Showing posts with label கலாட்டா. Show all posts
Showing posts with label கலாட்டா. Show all posts

Friday, January 19, 2007

ஆண்களுக்காக...

ஆண்களின் ஆபத்தை நீக்க அவர்களது உறவு/நட்புப் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வதந்தி ஒன்று பரவி வருவதாக நண்பர் இட்லிவடை கூறியுள்ளார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும், வலைபதியும் பெண் தோழிகள் விளக்கேற்றினால், தனக்கு நன்மை என்று நம்பும் எங்களின் நண்பர்களுக்காக, விளக்கேற்றுவது அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.

தற்போது வலைபதியும் ஆண்களுக்காக மட்டுமன்றி இனிமேல் வலைபதியப் போகும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் சிறார் போர்னோகிராபிக்கும் எதிராக குரல் கொடுப்போம்.

வாருங்கள் தோழிகளே.. விளக்கேற்றுவோம்.

உங்களின் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒரு குழந்தைக்கு எதிரான சிறார் போர்னோகிராபியைத் தடுக்க ஒலிக்கும் எதிர்க்குரலாகவும், நமது சக வலைதோழர் ஒருவரின் நம்பிக்கையை வளர்க்கும் அருமருந்தாகவும் இருக்கட்டும்..




தொடர்புள்ள பிற பதிவுகள்:
1. சிறார் போர்னோக்கு எதிராக குரல்
2. சிறுவர் போர்னோகிராபி
3. ஆண்களுக்கு ஆபத்து
4. வதந்திகளும் நம்பிக்கைகளும்



Tuesday, January 16, 2007

சுஜாதா (குமுதம் சிறுகதை)

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று..
தொடர்புள்ள சுட்டிகள்:
சிறுகதை-1
சிறுகதை-2 ]


"ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?" கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.

"நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் மோதிரம் போடு, பிரேஸ்லெட் போடுன்னா, எப்படிச் செய்ய முடியும்? கொஞ்சம் மனுசத்தன்மையோட பேசுங்க!"

"கலா புருஷன் நிரஞ்சனுக்கு மட்டும் மோதிரம் போட்டிருக்காங்க, நான் என்ன இளிச்சவாயனா? அவன் என்னடான்னா, ஆபீஸுக்கு தெனக்கும் போட்டுகிட்டு வந்து அலட்டக்கிறான். என்னை எல்லாரும் கேனயன் மாதிரி பார்க்கிறாங்க!"

கலாவின் கணவனும் சுஜாவின் கணவனும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் கலாவுக்குத் திருமணப் பேச்சு வந்த போது நிரஞ்சனை வழிமொழிந்தவனே சுந்தர் தான்.

"அவரு வீட்ல அதைத் தவிர வேறெதுவும் கேட்கலே. இங்க அப்படியா? ஒட்டியாணம் என்ன, தோடு என்னான்னு அநியாயமா கேட்கலியா உங்கம்மா? இப்ப உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த ஒட்டியாணத்தை அழிச்சு நாலு மோதிரமா பண்ணிடுவோம்!"

இந்தக் கீதை எல்லாம் நிரஞ்சனின் மோதிரத்தின் முன் தவிடு பொடியானது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் சுஜாதா பெட்டியுடன் தாய்வீட்டு வாசலில் நின்றாள்.

"என்னம்மா சுஜாதா! திடீர்னு வந்திருக்கே!" அம்மாவின் ஆதரவான கேள்விக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கடன்காரன், பால்காரன், சத்திரத்து காண்டிராக்டர் கணக்குகள் சுஜாதாவின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டன.

"ஒண்ணுமில்லைம்மா.. அவரு ஒரு மாசம் டெல்லிக்கு டூர் போகிறாரு. அதான், கலா வேற இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப போரடிச்சி போயிருப்பீங்களேன்னு வந்தேன்!" என்று அப்போதைக்கு ஏதோ சொன்னாள் சுஜா.

சுஜாதா தாய்வீட்டுக்கு வந்து ஒருவாரம் போயிருக்கும். அம்மாவுடன் சேர்ந்து கல்யாணம் விசாரிக்க வருபவர்களைக் கவனிப்பதிலும், அப்பாவுடன் கணக்குகளில் உதவுதலிலும், அலுவலக பிஸியிலும், நாட்கள் போனதே தெரியாமல் போயிற்று. சுஜாதான் கல்மனசு என்றால், சுந்தர் இன்னும் கடுமையான கோபத்தில் இருந்தான். "மாப்பிள்ளை ஒரு போன் கூட செய்யலியே" என்று அம்மாதான் மாய்ந்து போனாள். "போன எடத்துல நேரம் இருந்திருக்காதம்மா..", "ஆபீஸுக்குப் பேசிட்டாரம்மா!" போன்ற சமாதானங்களுடன் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமை வங்கிக்குப் போன அப்பாவே தற்செயலாக சுந்தரைப் பார்த்துவிட்டார். குரல் தழதழக்க சுஜாதாவைக் கேட்கவும், மோதிரக் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. இன்னும் யாரிடம் கடன் வாங்கவில்லை என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுஜாதா, நிச்சயமாய்ச் சொல்லிவிட்டாள் "நீங்க எதுக்கப்பா போடணும்? பெத்து வளர்த்து நல்ல வேலையிலும் அமர்த்தி அந்த வருமானத்தோட பலன் கூட உங்களைச் சேராதபோது, நீங்க எதுக்கு இன்னும் மேல மேல செய்யணும்?" என்ற சுஜாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அம்மாவும் அப்பாவும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

"இங்க பாருங்க, இதை விக்கலாமா, அதை அடகு வக்கலாமான்னு யோசிச்சிகிட்டே இருந்தீங்கன்னா, நான் டைவர்ஸ் கேஸ் போடுறது பத்தி யோசிக்க வேண்டியதாகிடும்! அவரா வந்து அழைச்சிகிட்டு போனா பார்க்கலாம், இல்ல அந்த மோதிரம் தான் முக்கியம்னா இப்படியே இங்கயே இருந்துட்டு போறேன். வயசான காலத்துல உங்களுக்கும் துணைக்கொரு ஆளாச்சு!"

ரணகளமாக இருந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலா வந்தாள். "ஏய் சுஜா! இங்க தான் இருக்கியா? உங்க ஹஸ்பெண்ட் கையை வெட்டிகிட்டார்னும் செப்டிக் ஆகிடுச்சு, ஜுரம் அது இதுன்னு இவர் சொன்னாரே!" என்ற சேதியுடன்.

அவ்வளவு தான்; சுஜாதா, தான் கொண்டுவந்த பெட்டியைக் கூட மறந்து போனாள். உடனடியாகக் கிளம்பி வீட்டுக்குப் போகவும், சுந்தர் வீட்டில் தான் இருந்தான். மிகப் பயங்கர அமைதியில் இருந்த வீட்டில் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி, சுந்தர் சுஜாவைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"சாரி சுஜா! நீ இல்லைன்னா எத்தனை கஷ்டம்னு இப்போத் தான் புரிஞ்சிகிட்டேன்.! நிம்மதியா தூங்க முடியலை, நீ பேசுறதைக் கேட்காம சாப்பாடு கூட இறங்கலை! காய் நறுக்கும் போது மோதிரவிரலில் வெட்டிகிட்டு... இங்க பாரு! இனி மாமனாரே வாங்கிக் கொடுத்தாலும் மோதிரமே கேட்பேன்? ம்ஹூம்!" சுந்தர் வெட்டுப்பட்ட விரலைக் காட்டினான்.

"நீங்களா கேட்கலைன்னாலும், எங்க அப்பா கொடுத்துவிட்டிருக்காரு, எங்க கைய நீட்டுங்க!" என்று சொல்லி கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள் சுஜாதா.

[வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) மேல இருக்கும் தொடர்புள்ள சுட்டிகள் குமுதம் ஒரு பக்க வகையில் முயன்ற என்னுடைய பழைய சிறுகதைகள் ;) ]

Monday, April 03, 2006

ஒரு கல்யாணம், ஒரு கச்சேரி...

நேற்று ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன். என் பாட்டியின் உறவினர் வீட்டுக் கல்யாணம். பாட்டியை அழைத்துச் செல்லும் வேலை எனக்குரியதாகி விட்டது. எப்படியோ.. ஒரு வேளை கல்யாணச் சாப்பாடு என்னும்போது, கசக்கிறதா என்ன...

ரிசப்ஷனுக்குத் தான் நாங்கள் போய் இருந்தோம். நாங்கள் ஆறு மணிக்கே சென்றபோது, வந்திருந்தவர்கள் எல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். என் பாட்டி மாதிரியே கல்யாணங்களில் மட்டுமே சந்தித்து நலம் விசாரிக்க வருபவர்கள். விட்டுப் போன சொந்தங்களைத் தேடித் தங்கள் இன்றைய தங்குமிடம், பேரன், பேத்தி என்று பேசுவதற்காவே வந்திருப்பவர்கள்.

சுமார் ஏழரை மணிக்கு மேல் தான் மற்ற நண்பர், உறவினர் கூட்டம் வர ஆரம்பித்தது. அதுவரை ஒரு மெல்லிசைக் குழுவினர் கச்சேரி செய்து கொண்டிருக்க, கேட்க ஆரம்பித்தேன். அந்தக் குழுவினர், ஒரு அனாதை ஆசிரமத்திற்கு உதவுவதற்காகவே நிகழ்ச்சிகள் நடத்துபவர்களாம். சேரும் பணத்தில் செலவுகள் போக மீதம் அறுபது பேர் கொண்ட ஆசிரமத்திற்கே செல்கிறதாம். நல்ல காரியம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பாடகர்களில் ஒரு வயதான பெண்மணியும் இருந்தார். அறுபது வயதிருக்கும். அந்த வயதிற்கு மிகவும் இனிமையான குரல். அவர் பாடிய பாடல்கள் எல்லாம் பழைய பாடல்கள். "அமுதைப் பொழியும் நிலவே" என்று அவர் குரல் கேட்ட போது ஜமுனா நினைவு வந்தது. அன்றைய ஜமுனாவுக்கு நிச்சயம் பொருந்திப் போகும் இனிய, இளமையான குரல். நேரம் போவதே தெரியாமல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரே ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த மண்டபம் கொஞ்சம் சின்ன மண்டபம். பாடியவர்களோ பெரிய மைக், ஸ்பீக்கர் எல்லாம் வைத்துக் கொண்டு அநியாயத்திற்கு ட்ரம்ஸ் அடித்துப் பாடிக் கொண்டிருந்தனர். ட்ரம்ஸ் சத்தம் எல்லா பக்கமும் எதிரொலித்துக் கொண்டு வந்து காதில் முட்டியது. எனக்கே காதுகளைப் பொத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது என்றால், கல்யாணத்தில் வந்திருந்த வயதானோருக்கு எப்படி இருந்திருக்கும்?!!!

ஒரு கட்டத்தில், "தேவுடா தேவுடா" என்று சந்திரமுகி பாட்டை அவர்கள் ஆரம்பித்தபோது, என் பாட்டிக்கு அந்த அதிர்வால், உடல் தள்ளாடவே ஆரம்பித்து விட்டது. ஓரமாக உட்காரவைத்து, அடுத்த பாட்டு வரை நகரக் கூடாது என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. பாவம், ஒருவரோடொருவர் பேச வேண்டும் என்று வந்தவர்களால், எல்லாரையும் பார்க்கத்தான் முடிந்தது. பேசுவது காதில் விழுந்தால் தானே.

இந்த மாதிரி கல்யாணத்தில் வாசிப்பவர்கள், கொஞ்சம் மண்டபத்தின் நீளம் அகலம் தெரிந்து, அதற்கேற்றாற்போல் வாசித்தால் நல்லது. கல்யாணம் நடத்துபவர்களும் வயதானோரின் நிலை தெரிந்து அதற்கேற்றாற்போல் ஏதேனும் வசதி செய்து கொடுக்கலாம்.

Friday, March 24, 2006

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

இப்போ சொந்த சரக்கு இல்லை. நண்பர்கள் அனுப்பினது. அதுனால, தைரியமா படிக்கலாம். நல்லா இருந்ததினால், தமிழில்:

அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருத்தருக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஞாயிற்றுக்கிழமைங்கறதுனால யாரும் அலுவலகத்தில் இல்லை. தன் கீழ் வேலை செய்யும் ஒருவருக்கு போன் செய்தார்:

"ஹல்லோ" ஒரு சின்னக் குழந்தையோட குரல்.

"அப்பா வீட்டில் இருக்காங்களா?" என்றார் அதிகாரி.

"இருக்காங்க" சின்னக் குரல்ல சொன்னான் அந்தக் குட்டிப் பையன்

"அவர்கிட்ட நான் பேசலாமா?"

"முடியாது" அப்டீங்கறான் அவன். அந்த அதிகாரி வியந்து போனாரு.

இவனை மீறி எப்படிப் பேசறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சார்.

"அம்மா இருக்காங்களா?"

"இருக்காங்க"

"அவங்ககிட்ட போன் குடுப்பா?"

"குடுக்க மாட்டேன்"

"வேற யாராவது வீட்ல இருக்காங்களா?"

"இருக்காங்க"

"யாரு?"

"போலீஸ் மாமா"

"போலீசா?" சின்ன அதிர்ச்சியுடன் கேட்டாரு அதிகாரி. "அவர்கிட்ட பேசலாமா?"

"இல்ல.. அவரு ரொம்ப பிஸியா இருக்காரு"

"பிஸியா? பிஸியா என்ன பண்றாரு?"

"அம்மா கிட்டயும், அப்பா கிட்டயும், ஃபையர் சர்வீஸ் அண்ணங்கிட்டயும் பேசிகிட்டிருக்காரு."

இப்போ நம்ம அதிகாரிக்கு ரொம்ப கவலையாப் போய்டிச்சி.. இதுக்கு நடுவுல ஒரு ஹெலிகாப்டர் சத்தம் வேற கேட்டுச்சு.

"அது என்னப்பா சத்தம்?" ன்னு கேட்டாரு அந்தப் பையன் கிட்டயே

"எலிகாப்டர்"ன்னு சொன்னான்

"அது எதுக்கு வந்திருக்கு?" அதிகாரி சந்தேகமா கேட்டாரு

"தேட வந்திருக்காங்க"

" என்ன தேடறாங்க??"

மெதுவா வாய்க்குள்ளயே சிரிச்சிகிட்டு, நம்ம பையன் சொல்றான்:

"யார்கிட்டயும் சொல்லாதீங்க... என்னைத் தான்"

Thursday, March 23, 2006

ஆபீஸ் கிளம்பலியோ ஆபீஸ்...

"ஏய்.. சீக்கிரம் எழுந்துர்றீ.. மணி ஆறாயிடுச்சு.. " -- வேற யாரு, எல்லாம் என் செல்லத் தங்கை தான்.

"ஏழு மணிக்கெல்லாம் பஸ் வந்துரும்... சரியான சோம்பேறிடி நீ"

நானே கஷ்டப்பட்டு எழுந்துகிட்டிருக்கேன். இப்பிடி பயமுறுத்தினா என்ன பண்ணுவேன் சொல்லுங்க... மனுஷனை(ஷியை) நிம்மதியாத் தூங்கக் கூட விடாம.. ம்ஹ்ம்.. முனகிகிட்டே எழுந்து வர்றேன்.

"பல்லு தேச்சாதான் காபி"

அம்மா வேற.. எனக்கு எதுக்கம்மா காபி, அப்டியே விட்டா போய்த் திருப்பித் தூங்கிடுவேன்.

"இன்னிக்கு ஆபீஸ் இல்லையா??" இது அப்பா..

ஒருவழியா பல் தேச்சிட்டு காபி குடிச்சிட்டு ("சூடா இருக்கும்மா"ன்னு சொல்லி உக்காந்துகிட்டே கொஞ்சம் தூக்கமும் போட்டுட்டு) குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிகிட்டு... இன்னும் எத்தனை கிட்டு.. ச்ச...

"இந்தா! இதுல டிபன் கீரை தோசையும் சாம்பாரும் இருக்கு" - இது தங்கை - அப்டியே சமைச்சா மாதிரி.. எல்லாம் எடுத்து வைக்கிற வேலை தான்.

"இதுல மதியானத்துக்கு சாப்பாடு வச்சிருக்கேன். எடுத்து வச்சிக்கிறியா?" இது அம்மா.

"தண்ணி பாட்டில் எங்க??" ஒருவழியா நான் முழிச்சிகிட்டேன்.

"இந்தா கழுத்து மட்டுக்கும் வச்சிருக்கேன். வீணடிச்சிடாத..."- அப்பா. பாட்டிலுக்கெல்லாம் கழுத்தா!!! ம்ம்ம்...

"ம்ச்.. எல்லாம் எனக்குத் தெரியும். பாரு மொதல்லயே தண்ணி ரொப்பி வச்சிருக்கலாம் இல்ல?!! லேட் ஆய்டுச்சு. பஸ்ஸு போயிருக்கும்"

"இரு இரு.. நான் வந்து ஏத்தி விடறேன். இந்த ஸ்டாப் விட்டா, அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிடலாம்" அப்பா சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.

"அய்யோ... போற போக்கப் பாத்தா நான் அடுத்த ஸ்டாப்ல கூட பிடிக்க முடியாது போலிருக்கே.."

"ஏய்!!! என்னடி பண்ற.. இப்போவே பஸ்ஸு அது இதுங்கற!!!" எழுப்பி விட்டாள் என் "அறை"த்தோழி. " இப்போ தான் எட்டு மணி ஆகுது; எட்டரைக்கு தான் ஆபீஸ், இதோ இங்க இருக்கு.. பொறுமையா போகலாம்.. "

சரிதான்.. எல்லாம் கனவு தான்... ம்ம்ம்...

வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்போ ஆபீஸ்ல போய் அந்த வேகாத இட்டிலியையும் காரமான சட்னியையும் தின்னறதுக்கு..

Wednesday, March 22, 2006

சும்மா இருந்தா

"சும்மா இருந்தா சோத்துக்கு கஷ்டம்
சோம்பல் பட்டா நாட்டுக்கு நஷ்டம்."


இப்படி ஒரு பாட்டை எங்க அப்பா நேரம் அடிக்கடி பாடுவாரு. (சினிமா பாட்டுங்கறாரு..தெரியலை).

ஒரு நாள் கூட நாங்க சும்மா சோம்பல்பட்டுகிட்டு உக்காந்திருந்தா அவருக்குப் பொறுக்காது. ஏதாவது வெளிவேலை கொடுத்துடுவாரு இல்ல வீட்டைக் க்ளீன் பண்ணலாம்னு ஆரம்பிச்சிடுவாரு..

அப்படி இருந்த நான் இந்தக் கம்பனில சேர்ந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டேங்க.. [எந்தக் கம்பனின்னு கேக்காதீங்க.. நான் இன்னும் ரொம்ப நாள் இங்க இருக்கணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்.]

முதல் ஒரு வாரம் தலை நிமிர முடியாமல் வேலை.. நான் போகவேண்டிய கட்டாய பயிற்சிகளைக் கூட அடுத்த மாதம் பார்த்துக் கொள் என்றார் என் மானேஜர்.


எல்லாம் வெட்டி வேலை தான். இருந்தாலும் ரொம்ப அவசரம் என்பதால் முக்கியமாகி விட்டது. ஒரு வாரம் முழுவதும் என் மானேஜரே நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து "என்னாச்சு?" என்று நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தார்


அந்த ஒரு வாரம் முடிந்ததும் அதுவும் இல்லாமல் போனபோது தான் அந்த வேலையின் அருமை புரிந்தது. ரெண்டு வாரம் சும்மானாச்சுக்கும் ஆபீஸ் வந்தேன். அப்படியும் வராமல் இருக்க விடுகிறார்களா.. அது எப்படி முடியும்? ஒவ்வொரு நாளும் வந்துட்டு வேலை இருக்கான்னு கேக்கணும், இல்லைன்னா நம்பளை மறந்துட்டாங்கன்னா?!!! தவிரவும், இப்படி ஒழுங்கா ஆபீஸ் வந்தா, வெட்டியாக இருப்பது நான் மட்டும் இல்லை என்று கொஞ்சம் சின்ன ஆறுதல்.


காலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு

கனிவு கொடுக்கும் நாலு forwards

மாலை முழுதும் மீண்டும் காபி - இடையில்

மூன்று மணிவரை மதிய உணவு


என்று நாளொரு தலைப்பும் பொழுதொரு அரட்டையுமாக இருந்த என் நாட்கள் ஒரு மாதம் போல எல்லா கட்டாயப் பயிற்சிகளுக்கும் செல்வதிலேயே கழிந்தது.


அடுத்த மாதம் நான் ஒரு முடிவுக்கு வந்து, என் மானேஜரைப் போய்ப் பார்த்தேன்.


"ரஞ்சித், அந்த ப்ராஜக்ட் முடிஞ்சிடுத்தே.. க்ளயண்ட் கன்ஃபர்ம் பண்ணிட்டாரா?"

"பண்ணிட்டாங்களே, உங்களுக்கு அந்த மெயில் வரல்லயா?"

நான்: (மனதுக்குள்)அனுப்பினாத்தானேய்யா வரும்; (வெளியில்) இல்லயே எனக்கு cc இருக்கா?

ரஞ்சித்: ஓ, உங்க பேர் இல்ல.. சரி இப்போ அனுப்பிடறேன். (அப்புறம் இன்னும் என்ன என்பது போல் ஒரு பார்வை)

நான்: அடுத்து ஏதாவது ப்ராஜக்ட் வருதா?

ரஞ்சித்: இந்த க்ளயண்ட் கிட்டேர்ந்து தான் அடுத்த ப்ராஜக்ட் எதிர்பார்க்கறோம். இன்னும் ஒரு மாசத்துல தெரியும்.

நான்: அப்டீன்னா, இப்போ இன்னும் நாலு வாரத்துக்கு ஏதேனும் ட்ரெயினிங் இருக்கா?

ரஞ்சித்: நீங்க அந்த மேண்டேடரி ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா??

நான்: அதெல்லாம் ரெண்டு வாரம் முன்னாடியே முடிச்சாச்சு

ரஞ்: (பேனாவை உருட்டியபடி தீவிரமாக சிந்தித்தவாறே) உங்களுக்கு ஜாவா தெரியுமா?

நான்: தெரியும் ரஞ்சித்

ரஞ்: ஆரக்கிள்?

நான்: (சரிதான் ஜாவா ஆரக்கிள் என்ற புது ப்ராஜக்ட்டில் போடப் போகிறார் போலும் என்று எண்ணிக்கொண்டே) நல்லா தெரியும், ரெண்டு ப்ராஜக்ட் பண்ணி இருக்கேன்

ரஞ்: A S P?

நான்: அது தெரியாதே...

ரஞ்:(ரஞ்சித் முகத்தில் இப்போ ஒரு தெளிவு. இத இதத்தான் எதிர்பார்த்தேன் என்று மனதிற்குள் சொல்லிக்கிறார் போல) J2EE?

நான்: இல்லை, ஆனா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்

ரஞ்: பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை. நீங்க இன்னும் மூணு மாசத்துல ASP, J2EE எல்லாம் படிச்சிடுங்க... மூணு மாசத்துல இந்த க்ளயண்ட்டே இன்னோரு ப்ராஜக்ட் குடுக்கறதா சொல்லிருக்கான்.

(கவனிக்க, இப்போ மூணு மாசம் ஆய்டுச்சு...)

நான்: இப்போ பண்ண ப்ராஜக்ட் C++ தானே?!?!

ரஞ்: புதுப் ப்ராஜக்ட்டும் C++ தானிருக்கும். நீங்க எதுக்கும் தெரிஞ்சு வச்சிகிட்டா நல்லது தானே? அதோட, உங்களுக்கு லீவ் ஏதாவது வேணும்னாலும் இந்த மூணு மாசத்துல எடுத்துக்குங்க. அப்புறம் கஷ்டம் தான்.


இத்துடன் அவர் போன் பேச ஆரம்பித்துவிட்டார்.

நான் திரும்பி வந்தேன். நானும் இந்த வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஜாவா படித்துக் கொண்டே தான் இருக்கிறேன், இதுவரை உபயோகிக்கும் யோகம் வரவில்லை, இனிமேல் J3EE வேறு படிச்சு அதை வேற மறந்து போகணுமா.. ம்ஹ்ம்..

இனி ஒருமுறை அவர்கிட்ட போய் வேலை கேக்கறத விட பழையபடி ஒரு நாளைக்கு நாலு காபி, ரெண்டு சிற்றுண்டி, ஒரு பேருண்டின்னு நாளை ஓட்டிடலாம்னு பாக்கறேன்..

எல்லாம் ஒரு நாலு மாசம் கழிச்சு பாக்கலாம். இப்ப தான் இந்த தமிழ் மணத்தைக் கண்டுபிடிச்சிட்டோமே.