக்கு அவள் வேறு விதமான பொம்மை - மனைவி பொம்மை. நல்ல விலைக்குக் கிடைக்கிறதே சந்தையில்! பொன்னும் பொருளும் கொடுத்து பொம்மையையும் கொடுக்கிறார்களே! சந்தனா இப்படி இருப்பதைத் தான் கற்பகமும் விரும்பினாள். ஆனால், ஏனோ, இயந்திரங்களுக்குப் பிள்ளை பிறக்காது என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நிஜத்தில் இங்கே தான் இன்னும் இருக்கிறது என் சந்தனாவின் வாழ்க்கை... கற்பனைக் கதையிலாவது, இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே அவள் என்று நினைத்ததன் விளைவு, மீதிக் கதை:

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ஒரு விதத்துல நல்லது தான்னு வையி.. இதப் போலவே நொண்டியாப் பொறந்திட்டா எப்படி வளர்க்குறது?! ஒரு நொண்டிய வச்சிகிட்டு நாங்க படுற பாடே போதும்.!" என்ற கற்பகத்தின் குரல் சந்தனாவின் கவனத்தைக் கலைத்தது.

சந்தனாவைக் குத்துவதற்கே சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் திடீரென குறைந்தது. "ஓ, வாங்க!" அசுவாரசியமான அழைப்பு, வந்திருப்பது சந்தனா வீட்டாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

யார் என்று பார்க்க வெளியே வந்தாள் சந்தனா.

மஞ்சுளா, அவள் கணவன், அம்மா, அப்பா,.. எல்லாரும் எதற்கு வந்திருக்கிறார்கள்? சமையலறை வாசலில் இருந்து அவள் எட்டிப் பார்த்த போது, மஞ்சுவின் குழந்தை '..த்தி' என்று காலைக் கட்டிக் கொண்டது. அழைக்காமல் எட்டிப் பார்த்த மருமகளை அடுத்த வாய்ப்பில் வார்த்தையால் காயப்படுத்த தயாராகிக் கொண்டே கற்பகம், "என்ன, எல்லாரும் ஒட்டுக்க வந்திருக்கீங்க?" என்றாள்.

"சம்பந்தியம்மா, எங்க கடைசி பொண்ணு இந்துவுக்குக் கல்யாணம் வச்சிருக்கம். அதான் பத்திரிக்கையக் கொடுத்திட்டு, சந்தனாவையும் கூட்டிப் போகலாம்னு வந்தோம்!" அப்பா தான் பேசினார்.

"அப்படியா..எங்க குமரனிட்ட ஒரு வார்த்தை சொல்லாம பத்திரிக்கை வரை அடிச்சிட்டீங்களா?!" என்று தங்கைமுன் தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கேட்டாள் கற்பகம்.

"அதுக்கு நேரமிருக்கலைம்மா.. திடீர்னு முடிவாகிடுச்சு.." என்றபடி, அம்மா பத்திரிக்கையை எடுத்துக் கொடுக்கவும், ஆவலை அடக்க மாட்டாமல் சந்தனாவின் சின்ன மாமியாரும் எட்டிப் பார்த்தாள்.

"இதென்னதிது? பையன் என்ன குலம் கோத்திரம்னு போடவே இல்லையே!" கற்பகத்திடமிருந்து இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புதல் கிடைக்காதென்று சந்தனாவுக்கு உறுதியாகத் தெரியும். தொலைபேசிய பொழுது, அவள் தான் இது போன்றதொரு கல்யாணத்தை ஊக்கப்படுத்தி இருந்தாள்.

"குலங்கோத்திரம் பார்த்து பண்ணல்லைங்கம்மா.. பொண்ணுக்குப் பையன பிடிச்சி போச்சு. மாப்பிள்ளை வீட்லயும் பச்ச கொடி காட்டிடாங்க.. சின்னஞ் சிறுசுகன்னாலும் வாழப் போகிறது அதுங்க தானே. அதான் நாங்களும் ஒண்ணும் சொல்லலை." அப்பா மீண்டும் கெஞ்சத் தொடங்கினார்.

"அது சரி.. நீங்க என்ன வேணாலும் செய்யலாம். நொண்டிய நல்ல பொண்ணுங்கிற மாதிரி ஏமாத்தி கட்டிவச்சவுக தானே. அதான் இன்னொரு இளிச்சவாயனை வேற சாதியில பிடிச்சிட்டீங்க போலிருக்கு. இந்தக் கண்றாவிக்கு நாங்க வந்தா, சொந்தக்காரவுக மத்தியில் எங்க பேரு என்னாவுறது? இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையில வாங்கிப் பார்த்தேன்னு தெரிஞ்சாலே குமரனுக்குக் கெட்ட கோபம் வந்திடும் தெரியுமில்ல?" முழுதாக பேசவிடாமல் பத்திரிக்கையை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் மஞ்சுளா.

"எங்களுக்குத் தெரியும். அதனால தான் இந்தப் பத்திரிக்கையை சும்மா காட்டிட்டு போகலாம்னு வந்தோம். சந்து, உன் ரூம் எதும்மா?" என்றாள் மஞ்சு

சந்தனா கையைத் துடைத்துக் கொண்டு அக்காவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டே வந்து தன் அறையைக் காட்டினாள். மஞ்சுளாவும் அவள் கணவனும் உள்ளே நுழைந்து சந்தனாவின் துணிகளை ஒன்று விடாமல் அடுக்கத் தொடங்கினர். அந்த அறையிலிருந்த கட்டில், வீட்டிலிருந்த டீவி, மேஜை, பயன்படுத்தாமல் பரணில் வைத்திருந்த சந்தனா கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள் என்று வரிசையாக கட்டத் தொடங்கினர். பின்னாலேயே நான்கு ஆட்கள் வேறு வந்து எல்லாவற்றையும் தூக்க ஆரம்பித்த போது கற்பகம் குழப்பமாக பார்த்தாள். சந்தனாவின் அம்மாவைப் பார்த்து, "என்ன நடக்குது இங்கே?" என்று அவள் கேட்டதற்கு யாரும் பதில் கூடச் சொல்லவில்லை.

வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது லாரியில் அத்தனை பொருட்களும் ஏறிக் கொண்டிருந்தது. "நிறுத்து, நிறுத்து!" என்ற கற்பகத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.

"தே கெய்வி.. வளி வுடு.. இட்ச்சேன்னு வையி, ஸ்ட்ரெயிட்டா கைலாசம் தான்!" கட்டில் காலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் சொல்லவும், கற்பகம் பயத்துடன் நகர்ந்து போனாள்.

"இந்திரா கல்யாணத்துக்கு மட்டுமில்ல, இனிமே எங்க வீட்ல நடக்கப் போகிற சந்தனா கல்யாணத்துக்கும் நீங்க வர வேண்டாம். உங்க குமரனுக்கும் சொல்லிடுங்க. இந்த மாதிரி ஒரு காட்டுல எங்க பொண்ணை விட்டுவைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இனிமேலும் இல்லை. முறையா வக்கீல் நோட்டீஸ் வரும். முடிஞ்சா எங்க பொண்ணு இன்னிவரைக்கும் சம்பாதிச்சு கொடுத்த பணம், லாக்கரில் வச்சிருக்கிற பத்துபவுன் நகை, நீங்களும் ஒங்க பையனும் சாப்பிடுற வெள்ளித்தட்டு, இது மூணுத்தையும் எடுத்து வந்து கொடுத்துட்டீங்கன்னா, உங்களுக்கு மரியாதை. இல்லைன்னா கோர்ட் மூலமா அதையும் பார்த்துக்கிடறோம்.. என்ன? வாம்மா சந்தனா!" என்றார் மஞ்சுவின் கணவர்.

சந்தனா, கட்டிய புடவையுடன் தூக்கிய குழந்தையுடன், "போய்ட்டு வரேன்" என்று சொல்லும் முகமாக அத்தையைப் பார்த்தாள். "கத்திரிக்காய் அரிஞ்சிட்டிருந்தேன். அடுப்புல சாம்பார் கொதிக்குது. முடிஞ்சா எல்லாத்தையும் அரிஞ்சு சீக்கிரம் போட்டுருங்க..!" என்று சொல்லிவிட்டு வெளியே போகலானாள்.

"ஏய், தடிச்சி, எங்கடீ போகுறே! இப்படி ஒரு நொண்டி வாழாவெட்டியா வந்திட்டாள்னு தெரிஞ்சா, ஒந் தங்கையை எவன் கட்டுவான்?"

கூடியவரை காயப்படுத்த வேண்டும் என்று கிளம்பிய கற்பகத்தின் குரலை எதிர்த்துவந்தது இன்னுமொரு குரல். "அதெல்லாம் தேவையே இல்லைங்கம்மா! இந்த ஜென்மத்துல கல்யாணம்னு கட்டிகிட்டா இந்திரா தான்னு முடிவெடுத்தாச்சு. மனைவியைப் பொறுத்தவரை மனசளவுல ஊமையா, நீங்க செய்யும் கொடுமையெல்லாம் கண்டும் காணாம போயிட்டிருக்கிற உங்க மகனோட, இங்க இருக்கிறதை விட, சந்தனாக்கா எங்க கூடவே சந்தோசமா இருப்பாங்க!" என்றபடி உள்ளே வந்த இளைஞன், சந்தனா கையிலிருந்து குழந்தையையும் வாங்கிக் கொண்டான். மஞ்சு அவள் கையைப் பிடித்து ஆறுதலாக அமுக்க, வெளியேறி காரை நோக்கிப் போன போது, பல இரவுகளாக தொலைத்த அவளுடைய சந்தோசமும் நிம்மதியும் மீண்டு வந்திருந்தது..

Saturday, April 28, 2007

பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை

புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.

கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..

குழலியின் பழைய பக்கத்திலிருந்து நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்

ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் தமிழைசர் நிரலியை என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் புதுப் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.

  • தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல்,
  • பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல்,
  • புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல்,
  • தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்

- இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.

மேலும் செய்ய எண்ணி இருப்பவை:

  1. தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting - என் பதிவில் வருவது போல்)
  2. முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல்
  3. தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.

கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்கத்தில், ஏதும் நுட்பச் சிக்கல்கள் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னால் உதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்டவை தவிர, "இதுவும் செய்யலாமே" என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள்.

Monday, April 23, 2007

சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்

சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.

"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.

சாகரன்
தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)

மாற்று! - சிறில்
அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)

"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.

வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கி
அடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.

ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா
ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.

அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.

வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி
பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.

அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?

மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும்
தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.

மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.

சிறுவர் திரட்டி- அனானி
"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.

எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்
இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.

தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.

இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.

தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.

தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )
1. உங்கள் நண்பன் சரவணன் : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)
2. மா. சிவகுமார்
3. தருமி - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..
4. வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
5. ஓகை நடராஜன் - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. லக்கி சொல்லிட்டாரு ;)
6. ஐகாரஸ் பிரகாஷ்
7. பாஸ்டன் பாலா
8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.
9. விக்கி
10. சிறில் அலெக்ஸ்: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..
12. இராம.கி ஐயா
13. லக்கிலுக்: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.
14. நந்தா: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.
15. உண்மைத் தமிழன்: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார் ;)
16. சுந்தர்: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)
17. ஓசை செல்லா : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)
18. ப்ரியன்: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
19. சு.க்ருபாசங்கர்: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.
20. மோகன்தாஸ்: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]
21. ஜி.ராகவன் : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..
22. முத்து தமிழினி
23. பகுத்தறிவு
24. பொன்ஸ்
25. We the People
26. ஜே கே : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)
27. நாமக்கல் சிபி : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..
28. விஜயராஜ்
29. மாரிக்கனி
30. மாஹிர் : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.
31. நவீன் பிரகாஷ்
32. தமிழ்வாய்ஸ்
33. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
34. யோசிப்பவர்: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)
35. நிலாரசிகன்
36. தங்கவேல்: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா?
37. மிதக்கும்வெளி: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)
38. செந்தில்
39. WeeBee
40. ஜி. கௌதம்: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.
41. வடுவூர் குமார்: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.
42. சார்லஸ்: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
43. யெஸ். பாலபாரதி
இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இட்லிவடை ;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.

சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:
1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி
2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா
3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா

நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ், பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :((((

Monday, April 16, 2007

ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.

எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது "லவ் ஸ்டோரி"(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த டாக்டர்ஸும்(Doctors) சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த "Acts of Faith"திலும் காணக் கிடைப்பது கண்கூடு.

"Acts of Faith" மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.


டேனியல்(Daniel), அவன் தமக்கை டேபோரா(Deborah), அவளுடைய காதலன் டிமோத்தி(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.

தந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

டெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.

நமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.

யூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.

மெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.

டிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா 'புண்ணிய பூமி'யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.

இதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.

நாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.

பாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.

இருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.

நல்ல மகனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.

ஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.

மதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.
புத்தகம் : Acts of Faith
ஆசிரியர் : Erich Segal
வெளியிட்டோர் : Bantam Books
பதிப்பு : April 1992
குறிப்புகள்:
1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் :)
2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.