Thursday, March 29, 2007

தம்பிக்கு... (சிறுகதை)

"என்ன ரேங்க்டா?" என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.

"ரெண்டாவதுப்பா" ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.

"ம்ம்ம்." என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.

"ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா.." அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.

"சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா" என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.

"இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு ஒரு சட்னியாவது செஞ்சி வைக்கிறியா நீ!" என்று குற்றப்பத்திரிக்கையோடு பலகாரத்தை முடித்துக் கொண்டு வெளியே வரவும் ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"நாலாவது ரேங்க் எடுத்திருக்கியாமே நீ?! வெரி குட்" என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

"ஆமாம் அங்கிள் கொஞ்சம் குறைஞ்சு போச்சு இந்த முறை. தம்பி வாசுவுக்கு சுரம் வந்துடுச்சு இல்லையா, அதான் சில நாள் ஸ்கூல் தவறிப் போச்சு. " வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது ராமுவே தான்.

"இந்தா, இந்த முறை நல்ல ரேங்க் எடுத்தா நான் தரேன்னு சொன்ன வாட்ச். வச்சிக்க.." புத்தம்புதிதாக ஒளிரும் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அப்பா நீட்டிய போது பாலுவுக்கு அதிகபட்ச கோபம் வந்தது. "அடுத்த முறையும் நல்லா வந்தால், சைக்கிள் வாங்கித் தருவேன் தெரியுமா?" என்று அவர் சொன்னதைக் கேட்க பாலு அங்கில்லை.

அவனும் எத்தனை நாட்களாக கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வரை அவனுக்குக் கொடுக்காமலேயே அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் அவனுக்குக் கைக்கடிகாரம் உறுதி என்று நினைத்துக் கொள்வான், இதுவரை அப்பா அவனை இப்படிப் பாராட்டியது கூட இல்லை. போய் அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று பார்த்தான். இருந்தாலும் அப்பாவிடம் அவனுக்குக் கொஞ்சம் பயம் தான். சட்டென சமையலறைக்குத் திரும்பிப் போய்விட்டான்.

"என்னப்பா கண்ணா, வெளியே விளையாடப் போவலியா?" என்றாள் அம்மா, ஆசையாக.

"ஆமாம். அது ஒண்ணு தான் கொறச்சல் இப்போ!"

பாலுவின் குரலைக்கேட்டு அம்மா அருகில் வந்தாள். "என்னப்பா பாலு, என்னவோ முணுமுணுக்கிறே?! அப்பா இருக்காரா வாசற்பக்கம்?"

"ஆமாம்.. அப்பாவாம் அப்பா.. என்னைக் கண்டாலே அவருக்கு ஆகிறதில்லே. பாரு, பக்கத்துவீட்டு ராமுவை அப்படிச் சீராட்டிகிட்டிருக்காரு! வாட்சாம், சைக்கிளாம்!"

"அவன் நல்ல பையன்; பாவம், அம்மா அப்பா இல்லாத பையனில்லையா.. அதான் கொடுக்கிறார்!"

"அப்போ நான் என்ன கெட்ட பையனா.. ம்ஹும் உனக்கும் என்னைப் பிடிக்கலை இல்லையா?"

"அப்படி இல்லைடா கண்ணா, நீயும் நல்ல பையன் தான்" தலையை வருடிக் கொடுத்த அம்மாவின் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு, பின்பக்கமாகவே வெளியில் ஓடிப் போனான் பாலு.

*****************************

"ராமு! விளையாட வரியாடா?!" எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தபடி பார்த்தான் பாலு.
நல்லவேளை, "இல்லேடா, நீங்க விளையாடுங்க. நான் என் தம்பி வாசுவை ஸ்கூலிலிருந்து கூட்டி வரணும்." என்றபடி நடந்து போனான் ராமு.

அதே சமயம், "ஏய் பாலு!" என்று அம்மா அழைத்தார்கள்.

"என்னம்மா? எதுக்கு இப்போ சத்தம் போடுறே?"

"உன் தம்பி சந்துருவை டியூசனிலிருந்து கூட்டி வரணும்.. கொஞ்சம் போய்ட்டு வரியா?"

"அடப்போம்மா.. எனக்கு விளையாடப் போவணும்.. அவனை நீயே போய்க் கூட்டி வர வேண்டியது தானே!"

அதிக வேலைச் சுமையினூடே இதை எப்படிச் செய்வதென்று தெரியாமல் அம்மா வருத்தப்பட்டதில், போனால் போகிறதென்று கிளம்பிப் போனான் பாலு.
******

பாலு சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதிவேகமாக அவன் ஓட்டும் போது அது சைக்கிள் மாதிரியே இருக்காது. ஏதோ ரேஸ் குதிரை மாதிரி பறக்கும். தம்பியை வண்டியில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தான் பாலு.

"அண்ணா, இந்த ஸ்கூல் பையைக் கொஞ்சம் நீ எடுத்துக்கிறியா.. ரொம்ப கனமா இருக்குண்ணா!" திக்கித் திணறித்தான் சொன்னான் தம்பி.

"அடப் போடா, உன்னைச் சுமக்கிறதே பெரிய வேலை. இதுல உன் பையை வேற நான் சுமக்கணுமோ.. எல்லாம் முதுகில மாட்டிகிட்டே உட்காரு!" எகத்தாளமாக சொல்லிக் கொண்டே பாலு வண்டியை மிதித்தான்.

குதிரை மாதிரி பாய்ந்து சென்ற வண்டியைத் திருப்பத்திலும் அதே வேகத்தில் விட்டது தான் பாலு செய்த தவறு. முன்னால் சாலையைக் கடந்து கொண்டிருந்த இருவர் மீது வண்டி கிட்டத்தட்ட மோதுவது போல் போயிற்று. அதிலும், கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்த சின்னப் பையனின் மீது நிச்சயமாக மோதி இருப்பான், கூட இருந்தவன் அவனைப் பிடித்திழுத்திராவிட்டால். அதிர்ச்சியில் உடனே பிரேக் பிடிக்கக் கூட தோன்றாமல், கொஞ்சம் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினான் பாலு.
வந்து கொண்டிருந்தது, ராமுவும் அவன் தம்பியும் தான். தம்பியைப் பிடித்து இழுத்ததில் பாலன்ஸ் தவறி ராமு கீழே மண்ணில் விழுந்துவிட்டான்.
"சாரி ராமு.." குரல் நடுநடுங்க பாலு சொல்லவும், முட்டிக்காலில் சிராய்த்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "பரவாயில்லை பாலு! வாசு கொஞ்சம் மெதுவாத் தான் நடப்பான். அது தான் பிரச்சனை. என் மேல தான் தப்பு. அவனைப் போய் இந்த ரோட்டைக் கிராஸ் பண்ணத் தனியா விட்டிருக்கக் கூடாது.." ராமு சொல்லவும், பாலு கூனிக் குறுகிப் போனான்.

பதிலுக்குக் காத்திராமல், விபத்தின் அதிர்ச்சியில் பயந்து போய் அழத் தொடங்கிவிட்டிருந்த தம்பியைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவன் பை மட்டுமில்லாமல் அவனையும் கொஞ்ச நேரம் தூக்கிவைத்துக் கொண்டு நடந்த ராமுவைப் பார்த்துக் கொண்டே இருந்த பாலுவுக்குத் தன் தவறும் அப்பா ராமுவைக் கொண்டாடுவதற்கான காரணமும் மெல்ல புரியத் தொடங்கியது.

'தன்னை அழைத்துப் போக வந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது' என்று அண்ணன் குற்றம் சாட்டப் போகிறானோ என்று எதிர்பார்த்து பயந்து குறுகிக் கொண்டு அமர்ந்திருந்த தம்பி சந்துருவை ஆதரவாக பார்த்த பாலு அவன் முதுகில் இருந்து பையை வாங்கிக் கொண்டு பாசமாக அவன் தலையைத் தடவியும் கொடுத்தது சந்துருவுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து தம்பி விசயத்தில், பாலுவின் மனமாற்றத்தைக் கவனித்த அவர்கள் அம்மா, அப்பாவுக்கும் தான்!


கோப்புக்காக இங்கே.. பிரசுரித்த தமிழோவியத்திற்கும் தேர்வு செய்த அன்றைய சிறப்பாசிரியர் லக்கிலுக்கிற்கும் நன்றிகளுடன்...

6 comments:

✪சிந்தாநதி said...

பாதி படிக்கும் போதே ஏற்கனவே படிச்சதாச்சேன்னு தோணிச்சு...

;(

வெற்றி said...

பொன்ஸ்,
உள்ளேன் தாயே.
கதையை முழுமையாக வாசித்தேன். நன்றி.

Kowsalya Subramanian said...

இதை நீங்க வேற புத்தகத்திலும் பிரசுரிச்சிருக்கீங்களா? இதே [மாதிரி] கதையை நான் சிறுவர்மலரில் படிச்சேன்.

சென்ஷி said...

//Kowsalya Subramanian said...
இதை நீங்க வேற புத்தகத்திலும் பிரசுரிச்சிருக்கீங்களா? இதே [மாதிரி] கதையை நான் சிறுவர்மலரில் படிச்சேன். //

அப்படியா :)

சென்ஷி

Kowsalya Subramanian said...

சென்ஷி

என் மகளுக்கு 5 வயது. அவளுக்காக சிறுவர்மலர். ஆனால் படிப்பது என்னவோ நான் தான். ;)

யோசிப்பவர் said...

//இதை நீங்க வேற புத்தகத்திலும் பிரசுரிச்சிருக்கீங்களா? இதே [மாதிரி] கதையை நான் சிறுவர்மலரில் படிச்சேன்.//

பொன்ஸ், என்னாதீது?!?!