Wednesday, April 23, 2008

ஒரே ஒரு சந்திப்பு - 2 (முற்றும்)

ஒரே ஒரு சந்திப்பு - 1
‘அம்மா! உன்னால இதுல ஏதும் செய்ய முடியயதா?’ உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ரேவதி மகன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
‘எதுலடா? ஏன் டல்லா இருக்கே?’ ஒன்றுமே தெரியாதது போல் அவள் கேட்கவும சந்தரு நொந்து விட்டான்.
‘ம்… என் வாழ்க்கையைப் பத்தித் தான்… ‘
‘ஓ! சத்யா விசயமா? அப்பா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்றேன்னு ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டது யாரூ? இப்ப என்னவோ என்னைக் கேட்கறே?!’
‘இப்படி ஆகும்னு யார் எதிர்பார்த்தா? அப்பாவுக்கு சத்யா பிடிக்கும்! ஆனா எனக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா? இந்த ரெண்டு அப்பாக்களும் சேர்ந்து எங்களை ஏன் இந்த பொருந்தாத திருமணத்துல சேர்க்க நினைக்கிறாங்கன்னு தான் புரியலை.. ‘
‘சந்துரு! அங்க தான் நீ தப்பு பண்றே! உன்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நிற்கிறது சத்யாதான்! ரெண்டு வருஷ பிரிவே தாங்க முடியலை, சந்துருவோட போட்ட சண்டைகள் தான் இனிமை ன்னு சொன்னது அவ தான்!’
‘ ‘ சந்துரு நம்பிக்கையில்லாமல் அம்மாவைப் பார்த்தான்.
‘உண்மை தான்டா! சத்யா அம்மா பத்மாவே போன் பண்ணி என்கிட்ட ரிக்வஸ்ட் செய்தா. உங்கிட்ட சொல்லி சம்மதிக்க வைக்க சொன்னாளாம் சத்யா.’
‘இட் இஸ் வெரி பேட்! எந்த நம்பிக்கையில் சத்யா என்னை மணக்க நினைக்கிறா?!’ அதிர்ந்து போயிருந்தவன், உணர்வு பெற்றுக் கத்தினான்.
‘சந்துரு! ரொம்ப சத்தம் போடாதே! கொஞ்சம் யோசி! காலேஜ் முடிஞ்சு ரெண்டு வருசமாகுது, நீ அவளைச் சுத்தமா மறந்துட்டியா என்ன? இப்பவும் யாராவது பழைய நண்பர்களைப் பார்த்தா, உங்கிட்ட அவளைப் பத்திதான் கேட்கறாங்க! நீயும் உன் பழைய கோபதாபத்தை எல்லாம் மறந்து நல்லவிதமாகவே பதில் சொல்றே!’
‘என்னம்மா, நீயுமா? அவ நம்ம அப்பாவுக்கு நேர்கீழ வேலை செய்யறா! அந்த முறையில் என்கிட்ட கேட்கறாங்க, நானும் சொல்றேன். இதைப் போய்.. ‘
‘சரி, அதைவிடு! போன வாரம் யாரோ அந்த ரம்யா கேங்கோட படத்துக்குப் போனே, அதிசயமா பாதியில் திரும்பி வந்துட்டயேன்னு கேட்டா, ‘அந்தப்படத்துல என்னையும் சத்யாவும் மாதிரியே ரெண்டுபேர் சண்டைபோட்டுக்கறாங்க’ன்னு ரொம்ப ஃபீல் பண்ணி சொல்ற’
‘அனாவசியமா அவ ஞாபகம் வர்றதே பிடிக்காம திரும்பி வந்துட்டேன்மா’
‘இந்தக் கதையெல்லாம் வேண்டாம், பத்மா சொன்னதைப் பார்த்தா நீயும் சத்யாவும் ரொம்ப நாளா சந்திச்சி, பேசி வச்சி ப்ளான் பண்ணி வேலை செய்த மாதிரி தெரியுது!’
‘கரெக்ட்!’ என்றான் சந்துரு
‘என்ன, சரியா? ‘ ரேவதி நிமிர்ந்து பார்த்தாள்.
‘அவளை ஒரு முறை மீட் பண்ணி பேசினா, இதுக்கு ஒரு ்முடிவு கட்டிடுவேன்!’
சந்துரு சொல்லி முடிக்கவே காத்திருந்தது போல் தொலைபேசி அலறியது.
‘நான் சொன்னது சரின்னு மணி அடிக்குது பாரு!’ என்று குதூகலித்தான் சந்துரு.
‘ம், ஆமாண்டா சொல்லி வச்சா மாதிரி அவ தான் உன் சத்யா தான் பண்றா’ காலர் ஐடியைப் பார்த்து சொல்லியபடியே எடுத்துப் பேசினாள் ரேவதி, ‘ஹலோ!’
‘ஆண்டி! நான் சத்யா பேசறேன். பாஸ் இல்லை?’
‘பாஸ் வேணுமா? அங்கிள் ்வேணுமா?’
‘இப்ப ஆபீஸ் நேரம் ஆரம்பிச்சிடுச்சே ஆண்டி, சும்மா இன்னிக்கு லீவு கேட்கலாம்னு போன் பண்ணிருக்கேன், அதனால இப்ப பாஸ் தான். சாயங்காலம் நேர்ல வரும்போது அங்கிளா மீட் பண்ணிக்கிறேன். ‘
‘இன்னிக்கு நேர்ல வந்து அங்கிளை பார்க்கணும்னா, முதல்ல உன் சந்துருவைச் சரிபண்ணு!’
‘ஏன் பந்தா பண்றானா? போன் கொடுங்க அவன்ட்ட!’
அதுவரை ஒலிவாங்கியைப் பிடுங்க முயன்று கொண்டிருந்தவன் உடனுக்குடன் பேசத் தொடங்கினான். சில நொடிகளே பேசி இருப்பான், ரேவதி கவனிக்குமுன், ‘அம்மா! வழக்கமா நிற்கிற காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருக்காளாம். பார்த்திட்டு வந்திடறேன்’ என்றபடி பைக் சாவியைச் சுற்றியபடியே கிளம்பி போனான் சந்துரு
*********************************
சரியாக அரை மணி கழிந்து மீண்டும் தொலைபேசி அலறி ரேவதியின் வேலையில் ்குறுக்கிட்டது.
‘ஹலோ!’ என்றாள் ரேவதி
‘ஹலோ! ரேவதியா?’
‘ஆமாம் பத்மா! என்ன விசயம்? ஏன் பதட்டமா இருக்கே?’
‘இல்ல, இப்பத் தான் காலேஜ்லேர்ந்து வரேன். வீடு பூட்டியிருந்தது. பொண்ணு எங்கன்னு கேட்டா, போன் பண்ணிட்டு எங்கயோ போனதா சொன்னாங்க பக்கத்து வீட்டில். அதான் ரீடயல் பண்ணேன்.. பார்த்தா உங்க வீட்டுக்குத் தான் பண்ணி இருக்கா… அங்க வந்திருக்காளா என்ன?’
‘இல்லை. சந்துருவும் சத்யாவும் எங்கயோ வெளியில் போயிருக்காங்க.. பேசப் போறேன்னு சொல்லிட்டிருந்தான் சத்யாகிட்ட..அதுக்குத் தான் நேரம் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.’
‘ஓ.. அட, அப்ப சம்பந்தியம்மாவா நீங்க இனிமே?! மரியாதை கொடுத்து தான் பேசணுமா?’ மகிழ்ச்சி கொந்தளிக்கக் கேட்டாள் பத்மா.
‘இல்லை பத்மா, எனக்கு நம்பிக்கையே இல்லை. சந்துருவுக்கு ஏனோ இந்த கல்யாண ஏற்பாடே பிடித்தம் இல்லைங்கிறான். சத்யா மனசை மாத்தியே தீருவேன்னு சொல்லிட்டுத் தான் இப்ப கிளம்பியே போயிருக்கான்.’
‘சத்யாவும் இதையே தான் சொல்லிகிட்டிருந்தா. ஒரு தரம் அவனை நேரில் ்பார்த்தா போதும், அவன் மனசை மாத்திட்டுத் தான் மறுவேலைன்னா… பார்க்கலாம், எல்லாம் சரியாகிடும் ரேவதி! கவலைப்படாதே…!’
******************************
‘சத்யா!’, கணினியில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த பரத்துக்கு, மகள் சோர்ந்து போய் வீட்டுக்குள் ்நுழைந்தது சங்கடமாக இருந்தது. ‘சந்துரு என்னம்மா சொன்னான்?’ என்றார் அவளை அருகில் அமர்த்திக் கொண்டே.
‘அவன் சொன்னதெல்லாம் சரிதான் டாடி! நான் தான் கடைசிவரை ஒப்புக்கலை’
‘அப்படி என்னம்மா சொன்னான்?’ பரத் மகளின் ்தலையை ஆதரவாகக் கோதினார்.
‘அவனுக்கும் எனக்கும் ஒத்தே வராது. கல்யாணம்னு பண்ணா அப்புறம் வீடு சந்தைக் கடை தான். ஒத்துப் போகாம என்ன வாழ்க்கை?! அவனோட ்பேசிகிட்டிருந்த வரை அவன் சொன்னது புரியலை. ஏதேதோ பேசி ஆர்க்யூ பண்ணிகிட்டே இருந்தேன். ஒரு மணி நேரம் போல இப்படி பிரயோசனமே இல்லாம பேசிட்டு அப்புறம் அவன் பிரண்டு மணி வந்தான்னு கிளம்பிப் போய்ட்டான். அதுக்கு அப்புறம் தனியா உட்கார்ந்து யோசிச்சப்ப தான் எனக்கும் சரின்னு தோணிச்சு..!’
‘……’
‘அவன் சொல்றது தான் சரி, பேர்வல் பார்ட்டில ்சொன்னது போல லெட்ஸ் பார்ட் ஆஸ் பிரண்ட்ஸ் தான் ஒத்து வரும்!’ சத்யா பேச்சினிடையில் குரல் உடைந்து தழுதழுக்கத் தொடங்கி இருந்தாள்.
பரத் அவளைச் சமாதானப்படுத்தும்விதமாக ஏதும் சொல்லவில்லை. லேசாக ்தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்தார்.
‘இப்ப என்ன செய்யறது?’ என்று அவரின் கண்கள் மட்டும் பத்மாவிடம் கேட்டன.
‘ஏதோ, சத்யா தெளிவானவரை மகிழ்ச்சி’ என்றாள் அவள், அதேபோல கண்ஜாடையில்.
*********************************
‘அம்மா!…’ சந்துரு ஓடி வந்தான்.
‘என்னடா? பேசி முடிச்சாச்சா? இனிமே அப்பா பார்க்காத பொண்ணா தேடுவோமா?’
‘இல்லம்மா, அவ தான் முடிச்சிட்டா.. அவ சொல்றது சரி தான். ஆனா அவகிட்ட இனிமே தான் அதைச் சொல்லணும்..’
‘என்னடா சொல்ற?’
‘அவளோட ்பேசினபோது அவ சொன்னதெல்லாம் தப்பாவே தெரிஞ்சது. பதிலுக்குப் பதில் பேசிகிட்டே வந்தேன். கடைசியா எங்க பழைய கிளாஸ்மேட் மணி வந்தான். சத்யாவுக்கு பை சொல்லிட்டு காபி சாப்பிடப் போனோம். என்னடா இன்னும் பீச்லயே மீட் பண்றீங்க? எப்போ கல்யாணச் சாப்பாடு போட எண்ணம்னான்..
ஏண்டா, உனக்கெல்லாம் வேற விதமா யோசிக்கவே முடியாதான்னேன்
இல்லடா, காலேஜ்ல கூட நீ எப்பவும் சத்யா பத்தியே பேசிகிட்டிருப்ப.. அவளும் உங்கூட சண்டை போடவே க்ளாஸ் வராளோன்னு தோணும். அதான் கேட்டேன்.. ன்னான்
அவனை ட்ராப் பண்ணிட்டு அவன் சொன்னதைப் பத்தி யோசிச்சிகிட்டே வந்தேன்.. நான் என்ன பேசினாலும், என்ன செஞ்சாலும், இந்த ரெண்டு வருசமும் அவ நினைப்பு என்னை விட்டு நகரவே இல்லல. இப்படி சொல்றேனே, இதைப் பத்தி அவ என்ன கமெண்ட் அடிச்சிருப்பா, இந்த ஹேர் ஸ்டைலைப் பார்த்தா நக்கல் அடிப்பாளோன்னு அவளைப் பத்தியே யோசிச்சிகிட்டிருந்திருக்கேன். அவளை மிஸ் பண்ணவே இல்லலயோன்னு கூட தோணுது, போற இடத்துல எல்லாம் இப்படி யோசிச்சி யோசிச்சே அவளையும் கூட்டிப் போயிருக்கேன். இப்ப மிஸ்பண்ணா எப்படி இருக்கும்னு தெரியலை.. ‘
‘எப்படியோ, அவளையே கல்யாணம் பண்றேங்கிற.. சரிதான் இனிமே உங்க சண்டையைத் தீர்த்து வைக்கிறதை என்னோட தினசரி கடமைல சேர்த்துக்கணுமாக்கும். பத்மாகிட்ட டியூசன் படிக்க எப்ப அவளுக்கு நேரம்னு கேட்கணும்….. ‘
‘இரும்மா, மொதல்ல சத்யாகிட்ட சொல்றேன். அப்புறமா அவங்க அம்மாவைக் கேட்கிறதெல்லாம் இருக்கட்டும்.. ‘ என்றபடி போனை நோக்கிப் போனான் சந்துரு.
***********************
‘ஹலோ!’
‘சத்யா?’
‘ஆமாம் சந்துரு.. அப்பாகிட்ட ்பேசணுமா?
‘இல்லை இல்லை. உங்கிட்ட பேசத் தான் ்கூப்பிட்டேன். ‘
‘ம்.. நானே உனக்குப் பேசணும்னு இருந்தேன்..’
‘இரு.. முதல்ல நானே சொல்லிடறேன். மணி போன பிறகு நான் நீ சொன்னதைப் பத்தி யோசிச்சேன் சத்யா..!’
‘ம்.. நானும் யோசிச்சேன் சந்துரு.. உன்னைப் போட்டு படுத்தி எடுத்ததுக்கு முதல்ல சாரி சொல்லணும்னு இருந்தேன். அவ்வளவு வாக்குவாதம் செய்திருக்கவே வேணாம். ‘
‘நானும் தான் சத்யா.. ஆனா நீ சொன்னதுல ஒரு பாயிண்ட் இ்ருக்கு தான். நீ இல்லாம வாழ முடியாதுன்னு இப்பத் தான் கண்டுபிடிச்சிருக்கேன்.. ‘
‘நோ சந்துரு! நம்ம சேர்ந்து வாழறது தான் கஷ்டம். நீ சொன்னது தான் சரி. ‘
‘தப்பு சத்யா! சண்டையே போடாம இருந்தா அது உறவு இல்லை.. உரிமை இருக்குங்கிற உணர்வால தானே சண்டையே வருது..’
‘இல்லை சந்துரு… நம்ம நேர்ல பார்த்து பேசுவோமா? இது சரியில்லை.. ‘
‘அம்மா! நானும் சந்துருவும், ஏன் நண்பர்களா பிரியணும்னு புரிய வச்சிட்டு வரேன்’ சத்யா துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிய ்போது பத்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை..
(முற்றும்)