Thursday, November 30, 2006

வெயிலோடு போய்

சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "வெயிலோடு போய்" புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (முதல் பதிப்பு 1985. நான் படித்தது மூன்றாவது பதிப்பு 1994) [ச.தமிழ்ச்செல்வனைப் பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு பத்ரியின் மறுமொழியில் பார்க்கலாம்.]

ஏற்கனவே தமிழ்ச்செல்வனின் "அரசியல் எனக்குப் பிடிக்கும்" படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, ஓட்டு போடுவது மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்குமான தொடர்பு என்ற என் பழைய எண்ணங்களிலிருந்து, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா குடிமகனின் தினசரி வாழ்வு அரசுடன் எத்தனை பிணைத்திருக்கிறது என்று புரியவந்தது. நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறார் ஆசிரியர். கணினி மொழியில் சொல்லும் ஒன்றும் பூஜ்யமும் இல்லாத இடைப்பட்ட நிலையான fuzzy logic மாதிரியான நிலைகள் ஒரு மனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கவே முடியாது என்ற அந்தக் கருத்தும் எனக்குப் புதுமையான ஒன்று. மற்ற விமர்சனங்கள் ஏற்கனவே வந்துவிட்டன. கடைசி சில அத்தியாயங்கள் மட்டும் ஏதோ கம்யூனிச கட்சிப் பிரசாரம் போல் எனக்குத் தோன்றியது. மற்றபடி மிக அற்புதமான புத்தகம் அது.

அந்தப் புத்தகத்தைப் படித்த அதே உணர்வோடு வெயிலோடு போகத் தொடங்கினேன். "வெயிலோடு போய்", பெரும்பாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளினால் மட்டுமே பிழைக்கும் குடும்பங்களின் அன்றாட வாழ்வைப் பற்றிய கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் படித்து முடித்தபின் குறைந்தது இரண்டு நிமிடமாவது ஒதுக்கிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. வாழ்வியலின் யதார்த்தம் அடங்கிய கதைகள்.




பெற்றோரும் குழந்தைகளும் எத்தனைதான் நாளெல்லாம் உழைத்தாலும், ஒரு இனிப்பு வாங்கிச் சாப்பிடக் கூட முடியாத அவலங்களைப் பேசுகிறது 'பாவனை'. குழந்தைகள், இனிப்பு வண்டிக்காரனின் வண்டியில் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிடுவதாக பாவனை செய்து மகிழ்வதைப் படிக்கும் போது எங்கள் வீட்டருகில் வந்த குல்பி வண்டிக்காரனிடமிருந்து உடல் நிலைக்காக "தினசரி ஐஸ்கிரீம் வாங்கித் தரமாட்டேன்" என்று அப்பா சொன்னபோது கோபப்பட்டு அழுத நாட்களின் நினைவு அவமானத்துடன் எழுகிறது.

"வார்த்தை" என்ற கதையில் பள்ளிச் சுற்றுலாவுக்காக தயாராகும் சின்னப் பையனின் கண்ணினூடாக நகரும் சிறுகதையும் அடுத்த அழகான கதை. மிக மிக இயல்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சின்ன குடும்பத்தின் பாசம், அன்பு, கண்டிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் அற்புதமாக வடித்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை படிக்கத் தொடங்கும்போதே முடிவை ஒரு மாதிரி ஊகித்துவிட முடிகிறது என்றாலும் கதையின் அழகு 'இன்னும் இன்னும்' என்று திருப்ப வைப்பதுடன், கடைசியில் சிறுவன் சோலையின் சோகம் நமக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

'சுப்புத்தாய்'உம் 'அசோகவனங்களும்' கொஞ்சம் வளர்ந்த தீப்பெட்டித் தொழிலாளிகளின் சோகம். வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களைத் தவறான கோணத்தில் பார்ப்பதென்பது அடிமட்ட துப்புரவுத் தொழிலாளர்களில் தொடங்கி, கால் சென்டர்களில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்கள் வரை எல்லா நிலையிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. பால் கொடுக்கும் தாயின் மார்பைப் பார்த்து மகிழும் சுப்பத்தாயின் தொழிற்சாலைக் கணக்கனையும், கட்டின கணவன் மாதிரி மரியாதை இல்லாமல் அழைக்கும் மாரியம்மாவின் கணக்கப் பிள்ளையும் இருக்கும் வரை எல்லா வேலையிடங்களும் அசோகவனங்கள் தான்.

அசோகவனங்களைப் பற்றிச் சொல்லி முடிக்கும் போதே தொகுப்புக்குப் பெயர் கொடுத்த 'வெயிலோடு போய்' மாரியம்மாவின் புருஷனைப் பற்றியும் எழுதவேண்டும். தன் முறை மச்சானுக்கு என்றே வளர்ந்து வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் என்பதையும் பாராமல் அவளுடன் அன்பாக இருப்பதும் அவள் கேட்கும் பொழுதெல்லாம் தாய்வீட்டுக்குப் போக அனுமதிப்பதும், என்ன ஏதென்று தெரியாமலே ஆறுதல் சொல்வதும் என்று அன்பானவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் அந்தக் கணவர். அதே போல் என்னை ரொம்பவும் கவர்ந்த மற்றொரு பாத்திரம் 'கருப்பசாமியின் அய்யா'. சாகசங்கள் செய்வதிலும், 'பெரிய சாதனைக்காரன்' என்று பெயர் வாங்குவதிலும் மட்டுமே ஆசையுள்ள கருப்பசாமியின் தந்தையை அவள் தாய் காளியம்மா 'திருத்தி' அதாவது இன்றைய வர்த்தக உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, சாதாரண வாழ்க்கையை வாழவைக்கிறாள். 'சாதாரண மனிதர்களால் செய்ய முடிந்தவற்றைச் செய்யக் கூடாது' என்று நினைக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்வு பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே எப்படி மாறிப் போகிறது என்கிறது இந்தக் கதை.

அதிகாரத்துக்குப் பயந்து வேலை செய்வதன் கொடுமைகளைப் பேசுகிறது 'பிரக்ஞை'. 'எப்போதும் எல்லாரும் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும்' என்று நினைக்கும் ஹெட்கிளார்க்கின் கொத்தடிமைக் கட்டுகளுக்குப் பணியாத ஒரு இளைஞனின் கதை. அப்படிப்பட்டவனைச் சமுதாயமும், அதிகார வர்க்கமும் எப்படிப் பார்க்கிறது என்பது வரை..

நெஞ்சைத் தொட்ட மற்றொரு கதை "வேறு ஊர்". தன் காலமெல்லாம் உழைத்துச் சம்பாதித்துப் பெற்ற பிள்ளையைப் படிக்க வைத்தும், அந்தக் கல்வி மகனது வாழ்க்கையிலும் பொருளாதார உயர்வைத் தர இயலாமல் போனதை நினைத்து வாடும் முதியவரின் கதை. வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இன்றைய நாட்களில் ஏழ்மை என்ற ஒரே காரணத்துக்காகவே தன் பெற்றோரைக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு அழைத்துப் போகிற மகனின் கதையும் கூட.

'அப்பாவின் பிள்ளைகள்', பிடிக்காத வேலையைச் செய்யும் மனம் எப்படி அதிசீக்கிரம் சோர்ந்து துவண்டு போவதைச் சொல்கிறதென்றால், 'குரல்கள்', தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்தில் இறக்காமல் தப்பிப் பிழைத்த சிறுவனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதுமே கொடூரமான கனவுகளால் நிரம்பி இருக்கும் அவலத்தைப் படம்பிடிக்கிறது.

கவர்ந்த மற்றொரு கதை 'மீடியம்'. ஒரு உள்ளாடையை வைத்து இத்தனை அற்புதமான கதையா?! நாகரிகக் காரணங்களுக்காக கோவணத்திலிருந்து ஜட்டிக்கு மாறி, அதுவே வருமானத்துக்கு மீறிய செலவாகக் கஷ்டப்படும் மனிதரின் கதை. 'நம் ஊரில் ஒரு ஜட்டி கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழை மக்களா!' என்ற அதிர்ச்சி மட்டுமே மிச்சம்.

இவை தவிர ராணுவப் பின்னணியான 'அந்நியம்', சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கதையான '26ம் பக்கத்து மடிப்பு' என்று இந்தப் புத்தகம் முழுவதுமே பொக்கிஷம்.

தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வில் பெட்டியை ஒட்டுவதால் ஏற்படும் சிரங்கும், அழுக்கும், ஏழ்மையும் எப்போதும் கூட வருபவை என்று இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. அம்மா, அப்பா இருவருமே நாள் முழுவதும் வேலை செய்யும் குடும்பங்களில் கூட வறுமை இறுதிவரை தாண்டவமாடுவதைப் பார்க்கும் போது மனித உழைப்புக்கு இவ்வளவு தான் மதிப்பா? என்று மனம் வெறுத்துப் போகிறது.

குழந்தைத்தனமான ஒரு ஆசை...

காலையிலிருந்தே இதோ, 'இப்போ வருவேன்', 'அப்போ வருவேன்' என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருந்த மழையைத் தைரியமாக எதிர்த்துக் கொண்டே, கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்குச் சிற்றுலா சென்ற போது மதிய உணவுக்குத் திரும்பிவிடலாம் என்பது மாதிரியான நேரம் தான். மார்க்கெட்டின் சிறுவியாபாரிகள் கடைகள் எல்லாவற்றையும் ஒரு சுற்று நோட்டம் விட்டுவிட்டு அன்றைக்குப் பச்சையாக புதிதாகத் தோன்றும் காய்களை மட்டுமே வாங்குவது எங்கள் வழக்கம்.

வெங்காயக் கடையில் சாம்பார் வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்குமான விலைப்பேரம் பேசிக் கொண்டிருந்த போது தான் வெங்காயக் கூடைக்கும் கடைக்காரரின் இருக்கைக்கும் இடையில் லேசாக பூந்துடைப்பத்தின் நுனி ஒன்று தெரிந்தது. லேசான ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பேச வாய்வராமல் "கிலோ இருபது ரூபாயா? கொள்ளை விலையா இருக்கே!" என்று பேசிக் கொண்டிருந்த அம்மாவை நான் தொடுவதற்கும் அந்தப் பூந்துடைப்பத்தின் தலை அதே இடைவெளியில் தென்படுவதற்கும் அதிகம் நேரமாகவில்லை.

சின்ன அணில் அது. அப்போது தான் அணில் ஒன்றை அத்தனை அருகில் பார்க்கிறேன். சிறுவயதில் இந்திப் புத்தகத்தில் மகாதேவி வர்மா வளர்த்த அணிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் இருந்த வீடுகளில் எல்லாம் அங்குமிங்கும் வளர்ந்திருந்த மரங்களில் அவ்வப்போது ஓடி விளையாடும் அணில்களைப் பார்த்து ரசித்திருந்தாலும், அத்தனை அருகில் பார்த்ததில்லை.

அணில் மெல்ல தலையை வெங்காயக் கூடையிலிருந்து வெளியே விட்டதும், அம்மா என் தொடுதலை உணர்ந்து "ஆமாம் அத அவர் வளர்க்குறாரு" என்றார்.

"என்னது? அணில் வளர்க்கறீங்களா?" என்று நான் கேட்டதும், லேசான வெட்கம் கலந்த பெருமிதத்துடன் 'ஆம்' என்றார் அந்தக் கடைக்காரர். கடைக்காரர் என்று சொன்னாலும் சின்ன பையன் தான், பதினெட்டிலிருந்து இருபது வயது தான் சொல்லலாம். அணிலுடன் விளையாடும் வயது தான் என்று நினைத்துக் கொண்டேன்.

"சாப்பிட என்ன கொடுப்பீங்க?"

"பால் தான் கொடுக்கிறது." என்றபடி இடதுகை பக்கத்தில் வைத்திருந்த பாலை, அணில் கண்டுகொண்டு விடாமல், கையில் எடுத்துக் கொண்டார் அவர். அணிலும் சளைக்காமல் அந்தப் பாலைத் தேடத் தொடங்கியது. கடைக்காரரின் உடையின் மேல் ஏறிப் பின், உடலிலும் ஓடிப் போய் பின்கழுத்துவழியாக இடது கையில் இறங்கி, விரல்களில் இருந்த பாலுக்கு அருகில் சென்றபோது, கடைக்காரர் பால் டம்ப்ளரை வலதுகைக்கு மாற்றிக் கொண்டார். அணிலார் மறுபடி உடலெங்கும் இறங்கித் தேடத் தொடங்கினார்.

பக்கத்துக் கடைக்காரர் "டேய், அது கிட்ட காட்டாம குடின்னு அப்பவே சொன்னேன்ல?! " என்று அறிவுரை சொன்ன போது எங்கள் வியாபாரம் முடிந்து அடுத்த கடைக்கு நகரத் தொடங்கினோம். திரும்பி வரும் வழியில் அந்தக் கடைக்காரரும் அணிலும் மீண்டும் அதே ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.

**********************

வழக்கமாகப் போகும் எங்கள் அருகாமை மருந்துக் கடை தான். கணவனும் மனைவியுமாக அந்தக் கடையை நடத்துகின்றனர். கணவர் சீட்டை வாங்கி மருந்தை எடுத்து வைக்க, மனைவி ரசீது போட்டுக் கொடுக்க மிக அழகான வியாபாரம் அவர்களுடையது. நான் போகும் நேரங்களில் விளையாட்டுப் பள்ளியில் படிக்கும் அவர்களது இரண்டரை வயது மகனும் பெரும்பாலும் கடையில் தான் இருப்பான். மருந்து எடுத்து வரும் அட்டை பெட்டிகளையோ அவனுக்கென்றே இருக்கும் பென்சில், ரப்பர் இத்யாதிகளையோ வைத்து விளையாடிக் கொண்டிருப்பான்.

நாம் ஏதாவது கேட்கும் போது அதை, தானே எடுத்துத் தர வேண்டும் என்று சில சமயம் அவனிடம் ஆர்வம் கொப்பளிக்கும். அவன் கைக்கு எட்டும் இடத்தில் இருக்கும் விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற மருந்துகளை எடுத்துக் காட்டி, "இது வேணுமா உங்களுக்கு?" என்னும்போது, "அதெல்லாம் வேண்டாம்டா கண்ணா, உன்னைத் தான் தூக்கிக் கொஞ்சணும்" என்று சொல்லலாம் போலிருக்கும்.

அன்றைக்குக் கடைக்குப் போகும்போது, சிறுவன் பயங்கர உற்சாகமாக இருந்தான். அவன் அம்மாவின் தம்பி வந்திருந்ததுதான் உற்சாகத்துக்கான காரணம் என்று தெரிந்தது. வேலையிலேயே மூழ்கி இருக்கும் அப்பாவுக்கும், கணக்கில் கறாராய் இருக்க வேண்டிய அம்மாவுக்கும் இடையில் விளையாடிக் கொண்டிருந்தாலும் தனிமை அவனை வாட்டிக் கொண்டிருந்ததென்பது இன்றைக்கு அவன் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலும் குதியாட்டத்திலும் தெளிவாகத் தெரிந்தது. மாமாவிடம் தன் கடை குளிர்சாதனப் பெட்டியைக் காட்ட வேண்டும் என்று திடீரென்று ஆசை வந்துவிட்டது நம் குட்டிப் பையனுக்கு.

"அப்பா, அப்பா, நம்ம பிரிட்ஜில, " என்றபடி எங்கள் சீட்டுக்கான மருந்தை எடுத்துக் கொண்டிருந்த அப்பாவின் முன் போய் ஒரே குதி குதித்தான். அன்றைக்கென்று என்ன பிரச்சனையோ அவருக்கு, மகன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "இன்னிக்கு நீங்க ரொம்ப பேசுறீங்க.. ஆட்டம் அதிகமா இருக்கு, ஒரு இடத்துல உட்காரக் கூடாதா?!" என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டுவிட்டார்..

பையனின் குதியல் பட்டென்று அடங்கிப் போயிற்று. அந்தக் கேள்வி கூட முடியவில்லை. கோபத்துடன் சிறுவன் கடை நடுவிலிருந்த அலமாரியின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவனைக் கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டார் என்பதால் அப்பாவுடன் போயிருந்த என்முகமும் என்னவோ நானே திட்டுவாங்கியது போல் சுருங்கிப் போக, அப்பாவிடம் மருந்து பற்றிக் கேட்கவந்த கடைக்காரர், முகக்குறி படித்து, குழந்தையைக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டோமோ என்று வருத்தத்துடன் அலமாரி பின்னால் போனார்.

"பிரிட்ஜில என்ன, சொல்லுங்க.. " என்று குனிந்து கேட்டார்..

அந்தத் தெய்வம் சற்று நேரம் முன்னால் நடந்ததை முற்றிலுமாக மறந்து போய் இந்த அங்கீகாரத்துக்கே குளிர்ந்து, "பிரிட்ஜில் இருக்கிற சாக்லேட்டை மாமாவுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கியது..

*****************************

இரண்டு சம்பவங்களைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஏனோ பல்லாயிரம் கேள்விகள். முதல் முதல் வேலை பார்த்த நிறுவனத்தில் பிந்து என்ற என் தோழி ஒருத்தி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ஆறு மணி வாக்கில் அலுவலகம் வந்து விடுவாள். மதியம் இரண்டு மணிக்கு அவள் வீட்டுக்குக் கிளம்பும் நேரம் தான் நான் அவளைப் பார்க்கக் கூடிய நேரம். "இத்தனை சீக்கிரம் கிளம்புறீங்க?!" என்று தான் எனக்கும் அவளுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. பிந்துவின் இரண்டு வயது மகள் ப்ளே ஸ்கூலிலிருந்து திரும்பும் மூன்று மணிக்கு அவள் வீட்டிலிருக்க வேண்டும் என்று தான் இத்தனை அதிகாலையில் எழுந்து அலுவலகம் வருகிறாளாம் அவள். இப்படி வராவிட்டால் குழந்தையுடனான நேரம் ரொம்பவே குறைந்துவிடுகிறதாம்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இந்தக் காரணத்தை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். குழந்தை கொஞ்சம் தவழ, பேசத் தொடங்கிவிட்டால், அவனோ அவளோ பள்ளிக்குப் போகத் தொடங்கும் வரை வேலையை கைவிட்டு விடுபவர்கள், சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்தாலும் குழந்தை சாப்பிட்டானா? தூங்கினாளா? வெயிலில் அலையாமல் இருக்கிறாளா ? என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோரை அடிக்கடி பார்க்க முடிகிறது.

செல்லப் பிராணிகள் வளர்க்கும் போதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. நாயோ பூனையோ வளர்க்க வேண்டும் என்று சொன்னபோது எங்கள் வீட்டில் எழுந்த முதல் கேள்வி, அதைப் பகல் பொழுதில் யார் பார்த்துக் கொள்வது என்பது தான்.

"மகளிர் மட்டும்" திரைப்படத்தில் வந்தது போல் ஏன் குழந்தைகளை அலுவலகத்துக்கே அழைத்து வர நம்மால் முடிவதில்லை. இது போன்ற அலுவலகங்கள் உலகெங்கிலும் எங்காவது இருக்கின்றனவா? பன்னாட்டு நிறுவனங்களில் சிலவற்றில் ஊழியர்களுக்கான குழந்தைகள் காப்பகங்களே இருக்கின்ற போதும் அவை இருக்குமிடம் பணியிடத்திலிருந்து பலகாத தொலைவாகவே இருக்கிறது.




காப்பி, மதிய உணவு இடைவெளிகளில் மட்டுமாவது குழந்தைகளைப் பார்க்க முடிந்த அருகாமை இடங்களாக இருந்தால் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் வேலை செய்யும் பெற்றோரின் பணித்திறமும் அதிகரிக்கும் தானே? அதை ஏன் காண முடிவதே இல்லை? களத்து மேட்டில் குழந்தையைத் தூளியில் போட்டுவிட்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்த நமது கலாச்சாரத்தை எங்கு இழந்தோம்?

பத்து மணி நேரத்துக்கும் மேல் கணினித் திரையையே பார்த்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க, விளையாட்டுக்காக டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டு அறைகள் கொண்ட நிறுவனங்கள் கூட, இவற்றுக்குப் பதிலாக குழந்தைகள் அறை வைத்திருந்தால் இடமும் கலகலப்பாகும்; கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் செலவு செய்துவிட்டு வரும்போது வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும் அல்லவா?

ஏதோ ஒரு படத்தில் நாகேஷ் தன் கைக்குழந்தையை ஒளித்து மறைத்து அலுவலகத்துக்குத் தூக்கி வருவார். அந்த மாதிரியான ஒரு அலுவலகம் உலகில் எங்கேயாவது இருக்கிறதா என்ன?

Wednesday, November 29, 2006

பதிவுலகில் பெண்கள்?!

"தமிழ்ப் பதிவுலகுல பார்த்தீங்கன்னா பொன்ஸ், பெண் பதிவாளர்கள் ரொம்ப குறைவு"


- எழுத வந்த ஐந்தாம் மாதம் பல்வேறு காரணிகளால், 'மூட்டை கட்டலாம்' என்று நான் முடிவு செய்திருந்த போது மதி சொன்னது எனக்கு.

உண்மை தான்; பதிவுலகில் பெண் பதிவாளர்களின் எண்ணிக்கைக் குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தொடர்ந்து இயங்குபவர்கள் மிகமிக சொற்பம். வீட்டளவில் பேசுவதற்கே போன நூற்றாண்டு வரை அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள், பொது ஊடகங்களில் பேச இன்னும் அதிகமான தடைகள் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.



ஆபாச வார்த்தைகளில் திட்டுபவர்கள் ஒருபக்கம் என்றால், வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம். இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.

வீட்டில் சொல்லாமல் எழுதும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்; சொன்னால், ஒரு பெண் எதைப் படிக்கவேண்டும் என்பதையே கணவர்கள் தீர்மானிக்கும் இந்தக் காலத்தில், எதை எழுதுவது என்பதிலும் தலையீடு வருவதை விரும்பாமலோ, எழுதுவதிலே தலையீடு வருமோ என்று பயந்தோ! கோலம், யானைகள், சமையற்குறிப்பு போன்ற தலைப்புகளில் இன்னும் அதிகம் கூட எழுதுங்கள். ஆனால், கற்பு, கத்திரிக்காய், சந்தித்த பாலியல் வக்கிரங்கள், வேலைக்குப் போகும் பெண்களின் உண்மையான பிரச்சனைகள் என்று தொட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உங்கள் எழுத்தைத் தீர்மானிப்பது யார் என்று!

எழுதுபவர்களை ஊக்குவிக்கிறேன் பேர்வழியென்று, வக்கிரமாக "நீங்க பெண் என்கிறதால் தான் அதிக பின்னூட்டம் வந்து விழுது!" என்று சொல்லி, எழுத்தைக் கீழ்மைப்படுத்தும் 'நண்பர்கள்' இருக்கிறார்கள். எனக்குக் கூட அப்படியான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

பெண்ணியம் என்றாலே "ஆணுக்குப் பெண் நிகர்னு சொல்ல வந்திருக்கீங்க, எதுக்கு பெண்ணுன்னு தனித்துச் சொல்றீங்க?" என்ற கேள்வி எழுகிறது. அதே, "நாம் பயன்படுத்தும் செல்போன், ஸ்கூட்டி எல்லாம், பெண்களுக்கும் வாங்கிக் கொடுத்துட்டோம்" என்று பிரித்துச் சொல்பவர்களிடம், பிரிந்து நின்று தானே கேட்க வேண்டியிருக்கிறது?

"எங்களால எழுத வரலைங்கிறீங்க, நாங்க உதவி செஞ்சாலும் அதைச் சொல்லிக்கக் கூடாதுங்கிறீங்க, அப்போ பிரச்சனைன்னு வந்தா எங்களைக் கேட்கக் கூடாது". ஆகா, பிரச்சனைகளில் உதவிக்கு வராமல், தாமாக சரி செய்து கொள்பவர்களுக்கும் தான் முத்திரைகள் தயாராக இருக்கின்றனவே. "உங்க பிரச்சனையை எப்படிச் சமாளிச்சி தீர்வு பெற்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!" என்ற எகத்தாளங்கள் குதித்து வந்து விடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேல், வெளிச்சமூகத்தில் படிப்பறிவில்லாத மக்கள் தாம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால், படிப்பறிவாளர்கள் மிகுந்த பதிவுலகிலும், வேறெந்த ஆயுதமும் பலன் தராதவுடனே, பெண் பதிவாளருக்குத் தொடர் நண்பராக இருக்கும் ஆண்களை அல்லது, ஆண் பதிவர்களின் தோழியைச் சேர்த்து வம்பிழுப்பது சுலபமான உத்தியாகப் பயன்படத் தொடங்கிவிட்டது.

எங்களை நாங்களாக இருக்க விடுங்கள், "நீ இப்படி இருப்பதற்கு நான் தான் காரணம்" என்று ஆதிக்க உணர்வில் பேசுவதையும் நிறுத்திவிட்டு.

இறுதியாக, பெண் பதிவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் எந்த நண்பரையும் இந்தப் பதிவு சாடவில்லை. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் பொருள்.

தொடர்புள்ள பதிவுகள் :

1. அயனுலகம்

2. நிலா

3. இட்லிவடை

4. சக்தி

படம் காட்டுறேன்..

வெகு நாட்கள் முன்பே இட்டிருக்க வேண்டிய பதிவு இது. அமெரிக்காவில் பார்த்த ஒரு குகைப்பகுதியின் அறிமுகம். நான் தங்கியிருந்த ஊரிலிருந்து ஒரு மணிநேரப் பயணமான இடத்தில் இருந்தது இந்தக் குகை. மெரிமெக் குகைகள்(Meramec Caves) என்று பெயர். இதை ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஒளிந்திருந்த இடம்(Jesse James Hideout) என்றும் சொல்கிறார்கள்.


1870களில் அமெரிக்காவைக் கலக்கிய கொள்ளைக்காரனான ஜெஸ்ஸி ஜேம்ஸும் அவனது கூட்டத்தாரும் தங்க இடம் அளித்த குகையாம் இது.



அருகாமை வங்கிகளிலும் ரயில்களிலும் கொள்ளையடித்தபின் இந்தக் குகையில் வந்து தான் அவர்கள் ஒளிந்து கொள்வார்களாம்.



ஒளிந்து கொண்ட இடத்துக்கும் மாதிரி செய்து வைத்திருக்கிறார்கள்:



அருகாமைப் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் செய்து கொடுத்த காந்தசக்தியைப் பயன்படுத்தும் பென்டுலம்:


உலகிலேயே இது போல் மொத்தம் பன்னிரண்டு பெண்டுலங்கள் தான் இருக்கின்றனவாம். அவற்றிலும் இது சிறப்பு மிக்கது, ஏனெனில் இந்த பெண்டுலத்தைச் செய்த குழந்தைகள் இதன் நிறையில் கைவைத்து விட்டார்களாம். அதனால், பெண்டுலம் ஒரு நிமிடம் போல தாமதமாக நகர்கிறதாம். ;)


இன்றைய "சவால்" மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் 1950களில் அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற தொகா நிகழ்ச்சி பீபிள் ஆர் ஃபன்னி(People are Funny). அந்த நிகழ்ச்சியின் பகுதியாக, குகையைச் சேர்ந்த கீழுள்ள பகுதிக்குள் தம்பதியராக ஐந்து நாட்கள் போல் தங்கியிருக்க வேண்டும்.



இடம் மொத்தமே இவ்வளவு தான். ஆனால், அங்கேயும் தங்கி இருந்து ஒரு ஜோடி பரிசு பெற்று பஹாமாஸுக்கு ஒரு மாதச் சுற்றுலா சென்று வந்தார்களாம்!


என்னத்தச் சொல்ல, மக்கள் உண்மையாகவே கோமாளிகள் தாம்!






தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும் இந்தக் குகைப்பாறைகளில், ஓன்க்ஸ்(Onyx) என்னும் புதுவிதமான பாறைகள் உருவாகின்றன. அழகானவை இந்த ஓன்க்ஸ்.



ஓன்க்ஸின் இன்னுமொரு காட்சி



ஓன்க்ஸ் இன்னும் அழகாக


இந்தப் பாறைகளின் மேல் விதவிதமாக, வெவ்வேறு நிறங்களில் வெளிச்சமடித்து பின்னணியில் பாடல் ஒன்றையும் ஓட விட்டு விடுகிறார்கள். பாடல் இசைக்கு ஏற்ப வெளிச்சமும் பாறைகளின் மீது விளையாடுகிறது. அழகான காட்சியாக இருக்கிறது.. ஏதோ நடனம் போல..




வைன் டேபிள் என்கிறார்கள் கீழே உள்ள குதிரையை


மூன்று கால்களால் நிற்கும் இந்தக் குதிரையும் நீருக்கடியில் உருவான ஓன்க்ஸ் பாறைகளால் ஆனது. திராட்சைக் கொத்துகள் போல் இருக்கும் இதன் உடலமைப்பைப் பார்த்துத் தான் இது 'வைன்' டேபிள் என்று அழைக்கப்படுகிறது.



உலகிலேயே மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே இருக்கும் இந்த வைன் டேபிள் உருவாக்கம், இந்தக் குகைகளில் மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்து மக்களுக்குப் பார்ப்பதற்குக் கிடைக்கிறது.


அழகான இந்தக் குகைக்கு மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இரண்டு நிலைகள் மட்டுமே நாம் பார்க்கக் கிடைக்கிறது. மற்றவை இன்னும் தண்ணீருக்கடியில் இருக்கின்றன போலும். குகையைச் சுற்றிப் பார்க்க இருபதிருபது பேராக அனுப்புகிறார்கள். வழிகாட்டிகளின் துணையில்லாமல் உள்ளே போகவே அனுமதிப்பதில்லை. வழிகாட்டி, சுற்றுலா எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து $20 செலவு என்று நினைவு.

அமெரிக்காவின் எல்லா சுற்றுலா இடங்கள் போலவும் இங்கும் உள்ளே நுழையுமுன் நம்மை ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்கிறார்கள். திரும்பி வரும் போது அந்தப் படத்தை நினைவுக்காக நாமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றாலும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். (ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் :) )

இந்தக் குகையைப் பார்த்து முடித்து வந்த போது எனக்கு நம் விசாகப் பட்டினத்துக்கருகில் இருக்கும் போராக் குகைகள் நினைவுக்கு வந்தது. கிட்டத் தட்ட இதே போல், மூன்று நிலைகள் அடங்கிய, மற்றும் பல்வேறு விதமான பாறைகளுடன், அமெரிக்கக் குகையை விட இன்னும் அதிசயமான வரலாற்றுடன் இருக்கும் நமது போரா குகைகளையும் இதே போல் விளக்கும் சிற்றுலாக்கள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கும் வருமானமாயிற்று.

ஏன்??? (மீள்பதிவு)

["நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவு கூட போடலைன்னா எப்படி?" என்றார் நண்பர் ஒருவர். இதுவரை பதிப்பித்த கதைகளிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த கதை இது. ஆகவே இங்கும் ஒரு மீள்பதிவு. ]

ன்று தான் கவனித்தேன். புதிதாக இருந்தது. வழக்கமாய் இரவானால் பக்கத்து வீட்டில் அலைந்து கொண்டிருக்கும் பூனை இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தது.

இரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.

"அப்பா! அந்த பூனை குட்டி போட்டிருக்கே"

"நிஜமாவா? உனக்கு எப்படித் தெரியும்?" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.

"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்பிட்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா?"

"நம்ம வீட்டு கார் ஷெட்லயா?" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...

"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.

"அதுலயா படுத்துகிட்டிருக்கு?"

" ஆமாம்... ஏங்க?"

"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்".

"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே.." இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.

"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும்? கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா? மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க" விட்டால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.

"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா? நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்??!!!" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...


"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே.."


***********



சாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி?!. பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.

தாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.

'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.

பெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.

நான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.

"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா" என்றேன் சுதாவைப் பார்த்து.

"அது ரொம்ப இன்டெல்லிஜண்ட் பூனைப்பா.. என்னை மாதிரி".. என்றான் வினு.
"அது சரி".

"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.

"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, "அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது.."

"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... " கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.

"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே" என்றேன் நான்.

"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா? "

"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ.." - சசிகலா.

"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்"

"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்."

ராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.



***********



றுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.

சசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். "வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.

புதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.

ஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.

இரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவிலும் கூட பங்கு கேட்கிறது.

ஒரு மாதமாக, வார இறுதியில் "வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.



***********



ன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.

"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே?" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.

"அப்பா, மனு ... மனு... " அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.

வாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.

கார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.

"என்னாச்சு சுதா? மனு எங்கே?"

நான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:

கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளங்கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.

இயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.

சுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.

கடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.

கேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்?!!...

சசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து எல்லாருக்கும் பால் கொண்டு கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..

"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே"...

"வெளீல ஏம்பா போச்சு?!!! நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா..." சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

சமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.

"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற?"

"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது?!!! மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு?"

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

தலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.

வினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.

"அப்பா!, நான் ஒண்ணு கேட்கட்டா?"

"என்னடா வினு?" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.

"நம்ம வீட்டுப் பூனையை அந்த நாய் கடிச்சிடிச்சி. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். "

என்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.

"நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன்பா மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்றாங்க?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.

"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா"!! என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.

Tuesday, November 28, 2006

பெண் ஏன் அடிமையானாள்?

போனவாரம் படித்து முடித்த புத்தகம் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?". பெரியார் எழுத்துக்கள் படித்ததில்லை. இந்தக்கால எழுத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் கடினமான உரைநடையாக இருக்கிறது. "பார்த்தோமேயானால்" போன்ற சொற்களால் நீள நீளமாகும் வாக்கியங்கள்."நான்" என்பதை ஒழித்து "நாம்" என்று அவர் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. சரளமாக பயன்படும் சம்ஸ்கிருத சொற்களைப் பார்க்கையில் மணிப்பிரவாள நடையைத் தாண்டி, நாம் இன்றைக்கு எத்தனை தூரம் தனித்தமிழுக்கு அல்லது, தங்கிலீஸுக்கு வந்துவிட்டோம் என்பது கொஞ்சம் ஆறுதலாக(?!) இருந்தது.




இப்போது புத்தகத்தைப் பற்றி:

விடுதலை ஆப்செட் ப்ரிண்டர்ஸ் வெளியீடான இந்தப் புத்தகம், முதன்முதலில் எழுதப்பட்டது 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில். அறுபது ஆண்டுகள் கழிந்து, சுதந்திர இந்தியாவில் கூட புத்தகம் பேசும் பிரச்சனைகள் இன்றும் அதே உயிர்ப்புடன் மாறாமல் இருப்பது தான் வேதனை.

கற்பு என்ற அத்தியாயத்துடன் தொடங்குகிறது நூல். கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவாக இல்லாமல் வெறும் பெண்ணுடைமையாக்கப் பட்ட விதத்தின் சுலபமான விளக்கம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தெய்வத் திருமறை என்றும் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும் உலகப் பொதுமறையாகவும் போற்றப்படும் திருக்குறளும் இந்த விசயத்தில் சறுக்குவதைப் படிக்கும் போது, ஆண்டாண்டு காலமாக மக்கள் மனதில் ஊட்டப்பட்டு வந்த பெண்ணடிமைச் சிந்தனைகளைத் தாண்டி இந்த ராமசாமிப் பெரியாரால் மட்டும் எப்படி வித்தியாசமாக யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் எழுந்தது. முதல் அத்தியாயத்தில் சும்மா கோடிக் காட்டும் பெரியார், அடுத்தடுத்த அத்தியாயங்களில், வள்ளுவரைக் கிட்டத்தட்ட துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார். வள்ளுவர் இன்றைக்கு இருந்து இதைப் படித்தால், உலகப் பொதுமறையிலும் மூன்றில் ஒரு பாகத்தை வாசுகி அம்மையாரை எழுதச் சொல்லி இருப்பார் என்பது திண்ணம்.



வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

- பெரியார்




கற்பின் இலக்கணத்தைக் காலிசெய்தபின்னர், காதலையும் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயமாக்கிவிடுகிறார். இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் பெரியாரின் இந்த அத்தியாயத்திலிருந்து தான் கருத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்குமளவு, நடைமுறையில் காதல் எப்படி ஒரே ஆணுக்கும் ஒரே பெண்ணுக்கும் இடையில் ஏற்படுவதில்லை என்ற விளக்கத்தை மறுக்க ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் 'கற்பு பெண்ணடிமை அடையாளம், காதல் வெறும் ஆசை, என்றானால், கல்யாணத்தை மட்டும் எதற்குப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?' என்று பெரியார் கேட்பது பதிலில்லாத கேள்வியாகிவிடுகிறது. பிடிக்காத திருமண பந்தத்தை உதறிவிட்டு வெளியேற வேண்டிய அவசியத்தை இருபாலருக்கும் பொதுவாகவே வைக்கிறார் பெரியார். இன்றைக்காவது திருமணபந்தத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் பெண்களை "வாழாவெட்டி", போன்ற சொற்களால் காயப்படுத்துவதைச் சமூகம் நிறுத்தியிருக்கிறது. கௌதம புத்தர், மரணத்துக்குச் சொன்னது போல் குறைந்த பட்சம் குடும்பத்தில் ஒரு விவாகரத்தாவது இல்லாத வீடுகள் இன்னும் சில நாட்களில் நிச்சயம் அரிதாகிவிடும்.

விவாகரத்தை ஓரளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டுவிட்ட இன்றைய சமுதாயம் கூட மறுமணத்தை முழுமனதுடன் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. முக்கியமாக பெண்கள் மறுமணம் செய்வதை - அது விதவா விவாகமானாலும் கூட. எங்கேயோ அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை 'அவள் விகடன்' முதலான பத்திரிக்கைகள் பேட்டி கண்டு பிரசுரித்து பாராட்ட வேண்டிய அளவில் தான் இன்றைக்கு மறுமணம் பார்க்கப்படுகிறது. அது போன்ற பேட்டிகளிலும் கூட அந்தப் பெண் நிச்சயமாக "இவர் ரொம்ப நல்லவர்.. பெரிய மனசு இவருக்கு. என்னையும் குழந்தையையும் ரொம்ப சந்தோஷமா வச்சிக்கிறார்" என்ற சொற்களைச் சொல்லியிருப்பார், அல்லது, சொல்லாவிட்டாலும் எழுதி இருப்பார்கள். கல்யாணம் பண்றதே சந்தோஷமா வச்சிக்கிறதுக்குத் தானே, இதைத் தனியாகச் சொல்லும்போதே, சமூகம் அது போல் நடக்காமலும் போகலாம் என்ற பயத்தை அந்தப் பெண்ணின் மனதில் நன்றாகவே விதைத்திருக்கிறது என்று தானே பொருள்?

சமுதாயத்தைச் சீரழிப்பதில் இன்றைய பெண்கள் பெயர் தாங்கிய சீரியல்கள் அடுத்த குற்றவாளிகள். ஊரெல்லாம் சுத்தி, வியாபாரம் செய்யும் அபி, மறுமணம் செய்யாமலேயே கஷ்டப்படுவாளாம், அவள் முன்னாள் கணவன் பாஸ்கர் சுலபமாகத் திருமணம் செய்து கொண்டு விடுவானாம்(கோலங்கள்)!

விதவைகள் எண்ணிக்கை இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில் குறைந்திருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் குறைந்துவிட்டாலும் இருக்கிற விதவைகளின் நிலை மட்டும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இன்றும் பெரிதும் மாறாமல் இருந்திருக்கிறது, என்பதை திருவின் இந்தக் கட்டுரையிலும் காணலாம்.

இன்றைய நிலையில் பெண்களின் சொத்துரிமை ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது, இந்த விஷயத்தில் கொடுமைக்கார மாமியார்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாக வேண்டும். அப்படியும் சில படிப்பறிவில்லாத பெண்களை ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்ட பெண்களும், சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாறுவது மற்றொரு விதம். இவை எல்லாம் தவிர பல்வேறு சட்டங்களின் மூலம் பெண்கள் பெற்றோர் சொத்தில் உரிமை பெறுவது இன்றைக்கு நடக்கக்கூடியதாகவே இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அமலுக்கு வந்தக் கர்ப்பத்தடை பற்றியும் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே பேசி இருக்கிறார் பெரியார். "நான் உழைக்கிறதெல்லாம் இந்தக் குழந்தைக்காகத் தான்", "இந்தப் புள்ளைங்க இருக்குதேன்னு தான் எல்லா அவமானத்தையும் பொறுத்துப் போறேன்" என்பன போன்ற சீரியல், சினிமா டயலாக்குகளை எல்லாம் தூள் தூளாக்கி, "அவமானத்தை உண்டு பண்ணும் பிள்ளைகளை எதுக்குப் பெத்துக்கிறீங்க?" என்று ஒரே போடாகப் போடுகிறார். குழந்தைகள் என்றிருந்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தானே உருவாகிறது, அதெல்லாம் எதுக்கு? என்று அவர் கேட்கும் போது, சும்மாவேனும் சண்டை போட சாக்குதேடி குழந்தைகளின் மீது சுமத்திக் கொள்ளும் கணவன் மனைவிக்கு நல்ல இடி தான்.

இறுதியாக, இந்தப் புத்தகத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த அத்தியாமுமான விபச்சாரம் பற்றிப் பேச வரும்போது, தமிழ்ழும் ஒரு ஆணாதிக்க மொழி என்பதை நம்ப வேண்டியதாகத் தான் இருக்கிறது. விபச்சாரி, வாழாவெட்டி, விதவை என்று எந்தப் பையனைப் பார்த்துச் சொல்கிறோம்? எல்லாம் பெண்பாற்சொற்கள் மட்டும் தானே. இன்றைக்குக் 'கண்ணியத்துக்கும்' 'மரியாதைக்கும்' கட்டுப்பட்டு மனதால் மட்டும் விபச்சாரம் செய்யும் ஆண் விபச்சாரிகள் இல்லையா என்ன? குடித்துவிட்டு ரோட்டில் மனைவியைப் போட்டு அடித்துக் கொண்டிருந்த ஒரு புருஷன், தன் குற்றங்களை முன்வைத்ததற்காக, "ஏண்டீ தே..." என்று திட்டியதைப் பார்த்தபின், ஆண்களின் மிகக் கேவலமான ஆயுதமாக இன்றும் அந்தச் சொல் இருப்பது அழிக்க முடியாத உண்மையாக இருக்கிறது! இன்று தொழிற்நுட்ப வல்லுனர்களான, இணையத்தில் திட்டும் படித்தவர்கள் கூட, திட்டு வாங்குபவனின் தாயாரைத் தானே இந்த வார்த்தைகள் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்பாவையோ அல்லது எதிரியையோ நேரடியாக 'விபச்சாரன்' என்று திட்டவேண்டியது தானே!

'எத்தனை பெரியார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது' என்ற சொற்கள் உண்மைதான் என்று இந்தப் புத்தகத்திலேயே புரிந்துவிட்டது. இருந்தாலும் மிகவும் கட்டுப்பெட்டியான சமூகத்தில் தன் தங்கை மகளான ஒரு இளம் விதவைக்குத் திருமணம் செய்து வைத்து வெறும் வாய்ச்சொல் வீரர் ஆகாமல் செயலிலும் காட்டிய பெரியாரின் சுயசரிதையைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்துவிட்டது இந்தப் புத்தகம். பெண்விடுதலை பற்றி யாருமே யோசிக்காத, யோசிக்கவும் தயங்கிய காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கும் எண்ணம் ஒருவனுக்கு உண்டானதென்றால், அந்த மனிதரின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும்!

லிப்ட்..(சிறுகதை)

சென்னையின் இதயப் பகுதியில் வேலை என்றதும் சாருவுக்கு முதலில் நிம்மதி தான் ஏற்பட்டது. இனிமேல் அதிகாலை எழுந்து விடிந்தும் விடியாத காலையில் அவசர அவசரமாக குளித்து, சமைத்து, டப்பாவில் போட்டுக் கொண்டு கம்பனி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். ஆற அமர சமைத்து சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கும் ஊட்டிவிட்டு மெல்லவே அலுவலகம் போகலாம். அத்துடன் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு சேரவே இரண்டு மணிநேர அலுவலகப் பேருந்து பயணம் என்றிருப்பது குறைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாலும் சீக்கிரமே வீடு வந்துவிடலாம். என்றெல்லாம் பெரிய அளவில் விரிந்தது அவளின் கற்பனைக் கோட்டை.

வேலைக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாளே இதெல்லாம் எத்தனை முட்டாள்தனம் என்பது புரிந்து போயிற்று.

"சாரு மேடம், உங்க வீடு சிட்டிக்குள்ள தானே இருக்கு, நீங்க தான் எப்போ கிளம்பினாலும் அரை மணியில் போய்ச் சேர்ந்துடுவீங்க.. கொஞ்சம் இன்னிக்கு க்ளயண்ட் கால் நீங்க எடுத்துடுங்களேன்.. அடுத்த வாரம் நான் வேற ஏற்பாடு செய்யுறேன்" இது புதன் கிழமை.

"சாரு, பிராஜக்ட் லீடர் வாக்கு கொடுத்துட்டார் போலிருக்கு. கொஞ்சம் இருந்து முடிச்சு கொடுத்துடுங்களேன்.. ராணி, சங்கர் எல்லாம் புதுப் பசங்க பாருங்க.. நம்ம தான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செய்யணும்" என்று மேனஜர் கேட்டதால் வியாழனும் ஒன்பது மணியாகிவிட்டது கிளம்ப.

வெள்ளியாவது நேரத்தோடு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்ததிலும் இடியைப் போட்டான், முதல் நாள் எழுதிய ப்ரோக்ராமை சோதனை செய்யும் ராகவ். அவன் திடீரென்று எடுத்துப் போட்ட நாலைந்து பிரச்சனைகளைச் சரி செய்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்ப இன்று பத்து மணியாகிவிட்டது.

சாரு தன் கைனடிக் ஹோண்டாவின் ஆக்ஸிலரேட்டரை அதிக பட்ச அழுத்தத்துடன் முறுக்கினாள். ராகவின் மீதிருந்த கோபம் பூராவும் காட்டி வண்டியை உருட்டியபோது சாலையில் ஆள் நடமாட்டமே இருக்கவில்லை. தினசரி அவளைப் பல நிமிடங்கள் காக்கவைக்கும் கூட்டமான போக்குவரத்து விளக்குகள் பலவும் வெறும் எச்சரிக்கை விளக்காக எரிந்து கொண்டிருக்க, வசதியாக வண்டியை விட்டாள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி இரண்டு நிமிடம் கூட தாண்டியிருக்காது, அந்த இருண்ட வீதியின் முனையில் ஒரு உருவம் தனியே நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இருட்டில் அதன் நிழலில் தாடி வைத்திருந்த உருவமாகப்பட்டது. அத்தனை நேராக வாரப்படாத தலை, ஜீன்ஸ், கசங்கிய சர்ட். 'இப்போதெல்லாம் தெருவோர பிச்சைக்காரன் கூட ஜீன்ஸ் போடுகிறான்' என்று தோன்றிய எண்ணத்தைச் சிரித்துக் கொண்டே ரசித்தவாறு அவனைப் பார்த்தபோது, லிப்ட் கேட்க 'கை போட்டது' அந்த உருவம்.

'இருட்டில், தனியாக வரும் பெண்ணிடம் லிப்ட் கேட்க எத்தனை தைரியம் இருக்க வேண்டும் இவனுக்கு' என்று தோன்றியது சாருவுக்கு. அத்துடன் வண்டி நிறுத்துமளவுக்கு அந்தத் தெரு அத்தனை வெளிச்சமானதில்லை. லிப்ட் கொடுக்கும் அளவுக்கு இவனும் அத்தனை டீசண்டானவனாகத் தோன்றவில்லை.

வெள்ளி இரவில், இருட்டில் வீணாக வம்பில் மாட்டிக் கொள்வது நியாயமில்லை என்று தோன்றவே, தலையை மையமாக அசைத்து முடியாது என்று மறுத்துவிட்டு, வண்டியை இன்னும் வேகமாக ஓட்டினாள் சாரு.

அந்த கைக்குச் சொந்தமான மனிதன், மறுப்பை லட்சியம் செய்யாததோடு, தெருவின் குறுக்கேயே வந்துவிட்டான் சாருவை மறிப்பது போல். சாரு கடைசி நொடியில் கட் கொடுத்து அந்த மனிதனைத் தாண்டி வண்டியை ஓட்ட வேண்டியதாகிவிட்டது.

அருகில் பார்க்க நேர்ந்த போது, அந்த தாடிக்காரனின் முகத்தில் சிறு வெளிச்சம் படர்ந்தது. ஏதோ சொல்ல வருபவன் போல் தோன்றியது. 'என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்.. என்ன சொல்லப் போகிறான், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏற்றிக் கொள்ளாததற்கு வருத்தமோ, கோபமோ தெரிவிக்கலாம். நியாயம் கூட சொல்லலாம், அவனை ஏன் ஏற்றிக் கொள்ளவேண்டும் என்று.. அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும்.. திவ்யாக்குட்டி எப்படி இருக்கிறாளோ, அவளைப் பற்றிய யோசனைகள் தான் இப்போது தேவை.. '

சாரு பின்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தபோது, அவளுக்குப் பின்னாலேயே ஒரு வண்டி வருவதும், அதில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதும், நமது பழைய தாடிக்கார நண்பன் அந்த இளைஞனிடமும் கை நீட்டி லிப்ட் கேட்பதும் தெரிந்தது.

காலேஜ் காலத்திலிருந்தே இந்தக் 'கை போடுபவர்களின்' மீது சாருவுக்குத் தனி வெறுப்பு இருப்பதுண்டு. அதிலும் இவனைப் போல் யார் வந்தாலும் இருக்கட்டும் என்று லிப்ட் கேட்பவர்கள் தொல்லை தான். சாருவின் கல்லூரியில் அவளுடன் படித்த பையன் ஒருவன், பஸ்பாஸ் வாங்கவே மாட்டான். இப்படி வழி தோறும் லிப்ட் கேட்டே தினசரி காலேஜுக்கு வந்துவிடுவான். திரும்பிச் செல்வதற்கும் இதே மாதிரி அடுத்தவன் வண்டிதான். 'இதுல என்ன இருக்கு சாரு, ஜஸ்ட் ஒரு அரை அவர் முந்தி கிளம்பணும்,.. அவ்வளவு தான்' என்று தெனாவட்டாக சொல்லுவான். சாருவும் அவளை ஒத்த மற்ற பெண்களும் பேருந்தில் நிற்க முடியாமல் நின்று கொண்டு வரும்போது இவனுக்கு மட்டும் இத்தனை வசதியான சவாரியா என்று சாரு பொறாமைப்படுவது கூட உண்டு.

பின்னால் வந்த இளைஞன் தாடிக்காரனுக்காக வண்டியை நிறுத்தினான் போலும், சாருவின் பின்கண்ணாடியில் தெரிந்தது அவளைக் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. தாடி இளைஞன் வண்டியில் ஏறுவதற்கு முன் சாருவைக் கை காட்டி ஏதோ சொன்னான். வண்டிக்கார இளைஞனும் சாருவைப் பார்த்தபடி தலையசைப்பதையும் சாரு நொடிப்பொழுதில் கண்டு கொண்டாள்..

'என்ன சொல்லி இருப்பான்? அந்தப் பொண்ணு நிற்கவே இல்லை சார்' என்றா! அதை ஏன் அவனிடம் சொல்ல வேண்டும்?

சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது பின்னால் வந்த வண்டியானது தன்னை நோக்கித் தான் வருகிறது என்பதைக் கண்டுகொண்டாள்.

இயல்பான பாதுகாப்பு உணர்ச்சியில் வண்டியை இன்னும் விரைவாக்கினாள். சாருவின் வண்டி சீறிப் பறந்தது. பின்னால் அந்த இளைஞர்களும் தொடர்வது தெரிந்தது. ஒருவேளை இப்படி இருக்குமோ! அந்த புது பைக்காரனும், காத்திருந்தவனும் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருப்பார்களோ! தாடிக்காரன் இவளை நிறுத்தி, லிப்ட் கேட்டு, அப்படி ஏதாவது செய்யும்போது, இந்த பைக் காரன் பின்னால் வந்து அவளைப் பயமுறுத்தி, கையில் கழுத்தில் உள்ளதைப் பறிக்கத்தான் இந்தத் திட்டமோ? இப்போது அவள் தப்பிவிட்டதில் பின் தொடர்ந்து வந்து பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்களோ?

யோசித்துக் கொண்டே நூறடி ரோடுக்கு வந்துவிட்ட சாருவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இங்கே கொஞ்சம் மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால், அட, இங்கு சிக்னல்களும் வேலை செய்கிறதே! சோதனையாக, வெள்ளிக்கிழமை பத்துமணிக்கு அந்த ரோடிலும் அத்தனை கூட்டம் இல்லை. ஆனால், சிக்னல்கள் மட்டும் வேலை செய்தன.

அடடா.. சிக்னல் விழப் போகிறது, அந்த யம காதகன்களோ விடாமல் இந்த ரோடு வரை துரத்தி வருகிறார்களே! அவர்கள் கையில் சிக்காமல் தப்பிவிட முடியுமா?

முதல் சிக்னலைக் கடைசி நிமிடத்தில் சிகப்பு விழுந்துவிட்ட போதும் பரவாயில்லை என்று தாண்டி வந்தாள் சாரு. பின்னால் வந்தவர்கள் இப்போது நின்று விடுவார்கள். நிம்மதியாக ஓட்டலாம் என்ற அவளது நினைப்பைக் கெடுப்பது போல் முன்னால் இருந்த சிக்னல் ஒன்று சுத்தமாக சிகப்பு காட்டி அவளை நிற்கச் சொன்னது.

பின் சிக்னல் பச்சை விளக்கு வரும் முன் தனக்கு வழி கிடைத்துவிட்டால் தப்பிவிடலாம். எங்கே.. நடக்கக் கூடிய கதையா என்று பார்க்கவேண்டும். சாரு சிக்னலையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபோது, பின் துரத்தி வந்த பைக் இன்னும் அருகில் வந்துவிட்டது. படுபாவி இளைஞர்கள், சிக்னல் டிராபிக் எல்லாம் மதிக்கும் வழக்கமே இல்லை போலும்! இவள் தான் இப்படி விதிகளை மதித்து ரொம்ப கஷ்டப் படுகிறாள்!

சாரு பார்த்த போது, அந்த பைக் அவளுக்கு மிக மிக அருகில் வந்தாயிற்று. நிச்சயம் வண்டியை நிறுத்தப் போகிறார்கள். "என்ன வேண்டும் இவன்களுக்கு! கேட்டுத் தான் பார்த்துவிடுவோமே. இதுவோ கொஞ்சம் பிரதான சாலை தான். விளக்குகள் வேறு இருக்கின்றன. இந்த இடத்தில் இல்லாவிட்டால், அடுத்து சாரு தனது வீடு இருக்கும் சந்துக்குள் திரும்பினால் அங்கே எல்லாம் இந்த வீணாய்ப் போன இளைஞர்கள் வர வேண்டாம்.. வீட்டைக் காட்டிக் கொடுப்பதில் சாருவுக்கு மனமே இல்லை.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள்.. வெள்ளிக் கிழமை. அவளே பணம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். பர்ஸிலும் அதிகம் இருக்காது.. போகட்டும்.. என்ன வேண்டும் என்று கேட்டே விடுவோம்.." சாரு யோசித்துக் கொண்டே இருக்கும் போது அந்த இளைஞர்கள் சாருவின் அருகில் வந்துவிட்டனர்.

நல்ல வேளையாக சிக்னலும் பச்சையாகவே சாரு வண்டியை முறுக்கினாள். இளைஞர்கள் இதைச் சற்றும் எதிர்பாராததால் கொஞ்சமே பின் தங்கினாலும் பின்னாலேயே வந்துவிட்டனர். கிட்டத் தட்ட சாருவை நெருங்கிவிட்ட அவர்கள் அவளைக் கொஞ்சம் தாண்டியும் சென்றபோது, பின்னால் இருந்தவன் சாருவைப் பார்த்துக் கத்தினான். "துப்பட்டாவை ஒழுங்கா பிடிச்சிகிட்டு ஓட்டும்மா! எப்படிப் பறக்குது பாரு! அதைச் சொல்லத் தான் உன்னைத் துரத்திகிட்டே வாரோம்!" என்றவன், "இப்போ வெரசா ஓட்டு சார்.. அதோ அந்த பெட்ரோல் பங்க் கீது பாரு, அங்க தான் நம்ம ஆட்டோ நிக்குது. " என்று சொல்லிக் கொண்டே சென்றது தேய்ந்து ஒலித்தது..

சாரு மட்டும் இன்னும் ஆச்சரியம் விலகாமல், பின்பக்கமாகப் பறந்து கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

அமெரிக்காவில் (நிஜ) அப்பாவி

[முன்குறிப்பு: தலைப்புக்கும் இந்தத் தொடரின் பதிவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது :) ]

முதன்முறையாக வெளிநாடு போவதற்கு முன் எனக்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் வந்த அறிவுரை பெரும்பாலும் அந்த ஊர் கறுப்பின மக்களைப் பற்றியதாகவே இருந்தது. "பூர்ணா, கறுப்பின மக்கள் இருந்தா, ஜாக்கிரதையா இருங்க. பணம் அதிகம் எடுத்துப் போகாதீங்க.. தனியா இரவில் ஆறு ஏழு மணிக்கு மேல் வெளியில் இருந்தால் கூட உங்ககிட்டிருந்து பணம், நகை எல்லாம் பிடுங்கிட வாய்ப்பிருக்கு!" என்று பெரிய அளவில் கிலியேற்படுத்திவிட்டுப் போனார்கள்.

இந்த விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மற்றொரு துணைப்பயம், வித்தியாசமானது. நானே கொஞ்சம் மாநிறம் தான். எங்கள் வீட்டிலேயே நான் தான் அதிக கறுப்பு (கறுப்புத் தங்கம் ;)), இதை வைத்து, எனக்கென்னவோ வெளிநாட்டுக்குப்போய் அங்கிருக்கும் வெள்ளையர்களுக்கிடையில் நம் நிறம் இன்னும் அதிக கறுப்பாகத் தெரிந்து, நம்மைப் பார்த்து எல்லாரும் பயந்துவிடப் போகிறார்களே என்று தான் முதலில் பயந்தேன். அப்படி ஏதாவது ஆனால், கஷ்டம் தான் என்று எங்கே போனாலும் பாஸ்போர்ட், எங்கள் நிறுவன அடையாள அட்டை என்று தூக்கிக் கொண்டே சுற்றுவது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.



நியூயார்க் விமான நிலையத்தில் போய் இறங்கிய போது என் கையில் பத்து டாலருக்குக் குறைவான சில்லறையே இல்லை. அதனால், அங்கே சாமான் தள்ளும் வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாமல், பெட்டி படுக்கைகளைக் கஷ்டப்பட்டு நானே தூக்கிக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் காட்டுவதற்கு முன்னால், கனம் தாங்காமல் ஒரு முறை கீழே விழுந்து, வடிவேலு மாதிரி "இல்ல, தரையெல்லாம் நல்லா சுத்தமா இருக்கான்னு பார்த்தேன்" என்று தடவிப் பார்த்துவிட்டு ஊருக்கு விமானம் ஏறினேன்.

செயின்ட் லூயிஸில் போய் இறங்கிய போது அந்த ஊர் நேரப்படி மணி ஏழரை. தூக்க முடியாமல் தூக்கி வந்த ஒரு பெட்டியை விமான நிலைய அதிகாரிகள் நியூயார்க்கில் தொலைத்துவிட, அதற்கான புகார்ப் பதிவு செய்வதில் ஒரு அரை மணி நேரம் போனது. தன்னந்தனியாக வெளிநாட்டுக்குக் கிளம்பியபோதும், புது ஊரில் எங்கள் அலுவலகத்தினர் யாருமே இல்லை என்ற போதிலும், விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதற்குக் கூட யாரும் வர மாட்டார்கள் என்று வீட்டில் கவலைப்பட்ட போதும் ஏற்படாத பயம் எட்டரை மணிக்கு என் ஹோட்டலுக்கு எப்படி போவது என்று யோசித்த அந்தக் கணம் தான் முதன் முதலில் எட்டிப் பார்த்தது.

வீட்டுக்குப் பேசினால், ஒருவேளை மனம் கொஞ்சம் லேசாகும் என்று நினைத்தேன். இந்தியாவில் என்ன நேரம் இருக்குமோ என்பது வேறு கொஞ்சம் யோசனையாக இருந்தது. 'சில்லரையாக ஒன்றரை டாலர் போடு' என்றது கட்டணத் தொலைபேசி. என்னிடம் சில்லரையே இல்லாமல் போக, சுற்றுமுற்றும் பார்த்தேன். 'உதவிக்கு வரலாமா?" என்று எழுதி வைத்திருந்த இடத்தை அணுகி சில்லரை கேட்பது என்று முடிவெடுத்தேன்.

அந்த உதவி மையத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். வெள்ளை நிறத்தில் ஒரு பெண். கொஞ்சம் கருப்பாக ஒரு ஆண். நமக்குத் தான் நல்லாவே 'வழி' காட்டி இருந்தார்களே. இருந்திருந்து விமான நிலையத்துக்குள்ளேயே கருப்பர்களிடம் மாட்டிக் கொள்வதா, என்று பயந்து, அந்தப் பெண்ணிடம் தான் சில்லரை கேட்டேன்.

அவளுக்கோ வேலை நேரம் முடிகிறது போலிருக்கிறது. அவள் அந்த இளைஞனிடம் என்னை ஒப்படைத்து விட்டு பையை மாட்டிக் கொண்டு எனக்கும் ஒரு 'பை' சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் வெளிக்காட்டிக் கொள்ளாத பயத்துடன் அவனைப் பார்த்து, "இந்த பத்து டாலருக்குச் சில்லரை கிடைக்குமா?" என்றேன். என்னதான் குரலில் தெரியாவிட்டாலும், என் மிகப் பெரிய குறை என் கண்கள். கோபம், எரிச்சல், சிரிப்பு, குறும்பு, என்று எல்லாமே காட்டிக் கொடுத்துவிடும் என் கண்களில் அவருக்குப் பயம் தெரிந்திருக்க வேண்டும்.

"எங்கிருந்து வரீங்க?" என்று பதில் கேள்வி கேட்டார்.

"இந்தியாவிலிருந்து வரேன். "

"அப்பாடியோ! அத்தனை தூரத்திலிருந்தா வரீங்க? முதன் முறையா எங்க ஊருக்கு வரீங்களா?"

"ஆமாம். உங்க நாட்டுக்கே முதன்முறையா வரேன்"

"எங்க போகணும் உங்களுக்கு?"

நான் என் விலாசத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தேன்.

"இது ரொம்ம்ம்ப தூரமாச்சே! பக்கத்து ஊரு. எப்படிப் போகப் போறீங்க?"

"இதோ, இந்த நம்பரில் உள்ள டாக்ஸிக்காரங்களைக் கூப்பிட்டு வண்டி வரவழைச்சிக்கச் சொல்லி இருக்காங்க." எண்ணைக் காட்டினேன்.

"ஓ.."

"அதான், சில்லரை வேணும்.. "

"என்கிட்ட சில்லரை இல்லையே.. கொஞ்சம் இங்க உட்காருங்க. நான் போய் யார்கிட்டேர்ந்தாவது சில்லரை வாங்கி வரேன்"

என்னிடமிருந்து பத்து டாலரை வாங்கிக் கொண்டு, எங்கோ போனார் அவர். மிக நீளமான பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பின், சில்லரையுடன் வந்தார். "அதோ, போன் இருக்குப் பாருங்க, அங்க போய் போன் பண்ணிப்பாருங்க.."

நான் முதலில் அம்மாவுக்குச் செய்தேன். என் நிலை, நேரம் மற்றும் இன்னபிறவற்றைச் சொல்லி அவர்களையும் கலவரப்படுத்தாமல், சகஜமாகப் பேசிவிட்டு, அடுத்து டாக்ஸி எண்ணுக்குச் செய்தேன். அவர்கள் எடுக்கவே இல்லை. தொலைபேசி அழைப்பு போய்க் கொண்டே இருந்து கடைசியாகக் குரற்பதிவாகிப் போனது. இரண்டாவது எண்ணும் அதே மாதிரி பயனில்லாமல் போக, அத்துடன் என் தைரியம் மொத்தமும் காணாமல் போனது.

அந்த ஊர்த்தொடர்பு என்று என்னிடம் இருந்தது அந்த எண் மட்டும் தான். இவர்களும் எடுக்கவில்லை என்றால், இந்த விமான நிலையத்திலேயே தான் நான் இருந்தாக வேண்டும். அடுத்து என்ன செய்யலாம் என்று குழப்பமாக யோசித்துக் கொண்டே தொலைபேசியைப் பிடித்துக் கொண்டு நான் நிற்கவும் அந்த உதவி மைய இளைஞன் "என்னடா, ரொம்ப நேரமாக இவளைக் காணோமே" என்று தேடி வரவும் சரியாக இருந்தது.

"என்னாச்சு? நம்பர் கிடைச்சிதா?"

"இல்லை." என்றேன் சுருதி இறங்கிய குரலில்

"எனக்குத் தெரிஞ்ச ஒரு டிரைவர் இருக்கார். நான் உங்க அட்ரஸை அவர் கிட்ட சொல்லி இங்கிருந்து போக எத்தனை பணம் ஆகும்னு கேட்டேன். அவர் கிட்டத் தட்ட நாற்பது டாலர் ஆகும்னு சொல்றார். அவரையே வரச் சொல்லட்டுமா?"

எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை. நம்ம ஊர் மாதிரி உதவி செய்ய யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை என்பது மாதிரி இவர் தானாக வந்து வழி சொல்லி, வண்டி ஏற்பாடு செய்ததே எனக்குப் பெரிய நிம்மதியாகத் தோன்றியது. "ம்ம்.. சரி, " என்று மையமாகத் தலையாட்டினேன்..

கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. கிட்டத் தட்ட ஒன்பது மணிக்கு இப்படி ஒரு ஊர் பேர் தெரியாதவர் ஏற்பாடு செய்யும் ஓட்டுநருடன் போவது சரியா என்று முதல் கவலை. ஆனால், வேறு என்ன தான் வழி இருக்கிறது என்பது அடுத்த கேள்வி. 'சரி, வரட்டும் பார்க்கலாம்' என்று நினைத்தபடி, அந்த நண்பர் காட்டிய வழியில் போய் கார் பார்க்கிங்குக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து, அதே நண்பர் மாடி யேறி கார் பார்க்கிங் நோக்கி வந்தார். "இன்னும் வரலையா, வண்டி?" என்று கேட்டார்

நான் "தெரியலை!" என்றேன்.

நான் இன்னும் படபடப்பாகவே இருப்பதைப் பார்த்து கொஞ்ச நேரம் அருகில் உட்கார்ந்து என்னுடைய கல்வி, நான் எத்தனை மாதம் தங்கப் போகிறேன், சுற்று வட்டாரத்தில் என்னென்ன பார்க்க இருக்கிறது என்று கொஞ்ச நேரம் பேசி என்னை சகஜமாக்கிக் கொண்டிருந்தார்.ஒரு வழியாக ஒன்பதரைக்கு வண்டி வந்தது. ஓட்டுநர் இறங்கி வந்து என் நண்பருடன் கைகுலுக்கினார், நண்பரின் அறிமுகத்துக்குப் பின் என்னிடமும். என் கலவரம் அதிகமானது. இந்த ஓட்டுநரும், கறுப்பு நிறத்தவராய் இருந்தார். அவர்கள் பேசிய ஆங்கிலமும் ஏதோ கலப்பு மொழியாக புரியாததாகவே இருந்தது.

''இவருடன் இன்னும் அரை மணி நேரப் பயணமா! ஐயோ' என்று பயந்தபடியே வேறு வழியின்றி போய் ஏறிக் கொண்டேன். ஆனால், நான் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. வழக்கமாக நள்ளிரவு டாக்ஸிக்காரர்களிடம் செய்வது போல் இந்த ஓட்டுநரிடமும் பேசிக் கொண்டே வரத் தொடங்கினேன். வழியெங்கும் காணவேண்டிய இடங்கள் என்று அவர் நினைத்ததை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த மனிதர் வெளியூரில் இருந்து வந்து இந்த ஊரில் வேலை செய்பவராம். பத்தரை மணிக்கு என்னுடைய ஹோட்டல் வாசலில் பத்திரமாக என்னைக் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு, பேசியபடி நாற்பது டாலர் மட்டுமே வாங்கிக் கொண்டு (அதன்பின் வெளிச்சத்தில் ஒரு முறை விமான நிலையத்துக்கு நான் போனபோது, நாற்பதுக்கு மேலேயே இருந்தது.) "வணக்கம்" சொல்லி விடைபெற்றுச் சென்றதுடன், கறுப்பினத்தவரைப் பற்றி ஊரிலிருந்து அள்ளிக் கொண்டு வந்திருந்த கதைகள் எல்லாமே காற்றோடு கலந்து போனது.

சக மனிதரை, மனிதராக பார்க்கும் போது நிறம், இனம், மதம், நாடு என்ற எல்லா எல்லைகளும் தவிடு பொடியாகிப் போகிறது. முதன் முறையாகச் சந்திக்கும் போதே அத்தனை நட்பும், அன்பும் பாராட்ட முடிந்தவர்கள் நிறைந்த நாடும் கூட கொஞ்சம் பிடித்துத் தான் போனது.

Monday, November 27, 2006

ப்ளாக்கர் பீட்டா?

இன்றைக்குப் ப்ளாக்கரில் பதிவிடும் பலர் மனதிலும் இருக்கும் முக்கியமான கேள்வி, பீட்டாவுக்கு மாறலாமா கூடாதா என்பது தான். பீட்டா ஒரு பூதம் மாதிரி பயமுறுத்தவும் செய்கிறது, அதன் அழகான புதிய வார்ப்புருக்கள் "வா, வா" என்று மோகினியாக அழைக்கவும் அழைக்கிறது. பீட்டாவின் நன்மை தீமைகளைப் பட்டியலிடுவது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.

பீட்டாவா? அப்படீன்னா?

இன்னும் முழுமையாக உருவாக்கப்படாத மென்பொருளின் சோதனை வடிவத்தைத் தான் பீட்டா என்று அழைக்கிறோம். யாஹூ பீட்டா, கூகிள் குழும பீட்டா, ப்ளாக்கர் பீட்டா, எல்லாமே இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை தான்.

உருவாக்கமே முடியாத நிலையில் இது போன்ற மென்பொருள்களைப் பயனர்களுக்குத் தருவதில் என்ன பயனிருக்கப் போகிறது?

ஒவ்வொரு மென்பொருளாக்கத்துக்கும் பல நிலைகள் உள்ளன. முதலில், மென்பொருளுக்கான பயன்களுக்குத் தகுந்தாற்போல், அதை வடிவமைப்பது, அதன்பின், நிரலி எழுதுவது, கடைசியாக நிரலி வேண்டிய வகையில் செயல்படுகிறதா என்று அறிய அதனைச் சோதிப்பது. பிளாக்கர் போன்ற இலவச மென்பொருள்களைச் சோதிக்கும் பொழுது, அதன் இலவச பயனர்களையே இந்த வேலையைச் செய்ய உதவி கோருவது வழக்கம். இலவசமாக பிளக்கரைப் பயன்படுத்தும் நமக்குத் தானே, அதனை எந்தெந்த விதங்களில் எல்லாம் பயன்படுத்துகிறோம் என்று முழுமையாகத் தெரியும்?

உதாரணமாக, கூகிள் நிறுவனத்தில் வேலை செய்யும் சோதனைப் பொறியிலாளர்களில் எத்தனை பேர் யூனிக்கோடு முறையில் தமிழ் எழுதப் போகிறார்கள்? எத்தனை பேர் பிளாஷ் போன்ற மென்பொருளையோ, வீடியோ, ஆடியோ துண்டுகளையோ உள்நுழைக்க முயலப் போகிறார்கள்?

இவை எல்லாவற்றையும், இன்னும் அதிகமாகவும் நம் போன்ற பயனர்கள் இந்த மென்பொருளைச் சோதிக்க முடியும் என்பதால், கொஞ்சம் பயன்படுத்தக் கூடிய வடிவத்துக்கு வரும் போது இது போன்ற மென்பொருட்களுக்கு பீட்டா என்ற பாகத்தை உருவாக்கி அதனைச் சோதிப்பதில் நமது உதவியை நாடுகிறார்கள்.

பீட்டா - ப்ளாக்கரை விட எந்தெந்த வகையில் வசதியாக இருக்கிறது?
1. லேபிள்கள்
புதிய பீட்டா ப்ளாக்கரின் மிக முக்கியமான வித்தியாசம், அதன் லேபில்கள். கூகிள் மடல்கள் போலவே ஒவ்வொரு இடுகைக்கும் ஒரு வகைப்பெயர் கொடுத்து வகைப்படுத்தலாம். தமிழ்மணத்தின்/தேன்கூட்டின் வகைகளை விட, புதிது புதிதாக நமக்கு நாமே வகைப் பெயர்களை உருவாக்கிக் கொள்ளும் வசதியைக் கொடுக்கிறது இந்த லேபில்.
லேபிளை வைத்து இடுகைகளைத் தேடவும் செய்யலாம். வோர்ட்பிரஸ்ஸின் வகைகள் போலவே இந்த லேபில்கள் உதவுகின்றன.

2. வேகமான செயல்பாடு
புகைப்படங்கள், ஒளிப்படங்களின் வலையேற்றம் வழக்கமான பிளாக்கர் வலையேற்றத்தை விட மிக மிக வேகமாக உள்ளது. இப்போதைய பிளாக்கரின் புகைப்படங்கள் எக்ஸ்புளோரர் வழியாக வலையேற்றும்போது சிலசமயம் படமே வலையேறுவதில்லை. பீட்டாவில் இந்தப் பிரச்சனைகள் இப்போது இல்லை.

3. பதிவுகளின் வார்ப்புரு
வார்ப்புருவை மிக மிகச் சுலபமாக மாற்ற முடிகிறது. பழைய பதிவுகள், லேபில்கள், பதிவர் விவரங்கள், இன்னும் ஒவ்வொரு விஷயத்தையும் தனித் தனியாக எடுத்துப் பதிவில் சேர்த்துக் கொள்ளலாம். நிரலி முறை வார்ப்புருக்களாக இல்லாமல் நாமே நம் கையால் ஒவ்வொரு பெட்டியாக இழுத்து, எடுத்து ஆங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்.

4. தனிப்பட்ட பதிவுகள்.
பதிவுகள், இடுகைகள் என்பவையே ஒவ்வொருவருக்குமான டைரி என்ற அளவில் நடைமுறைக்கு வந்த விஷயங்கள் தாம். வீட்டுக்குள்ளேயே தத்தம் டைரிகளை எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கு வசதியாக தனிப்பக்கம் போட்டு எழுத வழிவகுக்கிறது பீட்டா பிளாக்கர். இந்தப் பக்கங்களைப் பிறர் பார்க்காமல் மறைத்துவைக்க முடியும். நமது நண்பர்கள் மட்டும் பார்க்குமாறு வசதி செய்யவும் முடியும். இவ்வாறு தனிக் குழும வேலைகளுக்கும் இந்த பதிவுகள் பயன்படும்

5. மற்ற பதிவர்களுக்கு நம் பதிவுப் பெட்டிகள்
நம் பதிவில் சின்னச் சின்னப் பெட்டிகள் உருவாக்கி மற்ற பதிவுகளில் தெரியுமாறு கொடுக்கலாம். இதன் மூலம், உங்கள் பதிவைப் பற்றிய சிறு விளம்பரமோ, பதிவரைச் சார்ந்த விவரங்களோ எதையாவது மற்ற பதிவுகளிலும் இடம்பெறுமாறு செய்யலாம்.

6. நிறம் மற்றும் எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரை இந்தப் பொதுவான எழுத்துருக்கள் எத்தனை தூரம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரியவில்லை. ஆனால், வார்ப்புருக்களில் ஆங்கில எழுத்துக்களுக்கான எழுத்துருக்களை நாமே பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். வார்ப்புருவில் நிரலிப் பயன்பாட்டால், நிறங்களுக்கு எண்களை மட்டுமே தரவேண்டிய கட்டாயத்தை நீக்கிவிட்டு, பார்க்கும் நிறத்தை நாமே தேர்ந்தெடுக்கும் வசதியையும் பீட்டா வழங்குகிறது.

7. சேமித்தவுடனே பார்க்கக் கூடிய மாற்றங்கள்
இதுவரை பதிவுகளிலோ, நிரலியிலோ மாற்றங்களைச் செய்துவிட்டுப் பார்க்கக் காத்திருப்பது போல் அல்லாமல், வார்ப்புருவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்து, சேமித்தாலே பதிவில் தெரியவைக்கிறது பீட்டா பிளாக்கர்.

8. ஒருமுகப் பயனர்/கடவுச்சொல்
பிளாக்கர், கூகிள் குழுமங்கள், கூகிள் ரீடர், கூகிள் பேஜ் கிரியேட்டர், என்று எல்லா கூகிள் சேவைகளுக்கும் ஒரே பயனர்/கடவுச்சொல் பயன்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன்மூலம் உங்களின் மின்மடல் முகவரியைக் கொண்டே எல்லாவித சேவைகளிலும் பதிந்து கொள்ளலாம்.

பீட்டா - சறுக்கும் இடங்கள்:
1. இப்போதைய ப்ளாக்கரிலிருந்து பதிவுகளைப் பீட்டாவுக்கு மாற்றும் பொழுது, மறுமொழிகளில் உள்ள பயனர் பெயர்கள் தமிழில் இருந்தால் அவை பூச்சிகளாகத் தெரிகின்றன.

2. இட்லிவடை போல் புதுப் பக்கத்தில் பின்னூட்டப்பெட்டி திறக்கும் பதிவுகளில் தமிழில் எழுதுவது மிகமிக மெதுவாக இருக்கிறது. கிவியன் போல் அதே பக்கத்தில் திறக்கும் பதிவுகளில் கூட பின்னூட்டத்தைப் பார்ப்பதே ரகசியகாப்பு ஒப்பந்தத்தை முறிப்பது என்பது போல் கேள்வி கேட்டுக் கொடுமைப்படுத்துகிறது வலையுலாவி.

3. பீட்டாவின் நிரலி புரிந்து கொள்வதற்குச் சுலபமாக இல்லாத காரணத்தால் அதில் மாற்றம் செய்யவேண்டுமானால், கொஞ்சம் நேரம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.

4. இது தவிர இன்னும் அதிக பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்பட்டு அவை களையப்படுகின்றன. இந்தத் தளத்தில் பீட்டாவின் தற்போதைய பிரச்சனைகள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன - தீர்வு கண்டாயிற்றா இல்லையா என்ற விளக்கங்களுடன்.

5. மின்மடல் முகவரி தான் பயனர் பெயர் என்று தெரியும்போது, கடவுச்சொல்லை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும் அபாயம் உள்ளது. அத்தனை சீக்கிரம் செய்வது இயலாது என்ற போதிலும், இப்படி ஒரு குறுக்கு வழிப் பிரச்சனையையும் நாம் பேசத் தான் வேண்டியுள்ளது.

பீட்டாவுக்கு எப்படி மாறுவது:

"பீட்டாவுக்கு மாறிப் பாருங்களேன்" என்ற சுட்டி ஒன்று நீங்கள் பிளாக்கர் கணக்கில் உட்புகுந்ததும் கேட்கப்படும். ஆம் என்றால், சில மணிநேரங்களில் உங்கள் பதிவுகள் பீட்டாவுக்கு மாற்றப்பட்டுவிடுகின்றன.

அதன்பின் தமிழ்மணத்தின் பட்டியை மீண்டும் சேர்ப்பதிலிருந்து பல்வேறு வேலைகள் துவங்குகின்றன. தமிழ்மணத்தில் சேர்க்க இந்தப் பதிவின்படி செய்ய வேண்டும். ஒரு முறை செய்துவிட்டால் நினைவில் வைத்துக் கொள்கிறது பீட்டா, அதன் பின் வார்ப்புருக்களை மாற்றி விளையாடினாலும், தமிழ்மணத்துக்காகச் சேர்த்த நிரலி மறைவதில்லை. தமிழ்மணம், இது போல் மாறி வந்த பீட்டாப் பதிவுகளை ஏற்க மறுத்து சிலசமயம் மக்கர் செய்தால், அதே தளத்தில் முறையிட்டால் சரி செய்து விடுகிறார்கள்.

எனக்கு மட்டும் ஏன்?
பீட்டாவுக்கு மாறுங்கள் என்ற சுட்டி உங்கள் பிளாக்கர் கணக்கில் தெரியவில்லையா, கவலை வேண்டாம். உங்கள் பதிவைப் பீட்டா சோதனைக்கு உரிய பதிவாக இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்று பொருள்.


இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  1. பிளாக்பிளஸ் எனப்படும் பிளாக்கரால் பல நாட்களுக்கு முன் தரப்பட்ட ஒரு அப்டேட்டை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
  2. அது ஒரு குழுப் பதிவாக இருக்கலாம்
  3. அல்லது மிக அதிக இடுகைகள் கொண்ட பதிவாக இருக்கலாம். (ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் அல்லது பின்னூட்டங்கள்)
  4. சில நாட்கள் முன்பு, பிளாக்கர் உங்களைப் பீட்டாவுக்கு மாறுங்கள் என்று கெஞ்சிப் பார்த்து சோர்ந்து போயிருக்கலாம்.

மனம் சோர்ந்துவிடாமல் புதிதாக ஒரு பீட்டாப் பதிவைத் திறந்து அதில் உங்கள் சோதனைகளைச் செய்து பார்க்கலாம். பின்னாளில் இந்தப் புதுக் கணக்கை பழைய ப்ளாக்கர் கணக்குடனும் சேர்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் பிளாக்கர் ஆட்கள்.

ஆக, பிளாக்கர் பீட்டா மிக மிக வசதியான, சுலபமான வலைப்பதிவுச் சேவையாகத் தான் இருக்கிறது. பீட்டாவுக்குத் தைரியமாக மாறலாம், முயற்சியைக் கைவிடாமல் தமிழ்மணத்தில் சொல்லி அதைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒருசில பிரச்சனைகளைத் தவிர பிளாக்கர் பீட்டா நன்றாகவே வேலைசெய்கிறது. 'எப்படியும் பீட்டா முழுமையான கட்டுமானத்துக்குப் பின், எல்லாச் சோதனைகளுக்கும் பின்னர் நடைமுறைக்கு வரத்தான் போகிறது. அப்போது புது பிளாக்கருக்கே மாறிக் கொள்கிறோம். இப்போது சோதனை எலிகளாக விரும்பவில்லை' என்றாலும், அதுவும் சரிதான்.

பழைய பதிவுகளோடு விளையாட பயமாக இருந்தால், பீட்டாவில் புதுக் கணக்குத் தொடங்கிச் சோதித்துப் பார்க்கலாம். ஆக, புகுந்து விளையாடுங்க..

[பிகு: கட்டுரைக்குத் தகவல் திரட்ட உதவிய பயனர்கள் இட்லிவடை மற்றும் செந்திலுக்கு நன்றி]

பாரா உஷார்!

நிரலிகள் எழுதி, புத்தகம் படித்து, மீதி நேரங்களில் அழுது வடியும் தமிழ்த் தொலைக்காட்சி மெகாதொடர்களிடமிருந்து தப்பிக்கவே பதிவெழுத வந்தவள் நான்.

தினசரி பல்வேறு பதிவுகளைப் படித்து நியூசி முதல் கலிபோர்னியா வரையிலான நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலிருந்து, புதுப் புது நட்புகள் பெறுவது வரை பதிவுலகம் எனக்குக் கொடுத்த வசதிகள் ஏராளம். பதிவெழுதத் தொடங்கி எட்டு மாதம் ஆகிறது, இப்போது தட்டிக் கொண்டிருக்கும் தொண்ணூறாவது பதிவு வரை, 'ஒரு இடுகை' என்று எழுத எனக்குக் காரணம் என்று தனியே ஏதும் தேவைப்பட்டிருக்கவில்லை.

சும்மாவே ஒரு நாளில் அதிகபட்சம் மூன்று இடுகைகள் கூட போட்டும் பொழுதுபோகாத என்னைத் தூக்கி நட்சத்திரப் பெட்டிக்குள் போட்டு தமிழ்மண வாசகர்களுக்குத் தண்டனை கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார்கள் போலும்.

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க :))

முதல் இடுகையில் என்னைப் பற்றிய அறிமுகம் எழுதச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாதது ஏதும் இருக்கிறதா என்றே தெரியவில்லை. நான் புத்தகப் பூச்சியானதிலிருந்து இப்போதைய பதிவுலக அறிமுகம் வரை ஏற்கனவே பலமுறை பல இடங்களில் தெரிவித்து விட்டதால், இந்த இடுகையைச் சின்னதாகவே வைத்துக் கொள்கிறேன்.

Thursday, November 23, 2006

சிவகுமார்! இது நியாயமா?

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எங்கள் வீட்டில் ஒரு போராட்டதினம் தான். நான் எழுந்து கொள்ளக் கொஞ்சம் தாமதமானாலும் என் அப்பா பக்கத்தில் வந்து நின்று தட்டித் தட்டி எழுப்பிவிடுவதோடல்லாமல், எழுந்துவிட்டேனா என்று பத்து நிமிடத்துக்கொரு முறை வந்து சோதித்துவிட்டும் செல்வார்.

நான் எழுந்து வரும் போது அம்மா சமையலறையில் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டோ, காய் நறுக்கிக் கொண்டோ இருந்தாலும் அப்பா பொதுவாக அன்றைக்கு எந்த அறையைத் தேர்வு செய்யலாம் என்று முடிவெடுத்துக் கொண்டிருப்பார். எந்த அறை என்று தேர்வானதும், என்னை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கிவிடுவார்.

"இதோ இந்த பீரோ இருக்கில்ல, இதை பக்கத்து ரூமுக்கு மாத்திடுவோம். ஹாலில் இருக்கும் டீவியை, பெட்ரூமுக்கு அனுப்பிடலாம். சமையலறையில் இருக்கும் பிரிட்ஜ் இந்த டீவி இடத்துக்கு வரட்டும்." அப்பா சொல்லிக் கொண்டே போக, நானும் தங்கையும் ஒவ்வொன்றாகச் செய்ய உதவுவோம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம்போல் சமையல் தயாராகிச் சாப்பிடத் தொடங்கும்போது, வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களும் இடம் மாறியிருக்கும். வண்டிகள் எல்லாம் துடைக்கப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும்.

சிலநாட்கள் வீட்டை மாற்றுவது போரடித்தால், குளிர்சாதனப்பெட்டியின் உள்ளிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டுத் துடைத்து அங்குமிங்குமாக மாற்றிவைப்போம்.

அலங்கார அலமாரிப் பொருட்களும் எங்களின் இந்தப் படையெடுப்புக்குத் தப்பித்ததில்லை.

இதெல்லாம் தவிர அவரவர் துணியலமாரியையும், புத்தக அலமாரியையும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் துடைத்து வைத்துவிடவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் புதிய வீட்டில் இருப்பது போலான தோற்றத்தை இந்த மாற்றங்களே கொடுத்துவிடுவதால், இன்றுவரை வீடுகளும் அத்தனை போரடித்ததாகத் தோன்றியதில்லை.

இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போராட்டம் தான்.

"இப்போ எதுக்கு இதை மாத்தணும்ங்கிறீங்க?"

"ஒரு விஷயம் இருக்கிற இடத்தில் இருந்தாப் பிடிக்காதே உங்களுக்கு"

"வீட்டோட அழகே போச்சு"

என்று நாங்களும்

"அந்த கத்திரிக்கோல் இங்க தானே வச்சிருந்தேன். அதை எடுத்து எங்க வச்சார் உங்கப்பா?"
என்று வாரம் முழுவதும் ஒவ்வொன்றாகத் தேடும் அம்மாவும், போனவாரத்துக்கு இந்தவாரம் கட்டில் கொஞ்சம் நகர்ந்திருப்பதால் வீடு பெருக்கும்போது கவனமில்லாமல் காலில் இடித்துக் கொண்டு தன் தாயாரை அழைக்கும் வேலைக்கார அம்மாவுமாகச் சேர்ந்து அப்பாவுக்கு வாரம் பூராவும் ஞாயிற்றின் பின்விளைவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயமாகிவிடும். அப்படியும் சிரித்துக் கொண்டே அதைக் கடந்து போய்விடுவார் அப்பா.

பொதுவில் வீட்டுப் பொருட்களை மாற்றுவது போல் தோன்றினாலும் இந்த வேலைகளினால்,
1. குடும்பம் முழுவதும் ஒரே வேலையில் ஈடுபடுவதன் மூலம் ஒன்றாக செலவழிக்கும் அந்த நேரமும்
2. அரிசிமூட்டை முதல் பெரிய கட்டில் வரை அங்குமிங்கும் நகர்த்த உதவுவதால் உடற்பயிற்சிக்களமாகவும்
3. தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் வீணாகாத ஒரு ஞாயிறும்
4. ஏதாவது பாட்டுப் பாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ செய்வதால், மனமும் லேசாகும் ஒரு மனப் பயிற்சியாகவும்..

என்று எங்களுக்கு லாபங்களும் நிறைய தான்.


என்ன திடீர்னு வார நாளிலேயே ஞாயிற்றுக் கிழமை நினைவு என்று கேட்கிறீர்களா?

சிவகுமாரின் பதிவில் ,

பெண் வலைப்பதிவாளர்களில் சிலர் தமது வீட்டை அலங்கரிப்பது போல பார்த்து பார்த்து அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். சில பதிவுகளின் அலங்காரம் வாரத்துக்கு ஒரு தடவை மாறி விடும்


என்று சொல்லியிருப்பதைப் பார்த்தவுடன், அப்பாவிடம் "இப்போ இதை எல்லாம் மாத்தவச்சி, எங்களை வேலை வாங்கி என்னதான் சாதிச்சீங்க?" என்று சும்மாவே கடிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

வலைப் பதிவு அடைப்பலகைகளும் மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற இந்த உணர்வும் என் ஜீனில் உள்ளதோ?

(சிவகுமார், இருந்திருந்து பெண்வலைப்பதிவர்களுக்கு மட்டும் இந்த எண்ணம் உள்ளது என்பது போல் எழுதி இருக்கீங்களே... தேவ் பதிவெல்லாம் பார்த்ததில்லையா.. )

கோகுலம் - இதழ் 3

நீர் நீர் - பிரசுரமான என் முதல் கவுஜ


நீர் நீர்
எங்கும் இல்லை குடிநீர்

அதனால்
உலகம் முழுவதும் கண்ணீர்

ஏனோ
வானம் பொழியவில்லை விண்ணீர்
ஆகவே
கிடைக்கவில்லை தண்ணீர்

மண்ணில் நீர் கிடைக்கும் என்றே
எண்ணி நான் தோண்டினேன்
நீர்கிடைக்க இறைவனைத்
தினமும் வேண்டினேன்

தோண்டியது பலிக்கவில்லை;
வேண்டியதில் பலனில்லை;

மண் தரவில்லை மறுவற்ற நீர்
விண் தரவில்லை விலையற்ற நீர்
ஏன் தரவில்லை நீர் என்றே எண்ணி
நான் அவ்விரண்டைப் பார்த்தேன்

மண் சொன்னது மரமில்லை
எனவே
விண் சொன்னது மேகமில்லை

நான் புரிந்து கொண்டேன்
நன்றாக
நீங்கள்..?

[இந்த மாதிரி கவுஜயெல்லாம் எப்படிப் பிரசுரமாச்சுன்னு சந்தேகமா? உங்க அப்பா இல்லைன்னா அம்மா ஆபீஸ்ல ஆண்டுவிழா இதழ் போடுவாங்க தானே? அங்க கொடுத்தீங்கன்னா, நிச்சயம் பிரசுரிச்சே தீருவாங்க.. உங்க கவுஜயப் பாத்து கடுப்பாகி உங்க அப்பா அல்லது அம்மாவுக்கு வேலை போனா நான் பொறுப்பில்லை.. ]

Wednesday, November 22, 2006

கோகுலம் - இதழ் 2

இந்த வாரம் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த போது ஒரு பேப்பர் கிடைத்ததாக பாட்டி எடுத்துக் கொடுத்தார்.

ஆமாமாம், எல்லாம் உங்க அன்புக்குரிய பொன்ஸின் மழலைக் கதை தான்.

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினாங்க..










இனி கதை:

தங்கமும் தேங்காய் நாரும்

ரு ஊரில் ஏழைத் தம்பதிகளான ராமனும் சீதையும் வாழ்ந்து வந்தார்கள். குழந்தைப் பேறில்லாத சீதா, ராமனிடம் சதா "பழனிக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஒருநாள் போதுமான பணம் சேர்ந்ததும் அவர்கள் இருவரும் பழநிக்குச் சென்றனர். அங்கு சீதா, தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் எடைக்குச் சம எடையாக தேங்காய் நார் காணிக்கையாக்குவதாக வேண்டிக் கொண்டாள்

இது நடந்து ஒரு வருடத்திற்குள் அவர்கட்கு குழந்தை பிறந்தது. அத்தோடு பெரும் பணக்காரர்களாக ஆனார்கள். இருப்பினும் அவர்கள் பழனிக்குச் சென்றனர். செல்லும்போது சீதா, கடவுளுக்குத் தேங்காய் நார் வைக்கக் கூடாது. தங்கம் வைக்கலாம்" என்றாள்.

ஆனால், எவ்வளவு தங்கம் வைத்தாலும் குழந்தை உள்ள தட்டே தழைந்தது. கலவரமடைந்த அவர்களை குருக்கள் தங்கத்தை எடுக்கச் சொன்னார். அதன்பின் ஒரு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். அப்போது அவர் உடைத்த தேங்காயின் குடுமியைப் பிய்த்துப் போட்டார். அது சென்று தட்டின் மேலே விழுந்தது. உடன் அது சமமாகிவிட்டது


[இராம நாராயணன் அல்லது பேரரசு கேட்டால், பஞ்ச் வசனங்களுடன் காப்பி ரைட்ஸ் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் ;) ]

கோகுலம் படிப்பவர்களே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.. குழந்தைகளுக்காக

Thursday, November 16, 2006

என்னைப் போல் ஒருத்தி

மாக்ஸைனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, தன் முன்னால் நின்று கொண்டிருந்தவள் தன்னைப் போலவே இருந்தது தான் அவளின் ஆச்சரியத்துக்குக் காரணம். "இது என்ன டபுள் ரோலா?" என்று மாக்ஸைன் யோசித்துக் கொண்டே முன்னால் இருந்தவளைத் தடவிப் பார்த்தாள். கைக்கெட்டிய பொருள் ஏதோ வழவழப்பான சுவர் போல் இருந்தது. மாக்ஸைனின் ஆச்சரியம் ரொம்ப அதிகமாகிவிட்டது.

பக்கத்தில் இருந்த பேட்டி(patty)க்கும் அதே ஆச்சரியம் தான். அதெப்படி தன்னைப் போலவே ஒருத்தி இருக்க முடியும்? அதிலும் தானும் மாக்ஸைனும் மட்டுமே வசித்துவரும் இந்த அறைக்கு அதே போல் இரண்டு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ வித்தியாசமாக இருந்தது.

மாக்ஸைன் பேட்டியைத் திரும்பிப் பார்த்தாள். இருவரும் அர்த்தத்துடன் தலையசைத்துக் கொண்டனர். அமைதியாக, முன்னால் இருப்பவர்களைக் கலவரப் படுத்தாமல், நடந்து அந்தச் சுவரின் பின்பக்கம் பார்த்தனர். முன்னால் பார்த்த இரட்டையரின் பின்பக்க உடல் எதுவும் தெரியவில்லை. சுவரின் பின்பக்கம் வேறு ஏதோ நிறத்தில் இருந்தாலும், அதுவும் தொட்டுப் பார்த்த போது நன்கு மென்மையாக இருந்தது.

அப்படியானால்? மாக்ஸைன் மீண்டும் அந்தச் சுவரின் முன்பக்கம் வந்து பார்த்தாள். இந்த முறை பேட்டியின் இரட்டை மாதிரி இருந்தவளைக் காணவில்லை. மாக்ஸைனின் இரட்டை உருவம் மட்டுமே இருந்தது. மாக்ஸைனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"ஓ, ஒரு வேளை அந்தச் சுவரில் தெரிவது நான் தானோ? சின்ன வயதில் அம்மாவுடன் குளிக்கப் போகும் போது தண்ணீருக்குள் ஒரு மாக்ஸைன் இருப்பது போல் தெரியுமே, அதே போல் இந்தச் சுவரிலும் தண்ணீர் இருக்கிறதோ?"

கையைக் காலை ஆட்டியதில் சுவரில் இருந்த உருவமும் அதே போல் செய்ததைப் பார்த்த மாக்ஸைனுக்குத் தெளிவாகப் புரிந்து போயிற்று. எதிரில் இருப்பது தன்னுடைய நிழலே தான். மாக்ஸைனுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 'தான் இத்தனை பெரிதாக வளர்ந்துவிட்டோமா?' என்று ஒரே மகிழ்ச்சி. கால், கை, முகம் என்று தன் அழகின் ஒவ்வொரு பகுதியாக ரசித்து மகிழ்ந்து கொண்டே வந்தாள்.


கண்ணாடியில் தெரிந்த உருவத்தின் மற்றொரு புதுமை தெரிந்தது மாக்ஸைனுக்கு. மாக்ஸைன் நிறம் ஒரே நிறம் தான். நல்ல கறுப்பு நிறம். அம்மா கூட "என் கருப்புத் தங்கமே" என்று தான் கொஞ்சுவாள். இப்போது பார்த்தால் அந்தக் கருப்பு நிற முகத்தின் புருவத்துக்குப் பக்கத்தில் ஏதோ அசிங்கமாக வேறு நிறத்தில் இருப்பது போல் இருந்தது. "என்ன இது, இப்படி இருக்கே!" என்றபடி தலையில் அந்தப் புருவத்தின் மீதிருந்த பெருக்கல் குறியைத் தன் ஒரே கையால் தொட்டுப் பார்த்தாள் மாக்ஸைன்.

எத்தனை அழித்தும் அந்த அழுக்கான வெள்ளை நிறம் மட்டும் போவது மாதிரியே இல்லை. அதை அழித்துக் கொண்டே இருக்கும் போது டயானா உள்ளே நுழைந்தாள்.

ஓடி வந்து மாக்ஸைனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "மாக்ஸைன், என் சமர்த்து! உனக்கு கண்ணாடி பார்க்கவும் தெரியுதே!" என்றாள் டயானா.

"அந்தச் சுவர் பேரு கண்ணாடியா?" என்று யோசித்த மாக்ஸைன் மீண்டும் தன் (துதிக்)கையால் தலை மீதிருந்த பெருக்கல் குறியைக் காட்டினாள்.

"இரும்மா, அழிச்சிடறேன். வெள்ளைக் கலர் க்ராஸ் போட்ட இந்தப் புருவம் மட்டும் தான் உனக்குப் புரியுதா? அந்தப் புருவத்துல கலரில்லாத பெயின்ட் கூட அடிச்சிருக்கேனே.. " என்ற டயானாவின் குரலில் பயங்கர சந்தோஷம்.

இத்தனை சந்தோஷப்படும் டயானாவை மாக்ஸைனும் பேட்டியும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? இந்த மாதிரி கண்ணாடியில் இதுவரை தன்னைத் தானே பார்த்து சந்தோஷப்படுவது 2 வயதுக்கு மேற்பட்ட மனிதன், டால்பின், சில குரங்குகள் மட்டும் தான். நீங்களும் அந்த மாதிரி புத்திசாலிங்க லிஸ்டுல சேர்ந்துட்டீங்க இப்போ!"

டயானா மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்கும்போதே ஜோஷுவா ஓடி வந்தாள்.

"டயானா, ஹாப்பி கண்ணாடியில் தன்னைப் பார்த்து பயங்கர குஷியில இருக்கான்.. "

"ஆமாம் ஜோ, இதோ பேட்டி, மாக்ஸைன் கூட பயங்கர மகிழ்ச்சியில் தான் இருக்காங்க.. நீ சொன்னது போல இவங்களால சுலபமா உடைக்க முடியாத பிளாஸ்டிக் வச்சி கண்ணாடி செய்தது ரொம்ப வசதியாப் போச்சு. "

"ஆமாம் டயானா, இனிமேலாவது இந்தப் பெரிய அறிவாளிங்களை நம்ம முட்டாள் மனுஷங்க காப்பாத்தி பாதுகாக்கிறாங்களான்னு பார்க்கணும்.."

(செய்தி: ப்ரூக்ளின் விலங்குகள் சரணாலயத்தில், விலங்குகள் அறிவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டயானா ரீஸும்(Diana Reiss), ஆராய்ச்சி மாணவியான ஜோஷுவா ப்ளோட்நிக்கும்(Joshua Plotnik) செய்த ஆராய்ச்சியின்படி, விலங்குகளில், டால்பின், மனிதன், சில குரங்குகளுக்குப் பின் யானைகளுக்குத் தான் கண்ணாடியில் தன்னைத் தானே மகிழும் வித்தை தெரிந்திருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். நம்மூர் யானைங்க கிரிக்கெட்டே விளையாடிச்சே, அதெல்லாம் அம்மணிகளுக்குத் தெரியாது போலிருக்கு ;) )

மாக்ஸைன்


ஹாப்பி


ஹாப்பித் தொட்டுப் பார்க்கிறான் பாருங்க!


[மறுபடியும் யானையான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு: இன்றைக்கு உலக சகிப்புத் தன்மை தினமாம். கொஞ்சம் இதையும் சேர்த்து சகிச்சிக்கிடறது... ;)]

தேவி எங்கே? (நிறைவுப் பகுதி)

"தேவி எங்கே?" அம்மா கேட்டார்.

"கெட்டது குடி! பால்காரரே கஸ்டமர் கிட்ட மாடு எங்கேன்னு கேட்கிற மாதிரி, நீங்களே இப்படிக் கேட்டா, நாங்க என்ன செய்யுறது?" என்றபடி மிச்சமிருந்த நீரை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டான் சந்தர்.

"சந்தர், உன் திருவாயை மூடிக் கிட்டு சும்மா இருக்கியா?" என்ற வாணி, மெதுவாக, "ஆண்ட்டி, என்ன நடந்தது? தேவி எங்கே?" என்று கேட்டாள்.

"தேவி இன்னிக்கு அவங்க சித்தப்பா பொண்ணு பிறந்தநாளுக்காக அவங்க வீட்டுக்குப் போவதா இருந்தது. அதனால பாதி நாள்ல ஸ்கூல்லேர்ந்து வந்துட்டா. நாங்க கிளம்பிகிட்டே இருந்தப்போ, நாலு பேர் திமு திமுன்னு உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டுட்டு தேவியைத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க." திக்கித் திணறி சொல்லி முடித்தார் அந்தத் தாயார்.

"எதுக்குக் கடத்துறாங்கன்னு ஒண்ணும் சொல்லலியா?" என்றான் சுரேஷ்

"தேவியோட அப்பா, போன மாதம் சேதுபதின்னு ஒரு திருடனை பிடிச்சாராம். அவனை விட்டுட்டால் தேவியைத் திருப்பி அனுப்பவதாகச் சொன்னாங்க.. எல்லாத்தையும் சொல்லிட்டு என்னையும் அடிச்சிட்டுப் போய்ட்டாங்க." விசும்பலுடன் தேவியின் தாயார் சொல்லி முடித்தார்.

"எந்தப் பக்கமாப் போனாங்க?" என்றாள் பிரியா

"வாசற்பக்கமாத் தான்.." என்ற தேவியின் அம்மா குரல் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்ததினாலேயே "வாசல் வழியாப் போகாம, பின்ன ஜன்னல் வழியாவாப் போக முடியும்" என்று தொண்டை வரை வந்த நக்கலை அப்படியே விழுங்கினான் சந்தர்.

"பிரியா, ஆண்ட்டிய பக்கத்துத் தெரு டாக்டர் வீட்டில் விட்டுட்டு அப்படியே போலீஸ் ஸ்டேசன் போய் தேவியின் அப்பாவுக்கும் தகவல் சொல்லிட்டு வந்துடு. நாங்க அவங்க போன வழியை விசாரிச்சிகிட்டுப் போறோம்." சுரேஷ் சொன்னதும் பிரியா தவிர்த்து மற்ற மூவரும் கிளம்பினர். வாசல்பக்கம் மீண்டும் வந்து நின்ற போது சந்தர் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டே கத்தினான்

"ஆ, ஒரு கடி ராணியைத் தேடப் போறோம்னு எறும்புக்குக் கூட தெரிஞ்சிருக்கு!" என்றபடி குனிந்து பார்த்தச் சந்தர் "ஐ அரிசி மிட்டாய்!" என்று குதித்தபடி நிமிர்ந்தான். "இதென்னாப்பா, கவர்மெண்டுல புதுசா மிட்டாய் ரோடு போடுறாங்களா? வரிசையா இரைச்சிருக்காங்க!"

மூவரும் குனிந்து பார்த்தனர். வரிசையாய் ஒரே நேர்க்கோட்டில் அரிசிமிட்டாய் இரைந்து கிடந்தது.

"வெயிட். வெயிட். சுரேஷ், தேவியோட பெட் வச்சி நீ தோத்ததுக்கு இன்னிக்குத் தானே பெட் படி இந்த அரிசி மிட்டாய் வாங்கித் தந்தே?" வாணியின் குரலில் புதிய உற்சாகம் வீசியது

"அட ஆமாம்! அதே மாதிரி தான் இருக்கு!"

"அப்படின்னா மிட்டாய் ரோடு போட்டது நம்ம தேவி தானா?" சந்தர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தான். "தேவி வர வர இந்தச் சந்தர் மாதிரி புத்திசாலியாகிகிட்டே வரா!"

"ஆமாம். அதனால தான் மிட்டாய் ரோடு போட்டிருக்கா. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா எறும்பு எடுத்திட்டுப் போயிருக்கும். ஆனது தான் ஆனா, வாணி மாதிரி புத்திசாலியாகக் கூடாது!"

"போதும் உங்க சண்டை, மிச்சத்தை எறும்பு எடுக்கிறதுக்குள்ள நம்ம வேட்டையாடுவோம்!"

அந்த மிட்டாய்களைப் பின்பற்றி மூவரும் நடந்தனர். அந்தக் கோடு கடைசியாய் ஒரு கூரை வேய்ந்த வீட்டினுள் சென்று மறைந்தது. கதவு பூட்டப் பட்டிருந்த அந்த வீட்டை மூவரும் சுற்றிச் சுற்றி வந்தனர். அந்தக் குடிசைக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சந்தர் மெல்ல கதவின் மீது கைவைத்தான். ஓசையின்றி திறந்து கொண்டது கதவு. மூவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுந்தரும் வாணியும் மட்டும் உள்ளே நுழைவது என்று முடிவானது. சுரேஷ் வெளியே காவலாக நின்றிருந்தான். கண்கள் இருளுக்குப் பழகியவுடன் குடிசையின் நடுவில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது. வாணி ஓசையின்றி அந்த உருவத்தை நெருங்கினாள். ஆம். அது தேவி தான். !

வாணியைப் பார்த்தவுடன் தேவியின் முகமும் மலர்ந்தது. அதுவரை ஒரே மாதிரி மயங்கி இருப்பது போல் அமர்ந்திருந்த அவள் இப்போது எழுந்து வாணியின் கரத்தைப் பற்றிக் கொண்டாள். ஏதோ பேசத் தொடங்கிய தேவியின் குரல் உடைந்து மெல்லிய விக்கல் வந்திருக்கும், அவள் வாயை அந்தக் கை பொத்தாமல் இருந்தால். வாணி பயந்து போய் நிமிர்ந்து பார்த்த போது அந்தக் கரத்துக்குரியவன் சந்தர் தான் என்று புரிந்தது.

சந்தர் இப்போது கை நீட்டி ஒரு திசையைச் சுட்டிக் காட்டினான். அங்க நான்கைந்து பேர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். மூவரும் ஓசை செய்யாமல் வாசல்பக்கம் நகர்ந்தனர். கதவை மெல்லச் சாத்தித் தாழிட்டதும், சத்தம் கேட்டு, "தேவி! நல்லா இருக்கியா?" என்றபடி வந்தான் சுரேஷ்.

"அவங்க உன்னை ரொம்ப அடிச்சாங்களா?" வாணி கேட்டாள்

"என்னைத் தூக்கிட்டு வந்து கட்டிப் போட்டுடாங்க. நான் அவங்க பேச்சைக் கேட்டு பயந்து போய் மயக்கமாகிட்டமாதிரி நடிச்சேன்.. அதான் அந்தப் பக்கம் போய்ட்டாங்க.." சொல்லி முடிப்பதற்குள் தேவிக்குக் குரல் கம்மியது.

"ஆமாம், தேவி அப்பாவை யார் போய் மிரட்டணும், எத்தனை மணிக்குப் போய் போன் பண்ணனும்னு பேசிகிட்டிருந்தாங்க! சரி, கவலையை விடுங்க. அதான் வெளியே வந்துட்டமே.!" - சந்தர்

வாணிக்கு ஆனால் பயம் இன்னும் மறையவில்லை "என்ன கவலையில்லை? இந்தக் கதவை அந்த ரௌடிங்க ஒடைக்க எத்தனை நேரமாகும்? அவங்களோ நாலு பேர். நம்மைப் பார்த்திட்டாலும் கஷ்டம் தானே? வாங்க மொதல்ல இந்த இடத்தை விட்டு ஓடலாம்.." என்றாள்.

"அங்க தான் நீ ஐயாவோட மூளையைப் பார்க்கணும். இந்த வீட்டுக்கு வேற வழியே இல்லை. பிரியா சீக்கிரமே வந்துடுவா. அதுவரை இங்கேயே இருந்து இவங்களைக் கண்காணிக்க வேண்டாமா? அப்படியும் எந்தச் சந்தேகமும் வராது, அதான் இவ மயங்கிக் கிடக்கிறான்னு அவங்க ரொம்பவே நம்பறாங்களே!" சந்தர் லாஜிக்கில்லாமல் பேசிக் கொண்டிருப்பதாகச் சந்தேகம் வந்தாலும் வாணியால் மறுத்துப் பேச முடியவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் நிஜமாகவே தேவியின் அப்பாவுடன் பிரியா வந்துவிட்டாள். இந்தத் திருடர்களின் மறைவிடம் அவருக்கு முன்னமே தெரியும் என்றாலும் பெரியதொரு கைதுக்கு உதவி செய்த காரணத்துக்காக ஐந்து சுட்டிகளும் டீவி, பேப்பர் என்று பரபரக்கப் பட்டது பற்றி இன்னுமொரு நாள்..

(முற்றும்)

[பின் குறிப்பு: ரொம்ப சொதப்பலா இருந்தா, சாரி, குழந்தைங்க எழுதுற கதை வேற எப்படிங்க இருக்கும்?

எச்சரிக்கை: கிட்டத் தட்ட இதே ரேஞ்சுல இன்னும் நாலஞ்சு கதை இருக்கு. முடிஞ்சா ஒவ்வொண்ணா வலையேத்தி பொன்ஸ் பக்கங்களை வலையுலக கோகுலமா ஆக்கிடலாம்னு யோசனை.. பார்க்கலாம் :)]

Wednesday, November 15, 2006

தேவி எங்கே?

(குழந்தைகள் தினத்தன்னிக்குப் பதிவு போட விடாமல் வேலை வாங்கிய என் மேனேஜருக்குக் கண்டனங்களுடன் இந்தப் பதிவைத் தொடங்குகிறேன். குழந்தைகள் தின ஸ்பெஷல் - ஒரு குழந்தை எழுதிய கதை - பின்ன என்னங்க, ஒரு ஏழாவது எட்டாவது படிக்கிறப்போ எழுதின கதைன்னா அது குழந்தை எழுதின கதை தானே? :) லாஜிக் பார்க்காமல் ரசிக்க வேண்டுதலுடன் குழந்தைகள் தின வாழ்த்துக்களும்.. )

"தேவி, தேவி! மணியடிச்சாச்சு! வீட்டுக்குப் போகணும்" பள்ளி வாசலில் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள் வாணி.

"யாரு? தேவியையா தேடுறே? அவ வீட்டில் பங்க்ஷன். உனக்குத் தெரியாதா? அவங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு தானே உன்னுது? அவ இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பா!" சொல்லிக் கொண்டே பள்ளியிலிருந்து வெளியே வந்தான் சந்தர்

"ஆமாம், ஆமாம். அப்படித் தான் இருக்கணும். மறந்திட்டேன். நானும் வீட்டுக்குப் போறேன்!" வாணி எழுந்து நடக்கலானான்.

வாணி, சந்தர், தேவி, பிரியா, சுரேஷ் அனைவரும் நண்பர்கள்; ஒரே வகுப்பினர். வழக்கமாய் வாணியும் தேவியும் ஒன்றாக வீட்டுக்குச் செல்வார்கள். ஒன்றாக வீட்டுப்பாடம் செய்வார்கள். எனவே வீடு திரும்பிய வாணி அன்றும் தேவிக்காக காத்திருந்தாள். மணி ஆறாகியும் தேவி வராததால், அவள் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. வாணி வாசலில் நின்று "தேவி, தேவி " என்று கூப்பிட்டுப் பார்த்தாள். பதில் வராமல் போகவே வாணி திரும்பி நடந்தாள்.

நடக்கத் தொடங்கியவுடன் "ஹூம்!" என்றத் தீனப் பெருமூச்சு கேட்டது. வாணி நின்றாள். "தேவி, தேவீ!" மீண்டும் குரல் கொடுத்துப் பார்த்தாள்.

"ஹூம்..!" இம்முறை சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

"என்ன வாணி? பூட்டின வீட்டுக்கு முன்னால நின்னு சத்தம் போடற?" குரல் வந்த திசையைப் பார்த்த வாணி, சுரேஷூம் ப்ரியாவும் புத்தகங்களுடன் டியூசனுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

"இங்கே வா சுரேஷ்."

"என்ன வாணி?"

"தேவியைத் தேடி வந்தேன். வீடு பூட்டியிருக்கு. ஆனா, உள்ளே ஏதோ குரல் கேட்கிறது மாதிரி இருக்கு!"

மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கத் தொடங்கினர்.

"என்னப்பா, காந்தியடிகள் சொன்னதைக் குரங்குகளுக்குப் பதிலா நீங்களே நடிச்சி காட்டப் போறீங்களா?" சுந்தரின் குரல் மூன்று நண்பர்களின் கவனத்தையும் கவர்ந்த போது, ப்ரியா தன் காதுகளில் கையை வைத்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுரேஷ் கண்ணாடியை இரு கைகளாலும் ச்பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். வாணி தன் வாயைப் பொத்திக் கொண்டு அந்தக் குரல் தன் வாயிலிருந்து வெளிவரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டிருந்தாள்.

"சந்தர், நீ எங்க இந்தப் பக்கம்?" பிரியா கேட்டாள்

"நம்ம கண்ணன் சார்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கக் கிளம்பினேன். நீங்க என்ன பண்றீங்க?"

"சுரேஷோட லைப்ரரி புத்தகங்களைத் திருப்பக் கிளம்பினோம்."

"இங்கே என்ன பண்றீங்க? தேவியோட அம்மா லைப்ரரி வேற தொடங்கிட்டாங்களா?"

"விளையாடாதே சந்தர். தேவி வீடு பூட்டியிருக்கு, ஆனா, உள்ளாற ஏதோ சத்தம் கேட்குது. " வாணி நிஜமான பயத்துடன் சொன்னதும் சந்தர் சைக்கிளை விட்டு இறங்கி வந்தான்.

"இப்போ என்ன செய்யறது?" பிரியா வினவினாள்

"கதவை உடைச்சிடலாமா?" என்றாள் வாணி

"கார்ப்பெண்டர் பொண்ணுன்னு நிரூபிக்கிறா பாரு" என்றான் சந்தர்.

"அவ சொல்றது நல்ல ஐடியா தானே? அப்படியே செய்யலாமே!" என்றான் சுரேஷ்.

"பின்பக்கக் கதவைப் பார்க்கலாம். இதை உடைச்சா வர்ரவங்க போறவங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கணும்." என்றாள் வாணி.

"அதானே பார்த்தேன். உன் மூளை ரொம்பவே நேரா வேலை செய்யுதேன்னு.."

"சந்தர்! விளையாடாதே! "

"சரி வாங்க உடைக்கலாம்"

நால்வரும் வீட்டை வலம் வந்து அதன் பின்புறக் கதவை இடித்தனர். இரண்டே தட்டில் கதவு திறந்து கொண்டது.

"நீ குழந்தையா இருக்கறச்சே... , இந்தக் கதவைச் செஞ்சிருப்பாங்க போலிருக்கு " சந்தர் உட்வர்ட்ஸ் குரலில் சொல்லவும் வாணி "உஷ்!" என்று வாயில் விரல் வைத்து சைகை செய்தாள்

உள்ளே நுழைந்த ப்ரீயா "வீல்" என்று அலறினாள்.

"என்னாச்சு?!" சுரேஷ் பயத்துடன்..

"ஒண்ணுமில்லை.. ஒரு சுண்டெலி!"

"விநாயகரோட வாகனத்துக்கே இப்படிப் பயந்தா, நம்ம பிளேடு பக்கிரியை இவ அடுத்த வருசம் எப்படி சமாளிக்கப் போறா?"- சந்தர்

"யாரது பக்கிரி?" - இது வாணி

"நம்ம அடுத்த வருஷ கெமிஸ்டரி வாத்தியார் தான். ஒரே ரம்பமாம்!"

"சே! பேசாம வர மாட்டே?!" சுரேஷ் மிரட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான்

சந்தர் காலைத் தூக்கி உள்ளே வைக்கவும், பிரியா திக்கித் தடவி விளக்கைப் போடவும் சரியாக இருந்தது.

"ஹே.. யாரது? ஏதோ சந்திர மண்டலத்துலேர்ந்து புது மிருகமா?" சந்தர் கை நீட்டிக் கொண்டே சத்தமாய்க் கேட்கவும் அவன் விரல் போன திக்கில் மூன்று ஜோடி விழிகளும் திரும்பின.

"ஆண்ட்டி! நீங்களா?!! " என்றபடி வாணி சேருடன் கட்டிப் போட்டிருந்த அந்த அந்த உருவத்தை நோக்கி ஓடினாள். முகம், கை, கால் எல்லாம் வெள்ளைத் துணியால் கட்டி இருக்க, நாற்காலியுடன் நீளக் கயிறு ஒன்று அவரைப் பிணைத்திருக்க, பெரிய பஞ்சுக் குவியல் அடங்கிய வாயுடன், சந்தர் சொன்னது போல் வேற்றுக் கிரக மனிதராகத் தான் தோற்றமளித்தார் தேவியின் தாயார். மயங்கிக் கிடந்த அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கட்டுக்களை அவிழ்த்து விட்டுக் கொஞ்சம் சுய நினைவு வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தேவி எங்கே?" என்பது தான்!

(தொடரும்)

Friday, November 03, 2006

இலவசமாய் ஏதுமில்லை..

"இந்த இடம் வரை 10ன்னு வருவது எப்படி திடீர்னு இங்கே வரும்போது 12 ஆகுது?" கணினியில் தட்டிக் கொண்டிருந்த சீ ப்ரோகிராமைப் பார்த்துக் கேட்டபின் தான் அதை வாய்விட்டு கேட்டுவிட்டதை உணர்ந்தாள் ராதிகா. லேசாக நாக்கைக் கடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது பிரபாகர் பின்னால் நின்றிருந்தான்.

கணினியுடன் பேசிக் கொண்டிருந்த காமெடியைப் பார்த்திருப்பானோ என்று அவஸ்தையாய்ச் சிரித்தபடி "எப்போ வந்தே பிரபா?" என்றாள்.

"நீ சீ(C) கம்பைலரோட பேசத் தொடங்கினப்பவே வந்திட்டேன்.. என்ன சொல்லுது உன் ப்ரோக்ராம்? சொன்னபடி கேட்குமாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான் பிரபாகர்.

"எங்கே?! அது அப்படியே என் தம்பி சுரேஷ் மாதிரி இருக்கு. நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறதுன்னு ஒரே அடம்.."

"ஏதாச்சும் உதவி வேணுமா? நான் பார்க்கவா?"

"வேணாம் வேண்டாம்.. எல்லாம் சுரேஷுக்குச் செய்கிற மாதிரி கன்னத்துல ரெண்டு, முதுகில ரெண்டு கொடுத்து வழிக்குக் கொண்டு வந்துக்கிறேன். நீ எதுக்கு வந்தே, அதைச் சொல்லு.. இத்தனை தூரம் என்னைத் தேடி வரவே மாட்டியே பொதுவா.."

"ம்ம்... " என்றவன் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான்.. "அப்படியே காபி மெஷின் வரை போய்ட்டு வருவோமா? இங்கே வச்சி சொல்றது ரொம்ப கஷ்டம்.."

"சரி சரி வா.. காபி குடிக்கிற நேரம் தான்" என்றபடி ராது எழுந்து கொண்டாள்.

அவர்கள் காபி போடும் இயந்திரத்தை நெருங்குமுன் அவர்களின் சின்ன முன்கதைச் சுருக்கம்: ராதிகாவும் பிரபாகரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகாமை வீடுகளில் வளர்ந்தவர்கள். சிலகாலத்தில் இரண்டு வீட்டாருமே புறநகரில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வெளியேறியபோதும் அதிசயமாக அங்கும் ஒரே பள்ளியில் சேர்ந்து, ஒரே கல்லூரியில் கூத்தடித்து - கவனிக்கவும், எங்குமே படித்தார்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அதைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் உண்டு.. - ஒரே பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தால் "வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) வேலை கிடைக்கப் பெற்று நல்லவேளையாக இங்கேயாவது வெவ்வேறு குழுவில் இவள் சீயும்(C) அவன் கோபாலுமாக (COBOL) பொட்டி தட்டிக் கொண்டு, இப்போதெல்லாம் பொட்டியுடனும் நிரலியுடனும் பேசிக் கொண்டுமிருக்கிறார்கள்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இந்த ப்ளோரில் காபிக்குச் சக்கரையே பத்தமாட்டேங்குது.. ஏன்னு புரியவே இல்லை.." என்றபடி வெளியில் வந்து பால்கனியருகில் நிற்கலானாள் ராதிகா.

"எல்லாம் உன்னை மாதிரி சக்கரை வியாதி கேஸ் இருக்குன்னு அவங்களுக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கும்.. "

"என்னது? சக்கரை வியாதியா? எனக்கா?"

"அதாம்மா, சக்கரையைப் பார்த்தாலே அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் வியாதி. "

"சொல்ல மாட்டே.. சரி, என்ன திடீர்னு ஐயாவுக்கு வேலை நேரத்தில் என் நினைவு? "

"ம்ம்.. அது வந்து.. இன்னிக்கு ஈவினிங் சீக்கிரம் கிளம்ப முடியுமா உன்னால?"

"கிளம்பலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனா, என்ன மேட்டர்?"

"இல்லை.. அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க... கோடம்பாக்கம் வரை போறோம்.."

"என்ன விஷயம்? எனக்குத் தெரிஞ்சு கோடம்பாக்கத்தில் எல்லாம் உனக்குச் சொந்தக்காரங்க கூட கிடையாதே! "

"அது வந்து.. அங்க.. அங்க எனக்கு... பொ... பொண்ணு பார்க்கப் போறோம்.. நீயும் கூட வந்தால் எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்.." மென்று விழுங்கிச் சொல்லும் தன் நண்பனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது ராதுவுக்கு..

"அப்படிப் போடு! கலக்கல்.. கங்கிராட்ஸ்.. யார் வாழ்க்கையைக் கெடுக்கப் போறே?! இந்தப் பாவத்துக்கு நானும் உடந்தையா இருக்கணுமா?!"

"போடி ராது, ரொம்ப கிண்டல் செய்யறதாக இருந்தா நீ வர வேணாம்.. நானே தனியாப் போய்க்கிறேன்.. ஏதோ எங்க அம்மா உன்னைக் கேட்கச் சொன்னாங்களேன்னு கேட்டேன்.." முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரபாகர்.

"சரி சரி.. மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பத்திரமா வச்சிக்கோ. போற இடத்துல காட்டிக்கிடலாம். இப்போ உனக்குத் தோழியா இருந்த பாவத்துக்கு வந்து தொலையறேன்.. அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு முடிஞ்சா கொஞ்சம் எச்சரிக்கையும் செய்யலாம் இல்ல.."

கிண்டலும் கேலியுமாக காப்பி முடிந்து பிரபாகர் முகமெல்லாம் வெட்கமும் சந்தோசமுமாக அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி அவனுடைய பணியிடத்துக்கு விரைந்தான்.

ராதிகா தொடர்ந்து சில நிமிடங்கள் காலி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள் - லேசான சோகமும் எட்டிப் பார்க்க.. கூடவே வளர்ந்தவனுக்குக் கல்யாணமே வந்துவிட்டது. அவளுக்கு இன்னும் லைன் கிளியராகும் வழியைக் காணோம். அவளின் அக்கா ரஞ்சனிக்கு அப்பா வரன் பார்த்துப் பார்த்து ஓய்ந்தே விட்டார். இந்தச் சந்தையில் அவளுக்கான விலையைக் கொடுக்கும் வசதியோ சக்தியோ அப்பாவுக்கு இல்லை. முதல் மகளான ரஞ்சனிக்கே இப்படி என்றால், ராதுவுக்கு என்று வரும் போது இன்னும் எத்தனை நாள் போகுமோ.. பெருமூச்சுடன் காலி கோப்பையைக் குப்பையில் போட்டுவிட்டு பத்து பன்னிரண்டான மாயத்தைப் பார்க்க இருக்கைக்கு விரைந்தாள் ராதிகா.



~~~~~~~~~~~~~~~~~~~~~~



"ராது, என்ன சொல்றே? மஞ்சு எப்படி?" மதிய உணவுக்கு வெளியில் போகலாம் என்று பிரபாகர் சொன்ன போதே தெரியும் இதைப் பற்றித் தான் பேசப் போகிறான் என்று.

"நல்லாத் தான் இருக்கா.. நீதான் முடிவெடுக்கணும்.. உனக்கு எப்படித் தோணுது?" பந்தை அவன் பக்கம் அனுப்பினாள் ராதிகா.

"ரொம்ப அழகா இருக்கா ராது.."

"ம்ம்.."

"எத்தனை இனிமையான குரல் அவளுது.! "

"ம்ம்.."

"அவ டிரெஸ் சென்ஸ் கூட பயங்கர ரசனையா இருக்கு.. டிப்ளோமெட்டிக்கா பேசுறா.."

"அப்புறம்?"

"ரொம்ப நல்ல பொண்ணு.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அவளை ரொம்ப பிடிச்சிபோச்சு." பேசும்போதே துள்ளி குதித்துக் கொண்டு பேசினான் பிரபாகர்.

"ம்ம்.. "

"என்ன ராது, ரொம்ப ஆர்வமே இல்லாம கேட்குறே.. நேத்தே பார்த்தேன், உன் முகம் அத்தனை தெளிவா இல்லை. கோடம்பாக்கம் வரை வரும்போதும் சரி, அங்கே மஞ்சுவைப் பார்த்துப் பேசும் போதும் சரி.. நீ ஏதோ யோசனையிலேயே இருந்தா மாதிரி இருந்தது.. தப்பா நினைக்கக் கூடாது.. ராம் சொல்றான், நான் வேற இடத்தில் பெண்பார்க்கப் போனது, அதுக்கு உன்னையே செலக்ஷன் கமிட்டிக்குக் கூப்பிட்டது அது தான் உனக்குப் பிடிக்கலைன்னு.. அதான்.. அதான்.. அதனால உனக்கு ஏதும் ?" கேள்வியை முடிக்க முடியாமலேயே பிரபாகரன் திக்கியபோது வெகு நேரத்துக்குப் பின் ராதிகாவுக்குச் சிரிப்பு வந்தது.

"ராமை விடு, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"ம்ம்.. கேளு.. உனக்கில்லாத உரிமையா.." ஏதும் சங்கடமான கேள்வியாக இருக்கக் கூடாதென்று பிரபாகரன் இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வது அவன் முகத்தில் தெள்ளெனத் தெரிந்தது.

"உனக்கு எவ்வளவு சம்பளம்?"

"உன் சம்பளமே தான்.. மாசம் முப்பதாயிரம் தான்.. நான் கொஞ்சம் டாக்ஸ் ஸேவிங்க்ஸ் எல்லாம் செய்திருக்கிறதுனால கூட ஒரு மூவாயிரம் வரும்.."

"உங்க கொட்டிவாக்கம் வீடு சொந்த வீடு தானே? ஒரே பையன்ங்கிற முறையில் அதுவும் உனக்குத் தானே?"

"ஆமாம்.. அப்பா பேரில் இருக்கு ஆனா, என் வீடு தான்.. என்ன சந்தேகம் திடீர்னு?"

"மஞ்சுவுக்கும் கிட்டத் தட்ட இதே சம்பளம் தானே?"

"ஆமாம். அவளுக்கு ஒரு ஐயாயிரம் குறைவுன்னு நினைவு.."

"நல்லா படிச்சிருக்க, சொந்தமா வண்டி வேற வாங்கிட்டே.. வீடு இருக்கு. மாசா மாசம் கைநிறைய சம்பளம். மஞ்சுவின் சம்பாத்தியமும் இனிமே உனக்குத் தான் வரப் போகுது. அப்புறம் ஏன் உங்கம்மா நேத்து அந்த மஞ்சு வீட்டில் அத்தனை கண்டீஷன் போடறாங்க?!"

"என்ன கண்டீஷன்?"

"ஆகாகா.. என்னவோ தெரியாத மாதிரி கேட்கிறே! நீ மஞ்சுவோட தனியாப் பேசணும்னு வெளியில் போனப்போதான் பேசிகிட்டிருந்தாங்க.. ஒரு லட்சம் ரொக்கம், ஐம்பது சவரன் நகை.. அப்புறம் ஐயாவுக்கு ஒரு கார் வேற வேணுமாமே, பேரம் பேசுறது மாதிரி ஒரு பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்த காரை வேணாம்னு சொல்லிகிட்டாங்க.. உனக்கெதுக்கு இதெல்லாம் இப்போ?!!"

"இதெல்லாமே கேட்டாங்களா அம்மா?! " பிரபாகரனின் முகம் கொஞ்சம் மாறியது போலிருந்தது.

"ஓ உனக்குத் தெரியாதா?! சொல்லவே இல்லையா?! " தன் நண்பனுக்கு இந்த அநியாயத்தில் பங்கில்லை என்று தெரிந்தபோது ராதுவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"சொல்லவே இல்லை.. ம்ம்.. இருக்கட்டும், அம்மா கேட்டால் கேட்கட்டுமே...என்ன வந்தது இப்போ. " ஒன்றுமே நடக்காதது மாதிரி இனிப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் பிரபாகர்..

"டேய் என்னடா சொல்ற நீ? வரதட்சணை வாங்குறது பாவமில்லையா! இந்தப் பணம் வந்து தான் உனக்கு அடுத்த வேளை சாப்பாடுன்னு இல்லையே! "

"இருக்கட்டுமே ராது, ஃப்ரீயா விடு, இலவசமா வர்றது தானே.. என்ன மாதிரி வந்தா என்ன, மஞ்சுவுக்கு தானே அவுங்க வீட்ல செய்யப் போறாங்க.. நானா கேட்டேன்? தானா வரப் போகுது, நான் கேட்கலை, வேணாம்னும் சொல்றதாக இல்லை. நீ சாப்பிடு.."

ராதிகா அருகிலிருந்த சர்வரை அழைத்து சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.."நான் கிளம்புறேன் பிரபா, என்னோட தோசை வரும், அதையும் நீயே சாப்பிட்டுடு.".

"ஹே ராது, எங்க போறே? "

"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."

விளக்கங்களுக்கோ விவாதங்களுக்கோ நேரம் கொடுக்காமல் நடந்து கொண்டிருந்த ராதிகாவை வியப்புடன் பார்க்கத் தொடங்கினான் பிரபாகர்.