Friday, July 07, 2006

சந்திரா அத்தை - தேன்கூடு போட்டிக்கு

ந்திரா அத்தையை நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள். அமைதியும் கனிவுமான அவள் புன்னகை அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாகவே எண்ணச் செய்தது. நடுவீட்டில் படுப்பது அவளுக்குப் பிடிக்காது. என்ன செய்ய? இன்னும் கொஞ்சம் நேரம் தான் அத்தை, பொறுத்துக் கொள்.

அத்தை அன்பின் வடிவம். எதற்குமே அவளுக்குக் கோபம் வராது. ரொம்ப அனுசரணை, பாசம். அதிர்ந்து பேச மாட்டாள். திட்டும் போது கூட அவள் குரல் ஏதோ சங்கீதம் மாதிரி தான் ஒலிக்கும். கோபமே இல்லாமல் ஒருவரால் எப்படி இருக்க முடியும் என்று ஒவ்வொரு முறை அத்தையைப் பார்க்கும் போதும் எனக்குத் தோன்றும்.

"ப்படி ஆச்சு?" புதிதாக வந்தவர் யாரோ கேட்டது என் சிந்தனையைக் கலைத்தது.

"எங்கே?, எப்படி?, எப்போது?, எப்போ எடுக்கப் போறீங்க?, யாருக்காகக் காத்திருக்கீங்க?" இழவு வீடுகளில் பேச மக்களுக்கு வேறு எதுவுமே இருக்காதா? பேச வேண்டிய அவசியம் தான் என்ன? இறந்து போன ஆத்மாவை பற்றி நினைத்துப் பார்க்க மட்டும் யாருக்கும் மனம் வருவதில்லை.

அத்தை தனது கணவரின் மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போது அத்தைக்கு இருபது இருபத்தோரு வயது தானாம். மூன்று வருட மண வாழ்க்கைக்கு ஆதாரமாக, இரண்டு பெண் குழந்தைகள் கையில். பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்ற நம்பிக்கையைப் பொய்ப்பித்த ஒரே மகன் வயிற்றில். விபத்தில் உருக்குலைந்து மூட்டையாக எடுத்து வரப்பட்ட கணவனது உடலைப் பார்த்தும் அத்தை புலம்பவில்லையாம். ஒரு வரி நீரோடு அவள் பெற்றோரையும் மாமியாரையும் தேற்றியது பற்றி அம்மா கதை கதையாகச் சொல்லுவாள். தைரியத்துக்குப் பெயர் போனவள் அத்தை..

பாதி மலர்ந்த நித்ய மல்லிகளைப் பறித்தபடி பேசிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் இது பற்றி அவளிடம் கேட்டிருக்கிறேன்..

"அத்தை, மாமா இறந்தபோது எப்படி நீ அழாம இருந்த?"

அத்தை மெலிதான ஒரு புன்னகை பூத்தாள்.. ஒரு சுகமான வேதனை கலந்த புன்னகை.

"அவர் இன்னும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டு தானே இருக்கார்.. நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு" என்றாள். அதற்கு மேல் அவளைப் பேச வைக்க முடியவில்லை.


"ழுபத்தஞ்சு வயசு.. கல்யாணச் சாவு தான்!" யாரோ ஒரு நடுத்தர வயதுப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். எப்படியும் இந்தச் சாவு நமக்கு இப்போதைக்கு வராது என்னும் எண்ணம் தான் இப்படி எல்லாம் பேச வைக்கிறதா? அக்கம் பக்கம் பார்த்துப் பேச வேண்டாம்? இறப்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஒன்றிரண்டு வயதானவர்களின் முகங்களில் ஒரு பயம் படர்வதைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை இவளுக்கு ரொம்பவும் நெருக்கமான ஒருவரது இறப்பாக இருந்தால் அப்போதும் இப்படித் தான் சொல்வாளோ? அந்தப் பெண் என்னை ஒரு மாதிரி பார்த்தாள். ரொம்ப நேரமாக அவளையே முறைப்பதை உணர்ந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.

அத்தை இந்த மாதிரி பேசுபவர்களைத் தாங்கிக் கொள்ளவே மாட்டாள். ஒரு முறை கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஊனமுற்றவன் ஒருவனுக்கு உதவக் கூடாது என்று நான் சொன்னதற்காக என்னை உட்கார வைத்து அறிவுரை சொன்னாள். "நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்..இல்லைன்னா நீ என்கிட்டயும் பேசவே வேண்டாம்!!".

ஊனமுற்றவர்கள், முதியோர், சிறுவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அத்தையின் அன்பு ஒரு அமுத சுரபி. எல்லாத் திக்கிலும் பயணம் செய்ய வல்லது. இனிமேல் உன்னை எங்கே பார்க்கப் போகிறேன் அத்தை? உன் மடி மேல் தலை வைத்து உறங்கப் போவது எப்போது?

யாரோ என் தலையைத் தொட்டது போல் இருந்தது.. நிமிர்ந்து பார்த்தேன்.. ஜன்னல் வழியே அவள் வளர்த்த செம்பருத்திச் செடி.. காற்றுக்கு மோதியிருக்கிறது.. அத்தை இந்த அறையில் இன்னும் இருக்கிறாள். அதன் அடையாளம் தான் இந்தச் செடி என்று ஏனோ தோன்றியது..

"தோ அவன் தானா?" மீண்டும் யாருடைய குரலோ என்னை நினைவுலகுக்கு அழைத்து வந்தது..

"அவனே தான்.. உட்கார்ந்திருக்கான் பாரு.. கல்லுப் பிள்ளையார் மாதிரி.."

"எல்லாம் நேத்தி வரைக்கும் ஆட்டம் போட்டுகிட்டு தான் இருந்தா.. என்னிக்கு அடங்கி இருந்திருக்கா.. இவ ஆட்டம் தாங்காம தான் கட்டினவனும் சிக்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. " இது அத்தை மகள் சித்ராவின் மாமியார் குரல்.

அவள் பார்வை போன திசையைப் பார்த்தேன். அங்கே அத்தையின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தது சேகர் சார். சேகர் சாரை அத்தைக்கு அறிமுகம் செய்தது நான் தான்.

அத்தையை அவள் மகன், தங்கை சித்ரா வீட்டில் கொண்டு விட்ட புதிதில் அந்தப் பேரதிர்ச்சியைப் பகிர்வதற்கு ஆள் இல்லாமல் கொஞ்சம் மனம் வெறுத்துப் போயிருந்தாள். அந்த நாட்களில் வற்புறுத்தி நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற ஒரு மாலை வேளையில் சேகர் சார் வீடு, சித்ராவின் பக்கத்துத் தெருவில் தான் என்று தெரியவந்தது.

முதல் அறிமுகத்திலேயே இருவருக்கும் இடையில் ஒரு இயல்பான நட்பு மலர்ந்துவிட்டது எனலாம். இயல்பான நட்பு என்பதை விட இயற்கையான நட்பு என்பது தான் சரியாக இருக்கும். சேகர் சார் ஓய்வு பெற்ற தாவரவியல் ஆராய்ச்சியாளர். அத்தைக்கும் மரம் செடி, கொடி என்றால் உயிர். இயற்கையைப் பற்றிப் பேசத் தொடங்கினால் இருவருக்கும் நேரம் போவதே தெரியாது.

சேகர் சார் ஒரு மூலிகைத் தோட்டம் வேறு வைத்திருந்தார். அதில் தானே ஏதோ ஆராய்ச்சி செய்து இந்த வயதிலும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். பாதி நேரம் அத்தை கட்டுரைகளைப் பிழை திருத்தி அழகாக எழுதிக் கொடுப்பாள்.

இருவரும் மரங்கள், செடி கொடிகள் பற்றிப் பேசும்போது அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உலகம் எல்லாம் சுற்றி வந்த பேராசிரியருக்குச் சரிக்குச் சரியாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை பேசுவது ரொம்ப வியப்பளிக்கும் நிகழ்வு.

மழை இல்லாத மாலை வேளைகளில் இருவரும் சேர்ந்து நடை பயில்வதும் நடக்கும். புதுப் புது பாதைகளைத் தேர்ந்தெடுத்து நடப்பார்கள். அலுவலக வேலை மென்னியைப் பிடிக்காத பல நாட்களில் நானும் அவர்களிடையே நடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்களுக்குள் ஏதும் பேச்சு வார்த்தை இருக்காது. ஆனால் ஏதோ ஒரு கருத்தொருமித்த எண்ண ஓட்டம் இருக்கும். வெகுநேர மௌனத்துக்குப் பின் பேசத் தொடங்கும் போது இருவரும் ஒரே சொல்லையோ ஒரே கருத்தையோ சொல்லத் தொடங்கி அடுத்தவருக்காக நிறுத்துவது அடிக்கடி ஏற்படும். சொற்கள் அவசியமில்லாமல் போன மனதின் உரையாடல்கள் அவை.

சில சமயம் மதிய வேளைகளில் கூட சேகர் சார் வந்து சித்ரா வீட்டில் அமர்ந்திருப்பார். இருவரும் பேசும் போது பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் பேச்சுகளில் சித்ராவும் கலந்து கொள்வதுண்டு. சித்ரா மாமியார் தான் கொஞ்சம் முகத்தைச் சுளித்தபடி பார்த்துவிட்டுப் போவார். அத்தை இருக்கும் போது பேசத் துணியாத இவர்கள் எல்லாம் இன்று அவளது உடலை வைத்துக் கொண்டே பேசுகிறார்கள். அடுத்தவர் மனதைக் குத்திக் கிழிக்கும் சொற்களை அனாயாசமாகப் பேசும் இந்த நாகரிக சீமாட்டிகளை என்ன செய்வது?

மீண்டும் சேகர் சாரைப் பார்த்தேன். அவர் முகத்தில் அதே அமைதி இருந்தது. நடை பயிலும்போது இருக்கும் தீவிரமான கவனம். கனிவு, கூர்மையான பார்வை. அத்தை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை நேரம் இப்படி அமர்ந்திருந்தாரோ தெரியவில்லை. நானும் பேசாமல் இருந்தேன் என்றபோதும், அழுததில் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டிருந்தது. சேகர் சாரின் கண்களில் துளி கண்ணீரும் இல்லை. அத்தை உயிருடன் இல்லை என்பது அவருக்குத் தெரிந்ததா?

எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவன் இறந்த அன்று அவர் அழுதது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. யார் யாருக்கோ வருத்தப்பட்டவருக்கு இன்று அத்தைக்காக அழ மனமில்லையா என்ன? "கல்லுப் பிள்ளையார்" என்னும் பதத்துக்கு பொருள் புரிந்ததில் எனக்கே ஒரு மாதிரி தான் இருந்தது.

சேகர் சார் சாரின் நீடித்த பார்வைத் தவம் சற்றே கலைந்தது. மெல்ல ஆம் என்பதாகத் தலையை ஆட்டினார். அதன் பின் திரும்பி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இதற்குள் வாசலில் அரவம் கேட்டது. அத்தையின் ஒரே மகன் சரவணன் வந்துவிட்டான். சேகர் சார் மெதுவாக விலகி வெளியில் போய்க் கொண்டிருந்தார்.

சரவணன் தாம் தூம் என்று வந்தான்.. "அம்மாவுக்கு இப்படி ஆய்டுச்சே.. என் பக்கத்துல இருக்கும் போது இப்படி ஆகி இருக்கக் கூடாதா" இன்னும் எதேதோ! இருக்கும் போது வந்து பார்க்கத் தெரியவில்லை.. இப்போது போலியான அழுகை.. போலியான கவலை.. என்னைச் சுற்றி இருக்கும் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லை.. எல்லாமே பொய் முகங்கள்.

சேகர் சாருடன் ஏதோ ஒன்று அந்த அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டதாகத் தோன்றியது. நானும் அந்தக் களேபரங்களிலிருந்து தப்பி வாசலுக்கு வந்தேன். சார் வாசலில் வழக்கமாக அத்தை அமர்ந்து பேசும் ஊஞ்சலுக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். யாரோ பேசுவதைக் கேட்பது போல் ஒரு பாவனையில் கண்மூடி அமர்ந்து கொண்டிருந்தார்.
மெல்ல அருகில் சென்று அவரைத் தொட்டு எழுப்பினேன்.

"அழுதுடுங்க சார்!" இங்கு வந்தது முதல் நான் பேசிய முதல் வாக்கியம்..

சார் ஏதோ சிந்தனை கலைந்த கேள்வி பொதிந்த கண்களுடன் நிமிர்ந்தார். என் கண்களில் விடை கிடைத்திருக்க வேண்டும்.

"ஏன் அழணும்? அழுதா சந்திராவுக்குப் பிடிக்காது. சந்திராவுக்கு ஒண்ணும் ஆகலை." என்றபடி மெல்லத் திரும்பி ஊஞ்சலைப் பார்த்தார் "இதோ என்கிட்ட பேசிகிட்டு தான் இருக்கா. நானும் இல்லாமல் போனால் ஒரு வேளை அவள் இறந்து போகலாம். அதுவரை இங்க தான் இருக்கா." கணீரென்று தொடங்கிய குரல் மென்மையாக முடிந்தது. அவரது பார்வை தொடர்ந்து அந்த ஊஞ்சலைத் தடவிக் கொடுக்கத் தொடங்கியது.

பதில் சொல்ல எதுவுமில்லாமல், வழக்கமாய் நான் உட்காரும் நாற்காலியில் சாய்ந்தேன். அதே தென்றல் இந்த முறை ஊஞ்சலை லேசாக ஆட்டிவிட்டு நித்திய மல்லியின் பூக்களை என் தலையில் தூவி விட்டுச்சென்றது. சாருடன் சேர்ந்து அத்தையும் ஊஞ்சலுக்கு வந்து விட்டாள் போலும்.

ன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.

[மீண்டும் படித்து பின்னூட்டங்களில் சொல்லப் பட்ட மாற்றங்களைச் செய்த நாள்: அக் 05,2006 ]

96 comments:

Unknown said...

//நடுவீட்டில் படுப்பது அவளுக்குப் பிடிக்காது. என்ன செய்ய?//
//சேகர் சாருடன் ஏதோ ஒன்று அந்த அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டதாகத் தோன்றியது//
//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//
இந்த தடவை முதல் பரிசை விடறதில்லைனு முடிவே பண்ணிட்டீங்க போலிருக்கு. நல்ல வார்த்தை பிரயோகங்கள்!!

நாமக்கல் சிபி said...

இப்போது நேரமின்மையால் முழுமையாய்ப் படிக்கவில்லை.

பிறகு கருத்து கூறுகிறேன்.

இப்போதைக்கு ஆல் தி பெஸ்ட்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பிரிந்தால்தானே சேர்வதற்கு, மறந்தால்தானே நினைப்பதற்கு..
ஏனோ இதனை ஞாபகப் படுத்தியது.

நன்றாக இருக்கிறது. போட்டிக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//
கதை நன்றாக இருந்தது பொன்ஸ் ...கூடவே சேகர் சாரையும் கொன்றுவிட்டீர்கள் ... கொஞ்சம் கூட வருத்தமில்லை... சேகர் சார் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் இருக்கும்வரை அவர் இறந்தார் என்று எப்படி சொல்லமுடியும் என்று இன்னொமொரு கதாபாத்திரம் சொல்லிக்கொண்டு மறைவாக இருப்பதும் எனக்கு தெரிந்த ரகசியம்

ilavanji said...

பொன்ஸ்,

அதானே பார்த்தேன்! பொன்ஸ்சை இன்னும் காணோமே... என்ன புலி பதுங்குதேன்னு! :)

அருமையான கதை... கதை அமைப்பும் தெளிவான நடையும் சிறப்பு!

நீங்க, சிபியார், இளா, கோவிண்னு வவாசங்க ஆளுங்க சும்மா வெளிப்பார்வைக்கு அலம்பல் பண்ணிட்டு போட்டின்னா மட்டும் இந்த போடு போடறீங்களேயப்பு! :)))

போட்டிக்கான வாழ்த்துக்கள்!

இயற்கை நேசி|Oruni said...

ஒரே சிட்டிங்கில் படிச்சு முடிச்சுட்டேன், ஆனால் ரொம்ப கனமாக இருப்பதால் பொன்ஸ் காலையில் விரிவான பின்னூட்டம் போடுறேன்... You killed Sekar saar too :(

ரொம்ப க்ளாசிக்க வந்திருக்கு...

theKa

மனதின் ஓசை said...

இந்தக் கதையில் இவர்களின் இறப்பை விட எனக்குள் தக்கத்தை எற்படுத்தியவை

//
இறந்து போன ஆத்மாவை பற்றி நினைத்துப் பார்க்க மட்டும் யாருக்கும் மனம் வருவதில்லை.

அக்கம் பக்கம் பார்த்துப் பேச வேண்டாம்? இறப்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஒன்றிரண்டு வயதானவர்களின் முகங்களில் ஒரு பயம் படர்வதைப் பார்க்க முடிந்தது

நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்

அடுத்தவர் மனதைக் குத்திக் கிழிக்கும் சொற்களை அனாயாசமாகப் பேசும் இந்த நாகரிக சீமாட்டிகளை என்ன செய்வது?
//

பலர் வாழும் போலியான வாழ்க்கையையும், ஒரு சிலர் வாழும் உண்மையான வாழ்க்கையையும் பிரித்து காட்டி உள்ளீர்கள்.. அழகாகவே..

என் வோட்டு உங்களுக்கும் நிச்சயம் உண்டு....
வெற்றி பெற வாழ்த்துக்கள். :-)

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், அருமையா இருக்கும்மா.
எப்பவோ ஒரு அசட்டுப் பெண், யுத்தத்தில் இறந்த காதலனுடன் தான் குடித்தனம் நடத்தப்போவதாகப் படித்தது நினைவு வந்தது.
அத்தையும் சேகர் சாரும் உலாப் போய்க்கொண்டு இருப்பாங்க.
அவர்கள் பெறாமல் பெற்ற மகள்
நீங்க, அவங்களை நினைச்சுப்பீங்க.
வாழ்த்துக்கள்.

Udhayakumar said...

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//

:-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Prasanna said...

கதை அருமையா இருந்தது.. இத தவிர என்ன சொல்லனு தெரியல.. கதாபத்திரங்கள் உணர்ந்த மாதிரியே அந்த மரணங்களை எங்களையும் உணர வெச்சுட்டீங்க..

அருள் குமார் said...

பொன்ஸ்,
ஒரு நல்ல சிறுகதைக்கான எல்லா இலக்கணங்களும் இந்த கதையில் இருக்கு. கடைசி வரிகள் மனதில் ஒரு அழகான பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

வாழ்த்துக்கள் :)

ஏங்க, இப்படில்லாம் கலக்கினா நாங்கல்லாம் எழுதறதா வேணாமா? :(

நன்மனம் said...

அருமையான வார்த்தை பிரயோகங்கள்.

மரணத்தை எதிர் நோக்கும் இருவகை மக்களின் எண்ணங்கள்

//"எழுபத்தஞ்சு வயசு.. கல்யாணச் சாவு தான்!" யாரோ ஒரு நடுத்தர வயதுப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். //

//இறப்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஒன்றிரண்டு வயதானவர்களின் முகங்களில் ஒரு பயம் படர்வதைப் பார்க்க முடிந்தது. //

அருமையாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ALIF AHAMED said...

##"அவர் இன்னும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டு தானே இருக்கார்.. நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு" என்றாள் ##

இறந்து போனது சேகர் மட்டுமா ?

மூன்று பேரை போட்டு தள்ளிட்டிங்க..

உயிரோட்டமுல்ல மரண கதை வாழ்த்துக்கள் வெற்றி பெற........

பொன்ஸ்~~Poorna said...

//இந்த தடவை முதல் பரிசை விடறதில்லைனு முடிவே பண்ணிட்டீங்க போலிருக்கு. // ரமணி, அட நீங்க வேற.. இது நல்ல டாபிக்.. இன்னும் நிறைய வரும்னு நினைக்கிறேன்

சிபி, பொறுமையா வாங்க..

நன்றி செந்தில் குமரன்

லதா said...

ஆகஸ்ட் மாத முதல் வார தமிழோவிய இணைய இதழின் சிறப்பு ஆசிரியருக்கு வாழ்த்துகள்
:-)

பொன்ஸ்~~Poorna said...

கோவி, சேகர் சார் இறந்து தானே ஆகணும்.. எல்லாத்துக்கும் ஒரு முடிவு..
//அவர் இறந்தார் என்று எப்படி சொல்லமுடியும் என்று இன்னொமொரு கதாபாத்திரம் சொல்லிக்கொண்டு// நீங்க சொன்னது மாதிரி சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அது உண்மை இல்லை..

நன்றி வாத்தியார் //வெளிப்பார்வைக்கு அலம்பல் பண்ணிட்டு போட்டின்னா மட்டும் இந்த போடு போடறீங்களேயப்பு!// எல்லாம் நீங்க கொடுத்த தலைப்பு மகிமை தான்.. சூப்பர் தலைப்பா கொடுத்துட்டீங்க.. :)

ஊருணி, வாங்க காலைல வந்து பாருங்க.. //You killed Sekar saar too // - What to do? :(

பொன்ஸ்~~Poorna said...

நன்றி மனதின் ஓசை.. நல்ல லைன் எல்லாம் பிடிச்சிட்டீங்க..

//யுத்தத்தில் இறந்த காதலனுடன் தான் குடித்தனம் நடத்தப்போவதாகப் படித்தது நினைவு வந்தது.// இந்தக் கதை படிச்சதே இல்லை மனு.. நல்லா இருக்கும் போலிருக்கே..

உதய்.. அதுல என்னங்க சிரிப்பு?!!

பொன்ஸ்~~Poorna said...

நன்றி பிரசன்னா. ஓட்டு போட்டுருவீங்க தானே?

அருள், எழுதுங்க.. நீங்க எப்படி கலக்குவீங்கன்னு தெரியாதா?!! சரி, இதென்ன சின்ன வயசு போட்டோ.. நாகு தான் இப்படி வச்சிருப்பாரு.. இதுவும் நல்லாத் தான் இருக்கு.. ஆனா ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்.. அருள்னு பேர் வருது, சின்ன வயசு போட்டோன்னு :)

நன்றி நன்மனம்.. //மரணத்தை எதிர் நோக்கும் இருவகை மக்களின் எண்ணங்கள்// இது தான் முக்கியமா வரணும்னு நினைச்சேன்.. வந்திருக்கு போலிருக்கு

ஜயராமன் said...

அற்புதமான கதை.

தங்கள் பதிவை முதன்முறையாக படிக்கிறேன் என்று நினைக்கிறேன். எதேச்சையாக பார்த்தேன். பார்த்தோமே என்று சந்தோஷப்பட்டேன்.

தங்கள் வார்த்தைகள் படிப்பவரை அனாயாசமாய் தாக்குகின்றன. இளம் விதவை, முதிர் நட்பு, பொறுப்பில்லா பிள்ளை என்று stereotype அமைப்பிருந்தாலும், சின்ன கதையில் புதிய விஷயத்தை அற்புதமாக வைத்து கதைக்கு ரொம்பவும் புஷ்டியாக இருக்கிறது.

வாழ்த்துக்கள். எனக்கு தேன்கூடு போட்டி பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், இந்த கதை வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன்

நன்றி

பொன்ஸ்~~Poorna said...

//உயிரோட்டமுல்ல மரண கதை // விமர்சனமே நல்லா பண்றீங்களே மின்னல், நீங்களும் எழுதலாமே!!
கடைசியா நீங்க ஏதும் சொல்றா மாதிரி ஒரு பதிவு போட்டுட்டோமா? :)

லதா!!!! நீங்க சொன்னதே எனக்கு பயங்கர மகிழ்ச்சிங்க.. வழக்கமா உங்க, இன்னும் சிலரோட விமர்சனம் தான் ரொம்ப எதிர்பார்ப்பேன்.. ஒண்ணும் சொல்றதுக்கே இல்லையா இந்தக் கதைல?!!! (குறைகள், நிறைகள்னு பிரிச்சி சொல்ல...)

அருள் குமார் said...

//ஆனா ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்.. அருள்னு பேர் வருது, சின்ன வயசு போட்டோன்னு :) //ஆஹா... ஆரம்பிச்சிடீங்களா?

அது என் மனசொட போட்டோங்க. எப்பவும் அப்படித்தான் இருக்கும் :)

ALIF AHAMED said...

##
விமர்சனமே நல்லா பண்றீங்களே மின்னல், நீங்களும் எழுதலாமே!!
##

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் நெறையா பேரு ரனகளமா அலையுராங்கா நா வேற வரனுமா?? வேனா அழுதுடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ் ::))

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள், பொன்ஸ்.;). போட்டி பலமா இருக்கும் போல இருக்கே.

மா சிவகுமார் said...

பொன்ஸ்,

இந்தச் சிறுகதையும் சரி, வளர்சிதை மாற்றம் சிறுகதையும் சரி, வாழ்வின் மென்மையன உணர்வுகளை சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மூலம், எளிமையான உரையாடல்கள் மூலம் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறீர்கள். (சொல்வது கொஞ்சம் அதிமாகப் பட்டாலும்) உங்கள் நடை தி ஜானகிராமனைப் போல உள்ளது. அவரது கதைகளைப் படித்திருக்கிறீர்களா? மிகப் பெரிய உணர்வுகளை சாதாரணமாக சொல்லி விட்டுப் போய் விடுவார். படிப்பவர்கள் மனதைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். உங்கள் எழுத்து அதே தாக்கத்தை சிறிய அளவில் தருகிறது. இன்னும் கொஞ்சம்/நிறைய பயிற்சியில் எங்கேயோ போய் விடுவீர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

லதா said...

// லதா!!!! நீங்க சொன்னதே எனக்கு பயங்கர மகிழ்ச்சிங்க.. வழக்கமா உங்க, இன்னும் சிலரோட விமர்சனம் தான் ரொம்ப எதிர்பார்ப்பேன்.. ஒண்ணும் சொல்றதுக்கே இல்லையா இந்தக் கதைல?!!! (குறைகள், நிறைகள்னு பிரிச்சி சொல்ல...) //
:-)))
இதோ - போட்டுத் தாக்கிடுவோம்:-)

//சி(?)க்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. "
இது சித்ராவின் மாமியார் குரல்.
//
சித்ரா யாருங்க ? கதைசொல்லிக்குத் தெரிந்திருக்கலாம். எங்களுக்கு எப்படிங்க தெரியும் ?

// அவள் மகன் சித்ரா வீட்டில் கொண்டு விட்ட புதிதில் //
எங்கோ ஏதோ குறைகிறதே
:-)

//
சில சமயம் மதிய வேளைகளில் கூட சேகர் சார் வந்து சித்ரா வீட்டில் அமர்ந்திருப்பார். இருவரும் பேசும் போது பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் பேச்சுகளில் சித்ராவும் கலந்து கொள்வதுண்டு. சித்ரா மாமியார் தான் கொஞ்சம் முகத்தைச் சுளித்தபடி பார்த்துவிட்டுப் போவார்.
//
இருவரும் - அத்தையும் சேகர் சாரும்தானே ? அத்தைக்கும் சித்ராவிற்கும் என்ன உறவு ? அந்தவீட்டில் சித்ராவின் மாமியார் எப்படி வருகிறார்?

//அலுவலக வேலை மென்னியைப் பிடிக்காத பல நாட்களில்

எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவன்
//
கதை சொல்லி வேலை செய்வது அலுவலகத்திலா ? கல்லூரியிலா ?
செந்திலின் வாழைப்பழ நகைச்சுவை போல் இதுதான் அதுவா:-)

// உண்மையான அக்கரை //
பொய்யான அக்க*றை*யா ?

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து ***சந்திரா அத்தை*** செத்துப் போனாள். //

செத்துப்போனது சேகர் சார் என்பதைத்தானே அப்படி எழுதினீர்கள் என்று கோனார் விளக்க உரை எழுதலாம்தானே?
:-)))

மலைநாடான் said...

/சித்ரா யாருங்க ? கதைசொல்லிக்குத் தெரிந்திருக்கலாம். எங்களுக்கு எப்படிங்க தெரியும் ?
/

அதத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேங்க

VSK said...

//"நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்..இல்லைன்னா நீ என்கிட்டயும் பேசவே வேண்டாம்!!".//


இப்படி எல்லாம் டிஸ்கி கொடுத்து பயமுறுத்திட்டு, குறையெல்லாம் சொல்லுங்கன்னா எப்படிங்க சொல்றது??!! :))

வழக்கமான, [செயற்கையான, ஆனால்,] நல்ல கதை நடை!

விரும்பினால் மற்றவை பின்!

வாழ்த்துகள்!

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே,

அது அத்தையோட கருத்து.. எனக்கு அப்படி ஒரு நிலைப்பாடும் கிடையாது. என்ன வேணா சொல்லுவேன்.. எது சொன்னாலும் கேட்டுக்குவேன் - எல்லைகள் எல்லாருக்கும் இருக்கும், என்னுடைய எல்லை கொஞ்சம் விரிஞ்சது தான்.. அத்தையை விட..

பொதுவா குறைகளைச் சொன்னா நல்லாத் தான் இருக்கும்.. சொல்லுங்க.. லதா கிட்டயே கேட்டு வாங்கலியா? சும்மா சொல்லுங்க

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பொன்ஸ், இயல்பான ஓட்டத்தோடு கதை நன்றாக இருக்கிறது. நகர்த்திச் சென்ற விதம் அழகு. வாழ்த்துக்கள்.

கீழே இருப்பது போன்ற நீண்ட வாக்கியத்தில் சற்றுக் குழப்பம் உண்டாகிறது. படித்தபின், மூச்சு விட வேண்டியிருக்கிறது :-) கவனிக்கவும்.

>>>>அவள் மகன் சித்ரா வீட்டில் கொண்டு விட்ட புதிதில் அந்தப் பேரதிர்ச்சியைப் பகிர்வதற்கு ஆள் இல்லாமல் கொஞ்சம் மனம் வெறுத்துப் போயிருந்த அத்தையை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற ஒரு மாலை வேளையில் சேகர் சார் வீடு சித்ராவின் பக்கத்துத் தெருவில் தான் என்று தெரியவந்தது.
>>>>

G Gowtham said...

வணக்கம் பொன்ஸ்,
நான் வலைப்பக்கம் புதுசு!
உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது.
அடர்வாகவும் அதே நேரம் பயமுறுத்தாமலும் இருப்பதாக கருதுகிறேன்.
வெகு ஜனப் பத்திரிகைகளில் எழுதி இருக்கிறீர்களா?

இலவசக்கொத்தனார் said...

நல்ல ஆட்டம். (good show)

Thekkikattan|தெகா said...

பொன்ஸு,

//யாரோ என் தலையைத் தொட்டது போல் இருந்தது.. நிமிர்ந்து பார்த்தேன்.. ஜன்னல் வழியே அவள் வளர்த்த செம்பருத்திச் செடி.. காற்றுக்கு மோதியிருக்கிறது.. அத்தை இந்த அறையில் இன்னும் இருக்கிறாள். அதன் அடையாளம் தான் இந்தச் செடி என்று ஏனோ தோன்றியது...//

இயற்கையை சார்ந்த அனைத்தும் நம்முடன் Consciousness-வுடனேயே வாழ்கிறது என்பதனை எவ்வளவு mindfulness-வுடன் நீங்கள் வாழ்ந்திருந்தால் அப் பெரும் கூற்றை இவ்வளவு எளிமையாக
"அத்தையின் மரணத்திற்கு,

தலைவருடி

ஆருதல் கூறும்

செம்பருத்திக் கொடி

...காற்றுக் காதலனுடன்...!"

என்ற கவிதை நயத்துடன் கூறியிருக்க முடியும். இந்த சிறுகதை, இது சிறு கதையா(?), பல மனிதர்களின் முகத்திரையை கிழித்து வெட்ட வெளிச்சத்தில் துடிக்கத் துடிக்க முச்சந்தியில் சாய்த்து வைத்திருக்கிறது, எந்த எழுத்துப் பாசாங்குத்தனமுமில்லாமல்...

இந்த வயதிற்கு இவ்வளவு முதிர்ச்சியா? அப்படியெனில் இன்னும் இருக்கப் போகும் காலங்களில்... நிறையெ புத்தகங்கள் எதிர்காலத்தில் படிக்கப் போகிறேன் என்பது இங்கேயே தெரிகிறது.

வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

முதல் வருகைக்கு நன்றி ஜயராமன், // சின்ன கதையில் புதிய விஷயத்தை அற்புதமாக வைத்து கதைக்கு ரொம்பவும் புஷ்டியாக இருக்கிறது.// நன்றி, நீங்க சொன்ன ஸ்டீரியோ டைப் எல்லாம் அதிகம் போர் அடிக்கக் கூடாது என்று தான் ரொம்பவும் விளக்கவில்லை..

//ஆரம்பிச்சிடீங்களா?// :)) // என் மனசொட போட்டோங்க// நெனைப்ஸ்..!!! ;)

இளா, போட்டி பலமா இருந்தாத் தானே நல்லா இருக்கும்.. இன்னும் தேவ் வேற திரும்பி வந்துட்டார் போலிருக்கு.. அருள் வேற எழுதப் போறாரு.. இன்னும் அதிக போட்டி எதிர்பார்க்கணும்..

பொன்ஸ்~~Poorna said...

சிவகுமார்,
உண்மையைச் சொல்வதானால், உங்களை மாதிரி பதிவர்கள் வந்து பின்னூட்டம் இடும்போது தான் என் கதை ஏதோ நல்லா இருக்கு போலிருக்கு என்னும் எண்ணம் உண்டாகிறது.. உங்களைத் தள்ளி வைத்துப் பார்க்கவில்லை.. ஆனால் இது என் எண்ணம்..

தி.ஜா.ர, நான் அதிகம் படித்ததில்லை.. "அம்மா வந்தாச்சு" மட்டும் தான் படித்திருக்கிறேன். (அவருடையது தானே? :))

யாருடைய நடையையும் சாராமல், இயல்பாக எழுத வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். என் பழைய கதைகளில் உரையாடல்கள் கதையின் உணர்வைக் கெடுத்து விடுவதாக சில விமர்சனங்கள் வந்தது.. அதனால் தான் இந்தக் கதையை அதிகம் உரையாடாமல் எழுத முயற்சித்தேன்..

பொதுவாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ஒரு பாத்திரத்தின் கண்ணோட்டத்திலிருந்து எழுதுவதால் கூட appealing-a இருக்கலாம்.. தொடர்ந்து இதே மாதிரி முயற்சிக்கிறேன்.. நீங்க சொன்னதுக்குப் பிறகு ஆர்வம் அதிகரிக்கிறது.. :)

பொன்ஸ்~~Poorna said...

எண்ணமெனது, நன்றிங்க.. :)

லதா.. என்னங்க இது.. கேட்டேன்னுட்டு கமா, எழுத்துப் பிழை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறீங்க.. சரி சரி... எல்லாம் என்னோட favour பாங்க்ல இருக்கிறது தான் வரும்.. ;)

1. இந்தக் கதைல சித்ரா யாராய் இருந்தா என்ன? உண்மையில் சித்ரா அத்தையின் ஒரு மகள். அப்படி ஒரு லைன் மேல இருந்தது. எப்படியோ திரும்பித் திரும்பி சரி பார்த்ததில் மிஸ் ஆகி இருக்கு..

2. சார் என்றும், ஆராய்ச்சியாளர் என்றும் சொல்லி விட்டால், கதை சொல்லிக்கும் சேகருக்கும் உள்ள உறவு கல்லூரி/பள்ளி உறவாகத் தான் இருக்க வேண்டும் என்று புரியும் என்று நினைத்தேன். எப்படி இருந்தாலும் கதை சொல்லியின் பின்புலம் இந்தக் கதைக்கு அத்தனை வலு சேர்க்காது என்று தோன்றியது.

மலை நாடன், உங்களுக்கும் விளக்கம் ஓகேவா?

பொன்ஸ்~~Poorna said...

எஸ்.கே, உங்களுக்கு அப்போவே சொல்லிட்டேன்.. இருந்தாலும், இந்தக் கதையின் செயற்கைத்தனம் எங்க வருது என்று தான் எனக்குப் புரியவில்லை.. அது மட்டும் சொல்லுங்க..

செல்வராஜ், முதல் வருகைக்கு நன்றி, நீங்க சொன்ன வாக்கியம் பெரிதாகப் போனது உண்மைதான். அதை எழுதும்போதே கவனிச்சேன். ஆனா, சின்னச் சின்னதா உடைச்சுப் போட்டா அது ஒரு மாதிரி ஒட்டலை.. அதான், அப்படியே விட்டு விட்டேன்.. இருந்தாலும் அடுத்த முறை கவனமாக இருக்கிறேன் :)

வாங்க கௌதம், புதுசுங்கறீங்க, வலைபதிவுல ஏதாச்சும் உதவி தேவைன்னா கேளுங்க.. அப்புறம், நானெல்லாம் சும்மா போரடிச்சா கதை எழுதும் கேஸு.. பத்திரிக்கைல எல்லாம் எழுதினது இல்லை.. ஏதோ ஒண்ணு ரெண்டு நல்லா இருக்கும்.. அம்புட்டுத் தான்.. :)

நாமக்கல் சிபி said...

பொன்ஸ் கதை அருமை.
ஆனால் எல்லோருமே இதே மாதிரி மரணத்திற்கு பிறகு வீட்டில் நடப்பதையே எழுதினால் நீங்கள் வெற்றி பெறுவது கொஞ்சம் கஷ்டம் தான்.
இனிமேல் கதை எழுதுபவர்கள் கதை களத்தை மாற்றி எழுதுங்கள். அப்போழுதுதான் எங்களைப் போல் வெட்டியாக இருப்பவர்களுக்கு படிக்க வசதியாக இருக்கும்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

manasu said...

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//

கடைசி வரிகள்தான் கதைக்கே உயிர்!?!?

பாவூரான் said...

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்//

இந்த வரிகளை வாசிக்கும் வரை , இது ஏதோ உண்மைச் சம்பவம் என நினைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

அத்தை என்ற சொல் தான் என்னை உங்கள் பதிவிற்கு இழுத்து வந்தது.

அத்தையை ஏன் சாகடித்தீர்கள், சந்திரா அத்தை மட்டுமல்ல , எந்த அத்தையும் சாவதில்லை, நாம் சாகும்வரை.

தருமி said...

ஒளி மயமான எதிர்காலம் என் கண்ணில் தெரிகிறது...
வாழ்த்துக்கள்...

ராபின் ஹூட் said...

ரெம்ப நல்லா இருக்குதுங்க.
//அவர் இன்னும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டு தானே இருக்கார்.. நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு//
இந்த வரிகளின் மூலம் மரணத்திற்கே மரணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.
முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்.

மணியன் said...

அருமையான கதை. இத்தனைபேர் அக்குவேர் ஆணிவேராக அலசிய விமரிசனத்திற்குப் பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது. வளரும் பயிர் முளையிலே தெரிகிறது !
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தேன்கூட்டிற்கு நன்றி.

Unknown said...

:( ---> :) ---> :(

வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், நன்றி.. :)

தெகா, வர வர கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க.. // என்பதனை எவ்வளவு மைண்ட்புல்னெஸுடன் நீங்கள் வாழ்ந்திருந்தால் // அதெல்லாம் இந்தக் கதை சொல்லியோட எண்ணங்கள் தான் தெகா..

கப்பி | Kappi said...

//ஒன்றிரண்டு வயதானவர்களின் முகங்களில் ஒரு பயம் படர்வதைப் பார்க்க முடிந்தது
//

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்//

அருமையான கதை..

வாழ்த்துக்கள் பொன்ஸ்..

பொன்ஸ்~~Poorna said...

வெட்டிப்பயல்,
நன்றிங்க..
//ஆனால் எல்லோருமே இதே மாதிரி மரணத்திற்கு பிறகு வீட்டில் நடப்பதையே எழுதினால் நீங்கள் வெற்றி பெறுவது கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல் கதை எழுதுபவர்கள் கதை களத்தை மாற்றி எழுதுங்கள். //
இந்த மரண வீட்டில் பார்ப்பதை எழுதுவதற்கு நிறைய இருக்கும்ங்க.. எல்லாரும் எழுதட்டும்... அப்போ தானே நல்லா இருக்கும்..

// அப்போழுதுதான் எங்களைப் போல் வெட்டியாக இருப்பவர்களுக்கு படிக்க வசதியாக இருக்கும்...//
வெட்டியா இல்லாம, பேசாம நீங்களும் இப்படி ஏதாவது எழுதுங்களேன்?!! இன்னும் 10 நாள் இருக்கே..

பொன்ஸ்~~Poorna said...

மனசு,
அவ்வளவு தான்னு சொல்றீங்களா? :)

பாவூரான்,
//இந்த வரிகளை வாசிக்கும் வரை , இது ஏதோ உண்மைச் சம்பவம் என நினைத்து வாசித்துக்கொண்டிருந்தேன். //
இது ஒரு முழு உண்மைச் சம்பவம் இல்லீங்க.. கொஞ்சம் புனைவு, கொஞ்சம் உண்மை..

//அத்தையை ஏன் சாகடித்தீர்கள், சந்திரா அத்தை மட்டுமல்ல , எந்த அத்தையும் சாவதில்லை, நாம் சாகும்வரை. //
உண்மை தான்.. இந்தக் கதை அதைத் தானே சொல்லுது.. உங்க அத்தைக்கு என் வாழ்த்துக்கள் :)

முத்துகுமரன் said...

நானும் போட்டியில் கலந்து கொள்ள நினைத்திருப்பதால் கதையை(யாருடைய கதையையும்)வாசிக்கவில்லை. வந்திருக்கும் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் போது கனமான கதை என்றே புரிகிறது. நண்பர்கள் விருப்பப்படியே முதல் பரிசு பெற வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

அருமையான கதை பொன்ஸ்!

நிறைய இடங்களில் கனமான இறுக்கமான நினைவுகளை எளிமையான வார்த்தைகளைக் கொண்டு சொல்லி இருக்கிறீர்கள்..

இப்பொதைக்கு இவ்வளவே!

(மீண்டும் தெளிவாக(!?) வந்து பின்னூட்டம் இடுகிறேன். அவ்ளோ ஃபீல் ஆயிடுச்சுங்க)

Sivabalan said...

பொன்ஸ்

கதை நல்லாயிருக்கு.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

பொன்ஸ்~~Poorna said...

தருமி,
ஊருக்குப் போய்த் தான் படிப்பீங்கன்னு நினைச்சேன். இத்தனை சீக்கிரம் படிச்சதுக்கே ரொம்ப நன்றி, வாழ்த்துக்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் :)

//இந்த வரிகளின் மூலம் மரணத்திற்கே மரணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.
முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்// நன்றி ராபின், ஓட்டு போடுங்க.. மறக்காம :)

பொன்ஸ்~~Poorna said...

மணியன், //இத்தனைபேர் அக்குவேர் ஆணிவேராக அலசிய விமரிசனத்திற்குப் பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது// இதுவரை வந்தது இல்லாம, வேற ஏதும் குறை இருந்தாலும் சொல்லுங்க.. :) வாழ்த்தியதற்கு நன்றி

தேவ்,
//:( ---> :) ---> :(// :)))
தேவதைக்கு :))))

manasu said...

//மீண்டும் தெளிவாக(!?) வந்து பின்னூட்டம் இடுகிறேன்//

சிபி ராத்திரியே இவ்ளோ தெளிவுவா!!!!!!

பொன்ஸ் அந்த ரெண்டு வரிதான் மரணத்துகே உயிர் தருது.??
திருப்பதிக்கே லட்டு மாதிரி.

துளசி கோபால் said...

யம்மாடி ,

அருமை.

வேற ஒண்ணூம் சொல்லத்தெரியலை.
அக்கு வேறு, ஆணிவேறு எல்லாம் கிடையாது.

வாழ்த்து(க்)கள்.

வெற்றி said...

பொன்ஸ்,
வேலைப்பளுக்கள் காரணமாக இப்போது தான் உங்கள் கதையைப் படிக்க முடிந்தது. மிகவும் அருமையாக, ஆவலைத்தூண்டும் வகையில் கதையை நகர்த்தியுள்ளீர்கள். ஏதோ அயல்வீட்டில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது இக் கதையைப் படிக்கும் போது.

//வெகு நேர மௌனத்துக்குப் பின் பேசத் தொடங்கும் போது இருவரும் ஒரே சொல்லையோ ஒரே கருத்தையோ சொல்லத் தொடங்கி அடுத்தவருக்காக நிறுத்துவது அடிக்கடி ஏற்படும். சொற்கள் அவசியமில்லாமல் போன மனதின் உரையாடல்கள் அவை.//

உண்மையான அன்புடன் பழகுபவர்கள் ஒருவரையொருவர் நன்றாகவே புரிந்திருப்பர். இதை அழகாக அன்றே என் அபிமானக் கவி பாடலாகப் புனைந்திருந்தார்:

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

பொன்ஸ்,
உங்க கதையெல்லாம் படிச்சிட்டு எங்களுக்கு போட்டியில கலந்துக்கற தைரியம் வருமா?
(கதை எல்லாம் எழுத வந்தா எழுத மாட்டோமா? :-))

பொன்ஸ்~~Poorna said...

நன்றி கப்பிப் பய :)

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி முத்துகுமரன்.. உங்க ஆக்கத்தை வெளியிட்டபின் படித்துப் பார்த்து இது எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்.. :).

ILA (a) இளா said...

//என்னுடைய வரப்பில் நீங்க இட்ட பின்னூட்டம்//
பொன்ஸ்-என்னோட கதையை ஒரே லைன்ல எழுதி முடிச்சிட்டீங்க!!!
அட போங்க, சபை அடக்கம் உங்களுக்கு ரொம்பவே அதிகம்.

பொன்ஸ்~~Poorna said...

//மீண்டும் தெளிவாக(!?) வந்து பின்னூட்டம் இடுகிறேன். அவ்ளோ ஃபீல் ஆயிடுச்சுங்க)// அச்சோ சிபி.. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்கப்பா!!

நன்றி சிவபாலன்..

பொன்ஸ்~~Poorna said...

மனசு, //திருப்பதிக்கே லட்டு மாதிரி. // :))

துளசி அக்கா, //அருமை.// தாங்க்ஸ் :)

//ஏதோ அயல்வீட்டில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு //
ஆகா வெற்றி, நம்ம வீட்டு சம்பவம்னு சொல்வீங்கன்னு நினைச்சேனே.. இதைத் தான் எஸ்கே செயற்கைன்னு சொல்றாரோ?!!! ம்ம்.. ஒருமுறை படிச்சிப் பார்க்கிறேன்..
//"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."//
ம்ம்.. கதை ஓரளவு அதைத் தான் சொல்லுது.. வாழ்த்துக்களுக்கு நன்றி :)

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்,
உங்க கதையெல்லாம் படிச்சிட்டு எங்களுக்கு போட்டியில கலந்துக்கற தைரியம் வருமா?
(கதை எல்லாம் எழுத வந்தா எழுத மாட்டோமா? :-))
//
வெட்டிப்பயல், உங்களுக்கு ஆனாலும் தன்னடக்கமுங்க.. நீங்க கதை எழுதி அது தேசிபண்டிட்ல வேற வந்தாச்சு.. அப்புறமும் கதை எழுத வராதுங்கறீங்க?!! அட போங்க..

//அட போங்க, சபை அடக்கம் உங்களுக்கு ரொம்பவே அதிகம். //
இல்லை இளா, அது உண்மையா சொன்னது தான்.. முன்னமே படிச்சிருக்கணும் உங்க பதிவை.. ஏனோ மிஸ் பண்ணிட்டேன்..

நாமக்கல் சிபி said...

பொன்ஸ் அக்கா,
அது சும்மா சின்ன பசங்களுக்கு சொல்ற கதை...
நீங்க சொன்னதுக்கப்பறம் நம்மளும் எழுதலாமானு யோசிச்சிட்டு தான் இருக்கேன்!!! ஆனால் உங்க அளவுக்கு எல்லாம் எதார்த்தமா அதே சமயம் அழுத்தமா எழுத முடியாது.

Chinnakutti said...

பொன்ஸ்,
வாழ்த்துக்கள்..

பாறாங்கல் மாதிரி பாரம்னு சொல்வாங்கல்ல, இன்னைக்கு என் மனசு அப்படி ஆகிடுச்சு...... ஆக்கிட்டீங்க.....

G.Ragavan said...

டப் டப் டப்.....அட கை தட்டுனேங்க.. பாராட்டுகள். எனது வாழ்த்துகள்.

Maraboor J Chandrasekaran said...

again you made me guess the end , right? why pons, why?

good narration, all the best,

கிவியன் said...

நடை, வார்த்தை சிக்கனம் நன்றாக வந்துள்ளது. எஸ்கே சொல்வது போல், ஒரு செயற்கை தன்மைதான் எனக்கும் தோன்றுகிரது. தலைப்பு கொடுத்து அதற்காக எழுதியதால் இருக்கலாம். நீங்களாக எழுதினால் இன்னும் வேறு கோணத்தில் எழுதியிருக்கக்கூடும். இந்த மாதிரி தலைப்புக்கு கதை எழுதுவது எழுத ஆசையிருக்கும் பலருக்கு ஒரு பயிற்சியாக அமையும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

பொன்ஸ்!
கதை ரொம்ப நல்லாருக்கு.

//"அவர் இன்னும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டு தானே இருக்கார்.. நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு" என்றாள்.. அதற்கு மேல் அவளைப் பேச வைக்க முடியவில்லை..//

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//

இந்த ரெண்டு எடத்துலயும் எங்கேயோ போயிட்டீங்க. சும்மா நச்னு இருக்கு.

ஆனா சித்ராவும், சித்ரா மாமியாரும் யாருங்கிறது புரியவே இல்லை. அவங்களுக்கும் சந்திரா அத்தைக்கும் எதாவது தொடர்பு இருக்குமோன்னு அவங்களைப் பத்தி சொல்லியிருக்குற பத்தியை ஒரு நாலு தரம் படிச்சேன். அந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்த காரணமாயிருந்தது...
//"எல்லாம் நேத்தி வரைக்கும் ஆட்டம் போட்டுகிட்டு தான் இருந்தா.. என்னிக்கு அடங்கி இருந்திருக்கா.. இவ ஆட்டம் தாங்காம தான் கட்டினவனும் சிக்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. " இது சித்ராவின் மாமியார் குரல்.//

ஆமாம்...கல்யாண சாவுன்னா என்னங்க? இத நான் இதுக்கு முன்னாடி கேள்வி பட்டதேயில்ல.

பழூர் கார்த்தி said...

நல்லாயிருக்கு அண்ணாச்சி, இருந்தாலும் கதையை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்னு தோணுது...

நாமக்கல் சிபி said...

//இருந்தாலும் கதையை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்னு தோணுது...//

ஆமாமா! படிக்க சோம்பேறித்தனமா இருக்கப் போய்தான் நானும் பாதி பாதியாப் படிச்சேன்.

(ஸாரி தலைவா!, வந்தவுடனே உம்மையும் கலாய்ச்சதுக்கு :) )

நாமக்கல் சிபி said...

//நல்லாயிருக்கு அண்ணாச்சி//

யானையால மிதிபடணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்!

நிலா said...

கதைக்கான கரு ரொம்ப நல்லா இருக்கு, பொன்ஸ்

//நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு.// - இந்த கான்செப்ட் நல்லா இருக்கு.

வர்ணனைகள் அருமை:
//யாரோ என் தலையைத் தொட்டது போல் இருந்தது.. நிமிர்ந்து பார்த்தேன்.. ஜன்னல் வழியே அவள் வளர்த்த செம்பருத்திச் செடி.. காற்றுக்கு மோதியிருக்கிறது.. அத்தை இந்த அறையில் இன்னும் இருக்கிறாள். அதன் அடையாளம் தான் இந்தச் செடி என்று ஏனோ தோன்றியது..//


ஆனா கதையமைப்பில ஒரு நாடகத்தன்மை தெரியற மாதிரி எனக்குப் படுது. முக்கியமா பாத்திரங்கள் பேசற வசனங்கள்ல ஒரு செயற்கைத் தன்மை இருக்கு. உதாரணமா :

//"நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்..இல்லைன்னா நீ என்கிட்டயும் பேசவே வேண்டாம்!!"//

//"எல்லாம் நேத்தி வரைக்கும் ஆட்டம் போட்டுகிட்டு தான் இருந்தா.. என்னிக்கு அடங்கி இருந்திருக்கா.. இவ ஆட்டம் தாங்காம தான் கட்டினவனும் சிக்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. " இது சித்ராவின் மாமியார் குரல்//

இது நம்ம சீரியல்ல வர்ற பெண்கள் டைப்ல இருக்கு - ஒண்ணு saint ஆக இருப்பாங்க, இல்லைன்னா டெவிலாக இருப்பாங்கங்கறது போல இருந்தது

அதுபோல 'சித்ராவின் குரல்' என்று திடுமெனச் சொல்லும்போது அது கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்ற எண்ணத்தைத் தந்து எதையோ கவனிக்கத் தவறிவிட்டோமோ என குழம்ப வைக்கிறது.


//நானும் இல்லாமல் போனால் ஒரு வேளை அவள் இறந்து போகலாம். //
//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.//

'நாம அன்பு வச்சிருக்கறவங்க யாரா இருந்தாலும் நம்ம மனசுக்குள்ள வாழறாங்க; அவங்களுக்கு மரணமில்லை' அப்படின்னு சொல்ல வர்றீங்கன்னு நெனச்சிருந்தேன் - கடைசி வரியைப் படிக்கற வரைக்கும்

கடைசி வரியைப் படிச்ச உடனே காதலிக்கறவங்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்னு சொல்றது போல இருந்தது. அது எனக்கு ஒரு குறையாவே பட்டுது.

கதாசிரியர் அத்தையின் மேல் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாரே, அப்படியென்றால் அவரின் மனதுக்குள்ளும் அத்தை வாழலாமல்லவா? ஏன் சேகர் சாரோடு அத்தை மரணிக்கவேண்டும்?

ஒரு வேளை என் புரிதல் தவறாக இருக்கலாம். இந்தப் பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Chandravathanaa said...

ஒரு மரணத்தையும், அது தரும் சோகத்தையும் ஒரு காதல் கதை சொல்வது போல இதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கோபத்தையும், சோகத்தையும் சொன்னதில் அழகிருக்கிறது. படித்து முடித்த பின் மரணத்தின் சோகத்தையும் விட அந்த அத்தைதான் மனதை ஆக்கிரமித்திருக்கிறாள். இறந்தவளை எம் மனதுக்குள் வாழ வைக்கக் கூடிய எழுத்து. நிறைந்த பாராட்டுக்கள்.

கைப்புள்ள said...

//நல்லாயிருக்கு அண்ணாச்சி//

மறுபடியுமா? இந்த கமெண்டுங்க எல்லாம் ஏன் திரும்பவும் திரும்பவும் என் கண்ணுல மட்டும் மாட்டுது?

for i=1 to infinity
if
பொன்ஸ் = அண்ணாச்சி
i=i++
endif
(எதோ நமக்குத் தெரிஞ்ச ப்ரோக்ராமிங்ல)

எனக்குத் தெரிஞ்சு இப்ப 'i'யோட வேல்யூ நாலு.
:))

பொன்ஸ்~~Poorna said...

கைப்ஸ், உங்களுக்குத் தெரியாம ஒண்ணு
இங்க
இருக்கு :)

பொன்ஸ்~~Poorna said...

//ஆனால் உங்க அளவுக்கு எல்லாம் எதார்த்தமா// அட, சும்மா எழுதுங்க வெட்டி.. என்னோட பழைய கதையெல்லாம் படிச்சா என்னோட அளவு தெளிவா தெரியும்.. :)

நன்றி சின்னகுட்டி, ரொம்ப வருத்தப்படாதீங்க.. அடுத்து ஒரு காமெடி போஸ்ட் போட்டு சரிக் கட்டிடறேன்..

நன்றி ஜி.ரா.. :)

பொன்ஸ்~~Poorna said...

சந்திரா, என்ன சொல்றீங்க? முடிவு சுலபமா ஊகிக்கிற மாதிரி இருக்குன்னா, இல்லைன்னா? எப்படி இருந்தாலும் சந்தோஷம் தான்.. இந்தக் கதையை வர்ணனைக்காகத் தான் எழுதினேன்.. முடிவு ஊகிக்க முடிஞ்சா நல்லது தான்..

கிவியன், நிலா சொன்னதுக்கு அப்புறம், நீங்க சொல்றது சரிதான்னு தோணுது.. தலைப்புக்காக சில காம்ப்ரமைஸ் கதைல இருக்கு.. பார்த்து சரி பண்றேன்.. போட்டி முடியட்டும்..

கைப்பு,// சித்ராவும், சித்ரா மாமியாரும் யாருங்கிறது புரியவே இல்லை. //ம்ம்ம்.. அதுவும் குறை தான்.. சரி பண்றேன்.. அடுத்த வர்ஷன்ல..
//கல்யாண சாவுன்னா // ரொம்ப வயசானவங்க, ஆண்டு அனுபவிச்சவங்க இறந்தா, எங்க வீட்ல எல்லாம் கல்யாணச் சாவுன்னு சொல்வாங்க.. அதுக்கு வருத்தப்படக் கூடாதாம்..

பொன்ஸ்~~Poorna said...

சோம்பேறிப் பையன், இதுவே சின்ன கதையா போய்டுச்சுன்னு சிலர் சொன்னாங்க.. இருக்கட்டும்.. எங்க நீளமாத் தெரியுதுன்னு பார்க்கிறேன்..

அண்ணாச்சின்னு நீங்க சொன்னது எனக்கு ஒரு திருப்திங்க.. இந்தக் கதை சொல்லியை ஆண்/பெண் இருபாலருக்கும் பொதுவான ஆளா காட்ட நினைச்சேன்.. உங்களுக்கு ஆண்தான்னு தோணி இருக்குன்னா, அது எனக்கு ஒரு மகிழ்ச்சி...
சிபி, கைப்பு, இது மீசையில் மண் ஒட்டலை ஸ்டைல் பதில் இல்லை.. உண்மையாவே அப்படி நினைச்சு தான் எழுதினேன்..

//இறந்தவளை எம் மனதுக்குள் வாழ வைக்கக் கூடிய எழுத்து. // மிக்க நன்றி சந்திரவதனா..

பொன்ஸ்~~Poorna said...

நிலா,
// ஆனா கதையமைப்பில ஒரு நாடகத்தன்மை தெரியற மாதிரி எனக்குப் படுது. //
இருக்கலாம்..

// முக்கியமா பாத்திரங்கள் பேசற வசனங்கள்ல ஒரு செயற்கைத் தன்மை இருக்கு. உதாரணமா :
//"நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்..இல்லைன்னா நீ என்கிட்டயும் பேசவே வேண்டாம்!!"// //
இது மாதிரி பேசும் அத்தையை நான் பார்த்திருக்கேனே.. எனக்கு அத்தனை செயற்கையா தோணலை.. அவங்க கிட்ட குறை இருந்தது.. ஆனா குறைகளைத் தொட்டுச் செல்லும் சந்தர்ப்பம் இந்தக் கதையில் இருக்கவே இல்லை..

//"எல்லாம் நேத்தி வரைக்கும் ஆட்டம் போட்டுகிட்டு தான் இருந்தா.. என்னிக்கு அடங்கி இருந்திருக்கா.. இவ ஆட்டம் தாங்காம தான் கட்டினவனும் சிக்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. " இது சித்ராவின் மாமியார் குரல்//
- இது மாதிரி பேசறவங்க இழவு வீடுகளிலும் இருக்காங்க நிலா. நான் அதுவும் பார்த்திருக்கேன். யாருக்கும் கேட்காம பேசுவாங்க.. அந்தப் பெண்ணுக்கு மட்டும் கேட்குது என்பது போல சொல்ல நினைத்தேன்.. வரலை போலிருக்கு.. இதே மாமியார் மத்த விஷயங்களில் நல்லவங்க தான்.. அதைச் சொல்லும் சந்தர்ப்பமும் கதையில் இல்லை..

//அதுபோல 'சித்ராவின் குரல்' என்று திடுமெனச் சொல்லும்போது அது கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்ற எண்ணத்தைத் தந்து எதையோ கவனிக்கத் தவறிவிட்டோமோ என குழம்ப வைக்கிறது.//
இது ஒரு பெரிய மிஸ் தான்.. கவனக் குறைவு.. அடுத்த முறை சரி பார்க்கிறேன்..

//கடைசி வரியைப் படிச்ச உடனே காதலிக்கறவங்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்னு சொல்றது போல இருந்தது. அது எனக்கு ஒரு குறையாவே பட்டுது.//
இல்லை இல்லை.. அன்பு வச்சிருக்கறவங்க இருக்கும் வரை மரணம் இல்லைன்னு தான் சொல்ல வந்தேன்.. முக்கியமா இவங்க ரெண்டு பேரும் காதலர்கள் இல்லை.. ஜஸ்ட் ஒரே மாதிரி ஆர்வங்களைப் பகிர்கிறவர்கள் தான்..

// கதாசிரியர் அத்தையின் மேல் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாரே, அப்படியென்றால் அவரின் மனதுக்குள்ளும் அத்தை வாழலாமல்லவா? ஏன் சேகர் சாரோடு அத்தை மரணிக்கவேண்டும்?//
ம்ம்ம்.. இது தான் கிவியன் சொல்வது போல் கதை டைட்டிலுக்கான காம்ப்ரமைஸாகி விட்டது.. அடுத்த முறை இந்தத் தவறு நேராமல் முயற்சிக்க வேணும்..

//ஒரு வேளை என் புரிதல் தவறாக இருக்கலாம். இந்தப் பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை. //
இல்லை இல்லை.. இந்த மாதிரி விமர்சனம் வந்தால் தான் நிலா எனக்கும் அடுத்த முறை மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்..
பின்னூட்டமாக இருந்தால் நல்லது தானே.. கதையோட சேர்ந்து மத்தவங்க கருத்தும் படிக்கிறவங்களுக்குத் தெரியவரும்.. :)
உங்க திறனாய்வுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும்... வாழ்த்துக்களுக்கு இன்னோரு ஸ்பெஷல் நன்றி. :)

கைப்புள்ள said...

//இது மீசையில் மண் ஒட்டலை ஸ்டைல் பதில் இல்லை.. உண்மையாவே அப்படி நினைச்சு தான் எழுதினேன்...//

அப்ப சரிங்க அண்ணாச்சி!
:)

நாமக்கல் சிபி said...

நீங்களே சொல்லிட்டா அப்பீலே இல்லை அண்ணாச்சி!

நாமக்கல் சிபி said...

////ஒரு வேளை என் புரிதல் தவறாக இருக்கலாம். இந்தப் பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை. //

இப்படியெல்லாம் சொல்லியும் பப்ளிஷ் பண்ணுறவங்களை என்னதான் பண்ணுறதோ!

பொன்ஸ்,
உங்களுக்கும் வெற்றி நிச்சயம். இன்னும் இளவஞ்சி வந்து சொல்வார் பாருங்கள்.

இன்னொருவர் வந்து இதனை De Je Vo
என்பார்.

பொன்ஸ்~~Poorna said...

அன்பின் சிபி ;),
வெளியிடாதீங்கன்னு சொல்றது வேற, வெளியிட வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றது வேற.. முன்னதா இருந்தா வெளியிட்டிருக்க மாட்டேன்..இல்லைன்னா எடிட் பண்ணி இருப்பேன்.. பின்னது என்பதால் தான் வெளியிட்டாச்சு..

இதுக்கெல்லாம் எதுக்கு வாத்தியாரை இழுக்கறீங்க? :)

பை த பை.. இப்படி என்னை நீங்களும் கைப்ஸுமே அண்ணாச்சின்னு சொன்னா நல்லாவா இருக்கு? ஏதோ புதுசா நம்ம பக்கத்துக்கு வர்றவங்க சொன்னா சரி.. இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவர்!!!

நாமக்கல் சிபி said...

//அன்பின் சிபி //

ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கய்யா!

நாமக்கல் சிபி said...

தலை! ஆற்றலரிசி ஆத்திரரிசியா மாறிட்டாங்க! வாங்க நாம ரெண்டு பேரும் வீ ஆர் தி எஸ்கேப் ஆயிக்கலாம்!

Chandravathanaa said...

சந்திரா, என்ன சொல்றீங்க? முடிவு சுலபமா ஊகிக்கிற மாதிரி இருக்குன்னா, இல்லைன்னா? எப்படி இருந்தாலும் சந்தோஷம் தான்.. இந்தக் கதையை வர்ணனைக்காகத் தான் எழுதினேன்.. முடிவு ஊகிக்க முடிஞ்சா நல்லது தான்..

முடிவை ஊகிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன். சொன்ன விதத்தை ரசிக்க முடிந்தது.

பொன்ஸ்~~Poorna said...

சந்திரவதனா,

அது மரபூர் ஜெய.சந்திரசேகரன் அவர்களைக் கேட்டேங்க.. அவரையும் சந்திரான்னு தான் சொல்வது.. குழப்பமாகிவிட்டது போலிருக்கு.. கதை பாத்திரப் பெயர் வேறா.. இனிமேல் பார்த்து எழுதணும்.. :)

இருந்தாலும் மீண்டும் வந்து பார்த்து, தெளிவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி :)

பழூர் கார்த்தி said...

ஏனுங்க, முதல்முறை உங்க வலைப்பக்கம் வந்ததுதானல புரொபைல் எல்லாம் பாக்கவேயில்லை.. அதனால அண்ணாச்சின்னு சொல்லிப்புட்டேன்.. அதுக்குப்போய் வ.வா சங்கமே வந்து முறைவச்சு கலாய்க்கிறாங்களே.. இது நியாயமா..தர்மமா ??

***

ஏங்க, கதை எங்க நீளமா இருக்கா ?? நமக்குல்லாம் கதை நாலு பாராவுக்கு மேல இருந்தாலே படிக்க கஷ்டம்தான்..

***

கைப்புள்ள, சிபி, வ.வா சங்கத்தில் நானும் சேர்ந்து கூடிய சீக்கிரம் உங்களையும் கலாய்க்கிறேன்
பாருங்க :-)

***

ஆமாங்க பொன்ஸ், புரொபைல்ல யானை படத்த எதுக்குங்க போட்ருக்கீங்க ?? இருந்தாலும் அதுவே நல்லாத்தாங்க இருக்கு :-))

குமரன் (Kumaran) said...

எப்படிங்க? எப்படின்னு கேக்கறேன்? எப்படி இப்படியெல்லாம் அழுத்தம் திருத்தமா கதை எழுதுறீங்க? கடைசி வரியைப் படிச்சவுடனே ஒரு நிமிஷம் கன்னத்துல அறை வாங்குன மாதிரி இருந்தது. அப்படியே ஒரு திகைப்பு வந்தது பாருங்க. என்ன ஒரு அழுத்தமான வரி அது.

வாழ்த்துகள் பொன்ஸ். இன்னும் இந்த மாதிரி படைப்புகள் நிறைய படைக்க வாழ்த்துகள்.

என் வாக்கு பத்திக் கேக்கணுமா? உங்களுக்கெல்லாம் உங்க பதிவைப் பாக்காமலேயே கூட வாக்களிக்கலாம்ன்னு இருந்தேன். இப்ப தான் படிச்சாச்சே. கட்டாயம் என் வாக்கு உங்களுக்கும் உண்டு.

பொன்ஸ்~~Poorna said...

சோம்பேறிப் பையன்,
//கூடிய சீக்கிரம் உங்களையும் கலாய்க்கிறேன் பாருங்க :-)//
அதான் கலாசிட்டீங்களே.. இந்தக் கதை நீளமா இருக்குன்னு சொல்லி ;)

//புரொபைல்ல யானை படத்த எதுக்குங்க போட்ருக்கீங்க ?? //
இந்த மாதிரி யாரும் கேட்கக் கூடாதுன்னு தான் இந்தப் பதிவைப் போட்டு வச்சிருக்கேன்.. பார்த்துக்குங்க ;)

// எப்படி இப்படியெல்லாம் அழுத்தம் திருத்தமா கதை எழுதுறீங்க?//
எல்லாம் உங்க ஆசி தான் குமரன்.. வாக்கு இருக்குன்னு வாக்கு கொடுத்ததுக்கு இப்போவே நன்றி :)

MSV Muthu said...

அருமையாக இருந்ததுங்க. எழுத்தும் எண்ணமும் வண்ணமயம்.

//அன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்

இந்த வரியைப் படித்ததும் உண்மையிலே புல்லரிச்சுப்போச்சு.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்,

போட்டிக்கு தான் வரமுடியாம போய்டுச்சு ஓட்டுப்போடவாது வரணும்னு வந்து ஓட்டு போட்டாச்சு. வெற்றிப் பெற்றதும் வாக்கு கொடுத்தாப்போல எனக்கு பங்கு தந்துருங்க :-))

Muthu said...

போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

மதுமிதா said...

பொன்ஸ் வாழ்த்துகள்மா
அருமையான சார் பத்திரப்படைப்பு
கதைசொல்லி மருமகளும் அருமை

ஜயராமன் said...

ஜெயிச்ச சந்திரா அத்தைக்கு வாழ்த்து.

மூன்றாம் இடம் அத்தைக்கு குறைச்சல்தான். இரண்டாம் ஓகே. முதலாம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒரு பாட்டி மடக்க விட்டாள் என்னை.

இருந்தாலும் உங்களுக்கு உங்கள் வெற்றிக்கு ஒரு பலமான 'பேஷ்' போட்டேன்.

அடுத்த தடவை இன்னொரு பெரிய அதிர்வேட்டு ரெடி பண்ணுங்க!!

நன்றி

G Gowtham said...

பொன்ஸ்…
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் பாராட்டுக்கள்.
வாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.
சரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க:வளர்க!
அழியா அன்புடன்..
ஜி கௌதம்

பொன்ஸ்~~Poorna said...

சோழநாடன், மதுமிதா, ஜயராமன், கௌதம்,
ரொம்ப ரொம்ப நன்றி.. ஓட்டு போட்டதுக்கு, வாழ்த்துக்கு.. இன்னும் அதிக நன்றி இங்க இருக்கு.. :)