Tuesday, March 27, 2007

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது

'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். "நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.





"ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்" என்று தொடங்குகிறது "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது" புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் "ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்" என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, "சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை" என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)

சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.

வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்." என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.

சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான் :)

அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -
சமைப்பது ஆணா பெண்ணா என்பது.
யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.
அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது
பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு
ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.
.....
அம்மாவையும் மனைவியையும்
மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற
நாம் அவர்களின் விடுதலை பற்றி
நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?

- ச. தமிழ்ச்செல்வன்



அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.

சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.

சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான - அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.

நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?

இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.

இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.

எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். "

இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் 'சமையலறைக் காதல்கள்' சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.


புத்தகம் : ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : வாசல்,
4 Oடி/4, முதல் தெரு,
வசந்த நகர்,
மதுரை - 625 003
செல் - 98421 02133
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
விலை : ரூ 45/-



முதலடி எடுத்துக் கொடுத்து உதவிய ஆசிப் அண்ணாச்சிக்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-D

51 comments:

சென்ஷி said...

நல்லவேளை எனக்கு சமைக்கத்தெரியும்.. :))

சென்ஷி

Anonymous said...

பாருங்க, என்னைப் போயி எம்சிபின்னு சொல்றாங்களே :-(
பெண்கள் இந்த மாதிரி பொங்கி எழுந்து சிந்தி சின்னாபின்னமாகணும்னுதான் நாம முதலடி எடுத்துக் கொடுக்குறோம் :-)
நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

உங்கள் நண்பன்(சரா) said...

பொன்ஸ் இந்தப் பதிவிற்க்கும் அந்த எடுபட்ட பயலின் எக் மசாலாவிற்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

அன்புடன்...
சரவணன்.

சென்ஷி said...

// ஆசிப் மீரான் said...
பாருங்க, என்னைப் போயி எம்சிபின்னு சொல்றாங்களே :-(
பெண்கள் இந்த மாதிரி பொங்கி எழுந்து சிந்தி சின்னாபின்னமாகணும்னுதான் நாம முதலடி எடுத்துக் கொடுக்குறோம் :-)
நல்லா இருங்க!!//

விடுங்க அண்ணாச்சி..
உங்க ஒரு பதிவால 10 பதிவு ரெடியாகுது..

பி.கு.: இது ஒரு உள்குத்து பதிவு என்று தெரியாமல் இந்த பின்னூட்டத்திலும் உள்குத்தை தேட வேண்டாம். :)

சென்ஷி

Anonymous said...

முகத்துலேயே குத்து விழுந்தாலும் ரத்தம் வரலியான்னு கேக்குற வீரபரம்பரையில் வந்த நாம இதையெல்லாம் பார்த்து கவலைப்பட முடியுமா சென்ஷி??
அவங்க 10 பதிவே போட்டாலும் நம்ம ஒரு பதிவுக்கு ஈடாகுமா? :-)

இப்படியே நாம ரெண்டு பேரும் மாறி மாறி எழுதி இந்தப் பதிவை காணாம அடிச்சிடலாமா? இதுல உள்குத்து ஏதுமில்ல ஒரேயடியா வெளிக்குத்துதான் :-)

சாத்தான்குளத்தான்

உண்மைத்தமிழன் said...

ஆண்கள் சமைக்கலாம். வீடு கூட்டலாம். கூட்டிப் பெருக்கலாம். பெருக்கியதை அள்ளிப் போடலாம். அள்ளிப் போட்டதை வாரி இறைத்து குப்பைத் தொட்டியில் வீசலாம். குழந்தைகளை குளிப்பாட்டலாம். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம். துணி துவைக்கலாம். முக்கியமாக தாய், மனைவி, சகோதரிகள் அனைவரின் துணிகளையும்.. கூடவே இஸ்திரியும் போட்டுத் தரலாம். கடைசியாக ஒன்று.. அப்படியே பெண்கள் பேண்ட், சட்டை போடுவதைப் போல் ஆண்களும் சேலை, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்..

அப்பாடி.. பொன்ஸ் அக்காவுக்கு கொஞ்சம் சூடு ஏத்தி விடலாம்னு பாத்தேன். வசமா ஒண்ணு சிக்கிருச்சு.. வாழ்க ஆசீப் அண்ணாச்சி..

பொன்ஸ்~~Poorna said...

முதல் பின்னூட்டத்திற்கு: நன்றி சென்ஷி

இரண்டாவது பின்னூட்டத்துக்கு: இது உள்குத்து பதிவு இல்லப்பா, இல்ல.. :)

அண்ணாச்சி,
ரொம்ப நாளா எழுதணும்னு இருந்தேன். முதலடி கிடைச்சதும் வேகமா எழுதியாச்சு :))), உள்குத்தும் வெளிக்குத்தும் இல்லாத ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய நன்றி. ;)

//அந்த எடுபட்ட பயலின் //
யாருங்க சரா? லிங்க் தாங்க...

உண்மைத்தமிழன் என்னும் தமிழ்சரண்,
உங்க பின்னூட்டம் சூப்பருங்கோ.. 'லாம்' எல்லாம் "வேண்டும்"னு மாத்திட்டீங்கன்னு வைங்க.. எங்கயோ போய்டுவீங்க ;)

- யெஸ்.பாலபாரதி said...

//சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் 'சமையலறைக் காதல்கள்' சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.//

ரிபீட்டே...
பொன்ஸ், ச.தமிழ்ச்செல்வனுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு செய்தி.. உங்கள் பதிவுக்கு உதவும் என்பதால் பகிர்கிறேன் :-

சேலத்தில் நடந்த முதல் பயிற்சி பட்டறையில் 70 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தமிழ்செல்வன் நேரடியாக கலந்துகொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியிலும் தமுஎச+ எல்.ஐ.சி ஊழியர்களின் சம்மேளனம் இணைந்து இரண்டாவது பட்டறையை நடத்தியது.

தொடர்ச்சியாக இதுபோல பல மாவட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

பூனைக்குட்டி said...

சமையல் நன்றாகச் செய்யத் தெரிந்து எனது உறவினர்கள்(ஆண்கள்0, டீத்தண்ணி கூட போடத்தெரியாத பெண்களை கலியாணம் செய்து கொண்டு சிரித்த சிரிப்பை பார்த்திருக்கிறேன்.(இதுல பொண்ண செல்லமா வளர்த்திட்டம் பாவம் டீத்தண்ணி கூடப் போடத்தெரியாதுன்னு அழுத உறவினர்களின் மாமியார் கூட்டம்.)

என்னைப் பொறுத்தவரை, சேர்ந்துவாழுதல்(கலியாணம் கட்டிக்காமல்) இல்லைன்னா தனியா(ஆண்கள்) வாழ்வது என்ற ஒரு முக்கியமான கட்டத்தை நோக்கி இந்திய ஆண்களின் முன்னேற்றம் சமையல் கற்றுக்கொள்வதில் இருக்கிறது.

"ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னுன்னு தத்து எடுத்துக்கோயேன்

அதை நீ பெக்கத் தேவையில்லையே
உன்னை நாஸ்தி பண்ணுற கோஷ்டிகளால

நோவத்தேவையில்லையே
மனசு நோவத்தேவையில்லையே"ன்னு பம்மல் உவ்வே சம்மந்தம் சும்மாவா சொன்னாரு.

இப்ப நம்ம பாலா பாய் எடுத்துக்கோங்க கல்யாணம் பண்ணிக்காம இன்னும் தெனாவெட்டா வாழ்றார்னா அவருக்கு சுயமா சமைக்கத்தெரியும் அப்படிங்கிறது அதில ஒரு முக்கியமான மேட்டர் இல்லையா?(ஹிஹி)

பொன்ஸ்~~Poorna said...

உண்மைத் தமிழன்,
//கடைசியாக ஒன்று.. அப்படியே பெண்கள் பேண்ட், சட்டை போடுவதைப் போல் ஆண்களும் சேலை, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்.. //
இத்த கவனிக்க விட்டுப் போச்சு.. உடை விசயத்தில் (மற்றவர்கள் மாதிரி) ஔஅடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.. இங்க, லாம், வேண்டும், வேண்டாம் என்ன வேணாலும் போட்டுக்குங்கப்பு.. உங்க வசதி ;)

Chandravathanaa said...

பொன்ஸ்

நல்ல பதிவு.

கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை....

இதைப் படிக்கும் போது
அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சமைத்த காலங்கள் நினைவில் வந்தன.


எனது பாடசாலையில் சமையலும் ஒரு வகுப்பாய் இருந்தது. 6ம் வகுப்பில் தொடங்கியது. எட்டாம் வகுப்பில் தரம் பிரிக்கும் போது
ஆர்ட்ஸ் படிப்பவர்கள் மட்டுமே சமையல் வகுப்பைத் தொடர்ந்தார்கள். விஞ்ஞானமும், கணிதமும் படித்தவர்கள் சமையலை விட்டு விட்டார்கள்.

சென்ஷி said...

// பொன்ஸ் said...
உண்மைத் தமிழன்,
//கடைசியாக ஒன்று.. அப்படியே பெண்கள் பேண்ட், சட்டை போடுவதைப் போல் ஆண்களும் சேலை, ஜாக்கெட் போட்டுக் கொள்ளலாம்.. //
இத்த கவனிக்க விட்டுப் போச்சு.. உடை விசயத்தில் (மற்றவர்கள் மாதிரி) அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.. இங்க, லாம், வேண்டும், வேண்டாம் என்ன வேணாலும் போட்டுக்குங்கப்பு.. உங்க வசதி ;)//

எனக்கு ஒன்னுமட்டும் புரிஞ்சிடுச்சு.. இனிமே பதிவு போட அனுமதி வாங்க ஒரு மையம் வைக்கணும் போல :)

சென்ஷி

✪சிந்தாநதி said...

//இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்//

அடிப்படையில் இப்போதும் இது ஆண்கள் தொழிலாகவே இருக்கிறது. தொழில் முறையாக இதைச் செய்பவர்களில் பெண்கள் மிகவும் குறைவு. (உணவகங்கள் விடுதிகள், வீடுகளில் கூட சமையற்காரிகளை விட சமையற்காரர்களே அதிகம்)

அதே சமயம் எதிர்பாராத சூழலில் குடும்பப் பொறுப்பு ஏற்க வேண்டிவரும் படிப்பறிவு குறைந்த பெண்கள் சமையலையே தங்கள் தொழிலாகவும் மேற் கொள்கின்றனர்.

அதே சமயம் கடமை என்று வரும்போது வீட்டில் நிலைமை நேர்மாறாகவே உள்ளது. ஆண்கள் சமையலை சாப்பிட மட்டுமென்றும் பெண்கள் சமைப்பதற்கென்றும் கற்பிக்கப் பட்ட சமூகம் ஆகிவிட்டது.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி பாலா (சமயத்துல உருப்படியான பின்னூட்டங்கள் போட்டுடறீங்க.. ஒண்ணும் சொல்லிக்க முடியலை! ;) )

தாஸ்
//சமையல் நன்றாகச் செய்யத் தெரிந்து எனது உறவினர்கள்(ஆண்கள்0, டீத்தண்ணி கூட போடத்தெரியாத பெண்களை கலியாணம் செய்து கொண்டு சிரித்த சிரிப்பை பார்த்திருக்கிறேன்.//
பாருங்க, சமையல் தெரியாத பெண், சமையல் தெரிந்த ஆணைக் கட்டினா அது சிரிப்பான சிரிப்பு.. சமையல் தெரிந்த பெண், சமையல் தெரியான ஆணைக் கட்டினா அது இயல்பு! எங்க போயி சொல்ல!!!!

உங்கள் நண்பன்(சரா) said...

இலவசமாய் ஒரு எடுபட்ட பதிவு வந்ததே படிக்கலையா நீங்க? இந்தாங்க சுட்டி,
http://elavasam.blogspot.com/2007/03/blog-post_27.html

- யெஸ்.பாலபாரதி said...

//இப்ப நம்ம பாலா பாய் எடுத்துக்கோங்க கல்யாணம் பண்ணிக்காம இன்னும் தெனாவெட்டா வாழ்றார்னா அவருக்கு சுயமா சமைக்கத்தெரியும் அப்படிங்கிறது அதில ஒரு முக்கியமான மேட்டர் இல்லையா?(ஹிஹி)
//

அடப்பாவி.. இப்படியா போட்டுக்கொடுக்குறது.

ஒரு மனுசன் சுதந்திரமா இருந்தா புடிக்காதே..., ஆசிப் அண்ணாச்சி பொலம்புறதைப் பார்த்த பொறவும் அந்த ஆசை என்னத்துக்குங்கிறேன்...

சரி தான தல..?!

சென்ஷி said...

//இப்படியே நாம ரெண்டு பேரும் மாறி மாறி எழுதி இந்தப் பதிவை காணாம அடிச்சிடலாமா? இதுல உள்குத்து ஏதுமில்ல ஒரேயடியா வெளிக்குத்துதான் :-)

சாத்தான்குளத்தான் //

அண்ணாச்சி...
முதல்ல துபாய் யானைக்கு தமிழ் தெரியுமான்னு கேட்டு வைங்க.. அப்புறமா நான் உங்ககூட கூட்டு, பொறியல், சாம்பார், ரசம் எல்லாம் வைக்குறேன். ஏன்னா எனக்குத்தான் சமைக்கத்தெரியுமே.!

சென்ஷி

பூனைக்குட்டி said...

பொன்ஸ் நான் நக்கலாகச் சொல்லவில்லை, டீத்தண்ணி கூட போடத்தெரியாமல் பெண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்கிறேன் அவ்வளவே.

ஆண்களில் பலர் சமையல் செய்யத் தெரியாமல் ஏன் சமையற்கட்டு பக்கமே கூட வரமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும் அதைப் போலவே இதுவும் அவ்வளவுதான்.

எல்லாப் பெண்களும் 250 ரெசிப்பிக்களுடன் வருவதில்லை என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன். பார்க்கவும் ஸ்மைலிகள் இல்லை சீரியஸாய் பேசுறேனாக்கும்.

சென்ஷி said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//இப்ப நம்ம பாலா பாய் எடுத்துக்கோங்க கல்யாணம் பண்ணிக்காம இன்னும் தெனாவெட்டா வாழ்றார்னா அவருக்கு சுயமா சமைக்கத்தெரியும் அப்படிங்கிறது அதில ஒரு முக்கியமான மேட்டர் இல்லையா?(ஹிஹி)
//

அடப்பாவி.. இப்படியா போட்டுக்கொடுக்குறது.//

ம்ஹ்ம்... பின்னூட்டத்த இப்படியேல்லாம் போட்டா ரொம்ம்ம்ப சீக்கிரமே வெளியில போயிடும்..

ஆமா நளபாகம், பீம பாகம்ன்னு சொல்றாங்களே அதப்பத்தி உங்க கருத்து என்ன?

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

தாஸ்,
//டீத்தண்ணி கூட போடத்தெரியாமல் பெண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்ற வரலாற்று உண்மையை பதிவு செய்கிறேன் அவ்வளவே.//
பதிவை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இந்த வரலாற்று உண்மையை நானே பதிவு செய்திருக்கிறேன் - காரணத்துடன்!

Anonymous said...

யோவ் மோகன் தாசு

தலையோட தலையை ஏன்யா உரூட்டுற? (அது இருக்குறதே அதுக்குத்தானேன்னு பாகச ம்க்கள் சொல்லக் கூடும்)

தலைவா,

நீ கல்யாணம் பண்ணிக்க தலைவா. நீ மட்டும் சந்தோசமா இருந்தா நியாயமா?

சாத்தான்குளத்தான்

Anonymous said...

சென்ஷி,

துபாய்ல யானை மட்டுமில்ல ஒட்டகம் கூட் தமிழ்லதான் பேசும் - தமிழனைத் தவிர :-)

சாத்தான்குளத்தான்

Anonymous said...

//எங்க போயி சொல்ல!!!!//

அதுக்குத்தான் 'பிங்க்' கலர்ல கட்டம் கட்டி வச்சிருக்கோம். அன்கிட்டு போயி சொல்லுங்க :-)

இப்படி கட்டம் கட்டுனது எவ்வளவு வசதியா இருக்கு தெரியுமா - படிக்காம இருக்குறதுக்கு :-)

சாத்தான்குளத்தான்

பூனைக்குட்டி said...

//முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும்.// பொன்ஸ் இதையா சொல்கிறீர்கள்.

நான் கூட பாஸ்ட் ரீடிங்கில் மிஸ் ஆயிடுச்சுன்னு நினைச்சேன்.

தாணு said...

//என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான்//
நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. `டீத்தண்ணி கூடப் போடத்தெரியாத' எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்ததே என் கணவர்தான். ஆண்கள் சமைப்பது எப்போய்ஹுமே இனிதுதான்...

உண்மைத்தமிழன் said...

//பதிவை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இந்த வரலாற்று உண்மையை நானே பதிவு செய்திருக்கிறேன் - காரணத்துடன்!//

தலை.. கேட்டீங்களா.. பொன்ஸ் அக்கா மறைமுகமா ஒத்துக்கிட்டாங்க ஒரு வரலாற்று உண்மையை.. வலைத்தள மக்களே இப்பத் தெரிஞ்சுக்குங்க.. எங்க பொன்ஸ் அக்கா சமையல்கட்டுப் பக்கமே இதுவரைக்கும் போனதே இல்லையாக்கும். இனிமேலும் போக மாட்டாங்களாக்கும்.. ஆமா இதுல சம்பந்தமே இல்லாமே ஏன் நம்ம தலையோட தலையைப் போட்டு உருட்டுறீங்க.. 49 பைசா செலவுல பேசறதுக்குக்கூட யோசிக்குது தலை.. இதுல கல்யாணம் பண்ணி.. ம்ஹ¤ம்.. எனக்கு நம்பிக்கை இல்லை.. இது ஒட்டு மொத்தமா 'வாழாவெட்டி' டீம்தான்..

லக்ஷ்மி said...

மதுரா உங்க பதிவுல போட வேண்டிய பின்னூட்டத்தை என்னோடதுல வந்து தவறுதலா போட்டுட்டாங்க. நாங்க அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோமாக்கும். அதான் பொறுப்பா உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டேன்.
//பொன்ஸ், புதரகத்தில முதல் தீபாவளி அன்னைக்கு, கடையில கோதுமைய வாங்கி முந்தினநாள் அறைச்சு, துணியில கட்டி, பால் எடுத்து, ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா செஞ்சு என் கையில குடுத்த பையனைப் பாத்து நான் என்னைய எங்க போய் அளக்கிறதுன்னு தெரியாம நின்னேன். ;) எனக்கு அப்ப சமைக்க தெரியும், ஆனா அந்த அல்வாவையே ஸ்க்றாட்சுலருந்த பண்ற அளவுக்கு ஆர்வம் வரலை அன்னைக்கு வரைக்கும். அதுக்கப்புறம் வந்துச்சு! இந்த புத்தகம் சமையலை ஆர்வமும், ஆனந்தமும் மிகுந்ததா காட்டுற மாதிரி இருக்கு!

சமையலறை காதலுக்கு ஜே !!!

இப்பல்லாம் காட்பரிஸ் சாக்லேட்டே வீட்டுல செஞ்சு தர்ற புருஷன் கிடைக்குறாங்கன்னு சில "நல்ல தமிழ் ஆண்"களுக்கு தெரியல போல்ரிக்கே. நல்லாருங்க சார்ஸ் ;)

- மதுரா
//

Hariharan # 03985177737685368452 said...

பொன்ஸ்,

நல்ல சமையல்ன்னா அது நளபாகம் தாங்க!

நான் தென்னிந்திய தோசையைச் சுட்டும்/வார்த்தும், பாஸ்டா,ஸ்பெகடி,மெக்ரோனின்னு இத்தாலிய-இந்திய ஜூகல்பந்தி, கிரேக்க சாலட்ன்னு எங்கவீட்டு நளனா வீக் எண்டில் கலக்குவேனுங்க!
(வாரத்துக்கு மரத்துப்போன நாக்குக்கு நல்லதா குக்-க)

வெளக்கமாறு பெண்களுடையது வேக்குவம் க்ளீனர் ஆண்களுடயதுன்னு துப்புறத் துயரும் என் மீது! என்ன அநியாயம்!

நான் ஹவுஸ் ஹஸ்பண்டா மாறிக்கிறேன், ப்ரட் வின்னரா நீ இருன்னு ரோல் எக்சேஞ்ச் ஆபர் இன்னும் என் மனைவியின் முடிவுக்குக் காத்திருக்கிறது!

வெயில்ல அலையாம வெள்ளரிக்காய நறுக்கிக் கண்மேல வச்சுக்கிட்டு, கடலமாவு/பயத்தம்மாவு மாஸ்க் போட்டுக்கிட்டு, கட்டிடத்துக்கு ஒருதரம் பவுண்டேஷன்னா, தினமும் பவுண்டேஷன் மூஞ்சியில் எழுப்பி ,குடும்பத்தின் நிதிநிலை பவுண்டேஷனை ஆட்டம் காணவைத்தபடி, டெய்லியே விடுமுறையா வாழ்க்கையைப் பேண நான் ரெடிதாங்க!

ஆபிஸில் டார்கெட் டார்ச்சர், பெண்ணிய டார்ச்சர் சிந்தனையின் டார்கெட்டாக இருப்பதைவிட ஹவுஸ் ஹஸ்பண்ட் வாழ்வு சுகமானதுங்க!

என்ன உள்குத்துன்னு சொன்னா நல்லது!

Anonymous said...

ஆகா கோல்மால் பண்ணீட்டேன் போல்ரிக்கே :) .. லக்ஷ்மி ... நன்றி நன்றி! :) ...

பொன்ஸ்~~Poorna said...

நன்றி சந்திரவதனா, தாய்-தந்தை சமையல் பற்றி வெகுநாள் முன்பு நீங்கள் ஏதோ பதிவிட்டு நான் படித்த நினைவு.. சரிதானே?!:)

//எனக்கு ஒன்னுமட்டும் புரிஞ்சிடுச்சு.. இனிமே பதிவு போட அனுமதி வாங்க ஒரு மையம் வைக்கணும் போல //
சென்ஷி, அக்காங்க்பா.. சமையல் பத்தி நம்ம ஒரு பதிவு போட்டா, போட்டவைங்களுக்குச் சமையலே தெரியாதுன்னு வந்து நிக்கிறத எங்க போய் சொல்லுறது.. தனி மனித தாக்குதல் பிரிவுல இது வரும் தானே?

சிந்தாநதி, தொழில் என்று அந்தப் பொருளில் சொல்லவில்லை. சுட்டியதற்கு நன்றி. கடமை என்றுதான் எழுதியிருக்க வேண்டும்..

சரா, சுட்டிக்கு நன்றி.. பொறுமையா பார்க்கிறேன். முட்டை சமையல் எல்லாம் அத்தனை பயனில்லை எனக்கு :)

//இப்படி கட்டம் கட்டுனது எவ்வளவு வசதியா இருக்கு தெரியுமா - படிக்காம இருக்குறதுக்கு :-)//
அண்ணாச்சி! ஒரு கட்டம் போடக் கூட இத்தனை எதிர்ப்பா! தெய்வமே!

தாஸ், அதையே தான் சொல்கிறேன்.

நன்றி தாணு, லக்ஷ்மி, மதுரா..

லக்ஷ்மி, மிஸ் ஆன பின்னூட்டத்தைக் கொண்டு சேரிடம் சேர்த்ததற்கும் நன்றி :-D

ஹரிஹரன், சீக்கிரமே ஹோம் மேக்கராக நீங்கள் விரும்பும் பிரமோஷனை பெற என் வாழ்த்துக்கள் :) அப்பவாவது அது எத்தனை "அருமை"யான விடுமுறையாக இருக்கிறதென்று அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் :)))

சென்ஷி said...

//ஆபிஸில் டார்கெட் டார்ச்சர், பெண்ணிய டார்ச்சர் சிந்தனையின் டார்கெட்டாக இருப்பதைவிட ஹவுஸ் ஹஸ்பண்ட் வாழ்வு சுகமானதுங்க!

என்ன உள்குத்துன்னு சொன்னா நல்லது!//

முகப்புல கட்டம் கட்டி போட்டிருக்காங்க போலருக்கே. உள்குத்து பின்னூட்ட பிரிவுன்னு.. :))

சென்ஷி

சென்ஷி said...

//ஹரிஹரன், சீக்கிரமே ஹோம் மேக்கராக நீங்கள் விரும்பும் பிரமோஷனை பெற என் வாழ்த்துக்கள் அப்பவாவது அது எத்தனை "அருமை"யான விடுமுறையாக இருக்கிறதென்று அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் ))//

:((

senshe

MyFriend said...

ஆஹா.. பொன்ஸக்கா,

// 'பெண்புத்தி பின்புத்தி' என்பது //

புலி வந்து உங்களை இன்னும் கொஞ்ச நேரத்துல பிராண்ட போகுது! ஒரு தடவை நானும் இப்படிதான் இதை எழுதினேன்... அவர் அதுக்கு விளக்கமெல்லாம் கொடுத்து விளக்கிட்டு போயிட்டாரு..

இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வந்துடுவாருன்னு நினைக்கிறேன். அதுக்குள்ள நான் எஸ்கேப்பு! ;-)

Mohandoss said...

//அதுக்குத்தான் 'பிங்க்' கலர்ல கட்டம் கட்டி வச்சிருக்கோம். அன்கிட்டு போயி சொல்லுங்க :-)

இப்படி கட்டம் கட்டுனது எவ்வளவு வசதியா இருக்கு தெரியுமா - படிக்காம இருக்குறதுக்கு :-)

சாத்தான்குளத்தான்
//

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.

உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்தே ஆகணும் வேற வழியேயில்லை. எப்படிங்க இப்படியில்லாம் உங்களால மட்டும் முடியுது.

பொன்ஸ் அதுதான்னா நான் முத தடவ படிச்சப்பவே படிச்சேன். சரியான ஜல்லி.

என்ன விளையாட்டாயிருக்கு அந்தக்காலத்தில பன்னிரெண்டு வயசில கல்யாணம் பண்ணிவைப்பாங்க. எங்க அம்மா காலத்தில எல்லாம் கொஞ்சம் லேட் பதினைந்து பதினாறு. ஆனால் மாமியார் ஊடு வந்து சமையல் எல்லாம் கத்துக்க மாட்டாங்க.

ஒவ்வொரு குடும்பத்து சமையலுக்கும் பெரும்பான்மையான வித்தியாசம், உப்பு உறைப்பு போடுவதில் தான் இருக்குமே தவிர, காய்கறி வெட்டுறது, வெந்நீர் போடுறது, காப்பி டீ போடுவதில் எல்லாம் வித்தியாசம் இருக்காது, ஆனால் எவ்வளவு காபித்தூள் போடுறோம் சீனீ போடுறோம் பிரச்சனையிருக்கும். ஒத்துக்குறேன்.

இங்க அதை போடுறதுக்கேல்ல பிரச்சனையாயிருக்கு. சும்மா உடான்ஸ் உடக்கூடாது. மாமியார் வீட்டுக்குப்போய் கத்துக்குவாங்கன்னு.

அதுவுமில்லாம இப்பல்லாம் கல்யாணம் ஆகுறதுக்கு குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து முப்பது ஆகுது. அதுக்குள்ள கத்துக்காத ஐட்டத்தை அதுக்கப்புறம் கத்துக்கிட்டு கிழிச்ச மாதிரிதான். இதுக்கு ஆண்களும் விதிவிலக்கல்ல.

Mohandoss said...

ஆசீப்ஜி, ஒரு கையெழுத்து வேட்டை நடத்துவோம். இந்த 'பிங்க்' கலர் பார்ட்டிங்களுக்குன்னு தனியா ஒரு திரட்டி கொடுத்துட்டா பிரச்சனை முழுசா தீர்ந்துடும்னு நினைக்கிறேன்.

எல்லாம் 'பிங்கில்' கொடுத்துவிட்டோம்னா நாம உண்டு நம்ம வேலையுண்டுனு இருக்கலாம்.

என்ன சொல்றீங்க?

பத்மா அர்விந்த் said...

பதிவைவிட பின்னூட்டங்கள் நிறைய சொல்கின்றன.

லக்கிலுக் said...

நல்லவேளையாக எனக்கு வெந்நீர் சமைக்கத் தெரியும்

பொன்ஸ்~~Poorna said...

மை ஃபிரண்ட்,
என்ன விளக்கமாக இருந்தாலும் அதைக் கேட்டுக் கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சிலர் இது போன்ற பழமொழிகளுக்குப் பெண்களின் எதிர்ப்புகளை ஜல்லி என்பது போல், நீங்கள் பழமொழி உருவாக்கியவர்கள் சொல்லும் விளக்கத்தைப் "பிராண்டுவது" என்றெல்லாம் பிராண்ட்(branding) பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

தாஸ் :-) பெரிய ஸ்மைலி. இதுக்கு மேல் பேச என்னிடம் ஏதுமில்லை. வேற யாராச்சும் வந்தால், பிரசுரிக்கிறேன் :)

ஆமாம் பத்மா :) இன்னும் பேசும் என்று எதிர்பார்க்கிறேன் :-D

லக்கி, நல்லவேளை.. நீங்க இந்தப் புத்தகத்தைத் தாராளமா படிக்கலாம் ;)

சென்ஷி said...

//லக்கிலுக் said...
நல்லவேளையாக எனக்கு வெந்நீர் சமைக்கத் தெரியும் //

அப்ப பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமான்னு முதல்ல கேட்டுக்கப்பூ.. அப்புறம் அண்ணாச்சி மாதிரி கலர் பெட்டி கேக்கப்படாது :)

சென்ஷி

Hariharan # 03985177737685368452 said...

//ஹரிஹரன், சீக்கிரமே ஹோம் மேக்கராக நீங்கள் விரும்பும் பிரமோஷனை பெற என் வாழ்த்துக்கள் அப்பவாவது அது எத்தனை "அருமை"யான விடுமுறையாக இருக்கிறதென்று அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் ))//

அதான் "அனுபவித்துக்கொண்டே" சொல்லி இருக்கேனே:

//வெயில்ல அலையாம வெள்ளரிக்காய நறுக்கிக் கண்மேல வச்சுக்கிட்டு, கடலமாவு/பயத்தம்மாவு மாஸ்க் போட்டுக்கிட்டு, கட்டிடத்துக்கு ஒருதரம் பவுண்டேஷன்னா, தினமும் பவுண்டேஷன் மூஞ்சியில் எழுப்பி ,குடும்பத்தின் நிதிநிலை பவுண்டேஷனை ஆட்டம் காணவைத்தபடி டெய்லியே விடுமுறையா வாழ்க்கையைப் பேண நான் ரெடிதாங்க!//

வெள்ளரிக்காய் வைத்துத் தன் கண்ணை மறைத்த வாறே "உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது"ன்னு ஐஎஸ்.ஓ சர்டிபிகேஷன் தர்றது எவ்வளவோ ஈஸியான வேலைதானே!

சென்ஷி said...

40வதும் நானே :))

அக்கா கோச்சுக்கப்படாது :)).. 41க்குத்தான் வெளியே போகும்..

பெரிய ஸ்மைலியா போட்டுட்டேன்

Hariharan # 03985177737685368452 said...

சென்ஷி,

கல்யாணமானப்புறம் கத்தி நேரடியாச் சொன்னாலே ஙேன்னு தான் இருக்கேன்! தினமும் உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிக் கேட்டுட்டே இருந்தா எது உள்குத்துன்னு எப்படிப் புரிஞ்சுக்கிறது!

Eventually Spontaenity of MEN rusts after maariage!

இந்த ஆண் பித்தளைக்காக கண்ணீர் உ.குத்து ஆதரவு தந்ததற்கு நன்றி சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ் ..மாமியார் வீட்டு பழக்கத்தை கத்துக்கறது உண்மைதான்.
எங்க வீட்டுல அப்பாக்கு பிடிக்காதுங்கறதால நிறைய விஷயம் அம்மா சமைக்க மாட்டாங்க. கணவருக்கு பிடிக்கும் என்பதற்காக அவற்றை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மீரான் மற்றும் தாஸ் ..இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள். எழுப்ப முடியாது.

உப்பு உரைப்பு தவிர காய் நறுக்குவதில் கூட வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அதற்கு படத்துடன் விளக்கி பதிவே போடலாம்.

பிங்க் கலரை விரும்பாதவர்கள் படிப்பதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து காப்பாற்ற சக்தி கொடுத்த உங்களுக்கு நன்றி பொன்ஸ்.
நிம்மதி.

RBGR said...

"கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங்கொடிது இளமையில் வறுமை
அதனினுங்கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினுங்கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினுங்கொடிதிங்கவர் கையால்
இன்புற உண்பது தானே"

"எல்லாவற்றையும் விட அன்பிலார் உணவிட உண்பதே என்கிறார் ஒளவை."

G.Ragavan said...

ஆண்களின் சமையல்....இதுக்கு என்ன சொல்றது? எனக்கு நல்லாவே சமைக்க வரும். அது பெண்களுக்கு மட்டுமான வேலைன்னு ஒத்துக்கிற முடியாது. பொதுவில் ஒரு மனிதப்பிறவி..தன் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான எதையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். உணவு ஈட்டல் மட்டுமல்ல..உணவு ஆக்கலும் இதில் அடங்கும். இதுதான் என்னுடைய கருத்து.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சாப்பாட்டு நேரத்திலதானா இந்த இடுகை என் கண்ணில் பட்டுத் தொலைக்கவேண்டும்? ;)

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பொன்ஸ். புத்தகவிவரம் தந்தமைக்கு நன்றி.

எங்களூரில் பாடத்திட்டத்தில் சமையலும் இருந்தது. ஆண்கள் பள்ளிகளிலும் இருந்ததாவென்று தெரியவில்லை. கலவன் பாடசாலைகளில் பெண்களுக்கென இருந்திருக்கும். சென்னையில் தையல் பெண்களுக்கு தச்சுவேலை ஆண்களுக்கு என்றிருந்ததுபோல..

ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் சமையல் வகுப்பு. ரெக்கார்ட் நோட் மாதிரி சமையற்குறிப்புகளைத் தனியாகப் பேண வேண்டும். அதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ படங்கள் எல்லாம் ஒட்டியிருப்போம். இதுபோக, சிலர் தத்தமது சொந்தபாவனைக்கு (?) இன்னுமொரு நோட்புக் வைத்திருப்பார்கள். ஹாஸ்டல் காரர்களான எங்களுக்குத் தோழிகளே துணை. நாங்களும் கண்ணில் பட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாவற்றையும் துளாவியபடி இருப்போம்.

வகுப்பில் என்னென்ன சமைத்தோம் என்று பெரிதாக நினைவில்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்துண்டது நினைவிருக்கிறது..

அதற்குப்பிறகு சென்னையில் 10ம் வகுப்பி விடுமுறையில் கீழ்வீட்டு aunty 4 பேருக்கு எடுத்த கிளாசில் புளிக்காய்ச்சல் சொல்லித்தந்தேயாகவேண்டும் என்று பிடுங்கியெடுத்து கற்றுக்கொண்டாயிற்று. அவங்களும் எத்தனை நாளைக்குத்தான் மேலே குடுத்தனுப்புவாங்க. கத்துக்குடுத்துட்டாங்க. ;)

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பொன்ஸ்,

பத்மா சொன்னதுபோல பின்னூட்டங்கள் நிறையச் சொல்லுகின்றன!

சாதாரண சமையல் இவ்வளவு அதிர்வை உருவாக்குவது சுவாரசியந்தானில்ல. சாதாரண சமையல் என்று சொல்லி ஒதுக்கிவிடமுடியாதபடிக்கு, அது ஒரு குறிச்சொல்தானோ என்றும் பயப்படுறாங்களோ? ;)

பிங்க் கலர் மகளிர் சக்திக்கும் இந்தளவு அதிர்வா? வாவ்!!!

எனிவே, இன்றைய பொழுதை இனிமையானதாக மாற்றியமைத்த பின்னூட்டங்களுக்கும் அதற்குக் காரமான (காரணமான) உங்களின் இடுகைக்கும் நன்றி பொன்ஸ்! - somehow i made a spelling mistake here while typing. immiediatly came back to type in the Na, then decided to leave it like that. ;)

-மதி

Premalatha said...

பொன்ஸ்,

பின்னூட்டங்கள் இன்ட்ரெஸ்ட்டிங். :))

பதிவு சூப்பர். கதம்பத்தில் லின்க்டு.

பாரதி தம்பி said...

அடுக்களை அரசியலின் 'பின் நவீனத்துவக் கூறுகளை' பல பேர் பின்னூட்டங்கள்ல பிரிச்சு மேஞ்சுட்டாங்க..

பொதுவாவே, உங்களோட புத்தக விமர்சனம் நல்லா இருக்கு.

மா சிவகுமார் said...

நுண்ணுயிர் வேதிவினை என்ற பாடத்தில் இட்லி மாவு தயாரிப்பது பற்றி எங்கள் பட்டப் படிப்பின் படித்தோம் பொன்ஸ். நம்முடைய சமையலில் நிறைய வேதியியல், உயிரியியல் வினைகளுக்கான பின்னணிகள் இருக்கின்றன.

சாம்பாரில் வெந்தயம் போட்டுத் தாளிப்பது வயிற்றில் அமிலத் தன்மையை குறைப்பதற்காம் (இரண்டு நாள் முன்புதான் தெரிந்தது). நல்ல சமையல்காரர்தான் நல்ல தோல் தயாரிப்பவராக இருக்க முடியும் என்று எங்கள் பேராசிரியர் ஒருவர் சொல்லுவார்.


அன்புடன்,

மா சிவகுமார்

MSV Muthu said...

எனக்கென்னவோ இந்த ஜெனரேசன்ல பொண்ணுங்கள விட பசங்க நல்லா சமைக்கிறாய்ங்களோன்னு தோணுது. Your friend is an exception anyway! :)