Showing posts with label அசைபடம். Show all posts
Showing posts with label அசைபடம். Show all posts

Thursday, January 18, 2007

தமிழ் பேசு தங்கக் காசு

மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி "தமிழ் பேசு தங்கக் காசு". பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.

மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே அவற்றில் :( ] இன்னும் அதிகமாகவே தங்கம் கொட்டும் நிலையில், தமிழ் பேசித் தங்கம் வெல்ல எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,
-> ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்
-> ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்
-> தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல்
-> ஆங்கிலம் கலக்காமல்.

கடைசி விஷயம் மட்டும் தான் சுலபமாக இருக்கிறது, முன்பே பழகிக் கொண்டு வருவதால். பழைய வார்த்தை விளையாட்டு போல் போட்டியாளரை ஒரே சொல்லில் சிக்க வைக்கும் முயற்சியில் ஜேம்ஸ் வசந்தன் ஈடுபடுவதில்லை. மிக மிக இயல்பாக பேசிச் செல்கிறார். 'சொந்த ஊர் திருச்சி', 'படித்த ஊர் திருச்சி' என்று இரண்டு முறை சொல்பவரிடம், அடுத்ததாக திருச்சியைப் பற்றியோ, ஊரைப் பற்றியோ கேட்டு மூன்றாவது, நான்காவதில் சிக்க வைக்கும் முயற்சிகள் செய்வதில்லை. அதனால், பேச்சில் ஈடுபட்டு சொற்களின் எண்ணிக்கையை மறந்து ஏமாறுவது போட்டியாளருக்குச் சுலபமாக இருக்கிறது. வசந்தன் கூட இந்தக் கணக்கு வைத்துக் கொள்ளாமலே பேசுகிறார். வசந்தனைத் தவிர இன்னுமொரு பேராசிரியரை இந்த உரையாடலைக் கவனித்து நடுவராகும் முறையில் நியமித்திருக்கிறார்கள். நான் பார்த்த அன்று மூத்த கவிஞர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டேன் :() கூர்ந்து கவனித்து அவ்வப்போது ஒலிப்பானை அமுக்கி போட்டியாளர்களின் சாபத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார். :)

இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.

"வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதிரில் விழுந்தாள் கிழவி மகள்" போன்ற பழகிய சொற்றொடர்களுடன்

"தாதி தூதோ தீது. தத்தை தூது ஓதாது" போன்ற சங்கப் பாடல் தொடர்களும் கொடுக்கப்படுகின்றன.

இது போன்ற சொற்றொடர்களின் பொருளை விளக்கிவிட்டு திரும்பிச் சொல்லச் சொல்லலாம். அல்லது போட்டிகளில் பங்குபெறுபவர்களாவது வாய்விட்டுப் பொருள் கேட்கலாம். இரண்டும் இல்லாவிட்டால் இந்தச் சுற்று தமிழ் பேசித் தங்கம் வெல்வதை விட "மனப்பாடம் செய்தால் தங்கம் கிடைக்கும் " என்று மாறிவிடும் ஆபத்திருக்கிறது.

"புக்கு தெக்கு புக்கு
செக்கு தெக்கு செக்கு"

என்ற சொற்பயிற்சி எனக்குப் புரியவே இல்லை. யாருக்காவது புரிகிறதா?

இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இது கொஞ்சம் சுலபமான சுற்றாகத் தான் தெரிகிறது - சுலபம் என்ற சொல்லுக்கே தமிழ்ச் சொல் என்ன என்று கேட்கும் வரை! சுலபம், ஜாக்கிரதை போல் தினசரி பயன்படுத்தும் சொற்களையே தமிழில் சொல்லுங்கள் என்றால் அந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொஞ்சம் கடினமான வேலையாகத் தான் தோன்றுகிறது.

நான் பார்த்த உழவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி பங்கு பெற்றார். நிர்மலாவின் குரலை மட்டுமே கேட்டு, சலித்தே போயிருந்த எனக்கு, அவர் நொடிக்கொரு தரம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது மனதைக் கவர்ந்து விட்டது. பதில் தெரியாத கேள்விகளுக்கு அழகாகச் சிரிக்கிறார். அவருடைய மகன் மூன்றாம் வருடம் கல்லூரியில் படிக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் சந்தூர் விளம்பரம் போல் இருந்தது. அடுத்த முறை போட்டி வைக்கும் போது நிர்மலா சிரிக்கவும் தனியான நேரம் ஒதுக்கப் போவதாகச் சொல்லி கலாட்டா செய்தார் ஜேம்ஸ் வசந்தன்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பங்கெடுத்தனர். "ஸ்கூலுக்கு தமிழில் என்ன?" என்றால், "ஸ்கூல், தமிழ் தானே?" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! "ஃபேன் ஆங்கிலமா தமிழா?" என்று வசந்தன் கேட்டதற்கு, "ஆங்கிலம்னா?" என்று அற்புதமாகக் கேட்டு திகைக்க வைத்துவிட்டனர். வாழ்க பெற்றோர்.

இத்தனை குளறுபடிகள் இருந்தாலும், இரண்டாவது சுற்றில் மனப்பாடப் பகுதியை உச்சரிப்பு பிழையில்லாமல் சொல்லிக் காட்டினர். அதிலும் ஒரு சிறுவனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. வசந்தன் சொன்னதைக் கேட்டே அவனும் அழகாக மனப்பாடம் செய்து ஒப்பித்தான். நமது பள்ளிகள் மொழி கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ மனனம் செய்வது எப்படி என்று நன்றாகவே சொல்லிக் கொடுக்கிறது, மூன்றாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளாகவே!

நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாற்றினால், "திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!" என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது :)

Saturday, January 06, 2007

Happy Feet

கடைசியாக நானும் ஹாப்பி பீட் என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்.




அண்டார்டிகா கண்டத்து பெங்குயின்களும், அவற்றின் மீன் தட்டுப்பாடும், மனிதர்கள் பெங்குயின்களின் தட்டுப்பாட்டை உணர்ந்து தமது ஆழ்கடல் மீன் பிடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதும் தான் படத்தின் முக்கிய கதை. கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தெக்கிக் காட்டானின் பதிவைப் பார்க்கலாம்.

பலரும் சொல்லிவிட்டது போல், இசை மிக மிக அழகு. கொள்ளை கொள்ளும் பாடல்கள். அத்துடன் நடனமும்.




முக்கிய விஷயமான ஆழ்கடல் மீன்பிடித்தலைத் தவிர எனக்கு இந்தப் படத்தில் தென்பட்ட சில விசயங்கள்:

  • Disabled Penguin ஆக சித்தரிக்கப் படாமல் Differently Abled Penguin ஆக முன்னிறுத்தப் படும் மம்பிளின் சந்தோசக் குதிப்பு.


  • பெங்குயின் மொழி என்று பிரித்துச் சொல்வதன் மூலம் அது மனிதர்களுக்குப் புரிவதில்லை என்று உண்மை காட்டியிருக்கும் விதமும் அழகு.


  • பெங்குயின் கார்ட்டூன்கள் வழக்கம் போல் அழகு. முக்கியமாக கதாநாயகனைப் பிரித்துக் காட்ட முதுகில் ஒரு வெள்ளை நிறமும், அவனது அம்மாவைப் பிரித்துக் காட்ட மச்சம் வைத்திருந்த விதமும் எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றியது


  • வித்தியாசமான திறமையுள்ள மம்பிளை அதன் கூட்டத்தார் ஏற்காமல் போவது கூட மனித வாழ்க்கைக்கு மிக மிக அருகில் உள்ள விஷயமாக இருக்கிறது.


  • "எல்லாரிடமும் ஒரு நல்ல பக்கம் இருக்கும், அந்தப் பக்கத்தில் அணுகினால், நாம் சொல்வதைக் கேட்க வைக்க முடியும்" என்ற மம்பிளின் அணுகுமுறை இன்னுமொரு அற்புதமான பாடம்.


  • பெங்குயின் பற்றிய புனைவிலும் லவ்லேஸ் போன்ற போலிச் சாமியார்களைச் சேர்த்து மூடநம்பிக்கைகளையும் சாடியுள்ளமை மற்றொரு அழகு


  • Alien என்று பிற கிரக, பிற சூரிய குடும்ப உயிர்களை நாம் அழைத்தால், இதே பூமியில் இருக்கும் ஒரு உயிரினம்/பல உயிரினங்கள், மனிதனையும் alienஆக நினைக்கக் கூடிய அளவில் தான் நாம் நமது சக பூமிவாசிகளை மதிக்கிறோம் என்றும் நிறுவியிருக்கிறார் கதாசிரியர்.


  • உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் "இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்" என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.




  • எப்படியும் படம் பார்த்து முடிக்கும் போது, "ஆக, இப்படி ஏதாவது சந்தோஷக் குதிப்பு, போன்ற வித்தியாசமான செயல்தன்மை இருந்தால் தான் இயற்கையின் எல்லா விலங்குகளையும் உயிரோடு இருக்க விடப் போகிறானா மனிதன்?!" என்ற கேள்வி திரும்பி வரும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது..

    தொடர்புள்ள பதிவு: Happy Feet பற்றிய அஞ்சலியின் பார்வை

    Tuesday, October 17, 2006

    அஞ்சு பேரும் ஒரு டீயும்..

    "என்ன வேணும்? வழக்கம் போல ஸ்பெஷல் டீ தானே?"

    "ஆமாம் ஆமாம்..சொல்லிடு.."

    "அப்புறம், அந்த பூத்துக்கு உள்ள போனவுடனே என்ன நடந்தது தெரியுமா.."

    "ஹைய்யோ..! "

    "என்னாச்சு?! என்னாச்சு?"

    "செம க்யூட்.. "

    "தாங்க்ஸ்.. இப்போ தான் பார்த்தியா? இந்த டீ சர்ட்டைத் தானே சொல்றே?"

    "ஆசை தோசை.. உன்னை எவ சொன்னா?!"

    "பின்ன? யாரைச் சொல்றே?"

    "அட! அஞ்சு பேர் இருக்காங்கடா.. எத்தனை அழகா இருக்கானுங்க.."

    "அஞ்சு பேரு எனக்குப் போட்டியா?! யாரு ? எங்க இருக்கானுங்க?"

    "பயங்கர துறு துறுன்னு இருக்கானுங்க இல்ல?"

    "என்கிட்டயேவா? நான் கூட ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிறதா நேத்து தானே சொன்னே?"

    "அது நேத்திக்கு.. இன்னிக்கு இவங்க தான் பயங்கர துடிப்பா இருக்கானுங்க.. அங்க பாரேன்.."

    "சரி சரி, மொதல்ல நீ இந்த டீய கைல வாங்கு!"

    "அச்சிச்சோ.."

    "என்னாச்சு? ரொம்ப சூடா? கையச் சுட்டுகிட்டியா?"

    "இல்லடா.. அங்க பாரு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க.. வா வெலக்கிவிடலாம்.."

    "அடச்சீ.. சும்மா இரு! டீயக் குடிச்சி முடிப்பியா! வந்துட்டா.. வெலக்கி விடுறாளாம்!"

    "பாவண்டா.. சண்டை போட்டு ஏதும் காயமாய்ட்டா!"

    "ஒண்ணும் ஆகாது. அஞ்சு நிமிஷத்துல அடங்கிடுவானுங்க.. நம்ம எல்லாம் அங்க போனா ஆட்டுச் சண்டையில் நரி புகுந்த மாதிரி தான். நீ பேசாம டீயக் குடி!"

    "நீ ஒரு ஜீனியஸ்டா!"

    "அப்பா.. ஐயாவைப் பத்தி இப்போவாவது புரிஞ்சுதே.. எப்படிச் சொல்றே?"

    "அங்க பாரு சண்டை ஓய்ஞ்சு சமத்தா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.."

    "ஐயோ!!" தலையில் அடித்துக் கொள்கிறான்.










    [பிகு: ஹி ஹி.. flash-க்கு அடுத்து வீடியோ போட்டு பார்க்கலாமே என்ற (விபரீத) ஆசையின் விளைவு ;) எங்க அலுவலகத்துக்கு எதிர் டீக்கடை புதுசா வந்திருக்கும் கஸ்டமருங்க.. ]

    Tuesday, September 12, 2006

    ராமைய்யாவின் குடிசை - என் பார்வையில்

    The Roots நிறுவனத்தினரின், பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ஆவணப்படமான ராமைய்யாவின் குடிசையைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.

    1968இல் நிகழ்ந்த கீழ்வெண்மணி கிராமத்தின் வர்க்கப் போராட்டங்களைப் பற்றிய இந்த ஆவணப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைத் தேடிப் பிடித்து அவர்களுடைய பார்வையில் சம்பவத்தை விவரிக்கும் நேர்த்தியும், கீழ்வெண்மணி சம்பவத்தில் இறந்து போனவர்களின் உறவினர்களைக் கண்டுபிடித்து அவர்களது நோக்கில் சொல்லப்பட்டிருப்பதும் மிகவும் நல்ல குறும்படமாக அமைகிறது.

    30% நிலங்கள் 5% ஆட்களிடமே இருந்த நிலையில் வர்க்க ஏற்றத் தாழ்வுகளும் சாதிய அடக்குமுறைகளும் கைகோர்த்ததால் நிலவிய அடக்குமுறைகளைச் சொல்லியபடித் தொடங்குகிறது படம். பின்னர், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கிவைத்த பி.சீனிவாச ராவின் வருகை, 1968 இல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட "தஞ்சாவூர் பணியாளர் பாதுகாப்பு சட்டம்" மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களும், தினக்கூலி முறையும் அமலுக்கு வந்தது, ஒப்புக் கொண்ட கூலியைச் சரியாகக் கொடுக்காமல் நிலக்கிழார்கள் ஏமாற்றியது, விவசாயத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிர்ப்பாக நிலக்கிழார்கள் உருவாக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம், அரசாங்க சட்டத்தை மீறி உள்ளூர் ஆட்கள் இருக்கையிலேயே வெளியூர் ஆட்களை வேலைக்கமர்த்திய நிலக்கிழார்களை ஆதரித்து பாதுகாப்பு வேறு கொடுத்த போலீஸ் மற்றும் அரசின் பாரபட்சம், இந்த நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து உள்ளூர் தொழிலாளிகளை அமர்த்திய இரண்டு நிலக்கிழார்கள் கொலையுண்டது, விவசாயத் தொழிலாளர் சிக்கல் பக்கிரிசாமி கொலை என்று கீழ்வெண்மணி சம்பவத்தை நோக்கிய அனைத்து நிகழ்வுகளையும் காரணங்களையும் வரிசையாக அடுக்குகிறது ஆவணப்படம்.

    கீழ்வெண்மணிக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல், அதன் பின் ராமைய்யாவின் குடிசை எரிக்கப்பட்ட நிகழ்வு. இறந்து போனது எத்தனை என்று கணக்கிடும் முன்பே 29 பேர் என்று தோராயமாகச் சொல்லிவிட்டு கேசை மூட முயன்ற போலீஸின் மெத்தனம்; சம்பவத்தைப் பற்றிய வழக்குகள், அவற்றிலிருந்து நிலக்கிழார்கள் மட்டும் வசதியாக பொய்சாட்சிகளின் மூலம் தப்பித்தது; இதன் பின் பத்து வருடங்களுக்குப் பின் இந்த நிகழ்வுகளுக்குக் காரணமான, சட்டத்தின் ஓட்டைகளில் தப்பிப் பிழைத்த கோயிந்தசாமி நாயிடு கொலையுண்டது என்று கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றிய முழுமையான ஆவணமாகத் தான் படம் காட்சியளிக்கிறது.

    சம்பவங்கள் சொல்லப்பட்ட விதமும் அதைப் பதிவு செய்த நேர்த்தியும் மிக நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் படம் என்ற தோற்றத்தைக் குறைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கிய நிலக்கிழார்களின் உறவினர்களையும் பேட்டி கண்டிருப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஆவணப்படத்துக்கு மேலும் அழுத்தமும் அழகும் சேர்க்கிறது, பின்னணி இசை (இசை: இரா. ப்ரபாகர்)

    படத்தில் எனக்குத் தெரிந்த சில குறைகள்:

    1. தீக்கதிர் தவிர மற்ற பத்திரிக்கைகளைப் பற்றிச் சொல்லாமலேயே விட்டதால் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார படம் போன்ற ஒரு எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

    2. நாயுடு இறந்ததைப் பற்றிய விவரங்களை அத்தனை தெளிவாகச் சொல்லாமல் விட்டதன் மூலமும் அதை நியாயப்படுத்துவதும் அதிகம் ஒட்டவில்லை.

    3. எல்லாருக்குமே சப் டைட்டில்கள் போட்டிருக்கலாம்.. ஒரு சிலருக்கு மட்டும் போட்டுவிட்டது அந்தத் தமிழ்வழக்கு புரியாததால், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

    எங்கேயோ இருக்கும் போபாலிலும், எப்போதோ நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகளையும் தெரிந்த எனக்கு, என் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்று ஒரு கிராமம் இருப்பதும், அங்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் தெரியாமல் போன அவலம் தான் படம் பார்த்ததும் முதலில் உறைத்த விஷயம். கொஞ்சம் பழைய ஜெய்சங்கர், சிவாஜி படங்களில் இப்படிப்பட்ட வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும், இந்தச் சம்பவங்களைப் பற்றிய புனைவுகளும் பார்த்திருந்தாலும், "சும்மா சோகத்தைப் பிழிவதற்காக இப்படியான காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள், இப்படி கூலித் தொழிலாளிகளை ஏமாற்றுவது எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை" என்று நினைத்து இம்மாதிரியான விஷயங்களைத் தாண்டிச் சென்றுவிடும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் போன்ற ஆவணப் படங்கள் தான் வரலாற்றையும் யதார்த்தத்தையும் உணர்த்துவதாக உள்ளன.

    [ஆவணப்படத்தைப் பார்க்கத் தூண்டிய தொடர்புடைய விளக்கமான பதிவு இங்கே]

    Tuesday, August 08, 2006

    கார்ஸ்

    "இந்த ஊருக்கு வந்து இந்த ஊர் தியேட்டர் எல்லாம் பார்க்காமயே போனா எப்படி?" என்று கேட்டது போன வாரம் என் நண்பன் செய்த குற்றம்...

    திரையரங்குக்குப் போனதும் "என்ன மாதிரி படம் பார்க்கலாம்" என்றான்..

    "ஹாரர், க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன் தவிர எது வேணாலும் பார்க்கலாம்.." அப்பாவியான முகத்துடன் நான் சொல்லவும்,

    "அது சரி.." என்றபடி என்னை ஏற இறங்கப் பார்த்தவன், இந்தப் படத்துக்கு டிக்கெட் எடுத்து (குழந்தைக்குப் பாப்கார்னும் வாங்கிக்) கொடுத்துவிட்டு வேறு ஏதோ பேய்ப் படம் பார்க்கப் போய்விட்டான்!!! :(





    ஆனால், நான் ரசித்துப் பார்த்தேன். நல்ல படம். அமெரிக்கா முழுக்க நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.

    கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன... இன்னும் எத்தனையோ..

    வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..

    அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..




    கதா நாயகன் Mc Queen


    பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.

    இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக "கார"ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.

    தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.

    ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்.

    பிக்ஸார் மூவீஸ் Finding Nemo ஏற்கனவே ரசித்துப் பார்த்திருக்கிறேன்.. இந்தப் படமும் அருமை.




    நாயகி Sally




    படத்துடன் கூட பாடல்கள் அருமை.. இறுதியில் "Finding Yourself" என்னும் பாட்டு வந்துகொண்டிருந்த போது அரங்கில் இருந்த எல்லாரும் வெளியே சென்று விட்டனர். எல்லாரும் போவதைப் பார்த்து நானும் இடத்தை விட்டு எழுத்தேன். ஆனால் பாட்டின் இனிமை ஈர்க்க மீண்டும் வேறு இடத்தில் அமர்ந்துவிட்டேன். (பொதுவாகவே படம் என்றால் கடைசியில் நன்றி போடும் வரை பார்த்து முடிக்க வேண்டும் என்பது என் கொள்கை).

    படம் பார்த்துவிட்டு, வெளியில் வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் "ஏன் கண், வாய் இல்லை?" என்று யோசிக்கத் தோன்றியது. கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு விலக ஒரு அரை மணி ஆனது.

    படத்தில் வரும் வரலாற்றுப் புகழ்மிக்க அமெரிக்க நெடுஞ்சாலை 66 எங்கள் ஊர் வழியாகத் தான் போகிறது என்று தெரிந்ததும், இந்த வாரம் அதில் படத்தில் வரும் "Historic Route 66" பாட்டையும் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டிப் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவம்.. இந்த ஊரில் பிடித்த விஷயம் இந்த ரோடுகள் தான்..











    Historic route 66 - ஆற்றலரிசி கை(கண்?)வண்ணத்தில் ;)



    ஆரம்பத்தில் என்னைப் பார்த்து மிரண்டவர்கள் கூட இப்போது "ஆபீஸ் போறீங்களா? நானும் வரலாமா?" என்னும் அளவுக்குத் தேறியாகிவிட்டது. படம் வேறு பார்த்த பின், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்னும் எண்ணமே வருத்தமாக இருக்கிறது. நம்ம ஊரிலும் சாலைகள் இத்தனை நன்றாக இருந்தால்?!!..



    பாடல்களை இங்கே கேட்கலாம். எல்லாரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். இந்தியா வந்து மீண்டும் தங்கையோடு போய் பார்க்க வேண்டும்.