Friday, November 02, 2007

எங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்

இந்த ஊருக்கு வந்த பின்னர் அதிகம் செய்யும் அதி முக்கியமான வேலையைத் தான் அன்றும் செய்து கொண்டிருந்தேன் - தொலைபேசியில் தோழியுடன் அரட்டை!. இதே ஊரைச் சேர்ந்த தோழி என்பதால், பொதுவாக அடுத்த நாள் வரப் போகும் ஹாலோவீன் பண்டிகை பற்றியும், அதற்கு என்னென்ன ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் அது நடந்தது
எங்கள் வீட்டை யாரோ ஒருவர் இரண்டு கைகளாலும் அப்படியே தூக்கிப் பிடித்து ஆட்டுவது போல் சுவரெல்லாம் ஆடியது. மரத்தாலாகிய வீடாதலால், சத்தமும் அதிகமாக இருந்தது. அத்துடன் உலுக்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.
பொதுவாகவே இந்த வீட்டில் துணி உலர்த்தும் இயந்திரங்களையோ, பாத்திரம் கழுவும் இயந்திரத்தையோ இயக்கினாலே பெரிய சத்தம் கேட்பது இயல்பாக இருப்பதால் அப்படி ஏதோ ஒரு புதிய இயந்திரத்தைத் தான் அறைத்தோழி தவறுதலாக போட்டுவிட்டார்களாக்கும் என்று முதலில் நினைத்தேன். போனை முடித்துக் கொண்டு அவரை அழைத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில், எதிர்முனையில் தோழியும், “ஏய் என்ன ஆடுது?! ஹே, Earthquake! earthquake!!” என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் வீட்டாரை எச்சரிக்கச் சென்றுவிட்டார்.
ஒருமாதிரியாக விசயம் புரிந்து கதவைத் திறந்து வெளியே வந்தேன். இணையத்தில் பேசிக் கொண்டிருந்த அறைத்தோழியும் என்னுடனேயே வெளியே வந்தார். ‘என்னங்க, இப்படி ஆடுதே!’ என்று பயந்து கொண்டே இருந்த அவரைச் சமாதானப்படுத்தி கொஞ்சம் ஆட்டம் நின்றவுடன் மீண்டும் வீட்டுக்குள் போனோம். அலுவலகம் முடிந்து திரும்பிவிட்டிருந்த அருகாமை வீட்டு மனிதர்களும் கூட ஒன்றிரண்டு பேராக வெளியேறி வந்து நின்றுகொண்டிருந்தனர்.
வாழ்நாளில் அனுபவிக்கும் முதல் நிலநடுக்கம் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்தச் சேதமும் இல்லாமல் லேசாக குலுக்கிக் காட்டிவிட்டுப் போய்விட்டது.
‘அட! நமக்குக் கூட பூமி இப்படி குலுங்கி நடுங்கி வேடிக்கை காட்டுகிறதே’ என்று மலர்ச்சி வேறு.
உடனே கூகிளாண்டவரைப் பிடித்து விவரம் கேட்டால், எதிர்பார்த்தது போலவே கட்டம் போட்டுக் காட்டிவிட்டார். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவுக்குப் பதிவாகி இருந்ததாம். எந்தச் சேதமும் இல்லாமல் சாதாரண நடுக்கம் தானாம்.

படித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.. ‘என்னம்மா, நல்லாக்கீறியா?’ என்பதிலிருந்து, ‘என்னங்க, ரெண்டு வருடமா இங்க இருக்கேன், இன்னி வரை இப்படி பூமி ஆடிப் பார்த்ததில்லை.. நீங்க வந்த உடனே இதெல்லாம் கூட்டி வந்துட்டீங்க?’ என்பதுவரை வரிசையாக அழைப்புகள்..
ஓடும் ரயிலில் இருந்தவர்கள் ரயில்கள் நின்று போய் பூமி நிற்க காத்திருந்ததைச் சொன்னார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிலருக்கு தெரியவே இல்லையாம். ஒரு நண்பனை அலுவலகத்தில் வெளியேறச் சொன்னதாகவும் அத்தோடு விட்டால் போதும் என்று வண்டி எடுத்து ஓடி வந்துவிட்டதாகவும் நிலநடுக்கத்துக்கு நன்றியோடு சொன்னான்.
‘ஏங்க, aftershocks எல்லாம் வரும்னு சொல்லுவாங்களே! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் போய் இருந்துட்டு வருவோமா?’ என்றார் அறைத்தோழி.
‘அதெல்லாம் இதை விட சின்னதா இருக்கும். என்னங்க, சும்மா 5.6 ரிக்டர் தானே! இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க!’ என்று ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் போல மீண்டும் லேசான நடுக்கம். எனக்குத் தான் ஏதோ தலைசுற்றும் உணர்ச்சி போலும் என்று நினைத்தால், முதல்நாள் மாலையிலிருந்து பூமி நடுங்கிக் கொண்டே தான் இருந்திருக்கிறது! சின்னச் சின்ன அதிர்வுகள், 2 ரிக்டருக்கும் கீழான அதிர்வுகளை யாரும் கண்டு கொள்ளாததில் கோபப்பட்டு அடுத்த ஒரு 3.7 ரிக்டர் அதிர்வைக் காட்டிப் பயமுறுத்தி இருக்கிறது!
ம்.. இன்னும் கூட அவ்வப்போது நடுங்கி நடுங்கி, இந்த நிமிடம் வரை 165 தொடர்நடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன. இன்னும் கூட பெரிய நிலநடுக்கம் வரலாம் என்பதற்கு இது ஒரு அறிகுறி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கலிபோர்னிய ஆளுநர் தான் பாவம், தெற்குப் பக்கம் இப்போது தான் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய நெருப்பை அரும்பாடுபட்டு அணைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக வட பகுதியில் நிலம் வேறு நடுங்கி பீதியைக் கிளப்புகிறது. எனக்கென்னவோ ஹாலோவீன் பேய்த்திருவிழாவைப் பூமியும் கொண்டாடி சும்மா வம்பு பண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அடுத்த பெரிய நடுக்கம் வரும்வரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியது தான் :-)

No comments: