Tuesday, October 31, 2006

உலகத் தொலைபேசிகளிலேயே முதன் முறையாக...

"இன்னும் சுமார் அரை மணி நேரத்திற்குள் ஒரு பெரிய புயல் கரையைக் கடக்கப் போகிறது. பாதுகாப்பான இடத்துக்குப் போகவும்"

"உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் 7.3 அளவிலான பூகம்பம் தாக்கிக் கொண்டிருக்கிறது. கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்"

"தமிழ் நாட்டில் இன்னும் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு தொடர்மழை நீடிக்கும்"

திடீரென்று ஒரு நாள் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகள் உங்கள் செல்பேசியில் வந்தால் உங்கள் குறும்புக்கார நண்பனின் வழக்கமான விளையாட்டு என்று அலட்சியப்படுத்திவிட வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையிலிருந்து இப்படிப் பட்ட எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வருவதற்கு வெகு நாட்களாகப் போவதில்லை - அதுவும் உங்கள் மாநில மொழியிலேயே!

பெங்களூரைச் சேர்ந்த "ஜெனிவா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ்" நிறுவனமும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் சேர்ந்து ஆபத்துகால தகவல் துறையுடன் இணைந்து இப்படிப்பட்டக் குறுஞ்செய்திகளை நாடு முழுவதும் அனுப்ப உள்ளன. ஜெனிவா நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் வரும் குறுஞ்செய்திகளை மொழிபெயர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போதைய நிலவரப்படி (14 இந்திய மொழிகள் உட்பட) 57 உலகமொழிகளில் இம்மாதிரியான செய்திகளை மொழிபெயர்க்கும் வேலை முடிந்துவிட்டது.

இன்றைக்குக் குக்கிராமங்களில் கூட செல்பேசிகளைப் பார்க்க முடிகிறது. விரிந்திருக்கும் தனியார் மற்றும் அரசு சார் தொலைபேசிச் சேவைகளின் மூலம், இந்தியா முழுவதும் செல்பேசிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆக, எந்த ஒரு ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கையும் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்போது அவை பல்வேறு தரப்பினரையும், அதிக அளவிலான மக்களையும் மிகச் சுலபமாகப் போய்ச் சேரும். அதிலும் அந்தந்த பகுதிகளுக்கேற்ற மொழிகளில் அனுப்பப்படும் போது அவற்றின் பலன்களும் சரியான நேரத்துக்குள் போய்ச் சேர ஏதுவாகும்.

ஜெனிவாவின் இந்த மென்பொருள் மூலம், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால், அதை உள்வாங்கும் செல்பேசியும் யூனிக்கோடு முறையில் இயங்குவதாக இருக்க வேண்டியதில்லை. மொழி பெயர்ப்பதோடல்லாது, இந்த மென்பொருள், குறுஞ்செய்தியை படமாகவும் மாற்றுவதால், மறுமுனை சின்ன படங்களை உள்வாங்குவதாக இருந்தாலே போதுமானது (picture messages not MMS)

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் பெறப்படும் இது போன்ற ஆபத்துகால செய்திகள் தனியார் மற்றும் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள செல்பேசிகளுக்கு மட்டும் அவரவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியில் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். சுனாமி மாதிரியான இயற்கைப் பேரழிவின் போது ஆபத்து காலத்திற்குப் பல மணி நேரத்துக்கு முன்னரே இது போன்ற குறுஞ்செய்தித் தகவல்களை மக்களுக்கு அளிப்பதன் மூலம் உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் பெரிய அளவில் தடுக்கலாம். சமீபத்தைய மும்பை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கூட பத்து நிமிட இடைவெளியில் வெடித்த இந்தக் குண்டுகளைப் பற்றி சில நொடிகளுக்குள் தகவலனுப்பி இருக்கலாம். இன்னும், மும்பை மழைகள், சென்னை, ஆந்திர வெள்ளம் என்று பல்வேறு காலங்களில் இந்த மாதிரியான குறுஞ்செய்தித் தகவல்கள் மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.



"இப்படிப்பட்ட ஆபத்து கால பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் முறையை உலகிலேயே முதன் முறையாக செயல்படுத்தப் போகும் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரியது. இந்தச் சேவையின் மூலம் பேரழிவு எச்சரிக்கைகள் முப்பது வினாடிகளுக்குள் பொதுமக்களுக்குப் போய்ச்சேர முடியும்" என்கிறார் அறிவியல், தொழிற்நுட்பத் துறை அமைச்சரான கபில் சிபல். குண்டுவெடிப்புகளின் போது செல்பேசித் தொடர்புகளில் குளறுபடியானாலும், குறுஞ்செய்திமுறையில் எல்லாருக்கும் செய்தி அனுப்புவது சாத்தியம் என்றும் அறிவியல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் நம்புகிறது.

குறுஞ்செய்திகள் தவிர தரைவழித் தொடர்புள்ள தொலைபேசிகளிலும், குரற்பதிவாக செய்தி அனுப்பவும், ஆங்காங்கு இதற்காகவே அமைக்கப்படும் கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகளின் மூலமும் தொலை தொடர்பைப் பரவலாக்கும் திட்டமும் இருக்கிறது. சுமார் 5.19 கோடி செலவில் செப்டம்பர் 2004 முதலே உருவாக்கப்பட்டு வரும் ஆபத்துகால பன்மொழிக் குறுஞ்செய்தித் திட்டம் பற்றி மீன்வளத்துறை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைச்சகங்களுக்கு ஏற்கனவே செயல்முறை விளக்கம் கொடுத்தாகிவிட்டது. உள்நாட்டு அமைச்சகத்தின் இறுதி தலையசைப்புக்காக மட்டுமே தற்போது காத்திருக்கிறது இந்தத் திட்டம்.

சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கும் பணிகள் சீரான வேகத்தில் சென்றாலுமே செப்டெம்பர் 2007இல் தான் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என்னும் போது, இந்த மாதிரியான குறுஞ்செய்திச் சேவைகள் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உடனடித் தேவையாகும். சீக்கிரமே இந்தச் சேவை செயல்பாட்டிற்கு வந்தால் ஆபத்துகளின் போது பெரிய அளவிலான உயிர்ச்சேதத்தைத் தவிர்த்துவிடமுடியும்.

மேலும் செய்திகளுக்கு

நிறைய தமிழ்ப் படுத்தி இருப்பதால் ஏதும் தவறாகி இருக்குமோவென்று:
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை - Indian Meterological Department
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் - Ministry of Science and Technology
பன்மொழிக் குறுஞ்செய்தித் தகவல் - Multilingual Messaging Service
குரற்பதிவு - Voice Mail
கம்பியில்லா பொது அறிவிப்புக் கருவிகள் - Wireless Public Addressing System
ஆபத்துதவி மையம் - Disaster Management Cell

Saturday, October 28, 2006

அந்த பச்சை நிற மைல்

The Green Mile - By Stephen King

மரணதண்டனை பற்றிய பதிவுகளின் இடையில் நினைவுக்கு வந்த புத்தகம் இது. நண்பரின் வற்புறுத்தலுடன்கூடிய பரிந்துரை காரணமாக இந்த நாவலை நான் படிக்கத் தொடங்கிய போது, அதிக வர்ணனைகளுடனான இதை விட இன்னும் ஆவல் தூண்டும் "Best Seller" புத்தகங்கள் அறை முழுவதுமிருந்து கண் சிமிட்டிக் கூப்பிட்டன. அவற்றில் விழுந்துவிடாமல் ஸ்டீபன் கிங்கின் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்க ஏதுவாக இருந்தது இந்த நாவலை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தான்.

பொதுவாக புத்தகமாகப் படித்ததைத் திரைப்படமாகப் பார்க்கையில் வாசகரின் கற்பனையும் இயக்குனரின் கற்பனையும் ஒத்துவராமல் போய் திரைப்படங்கள் பெரும்பான்மையரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதவையாக அமைவதே இயல்பு. எத்தனை அவசியமான வேலையாக இருந்தாலும் பத்து மணிக்கு மேல் கண்விழித்தறியாத என்னை, நள்ளிரவு வரை உட்கார்ந்து படம் பார்க்க வைத்தது கதையின் முக்கிய பாத்திரமான ஜான் காஃபியின் மலை போன்ற ராட்சச உருவமும் உருவத்துக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத குழந்தை முகமும் தான்.



படம் புத்தகத்துக்குள் நுழைய காரணமாக இருந்தாலும், இந்தப் பதிவு பேசப் போவது புத்தகத்தைப் பற்றி மட்டுமே. கதை நாயகன் பால் எட்ஜ்கோம்ப் (Paul Edgecombe) அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண சிறைச்சாலை அதிகாரி. அதிலும், 1932வின் பொருளாதார வீழ்ச்சிக்காலத்தில் அப்போது வழக்கிலிருந்த மரண தண்டனை உத்தியான மின்னிருக்கைக்குக் குற்றவாளிகளைத் தம் கடைசி நடைக்குத் தயாராக்கும் பொறுப்பான பதவி வகிக்கும் அதிகாரி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கும் பால்(Paul), கடைசி முறையாக இந்தப் பொறுப்பை வகித்தமையும், இனிமேல் இதைச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்த விதத்தையும் சேர்த்தது தான் இந்தக் கதை. தலைப்பின் பச்சை மைல் குறிப்பது மின்னிருக்கை நோக்கி குற்றவாளிகள் பயணப்படும் கடைசி மைலை. இந்தத் தூரம் சிறையில் பச்சை மொசைக்கால் இடப் பட்டிருப்பதால், பச்சைமைல் ஆகிறது

ஜான் காஃபி (John Coffey) என்ற கறுப்பின ராட்சசன் (giant) குழந்தைகளான இரட்டைச் சிறுமிகளை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்காக கோல்ட் மவுண்டெய்ன்(Cold Mountain) சிறைச்சாலைக்கு வந்த போது, பால் சிறுநீரகப் பைக் கோளாறினாலும், அதிகார வர்க்கத்துப் பெரிய மனிதர்களின் நட்பால் அங்கு வேலைக்குச் சேர்ந்து உடன் பணியாற்றும் யாரையும் மதிக்காமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த பெர்ஸி வெட்மோராலும்(Percy Whetmore) பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். காபியின் ஆறடி நெடிய பருத்த உருவத்துக்கு முன் சிறையதிகாரிகள் எல்லாருமே குழந்தைகள் போல தோன்றியதையும் அவன் செய்திருந்த குற்றத்தைப் பற்றியும் அறிந்திருந்த பாலுக்கு "இருட்டைப் பார்த்தால் எனக்குப் பயம், இரவில் இங்கே ஒரு விளக்கைப் போட்டு வைப்பீங்களா?" என்ற அவனது கோரிக்கை முதல் ஆச்சரியத்தை அளித்தது. நோய்களைக் குணமாக்கும் அற்புத சக்தி கொண்டவனான காஃபி அதைத் தவிர வேறு எதுவுமே தெரிந்தவனாகவோ நினைவாற்றல் மிக்கவனாகவோ இருக்கவில்லை. தோற்றத்துக்குத் தொடர்பேயில்லாமல் மிகவும் மெல்லிய குழந்தை மனம் அவனது. ஆனால், ஒரு சில சமயங்களில் எதிராளியின் மனதைப் படிக்கும் கலையும் காஃபிக்குக் கைவருகிறது.



ஜான் காஃபி சிறையில் சில அற்புதங்களை நிகழ்த்தினான், பால் எட்ஜ்கோம்பின் சிறுநீரகக் கோளாற்றைப் போக்கி மறையவைத்தான்; இன்னுமொரு குற்றவாளியான டிலாக்ருவாவின்(Delacroix) செல்லப் பிராணியான மிஸ்டர். ஜிங்கிள்ஸ் என்ற எலியை உயிர்நிலை மங்கியிருந்த கடைசி நிமிடத்தில் உயிர்ப்பித்தான். சிறை வார்டன் மூர்ஸின்(Moores) மனைவி மெலிண்டாவின்(Melinda) மருத்துவர்களால் கைவிடப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்தி அவளை மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றினான். இத்துடன், அங்கிருந்தவர்களின் தலைவலியான பெர்சியையும் .. ஆஹா.. கதை முழுவதும் சொல்வது என் நோக்கமல்ல!.

கதை நடக்கும் நேரம் 1932 என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர். பாலின் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதையின் வர்ணனைகளும், பாலின் அவ்வப்போதைய மன உணர்வுகளும், சந்தோசம், சோகம், வருத்தம், ஜான் நிரபராதி என்று தெரிந்தும் அவனை விடுவிக்க இயலாத கையாலாகாத தன்மை என்று உணர்வுப் பூர்வமாகவே கதை நகருகிறது.

பால் உணர்ச்சிவசப்படும் ஒவ்வொரு சமயத்திலும் சமயோசிதமான பேச்சாலும் செயலாலும் உதவி செய்யும் சக சிறையதிகாரி ப்ரூட்டஸ்(Brutus), ஈரமான உள்ளம் கொண்ட ஹாரி(Harry), பிள்ளைக் குட்டிக்காரன் என்ற காரணத்தினால் இந்தக் குழுவினர் செய்யும் எந்த சட்டவிரோதமான (பெர்சி விரோதமான) நடவடிக்கையிலும் ஈடுபட முடியாமல், அதை ஒப்புக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் டீன்(Dean), நம் தமிழ்ப் படங்களில் வழக்கமாக வரும் நேர்மையான போலீஸ் அதிகாரி போன்ற உயரதிகாரி வார்டன் மூர்ஸ்(Moores), கதையில் முழுக்க முழுக்க உடல் நிலை சரியில்லாமலே வந்தாலும், பால் மற்றும் அவனது மனைவியின் கண்கள் மூலம் மிக அற்புதமான மனுஷியாகக் காட்டப்படும் மெலிண்டா மூர்ஸ் (Melinda Moores), என்று கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட விதம் அழகு.

ஜான் காஃபி, பால் எட்ஜ்கோம்புக்குப் பின் மனதில் தைக்கும் மற்றொரு பாத்திரம் பாலின் மனைவி ஜேனிஸ் எட்ஜ்கோம்ப்(Janice EdgeCombe). சிறு வயதிலேயே திருமணமான ஜேனிஸ் - பால் தம்பதியனரின் அழுத்தமான காதலும், உண்மையான கருத்துப் பரிமாற்றங்களும், பாலுக்கு ஒரு சாயும் தூண் போல் இருக்கும் அவளின் திடமும் சேர்த்து இன்னுமொரு அற்புத பாத்திரம் ஜேனிஸ். ஒரு கட்டத்தில் காஃபி நிரபராதி என்று உணர்ந்த பின், கதைப்படி அவனைச் பார்த்திருக்கக் கூடவில்லாத ஜேனிஸ், அவனைச் சிறையிலிருந்து வெளிக் கொணர வேண்டி யோசனைகள் சொல்வதும், கருப்பினத்தவனான காஃபியின் வழக்கை மறு பரிசீலனைக்குக் கொண்டுவருவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பால், ஹாரி, டீன், ப்ரூட்டஸ் எல்லாரும் எடுத்துச் சொல்லும் போது, "ஆக, ஒரு கருப்பன் என்ற காரணத்துக்காக ஒரு நிரபராதியை நீங்கள் அனைவரும் எரித்துக் கொல்லப் போகிறீர்கள்? அப்படித் தானே? எல்லாருமே கொலைகாரர்கள்!" என்று அனைவரின் மனதில் இருப்பதை வெளியில் சொல்லி கூச்சலிடுவதும், உண்மையில் பாலின் மனசாட்சி ஜேனிஸ் தான் என்று தோன்றவைக்கிறது.

ஜிங்கிள்ஸ் மற்றுமொரு ஆச்சரியம், படத்தில் எப்படி வந்தது என்று இப்போது நினைவில்லை. ஆனால், கதையில் எலியின் நண்பனான டிலாக்ருவா சிறைக்கு வருவதற்கு வெகு நாட்கள் முன்பிருந்தே ஜிங்கிள்ஸ் அவன் இருக்கும் அறையை அவ்வப்போது வந்து எட்டிப் பார்ப்பதும் காத்திருப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்ததை வர்ணிக்கும் போது பாலுடன் நானும் அதிசயத்துப் போய்விட்டேன். பாலின் நூற்று நாலாவது வயதில் அவர் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தொடங்கும் இந்தக் கதை ஜிங்கிள்ஸும் அதே மாதிரி கிட்டத் தட்ட ஐம்பது சொச்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகவும், பாலுக்கு ரொம்பவும் வயதான பின் ஜிங்கிள்ஸ் தானே பாலை மீண்டும் கண்டுபிடித்து அவருடன் தன் கடைசி காலங்களைக் கழித்ததாகவும் சொல்கிறார் கிங்.

மரண தண்டனைகளை நிறைவேற்றும் சிறையதிகாரியான பாலின் முக்கியமான தொழில் பேசுவது, தான் இறக்கும் தேதி தெரிந்த மனிதனுக்கு என்ன தேவைப்படும்? செல்வம்? உணவு? கலவியின்பம்?.. இறக்கப் போகும் மனிதனுக்குத் தேவை ஒரு நம்பிக்கையான நண்பன். தன் எல்லாக் கவலைகளையும், வருத்தங்களையும், செய்த பிழைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு காது, சிரிக்கும் போது கூடச் சிரிக்க ஒரு வாய், சாகும் போது அழ இரண்டு அன்பான கண்கள், பழைய வாழ்க்கையை நினைத்து அழும்போது சாய்ந்து கொள்ள ஒரு தோள். இவை எல்லாமாக இல்லாவிடினும், இவற்றில் குற்றவாளிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் தரவேண்டிய வேலை தான் பாலுடையது - பேசுவது, குற்றவாளியைப் பேசவைப்பது. ஒருவேளை பழைய குற்றங்கள் எவற்றையாவது அவன் ஒப்புக் கொண்டால், அதை எழுதிக் கொள்வது, கடைசி விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளிப்பது(எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட முடியுமா என்ன), கடைசி நேர பயணத்துக்கு உடன் நடந்து, குற்றவாளிக்கும் அந்தப் பயணத்தை பயமின்றி மேற்கொள்ள உதவுவது.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது ஒரு குற்றமும் செய்யாமல் மின் இருக்கையில் அமர்ந்த ஜான் காஃபியைப் போன்றே, ஒரு சிறுமியின் வன்புணர் இறப்புக்கும், ஒன்பது உயிர்கள் எரிந்து இறப்பதற்கும் காரணமான ஆனால், சின்னக் குழந்தை போல் எலிகளுடன் விளையாடிய டிலாக்ருவாவின் மரணமும் நம்மைத் தாக்குகிறது.

இப்படி மின்னிருக்கையில் இறப்பவர்களைப் பார்க்க, நேரில் பார்த்து அந்தத் தண்டனையை ரசிப்பதன் மூலம் தம் இழப்புகளுக்கு ஈடு கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ, அந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களில் விருப்பமுடையவர்கள் வரலாம் என்ற வழக்கமும் இருந்திருக்கிறது, நாகரிகத்தில் முன்னேறிய நாடான அமெரிக்காவின் வெள்ளைக் குடிமக்களுக்கிடையில்! ஒவ்வொரு மின்னிருக்கை இறப்புக்கும் அங்ஙனம் வந்திருந்த மக்களை வர்ணிப்பதிலிருந்து அவர்களின் வன்மம் நிரம்பிய "நல்லா வேணுண்டா உனக்கு" போன்ற வார்த்தைகளையும் மனதில் தைக்குமாறு சொல்ல வைக்கிறார் ஸ்டீபன் கிங்.

கிட்டத் தட்ட ஒரு மாதம் போல், தன் தவறுகளுக்கு வருந்தி, மனம் திருந்தும், தம் வாழ்வின் மிக இனிமையான/கொடுமையான, நாட்களை அசை போடும் மனிதர்களின் இறப்பைப் பார்ப்பது ஒவ்வொரு முறையுமே கொடுமையான விஷயம் தான். எனினும் அந்த இடத்தில் குற்றமற்றவன் இறப்பதைப் பார்க்க நேர்ந்த பால், டீன், ஹாரி, ப்ரூட்டஸ் யாருமே, இது போன்ற அடுத்தவொரு "நாகரிகக் கொலைக்குத்" தயாராக இருக்கவில்லை என்பதையும் சொல்லி முடிக்கிறார் கிங்.

இரண்டாம் முறையாக சமீபத்தில் இந்தக் கதையைப் படித்து முடித்த போது, நம் நாட்டில் மரண தண்டனை எப்படி நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. மரண தண்டனை நியாயமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நண்பர்களும் வாய்ப்பு கிடைத்தால் இப்படி ஒரு தண்டனைக்கு சாட்சியாக இருக்கவும் விழைவார்களோ?

(கதை வேண்டுமாயின் இங்கே பார்க்கலாம்.. படத்தின் கதையில் ஜேனிஸ் பாத்திரம் அத்தனை முழுமையாக இருக்கவில்லை என்று நினைவு, மற்றபடி அதே தான். படங்கள், கதைக்கு சீனுவுக்கு நன்றி)

Tuesday, October 17, 2006

அஞ்சு பேரும் ஒரு டீயும்..

"என்ன வேணும்? வழக்கம் போல ஸ்பெஷல் டீ தானே?"

"ஆமாம் ஆமாம்..சொல்லிடு.."

"அப்புறம், அந்த பூத்துக்கு உள்ள போனவுடனே என்ன நடந்தது தெரியுமா.."

"ஹைய்யோ..! "

"என்னாச்சு?! என்னாச்சு?"

"செம க்யூட்.. "

"தாங்க்ஸ்.. இப்போ தான் பார்த்தியா? இந்த டீ சர்ட்டைத் தானே சொல்றே?"

"ஆசை தோசை.. உன்னை எவ சொன்னா?!"

"பின்ன? யாரைச் சொல்றே?"

"அட! அஞ்சு பேர் இருக்காங்கடா.. எத்தனை அழகா இருக்கானுங்க.."

"அஞ்சு பேரு எனக்குப் போட்டியா?! யாரு ? எங்க இருக்கானுங்க?"

"பயங்கர துறு துறுன்னு இருக்கானுங்க இல்ல?"

"என்கிட்டயேவா? நான் கூட ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிறதா நேத்து தானே சொன்னே?"

"அது நேத்திக்கு.. இன்னிக்கு இவங்க தான் பயங்கர துடிப்பா இருக்கானுங்க.. அங்க பாரேன்.."

"சரி சரி, மொதல்ல நீ இந்த டீய கைல வாங்கு!"

"அச்சிச்சோ.."

"என்னாச்சு? ரொம்ப சூடா? கையச் சுட்டுகிட்டியா?"

"இல்லடா.. அங்க பாரு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க.. வா வெலக்கிவிடலாம்.."

"அடச்சீ.. சும்மா இரு! டீயக் குடிச்சி முடிப்பியா! வந்துட்டா.. வெலக்கி விடுறாளாம்!"

"பாவண்டா.. சண்டை போட்டு ஏதும் காயமாய்ட்டா!"

"ஒண்ணும் ஆகாது. அஞ்சு நிமிஷத்துல அடங்கிடுவானுங்க.. நம்ம எல்லாம் அங்க போனா ஆட்டுச் சண்டையில் நரி புகுந்த மாதிரி தான். நீ பேசாம டீயக் குடி!"

"நீ ஒரு ஜீனியஸ்டா!"

"அப்பா.. ஐயாவைப் பத்தி இப்போவாவது புரிஞ்சுதே.. எப்படிச் சொல்றே?"

"அங்க பாரு சண்டை ஓய்ஞ்சு சமத்தா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.."

"ஐயோ!!" தலையில் அடித்துக் கொள்கிறான்.










[பிகு: ஹி ஹி.. flash-க்கு அடுத்து வீடியோ போட்டு பார்க்கலாமே என்ற (விபரீத) ஆசையின் விளைவு ;) எங்க அலுவலகத்துக்கு எதிர் டீக்கடை புதுசா வந்திருக்கும் கஸ்டமருங்க.. ]

Thursday, October 12, 2006

பெங்களூராகிக் கொண்டிருக்கிறது சென்னை

பொதுவாக வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் இந்தியர்கள் செட்டில் ஆக விரும்பும் நகரமாக இருப்பது பெங்களூர். அதன் ஹைடெக் வசதிகளும், கிட்டத் தட்ட எல்லாவகையான மென்பொருள், வன்பொருள் கணினி நிறுவனங்களுக்கு இங்கே கிளைகள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவில் படித்த தோழி ஒருத்தி, அவள் படிப்புக்குத் தகுந்த, அவள் செய்ய விரும்பும் வேலை பெங்களூரில் மட்டுமே இருக்கிறது என்றாள் ஒருமுறை.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், எப்போதும் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும் புதிய கட்டுமான வேலைகள், டெல்லி, மும்பையைத் தொடுமளவுக்குப் போய்விட்ட வாழ்க்கைச் செலவு(cost of living), விரிந்துகொண்டே இருக்கும் பெங்களூரின் நகர எல்லை என்று இருக்கும் இந்த ஊரின் கலாச்சாரமும் இந்தியாவின் மற்ற நகரங்களைப் பார்க்கையில் மிக மிக வேறாகத் தான் இருக்கிறது.

இந்தியாவின் இந்த ஐந்தாவது மெட்ரோ நகரத்தில் நான் இரண்டே இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். முதல் மாதம் புதிய கலாச்சாரத்தையும் மக்களின் போக்கையும் புரிந்து கொள்வதிலேயே கழிந்தது என்றால், இரண்டாவது மாதம் போதும் என்று தோன்றி மூட்டை முடிச்சுகளைக் கட்டிவிட்டேன். பெங்களூரில் வாழ்ந்த காலங்களில் அங்கு நடக்கும் நவீன முறையிலான குற்றங்கள் பற்றி நண்பர்களிடமிருந்து தினசரி ஒரு மடலாவது வரும்.



  • இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை, பி.டி.ம் உடுப்பி கார்டன் அருகில் ஒரு பெண், "தனியாகச் செல்ல பயமாக இருக்கிறது, கொஞ்சம் வீடு வரை துணை வர முடியுமா?" என்று கேட்க, இந்த இளைஞனும், "சரி, சின்னப் பெண்ணாக இருக்கிறாளே" என்று உதவப் போக, அந்தப் பெண்ணே அமர்த்திய ஆட்டோக்காரனும் பெண்ணும் இன்னும் காத்திருந்த ஒருவனும் சேர்ந்து உதவிக்கு வந்த இளைஞனின் பணம், கார்டுகளைக் கவர்ந்து கொண்டு வெகுதூரத்தில் விட்டுவிட்டுப் போனார்களாம்.


  • பெங்களூர் ரயில் நிலையத்தில் நண்பன் ஒருவனை வழியனுப்ப வந்த இளைஞனிடம் டிக்கட் கேட்டாராம் ஒரு போலி டி.டி.ஆர். அவர் பிளாட்பாரம் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த பின்னும் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, அபராதம் கட்டியே தீரவேண்டும் என்று ரவுசு வேறு பண்ணி இருக்கிறார். இந்த நேரத்தில் யாரோ ஒரு இளைஞன், உதவுவது போல் வந்து பணத்தைக் கட்டிவிட்டு, அப்போதே ஏடிமில் இருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். பணம் எடுத்துக் கொடுக்கப் போன போது என்ன நடந்தது என்று புரியவில்லை, அடுத்த நாள் வேறு ஒரு போலி வங்கி அட்டை மூலம் அந்த அக்கவுண்டையே காலி செய்துவிட்டார்களாம்.


  • கால் சென்டருக்கு அழைத்துப் போகும் ஓட்டுனரே பெண்ணைக் கடத்திப் போய் கொலை செய்த சம்பவம் ஒன்று மிகப் பெரிய அளவில் பேசப் பட்டது நினைவிருக்கலாம்.

  • பெங்களூரில் இருக்கும் எங்களின் ஒரு அலுவலக எல்லைக்கு அருகிலேயே ஆறு மாதத்துக்கு முன்னால், யாரையோ அடித்துப் போட்டுவிட்டு பணம் முதலியவற்றைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டதாகவும் வேலை பார்க்கும் பிறரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அலுவலகமே ஒரு எச்சரிக்கை மடல் அனுப்பியது.


கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற நூதன குற்றங்கள் சென்னையிலும் பெருகத் தொடங்கி இருக்கிறது. நேற்று சென்னை ஐடி காரிடாரில், ஒரு பெண் ஆட்டோவில் ஏறி வேளச்சேரிக்குப் போக விரும்ப, ஆட்டோக்காரர்கள் நேரே பழைய மகாபலிபுரம் சாலையில் கடத்திச் சென்று அடித்து, துன்புறுத்தி வன்புணரவும் முயன்றிருக்கிறார்கள். நல்லவேளையாக அந்தப் பெண், சந்தேகம் ஏற்பட்ட உடனேயே செல்லில் பிற நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, போலீஸ் வந்து, மீட்டெடுத்து விட்டார்கள். எப்படியும் ஆட்டோக்காரரும் அவரது நண்பரும் கொஞ்சம் பணம், நகை, வங்கி அட்டையுடன் தப்பிவிட்டாலும், பெண்ணுக்கு அதிக பாதிப்பும் இல்லை. பாதிக்கப் பட்ட பெண் தரப்பில் வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்களாம். (செய்தி இங்கே)



ஒராண்டுக்கு முன்னால், "வங்கி ஏடிம் அட்டைகளுடன் சென்னையில் நடமாடாதே" என்று நண்பர் ஒருவர் எச்சரித்தார். இரவில் வீடு திரும்புபவர்களைக் கத்தி முனையில் நிற்க வைத்து ஏடிம்மிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டும் கும்பல் ஒன்று அப்போது கிளம்பி இருப்பதாகச் சொன்னார்கள்.



தி நகரில், தீபாவளி பரபரப்பில் நிகழும் குற்றங்கள் இன்னுமொரு வகை.



ஆக, ஐடி காரிடார், புதுப் புது மென்பொருள் நிறுவனங்களுடன், குற்றங்களின் தரத்திலும் எண்ணிக்கையிலும் கூட, சென்னை பெங்களூருக்குச் சமமாக வளரத் தொடங்கிவிட்டது.

ஆட்டோவில் தனியாக ஏறும் பெண்களே/ஆண்களே, உஷார்....

Friday, October 06, 2006

விடுதலை

"லே கருப்பா, நாளைக்கு காலைல உனக்கு விடுதலைடா" நமுட்டுச் சிரிப்போடு சொல்லி விட்டுப் போனது சொக்கன் தான்.. விடுதல! ஒருவழியா, இங்ஙன வந்து அஞ்சு மாசம் கழிச்சு இப்போவாச்சும் விடுதலைன்னு ஒரு வார்த்தையச் சொன்னானுவளே.. அதுவே பெரிய ஆறுதலா இருக்கு..

இந்த விடுதலைக்கு எதுவுமே இணையில்ல. இன்னொரு முறை இப்படி ஒரு எடத்துல யாரோடயாச்சும் நாலு சுவத்துக்கு நடுவுல அடைச்சுவச்சிடுவாங்களோன்னு பயம் இல்லை. திரும்பத் திரும்ப இன்னும் வெவ்வேற ஊருக்கு அலைய வேண்டியதில்லை. இப்படி ஒரு விடுதலை கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும்.. விடுதலைன்னு சொல்லி "வெளில போடா"ன்னுட்டாங்கன்னா, அது தான் கொடுமை இந்த வயசுல. இத்தனை வருசம் பாதுகாப்பா இருந்துட்டு இனி வெளில போய் எப்படி பிழைக்கிறது?

இதுவரை இங்கேர்ந்து யாரும் வெளியில போய் நான் பார்த்ததில்லை. எல்லாருக்குமே "பெரிய விடுதலை" தான். ம்ம், விடுதலைன்னவுடனே கொஞ்சம் மனசு விட்டுப் போச்சு போல, ஏதேதோ பேசுறேன்..

தோ வந்து சொல்லிட்டு போறானே சொக்கன், இவன் ஒருத்தன் தான் இங்க வந்ததுல இருந்து எனக்கு ஒரே தொணை. எப்ப பார்த்தாலும் இங்க தான் இருப்பான். எனக்குப் பசியோ தாகமோ எல்லாத்தையும் இவன் கிட்ட தான் சொல்றது. வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு, தாகம் தீர்த்து நல்லபடியாத் தான் பார்த்துக்கிடறான்.. என்னை மட்டுமா இங்க உள்ள எல்லா பேத்தையும் இவன் தான் பாத்துக்கிடறான். எல்லாத்துக்கும் பேரு வச்சிருக்கான். எனக்கு வச்சது போலவே.

பொறந்தப்போ எனக்கு வச்ச பேரு ராமசாமி. என்னவோ போன பொறப்புல கேட்ட பேர் மாதிரி ஆகிடுச்சு. "டே ராமு"ன்னு ஆசையா கூப்பிட்டது பெரியகுளம் பண்ணையார் மவந்தான். அம்மா ஏனோ பேர் சொல்லிக் கூப்டாது. பால் குடிக்கும்போது ஆசையா தடவி குடுக்கும். அதெல்லாம் கொஞ்ச காலந்தான். பால்குடி மறக்கிறதுக்குள்ளயே பண்ணையார் வூட்ல கொண்டு விட்டுட்டாங்க. சின்னப் பண்ணை மாணிக்கம் அப்போ பொறக்கவே இல்ல. மாணிக்கத்துக்கு பத்து பன்னெண்டு வயசு வரை நான் தான் அவரோட கூட்டாளி. என்னொட ஆசையா வெளையாடுவாரு. முதுகுல சொமந்துகிட்டு ஊரெல்லாம் சுத்திக் காட்டி இருக்கேன் பல நாள்.

ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம். இந்தக் காலத்துப் புள்ளைக எது வளர்ந்ததுக்கப்புறம் அப்பனாத்தா மேல பாசமா இருக்கானுவ. தேனும் பாலுமா ஊட்டி வளர்த்த பண்ணையாரையே முதியோர் இல்லத்துல சேர்க்குறேன்னு சொன்னவுங்க தானே.. என்னையெல்லாம் எங்க கண்டுக்கிடறது?! நல்ல வேளை பண்ணையார் மாதிரி எனக்கு புள்ளகுட்டியெல்லாம் இல்லை. புள்ளகுட்டி தான் இல்லைனாலும், ஆடின ஆட்டம் சும்மா இல்லை.. பண்ணையார் போய்வந்த ஊரெல்லாம் எனக்கும் சொந்தபந்தம் இருந்துகிட்டே தான் இருந்துச்சு.. சின்னசேலம் சித்ரா, பனையூர் பரிமளம், கோட்டூர் கோமளான்னு எல்லாம் இப்போ இருக்காளுவளோ, இல்லை இந்த விடுதலை முன்னமே கெடைச்சிடுச்சோ!

நல்லா ராஜா மாதிரி வச்சிருந்தாரு பண்ணையாரு என்னைய, மவராசன்! மாணிக்கத்தோட பொஞ்சாதி, அந்தப் புண்ணியவதி ஏதோ ஒரு நாள் தண்டச் சோறுன்னு சொல்லிட்டா.. அந்த ஒத்தச் சொல்லு பொறுக்காம அன்னிக்கு ராவு படுத்தவரு அப்புறம் எந்திரிக்கவே இல்லையே!

பண்ணையார் போய்ச் சேர்ந்த ஒரே வருசத்துல நானும் மாணிக்கத்துக்குப் பாரமாப் போய்ட்டேன்..ஆடின ஆட்டத்துக்கு நம்ம ஒடம்பெல்லாம் பண்ணையார் மாதிரி ரொம்ப நாள் தாங்குற ஒடம்பும் இல்ல.. அப்புறம் எங்கெங்கோ அலைஞ்சேன்.. கொஞ்ச நாள் சென்னைப் பட்டினத்துல கூட சுத்தி இருக்கேன்னா பார்த்துக்குங்க..

என் கடைசி எஜமான் வூட்ல இருந்தப்போ ஒரு நாள் ஒரு லாரி வந்துச்சு. நானும் இன்னும் அந்த வூட்ல இருந்த சிலபேரும் ஏறிகிட்டோம். அப்படியே இன்னோரு வூட்ல போய் அதே மாதிரி ஏத்திகிட்டாங்க.. மூச்சு முட்டுச்சு.. நிக்கவே எடமில்ல. வெயில் வேற.. ஒரே நச நசன்னு வருது. நல்லவேளையா இங்க கொண்டுவந்து எறக்கி விட்டாங்க. அப்போத்திலிருந்து இது தான் எங்களுக்கு வூடு, வாசல், கொட்டில் எல்லாம். நாலு மாசமாச்சு. ஏதோ போதும் போதாம, வேளாவேளைக்கு சாப்பாடு. கொஞ்சமா தண்ணி குடிச்சு வாழக் கத்துகிட்டோம். இதோ நாளைக்கு இந்தத் தொல்லைகள்லேர்ந்து விடுதலை. ம்ம்ம்.

அட, பேசிகிட்டே இருக்கும் போதே விடிஞ்சுடுச்சே. அதோ சொக்கன் வரான். சாகும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்னு மீனாட்சி சொல்லிச்சு. இப்போவெல்லாம் ஏதோ மருந்து கொடுக்கிறாங்களாமே.. வலிதெரியாம இருக்கிறதுக்கு.. பார்க்கலாம்..

சொக்கன் வந்து என்னவோ என்னைப் பார்க்குறானே. கயத்த அவுக்கப் போறானா இல்லையா.. "டேய் கருப்பா, உன் நேரம் நல்லா இருக்குடா. இங்கையும் உன்னையெல்லாம் கொல்லக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டானுவளாம். இன்னும் ஒரு வாரம் உனக்கு வாழ்வு தான். தயாரா இரு. இன்னிக்கு மதியமே எல்லாரும் கேரளா போவப் போறோம்.. உனக்குந்தாண்டி மூக்காயி, தயாரா இரு என்ன" சொக்கன் சொல்லிட்டு போய்ட்டான்..

அப்போ அவ்வளவு தானா?! இன்னும் ஒரு வாரம் இந்தக் கொடுமைய சகிக்கணுமா! அதிலும் கேரளா போவணும்னா மறுக்கா அந்த லாரில மூச்சு மூட்டுர கூட்டத்துல ஒரு ராத்திரி பூரா நின்னுகிட்டே போகணும்!

அடக் கொடுமையே.. அடேய் எம தர்ம ராசா, எப்போதான் வரப் போறியோ.. எனக்கு என்னிக்குத் தான் விடுதலையோ.. என்னைப் போய் உன்னோட வாகனம்னு சொல்றாங்களே! நான் உன்னைத் தூக்குறது இருக்கட்டும், நீ என்னிக்கு என்னை இந்த சுயநலம் பிடிச்ச மனுஷப் பயகிட்டேர்ந்து விடுதலை பண்ணப் போறே!


Wednesday, October 04, 2006

முதல் முயற்சி






flash-இல் இது என் முதல் முயற்சி.. குடைக்குள் மழை.. இதைச் செய்ய தூண்டுதலாக இருந்தது பினாத்தலாரின் இந்தப் பதிவே.

இன்னுமொரு முயற்சி:



தமிழ் எழுத்துருக்கள் சரியாக வராததால்,
"எந்த ப்ளாட்பார்மல கீறே?"