Friday, June 09, 2006

நான் ஏன் மாற்றினேன்?

தமிழ் மணத்தில் இப்போது பொதுவாக "படம் மாற்றும் காலம்". எல்லாரும் தங்கள் ப்ரொபைலில் புகைப்படங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 'சரி, ஊரோடு ஒத்துவாழ்' என்று நானும் படம் மாற்றுவது என்று முடிவெடுத்தேன்.

ஏற்கனவே எங்கள் சங்கப் பலகையில் என் படத்தை போட்டுவிட்டதால் யாரேனும் ஆட்டோ, ப்ளேன், சைக்கிள் அனுப்பும் முன் என்னுடைய படை பலத்தை ஒரு படமாகப் போட்டு 'பட'பலமாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணம்.

என்ன போடலாம் என்று யோசித்த போது எனக்கு நினைவுக்கு வந்தது யானை தான்..

"யானை யானை அழகர் யானை அம்பாரி யானை .." என்று பாடிய காலத்திலிருந்து எனக்கு யானை என்றால் ஒரு பாசம்.(முழுப் பாட்டும் நினைவில்லைங்க.. இது மட்டும் தான் இருக்கு.. ). இவ்வளவு பெரிய மிருகத்தை எப்படிப் படைத்திருக்கிறான் என்று கொஞ்சம் ஆச்சரியமும் உண்டு. அதிலும் ஆப்பிரிக்க நாட்டு யானைகளின் சில படங்களைப் பார்த்து விட்டு வியப்பு பலமடங்காகி விட்டது.

என்னிடம் தொட்டுத் தொட்டுச் சேர்த்த, யானை படம் போட்ட புத்தகம், டைரி, துணிமணி, கர்சீப் என்று நிறைய உண்டு. ஏன், சமீபத்தில் மதுரை போனபோது யானை படம் போட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பயனே இல்லாமல் ஒரு 'மஞ்சள் பை'யையும் வாங்கி, அதை அமெரிக்கா வேறு எடுத்து வந்தேன். யானை பொம்மைகள், மண், பஞ்சு, மார்பிள், செம்பு எல்லா மூலப் பொருளிலும் சேர்த்து ஒரு 100க்கு மேல் இருக்கும்(துளசி அக்கா பக்கத்துல வர முடியுமா? ம்ஹும்..!! ). இதுவரை சென்று வந்த எல்லா ஊர்களிலும் ஒரு யானை வாங்கியே இருப்பேன்(அட! பொம்மை தாங்க :)). என் அம்மாவுக்கும் யானை பிடிக்கும் என்பதால், ஊர் விட்டு ஊர் வரும்போது எந்த யானை யாருக்குச் சொந்தம் என்று வேறு ஒரு இழுபறி நடக்கும்.





சின்ன வயதில் எனக்கிருந்த "வாழ்க்கை லட்சிய"ங்களில் ஒன்று யானை வளர்ப்பது. ஒரு யானையை வாங்கி வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.. எம்ஜியார் படத்தில் நாலு யானைகளை வைத்து வளர்த்ததைப் பார்த்த பின் (படம் பேரு என்னங்க?) எனக்கு இது நிச்சயம் நடக்கக் கூடியது தான் என்னும் நம்பிக்கை வந்து விட்டது.

வயதாக ஆக, என் அப்பாவைப் போட்டு பிடுங்கிக் கொண்டே இருந்ததில் "யானை எல்லாம் வாங்கித் தர முடியாது.. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்" என்று பூனை வளர்க்க அனுமதி கிடைத்தது.

இப்போது சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பித்த பின் யானை வளர்க்கும் ஆசை அறவே போய்விட்டது.

முதல் காரணம், யானையைக் கட்டும் அளவுக்கு பெரிய வீடு வாங்குவது என்பதே கேள்விக் குறி.

அடுத்து, யானையும் பாவம். காட்டில் நிம்மதியாக இருக்கும் அதை என் ஒருத்தியின் ஆசைக்காக பிடித்து வந்து, வளர்த்து, அது இயல்பாக சாப்பிடாமல் நம்மை எதற்கெடுத்தாலும் எதிர்பார்த்து.. ம்ஹும்.. இதெல்லாம் ஒத்துவராது..

உஷாவின் குதிரையைப் பற்றி பேசும்போது, யானை ரொம்ப சோம்பேறி என்று ஒரு கருத்து வந்தது. யானை படம் போடுவது என்று முடிவு செய்த போது, நம்ம சுறுசுறுப்புக்கு(??!) அடக்கமான யானை போதாது என்று முடிவு செய்து ஓடும் யானையைத் தேடிப் போட்டேன். யானை எப்படி?

கொட்டும் பொன்னி(ஸ்)ன் ரசிகர்களுக்காக, இறுதியாக ஒருமுறை :


இப்போவே அள்ளிக்குங்க..

போனா வராது, பொழுது போனா கிடைக்காது :)

புது யானை.. மாற்றிக் கொண்டே இருப்பதால், இங்கே பதிக்கிறேன்..



88 comments:

தருமி said...

உங்க ஆனய பாத்தா எனக்கு மூச்சு வாங்குதுங்க!
பாவங்க...இப்படி ஓடிக்கிட்டே இருந்தா...

அப்புறம் இத முதுமலைக்காட்டு camp-க்கு அனுப்புறதா ஏதாவது திட்டம் உண்டா?

ilavanji said...

எல்லாஞ் சரிதான்!

யானைய கொஞ்சம் ஸ்லோவா ஓடச்சொல்லுங்க! இங்க லேப்புடாப்பே ஆடுது! :)

oosi said...

யானைக்கு பேர் வெச்சாச்சா?

பொன்ஸ்~~Poorna said...

ஆகா, வாத்தியார்!! இந்நேரத்துக்கு என்ன பண்றீங்க!!!

VSK said...

பொன்ஸின் பொன்மழை மறைந்து
பொண்யானை வந்தது!

வாழ்த்துகள்!

அது எப்படி பெண் யானின்னு சரியாச் சொன்னேன் பாத்தீங்களா!!

தந்தம் இல்லை பாருங்க!

நீங்க சோம்பேறி இல்லதான் ஒத்துக்கறேன்!

அதுக்காக, இந்த ஓட்டமா?

பாத்துங்க!

நம்ம தலைவர் வேற சொல்லியிருக்காரு!

யானை விழுந்தா திரும்ப எழுந்திருக்க நேரமாவும்னு!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அடடே! யானை பிடிக்குமா? எனக்குந்தான். :) ஆனா, ரொம்ப பிடிச்ச பிராணி எதுன்னுல்லாம் யோசிச்சதில்ல.. :(

அப்புறம், துளசிக்காவுக்காக இணையத்தில் தேடிப்பிடிச்ச யானைகள் என்னுடைய கணினியில் வெயிட்டிங். ஒண்ணு மட்டும் அவங்க தளத்தில ஆடுறார். மத்தவங்கள வேணும்னா அனுப்பி வைக்கிறேன். ஆடுறவர் வேணும்னா துளசிக்காட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க வீட்டுக்கும் கூட்டிட்டு வந்திருங்க. ;)

கேரளாப்பக்கம் ஒதுங்கினீங்கனா வீட்டிலயே யானை வளர்க்கலாமே! :O

VSK said...

//அது எப்படி பெண் யானைன்னு சரியாச் சொன்னேன் பாத்தீங்களா!!//

Correction!!

Unknown said...

எங்கிருந்துங்க அந்த கொட்டும் பொன் படத்தை பிடிச்சீங்க?கூகிளிலா?அந்த கொட்டும்பொன் உங்க nicknamekku பொருத்தமா இருந்துச்சு.

பொன்ஸ்~~Poorna said...

தருமி, திரும்பி முதுமலைக் காலம் வந்தா அனுப்பிடலாம்.. வயசான காலத்துல யானையை ரொம்ப உத்து பாக்காதீங்க:)

சதயம், ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு.. பார்க்கலாம்.

ஊசி, யானைக்குப் பேரும் பொன்ஸ்தாங்க.. பாருங்க என்னை மாதிரி எத்தனை சுறுசுறுப்பு?:)

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, நீங்க சொல்லி தப்பாகுமா? இருக்கட்டும்.
//யானை விழுந்தா திரும்ப எழுந்திருக்க நேரமாவும்னு!! //
விழுந்தாத் தானே? :)

மதி, எனக்கும் எல்லா பிராணியும் பிடிக்கும்ங்க.. இணைய யானைகள் அனுப்பி விடுங்க.. எதுக்கும் துளசி அக்கா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிடலாம், அப்புறமே அனுப்புங்க.. கேரளாவா!! நம்ம தமிழ்நாட்ல இருந்துகிட்டே ஒண்ணும் பண்ண முடியாதா? :(

செல்வன், எல்லாமே கூகிளாண்டவர் புண்ணியம் தாங்க. பேருக்குப் பொருத்தமாத் தான் இருந்தது.. ஆனா குணத்துக்கு இது தான் பொருத்தம்.. இருக்கட்டும். யானை கால் வலிக்குதுன்னு சொன்னா, இருக்கவே இருக்கு பொன் :)

ilavanji said...

//இந்நேரத்துக்கு என்ன பண்றீங்க!!! //

எல்லாம் உங்க ஊரு துரைமாருங்க செய்யற அழிச்சாட்டியம்தான்! இன்னும் வீட்டுக்கு போகவிடாம இழுத்துப்புடிச்சி அமுக்கிவைச்சிருக்கானுவ!

நாமெல்லாம் அடங்கற ஆளா?! அதான் சைக்கிள்கேப்புல தமிழ்மணத்துல மேஞ்சுக்கினு.. ஹிஹி...

பொன்ஸ்~~Poorna said...

//எல்லாம் உங்க ஊரு துரைமாருங்க செய்யற அழிச்சாட்டியம்தான்! //
வாத்தியார், நான் இன்னும் உங்கூரு தாங்க.. இங்க சும்மா விசிட்டர் தான்.. நடத்துங்க தமிழ்மணத்துல நல்லா மேயவும் :)

//எல்லாம் சரிதான்...இந்தப் பதிவில் வனிகமும்,பொருளாதாரமும் எங்கிருந்து வருகிறது....என் அறிவுக்கு எட்டவில்லை...விளக்கினால் புண்ணியமாய் போகும்...:-)) //
அதாவது சதயம், இது ஒரு நல்ல கேள்வி :) [பதில் தெரியலைன்னா,வ.வா.ச. மெம்பர்ஸ் இப்படி சொல்லணும்.. ஹி ஹி!!]

பங்கு வணிகத்தைப் பற்றி, பத்தி பத்தியாக எழுதும் என் அன்பு நண்பர் குப்புசாமி நாளை இதை விளக்குவார் :)

Sivabalan said...

பொன்ஸ்

"மாற்றம் என்பது தொடர் நிகழ்ச்சி. மாற்றங்கள் சில் நிகழ்ந்திருப்பின் சரித்திரம் எழுதவே வழியில்லை." எங்கோ படித்தது.

பழைய அவதாரம் நல்லா இருந்தது.

வெட்டிப்பயல் said...

ஊழல் தொடர்பான கேள்விகள் எதொரொலி!
பொன்ஸ் வீட்டில் தங்க நாணயங்கள் மறைப்பு!

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ... இப்பிடி பண்ணிப்புட்டீகளே...நீங்க என் வீட்டு பக்கமா வந்தா சும்மா சலசலன்னு காசு கொட்டுற சத்தம் கேக்கும் இப்பெ யானையெ கிட்சனுகுள்ள வுட்டு உருட்ட விடப் போறீங்களா :-))

சரி விடுங்க... இந்த யானை(பையெ) ஓ, பெண் நமக்கு ரொம்ப வேண்டியவங்கதான்... இருந்தாலும் ஒரு தபா யானையெ விட்டு விரட்ட விட்டுறுந்த அவங்க மேல இருக்கிற ஈர்ப்பு போயிருக்கும் நீங்களும் இந்த கலெக்ஷன் அந்த கலெக்ஷன்னு ஊர் ஊரா அலைஞ்சுருக்க வேண்டாம் :-))

இலவசக்கொத்தனார் said...

துளசியக்காவின் ட்ரேட்மார்க் சின்னமான யானையைக் காப்பியடித்த குற்றத்துக்கு உங்களுக்கு விரைவில் ஷோக்காஸ் நோட்டீஸ் வருமென தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன், இந்தப் பதிவு ஒரு லோகோ மாற்றத்தைப் பத்தினது.. மத மாற்றப் பதிவெல்லாம் படிச்சு, நீங்க ஒரே தத்துவமா கொட்டறீங்க :)

பார்த்தி.. நீ வேற.. சும்மா இருய்யா.. இப்போ தான் ஒரு புயல் அடிச்சி ஓய்ஞ்சிருக்கு :) அப்பால வீட்டுப் பக்கம் வா., தங்கத்துல பங்கு உண்டு ;)

தெகா, இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? அரசமீனவன் ரொம்ப அதிகமாய்டுச்சா? நீங்க சொல்றதை எனக்குப் புரியவைக்க சிபி தான் வரணும்னு நினைக்கிறேன்.:)

கொத்ஸ், நீங்க கூட தான் ஜீவாவின் வெண்பாவை அபேஸ் பண்ணினீங்க.. எல்லாம் ஒண்ணு தான் :) துளசி அக்கா என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க :)

Unknown said...

அட நமக்கும் யானை பிடிக்குமே.. ஆனாலும் இந்த ஓட்டம் ஓடினா பூமி தாங்காது. குதிரை, யானை.. ம்.அடுத்து எந்த மிருகமப்பா?

Unknown said...

அமெரிக்காவுக்கு யானைபடம் போட்ட மஞ்சா பையா.. யக்கோவ், பின்னுறீங்க!!

'எங்க ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா' ரேஞ்சுல நீங்க யானை வளர்க்கப்போறீங்களா? யானைக்கு பர்கர் ஓகேயான்னு கேட்டுக்கங்க.

கால்கரி சிவா said...

//எம்ஜியார் படத்தில் நாலு யானைகளை வைத்து வளர்த்ததைப் பார்த்த பின் //

நாலா... அஞ்சில்லே.. கே ஆர் விஜயாவை சேர்த்து

நல்ல நேரம்... நான் எம் ஜி ஆர் ரசிகனில்லை

கால்கரி சிவா said...

ரமணி என் பதிவிற்கு வாங்க ஒரு புது வகை மிருகம் இருக்கு

வெளிகண்ட நாதர் said...

//எம்ஜியார் படத்தில் நாலு யானைகளை வைத்து வளர்த்ததைப் பார்த்த பின் (படம் பேரு என்னங்க?)// அது 'நல்ல நேரம்', ஆமா, ஏற்கனவே செடியக்கா யானை இணையத்திலே நட்டிக்கிட்டு ஆடுறப்ப, உங்க ஆணை இந்த ஓட்டம் ஓடுது!

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

உங்கள் தலைப்பை அவசரத்தில் நான் ஏன் ஏமாற்றினேன் என்று படித்துவிட்டான் ,ஆகா ஏதோ ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தி தலைமறைவா திரியரிங்களானு பார்த்தேன் ,அப்புறம் தான் சரியா பார்த்தேன் ஹி..ஹி...ஹி!(உங்க சொந்த ஊரு யானை கவுனி யா (சொந்தமா ஊரு வாங்குற அளவு வசதி இல்லைனு கடிக்க வேணாம் :-)) )


நீங்க வெண்பா பாடி எந்த கடை ஏழு வள்ளல் ஆவது பரிசில் தந்த யானையா இது?

ஆனை ..ஆனை அழகர்?(அழகி) ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை ..அப்படி ஒரு பாட்டு தான் நியாபகம் வருது:-))

பொன்ஸ்~~Poorna said...

ரமணி, யானையைப் பிடிக்காதவங்க யாருமே இல்லை போலிருக்கு..
//அமெரிக்காவுக்கு யானைபடம் போட்ட மஞ்சா பையா.. //
ஹி ஹி:)
//யானைக்கு பர்கர் ஓகேயான்னு கேட்டுக்கங்க. //
பர்கர் ஓகேவாம்.. ஆனா வெஜிடேரியன் பர்கர் தான் வேணுமாம்..

//நாலா... அஞ்சில்லே.. கே ஆர் விஜயாவை சேர்த்து. நல்ல நேரம்... நான் எம் ஜி ஆர் ரசிகனில்லை //
யாராவது புன்னகை அரசியோட ரசிகர் கால்கரிக்கு வந்து அடிக்கப் போறாருங்க சிவா.. ஆமாம், அதென்ன நெருப்புக் கோழியப் போட்டிருக்கீங்க?

//ஆமா, ஏற்கனவே செடியக்கா யானை இணையத்திலே நட்டிக்கிட்டு ஆடுறப்ப, உங்க ஆணை இந்த ஓட்டம் ஓடுது! //
வெளி கண்ட நாதர், அது கொஞ்சம் வயசான யானை;). இது இப்போத் தான் பிறந்தது.. குட்டி.. அதான் ஓடுது :)

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
//ஆகா ஏதோ ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தி தலைமறைவா திரியரிங்களானு //
பொருளாதாரம், வணிகம்னு வகைப்படுத்தினதுக்குப் புதுக் காரணம் சொல்றீங்க!!

//(உங்க சொந்த ஊரு யானை கவுனி யா (சொந்தமா ஊரு வாங்குற அளவு வசதி இல்லைனு கடிக்க வேணாம் :-)) )//
அப்படி ஒரு ஊர் இருக்கா? என்னைக் கடிக்கவே விடாம எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா எப்படி :)

//நீங்க வெண்பா பாடி எந்த கடை ஏழு வள்ளல் ஆவது பரிசில் தந்த யானையா இது?//
எங்க.. நீங்க வேற.. ஒரு பரிசில் கூட இல்லை :( நீங்க தான் ஏதாச்சும் தருவீங்கன்னு பார்த்தேன்.. ம்ஹும்

//ஆனை ..ஆனை அழகர்?(அழகி) ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை ..அப்படி ஒரு பாட்டு தான் நியாபகம் வருது:-)//
அது தான்ன்னு நினைக்கிறேன்.. அழகர் ஆனை, அம்பாரி இந்த ரெண்டு சொற்கள் தான் நினைவிருக்கு

VSK said...

ஏதோ பட்சி வந்து சொன்ன மாதிரி, நேற்றைக்கு ஒரு கவிதையை 'பச்சோந்தி'யின் பதிவில் மறுமொழியாக இட்டிருந்தேன்!

பொன்னையும், யானையையும் பற்றி!

நம்பினால் நம்புங்கள்!

இப்போது அதை என் பதிவில் இட்டிருக்கிறேன்!


www.aaththigam.blogspot.com

Strange things do happen!!

பொன்ஸ்~~Poorna said...

//Strange things do happen!! //
Science calls it Probablity.. or co-incidence

உங்க கவிதையைப் படிச்சிட்டேன் நீங்க வந்து சொல்லும் முன்னமே.. பாருங்க நம்ம பின்னூட்டத்தை :)

வலைஞன் said...

ஒரிஜினல் (மத)யானைக்கு

http://akaravalai.blogspot.com/2005/10/blog-post_18.html

துளசி கோபால் said...

கொஞ்சநேரம் வீட்டுவேலையா இருந்துட்டு, இந்தப் பக்கம் வந்தா...................

இப்படி யானைக் கொள்ளை போயிருக்கு!

யானையைப் பிடிக்காதவங்கன்னு யாராவது இருக்காங்களா என்ன? அதான் பித்து ஏறிக் கிடக்கு:-))))

பொன்ஸ்,

யானை வயசை எல்லாம் கிளறுவது நல்லதுக்கில்லை, ஆமாம்:-))))

எப்படியோ என் வாரிசாக பொன்ஸ் 'வளருவது' எமக்குப் பெருமை தரும் விஷயமே!

இதுதான் சாக்குன்னு இப்படிச் சொன்னவுடனே நம்ம இடத்தைப் பறிச்சுக்கவாணாம்.
வேணுன்னா உயில்லே எழுதி வச்சுடறென், எனக்குப் பின் என் யானைகள்
( உயிரோடு இருக்கற) எல்லாம் பொன்ஸ்க்குத்தான்.

- யெஸ்.பாலபாரதி said...

அடீயாத்தீ...
பேத்தி.. இவ்வளவு வேகம் கூடாதும்மா...
கொஞ்சம் குறைக்க முடியுமான்னு பாரும்மா...

இலவசக்கொத்தனார் said...

அட என்னா டீச்சர் நீங்க. திருட்டுப் போனதைக் கண்டிப்பீங்கன்னு பார்த்தா, சொத்தை எழுதிக் குடுக்கறீங்க.

சரி. எனக்கு யானையெல்லாம் வேண்டாம். வேற எதனாச்சும்...ஹிஹி...

பொன்ஸ்~~Poorna said...

வலைஞன், உங்க யானைக் கதை நல்லா இருக்கு.

துளசி அக்கா, யானையோட அப்படியே அந்தப் பூனைகளையும் எழுதிவச்சா நல்லா இருக்கும்..:))))

யாழிசை தாத்தா, ஏதோ, சின்ன வயசுல தான் இப்படி ஓட முடியும்.. இருக்கட்டுமே..:)என்ன சொல்றீங்க ?

கொத்ஸ், நான் அவங்க செல்லத் தங்கையாக்கும்.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் சிண்டு முடியும் வேலை வேண்டாம் :)

manasu said...

நடிகர் ஜெயராம் கூட ஒரு யானை வளர்த்தார். இப்ப இல்லன்னு நினைக்கிறேன். ஒரு வீட்ல ரெண்டு (மனைவி பார்வதி) யானை கூடாதாம், அதான்.

எப்படியோ உங்க தங்க ஆசை குறையல.... முதல்ல பொன், இப்ப ஆயிரம் பொன்.

இளாவிற்காவது லாப்டாப்... இங்க டெஸ்க் டாப்பே ஆஆஆடுதுங்க......

ramachandranusha(உஷா) said...

என்னமோடியம்மா! குதிரை வேகமா ஓடினா அழகு. யானை ஓடினா "பக்" என்று இருக்கு

VSK said...

என் பதிவின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரியவில்லை, கடந்த 3 நாட்களாக, 3 பதிவுகளாக!

வலது பக்கம் வரும், "அ.பி.இ" பக்கத்தில் வரவே இல்லை!
இதுபற்றி, காசி அய்யாவிற்கும் எழுதியாயிற்று!
ஒன்றும் பதிலில்லை!
யாராவது உதவுவீர்களா?
நன்றி!

Pons, sorry for the digression!

- யெஸ்.பாலபாரதி said...

வணக்கம்..
தங்களையும் ஆறு பதிவுக்கு அழைத்திருக்க்கிறேன்..
பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

சீனு said...

கடல், ரயில், யானை இவை மூன்றும் பார்க்க பார்க்க அலுக்காது என்பர்.

யானை-ன்னு சொல்லிட்டு அதோட குட்டியோட படத்த போட்டுடீங்க!!! (தந்தம் இல்லையேன்னு கேட்டேன்)

முகமூடி said...

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை



அவ்ளோதான் ஞாபகத்துக்கு வருது :(

Anonymous said...

Pathu pons....yanai ivlo vegama oduthu.....
Yanaiku adi saruki vida pogirathu!!!!

Mansoor

நன்மனம் said...

யாருங்க அது யானைய பாத்து உடம்பை குறைனு சொன்னது, பாருங்க என்ன ஒட்டம் ஒடுது "thread mill"லுல.

//துளசி கோபால் said...

எப்படியோ என் வாரிசாக பொன்ஸ் 'வளருவது' எமக்குப் பெருமை தரும் விஷயமே!//

:-))

Geetha Sambasivam said...

பொன்ஸ்,
யானை எனக்குப் பிடிக்கும்னாலும் பொன்ஸ் மாதிரி வராது. தவிர, தினமும் ஓடணுமே, குட்டினு வேறே சொல்றீங்க. தந்தம் இல்லாததால் பெண் யானைதான். நடத்துங்க. ரொம்ப பிசி. கண்டுக்கறதே இல்லை.

Anonymous said...

//பெல்பாட்டம் முதலாளி என்று தல'ய அன்போடு அழைக்கும் நம்ம பிகுலுதாங்க இவுங்க. அப்படியே பெட்ஷீட்டுல சுருட்டி ரோடு ரோலர் மாதிரி மேல குதிச்சு கைப்புவை சட்னியாக்கி இட்லிக்கு தொட்டு தின்ற குண்டம்மா. அருள்ல சைக்கிள் கத்து குடுத்த குருங்கிற மரியாதை இல்லாமல் தல'ய சாக்கடைய சுத்தம் செய்ய வெச்ச சங்கத்து கொளுகை பரப்பு செயளாளர்//


யானை நல்லா இருக்கு!!



:))

by ALIF AHAMED

பரஞ்சோதி said...

சொன்னதும் சொன்னீங்க,

ஆனைப்பாட்டை முழுசா சொல்லியிருந்தா எனக்கு பயன்பட்டிருக்குமே.

என் குதிரையை விட வேகமாக ஓடுதே உங்க யானை.

நாகை சிவா said...

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் "
சரியா தான் படத்தை போட்டு இருக்கின்றீர்க்கள்.
அது எங்க இந்த ஒட்டம் ஒடுகின்றீர்கள், கடன்காரணை கண்ட மாதிரி.

பிளாக்கரில் புலி நடமாட்டமும் இருக்கு. பாத்து போங்க. நட்பு ரீதியா இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் முன்னாடியே சொல்லனு வருத்தப்பட கூடாது.

//அப்படி ஒரு ஊர் இருக்கா? //
யானை கவுனி என்பது ஊர் இல்லைங்க. சிங்கார சென்னையில்(வட சென்னை) உள்ள ஒரு ஏரியா. Elephant Gate சொன்னா எல்லாருக்கும் தெரியும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நான் யானை விழுந்தா எழுந்திரிக்க ரொம்ப நேரம் ஆகும்னு டயலாக் விடுவீங்கன்னு பார்த்தேன்.. :)

நாகை சிவா said...

இல்ல நிலவு நண்பா, குட்டி யானை தாங்க, விழுந்தா கூட சீக்கிரம் எழுந்து விடுவார்கள். அதும் இல்லாமல் சங்கத்து சிங்கங்கள் வேற இருக்கோம். தனிப்பட்ட முறையில் அவங்களுக்கு பேன்ஸ் வேற நிறையா இருக்காங்க. அவங்க அன்பு தொல்லை தாங்காமல் அப்ப அப்ப மெடிக்கேர் போட்டு விரட்டுவதாக அவங்களே சொல்லி இருக்காங்க. போக போக பார்க்கலாம்.........

Chellamuthu Kuppusamy said...

பொன்ஸ்.. சதயம் கேட்ட கேள்விக்கு பல பேர் தெளிவுபடுத்திட்டாங்கன்னு தோனுது!! நல்ல கேள்வி; நல்ல பதில்..ஹிஹி.. நாங்களும் தெரியலன்னா இப்படித்தான் சமாளிப்போம்!!

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்" ஆயிரம் என்பது பன்மையில் விளிக்கப்பட வேண்டியதாகையால், பொன்ஸ்!

VSK said...

//ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை


அவ்ளோதான் ஞாபகத்துக்கு வருது :( //இதோ மீதி!!



குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சாம்!




//

ILA (a) இளா said...

சங்கப்பலகையில உங்க படத்த பார்த்தபிறகுமா ஆட்டோ வரும், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயம்தான் வரும். ஆமா அந்த படத்துக்கும் யானைக்கும், உருவத்துல நிறைய ஒற்றுமை இருக்கோ?

தெரியாத்தனமா இந்த பிளாக் பார்த்து ஏமாந்து போயிட்டேன்.
http://pons.blogspot.com/

பொன்ஸ்~~Poorna said...

//. ஒரு வீட்ல ரெண்டு (மனைவி பார்வதி) யானை கூடாதாம், அதான்.//
மனசு, எங்க அப்பாவும் இதே தான் சொல்றாரு., உன்னையும் வளர்த்து யானையையும் வளர்க்க முடியாதுன்னு...
//இங்க டெஸ்க் டாப்பே ஆஆஆடுதுங்க...... //
பிடிங்க பிடிங்க.. விடாதீங்க :)

//என்னமோடியம்மா! குதிரை வேகமா ஓடினா அழகு. யானை ஓடினா "பக்" என்று இருக்கு //
இதெல்லாம் நீங்க பேசலை உஷா.. என் யானையோட அழகைப் பார்த்த பொறாமை :)

//யானை-ன்னு சொல்லிட்டு அதோட குட்டியோட படத்த போட்டுடீங்க!!! //
சீனு, அதான் சொல்லி இருக்கோமே.. இது இப்போ தான் பிறந்த சின்ன யானை :)

பொன்ஸ்~~Poorna said...

முகமூடி, எஸ்கே, ரெண்டு பேருக்கும் நன்றி.. முழுப்பாட்டு சொன்னதுக்கு.. பரஞ்சோதி, பாருங்க, முழுசா வந்துடுச்சு.. எடுத்து சிறுவர் பாடல்கள்ல போடுங்க.. யானையையும் போட்டுக்கலாம்.. Permission granted ;) :)))

மன்சூர்.. கவலைப் படாதீங்க.. யானைக்கு ஒண்ணும் ஆகாது, இருந்தாலும் பத்திரமா இருக்கச் சொல்றேன் :)

நன்மனம், வர வர நீங்க புன்னகைச் செல்வராய்ட்டீங்க :)

பொன்ஸ்~~Poorna said...

கீதாக்கா, யானையை எல்லாருக்கும் பிடிக்குது.. அதான் இத்தனை பேர் இதுவரை வராதவங்க எல்லாம் இந்தப் பக்கம் வந்து யானையைப் பார்த்துட்டு போறாங்க!! வரேன்கா.. கொஞ்சம் வேலையாய்டுச்சு.. உங்க பக்கத்துக்கு சீக்கிரம் வர்றேன் :)

நன்றிங்க ஆலிப்..

Mr. நாகை சிவா, யானையா புலியான்னு பார்த்திடுவோம் ஒரு கை.. ரொம்ப மிரட்டாதீங்க.. நாங்க எல்லாம் சுறுசுறுப்பானவங்க.. உங்க புலி மாதிரி உட்கார்ந்து லுக் விட மாட்டோம் :)

பொன்ஸ்~~Poorna said...

ஞானியார், என்னங்க.. நீங்களும் சின்ன பசங்களோட சேர்ந்து ஓட்டறீங்க :)

//அதும் இல்லாமல் சங்கத்து சிங்கங்கள் வேற இருக்கோம். //
சிவா.. அப்பப்போ முறைச்சாலும் இப்படி பாசத்தை வேற பிழியறீங்க.. என்ன பண்றது?!! அவ்வ்வ்வ்வ்வ்...

பொன்ஸ்~~Poorna said...

//நல்ல கேள்வி; நல்ல பதில்..ஹிஹி.. நாங்களும் தெரியலன்னா இப்படித்தான் சமாளிப்போம்!!
//
குப்பு, சங்கத்துல சேரும் எல்லா தகுதியும் உங்களுக்கும் இருக்கு :)
இதுக்கு நீங்க சொன்ன காரணத்தோட இன்னும் ஒரே ஒரு காரணமும் இருக்கு.. இப்போவெல்லாம் தங்கம் விலை ரொம்ப அதிகமாய்டுச்சு.. முன்னே ஒரு யானை ஆயிரம் பொன்னுன்னு சொன்னாங்க.. இப்போ தங்கம் தான் "ஆனை விலை குதிரை விலையாய்டுச்சு".. அதான் என்னோட பொருளாதாரக் காரணங்களுக்காக பொன்னை எடுத்துட்டு யானையை ஓட விட்டிருக்கேன்.. பொன்னை நீண்ட கால முதலீடா தனியா வச்சிருக்கேன்.. வெளில விடறது இல்லை :) எப்படி, வணிகம் பொருளாதாரம் வந்திருச்சா? :)

இளா, அந்த ப்ளாக் என்ன மொழிங்க?!!! இருந்தாலும் இப்படி உண்மையெல்லாம் சத்தமா சொல்லிகிட்டு :)

மகேஸ் said...

ரெண்டு மூனு நாள் வலைப்பக்கம் வராமல் இருந்ததில் சங்கதிலும் உங்க பதிவிலும் ரெம்பப் பெரிய(!!??) மாற்றங்கள். கலக்குறீங்க போங்க.

ஆமா உங்க ஒரிஜினல் போட்டாவைப் போட எப்படிங்க தைரியம் வந்துச்சி?
:))

துளசி கோபால் said...

பொன்ஸ்,

யானை,பூனை, புலி, சிங்கம்,குதிரை, நாய்ன்னு 'இங்கே' என்ன ஒரே கூட்டம்?

இப்பெல்லாம் தமிழ்மணம் கிட்டத்தட்ட ஒரு zoo ரேஞ்சுலே இருக்கா?:-))))

இலவசக்கொத்தனார் said...

//
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சாம்!//

பட்டணத்தாரெல்லாம்
பார்க்க வாங்க

கடைசி இரண்டு வரிகள் இப்படிப் படித்ததாய்த்தான் ஞாபகம்.

Chellamuthu Kuppusamy said...

//குப்பு, சங்கத்துல சேரும் எல்லா தகுதியும் உங்களுக்கும் இருக்கு :) //

பதவிகள், பொறுப்புகள் போன்றவற்றை எல்லாம் நாமாகத் தேடிப் போகக்கூடாது என்பதில் கொண்ட நிலைப்பாட்டை நிலைகுலைக்கச் செய்யும் சதியாக மட்டுமே இந்தக் கூற்று கருதப்படாமல், அதன் உள்ளர்த்தத்தை உணரச் சந்தர்ப்பம் தேடித் திரியும் வேளைகளில் தேடலின் தீர்க்கம் மறுதலிக்கப் படுகிறதோ என்னும் ஐயத்திற்கான விடை தேடலிலும் சிதறுண்டவனாய் ஐயகோ பொன்ஸ், என்ன சொல்ல? ஹிஹிஹி.. இப்படியும் சமாளிக்கத் துணிந்தாயா இல்லை பொறுப்பபினின்று விடுபட்டோடி ஒளிந்தாயா, கனைதொடுக்கும் மனதுக்கு விடைகொடா தந்திரியாய்க் கருதிய சுய மதிப்பீடுகளின் மமதையில், சங்கத்தில் சேர இன்னுமா தகுதி இருக்கிறது இவனுக்கு, பொன்ஸ்?

என்னவோ ஒரு வேகத்துல டைப் பண்ணிட்டேன்.. disclaimer எப்படி வேண்டுமானாலும் போட்டுக்குங்க ;-) இதுல உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து, டப்பாங்குத்து எதுவும் இல்லை!!

நாகை சிவா said...

//உங்க புலி மாதிரி உட்கார்ந்து லுக் விட மாட்டோம்//

அந்த லுக்குல இருக்குற கெத்தே தனித்தான். இதை பற்றி உங்களுக்கே தெரியும். 11ஆம் வகுப்பில் The Tigher (by William Wordsworth)என்ற பாடல் படித்து இருப்பீர்களே.

நம்ம பெருமையை நம்மளே சொல்ல கூடாது. இருந்தாலும்
"அமைதியா இருந்து பாய வேண்டிய சமயத்தில் சரியாக பாய வேண்டும்". அம்புட்டு தான்.

Unknown said...

படம் காட்டுவது தான் எல்லோருடைய பிழைப்பும் என நினைத்தால், படம் மாற்றுவது என்ற புதிய வகையை அறுதியிட்டிருக்கும் பொன்ஸ் (அக்கா?) வாழ்க!

பொன்ஸ்~~Poorna said...

மகேஸ், நான் என்னிக்குமே தைரியத்துக்குப் பெயர் போன பெண்ணாக்கும்... :)))

துளசி அக்கா, எல்லாரும் உங்களைப் பாத்து கத்துக்கிட்டது தான்.. மிருக ரசிகை, பிரியை நம்.1 எல்லாம் நீங்க தானே :)

குப்பு, சாரிங்க.. இத்தனை வேகமா இங்கிலீஸ் பேசறவங்களை நாங்க சங்கத்துல சேர்க்கிறது இல்லை.. அப்ளிகேஷன் ரிஜக்டட் :)))))

சாரி சிவா, 11த் எல்லாம் ஒழுங்காபடிக்கலை. எனக்குத் தெரிஞ்ச ஒரே டைகர், ஷிகாரி சம்புவும் அவரது புலியும் தான் :)))

துவா, நீங்க அக்கா எல்லாம் சொல்ல வேண்டாம்.. எங்க சங்க மெம்பர்ஸுக்கு மட்டும் காபி ரைட் :) நீங்க எப்போ ஒட்டகத்தை ஓட விடப் போறீங்க??

நாமக்கல் சிபி said...

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

Santhosh said...

யானை வரும் பொன்ஸ் பக்கங்கள் வரும் பின்னே.

Unknown said...

காப்பி ரைட் விவகாரம் ஏதும் இருக்குமோன்னு தான், அடைப்புக்குறியில் போட்டிருக்கிறேன் அக்காவை!

என்னோட ஒட்டகம் நிஜத்தில் தான் ஓடும் (நானே காமிராவில் சுட்டது, நீங்கள் சுட்ட யானையைப்போல இல்லையே!).

Unknown said...

//"நான் ஏன் மாற்றினேன்?" // :-)

//"படம் மாற்றும் காலம்". //:-))

//'சரி, ஊரோடு ஒத்துவாழ்' //:-)))

//போனா வராது, பொழுது போனா கிடைக்காது :)

பரஞ்சோதி said...

நன்றி பொன்ஸ், நாமக்கல் சிபி, முகமூடி, SK. முழு பாடலையும் இன்றைய சிறுவர் பாடலில் போட்டாச்சு.

கைப்புள்ள said...

இந்த யானைப் பதிவைப் பாத்ததும் நெறைய சொல்லணும்னு தோணுது.

ஆண் யானை = களிறு ; பெண் யானை = பிடி - +2 தமிழ்ல படிச்ச ஞாபகம்.

////அது எப்படி பெண் யானைன்னு சரியாச் சொன்னேன் பாத்தீங்களா!!//
இது 100% சரி கிடையாது எஸ்கே. இந்திய பெண் யானைகளுக்குத்(Elephas maximus) தான் தந்தம் இருக்காதாம். ஆப்பிரிக்க பிடிங்களுக்கு(Loxodonta africana) இருக்குமாம். அப்பா...நேட்ஜியோவுல ரெண்டு நாளா பாத்ததை எல்லாம் கொட்டி தீர்த்தாச்சு :)

நீங்க போட்டிருக்குற படம் இந்திய பிடி மாதிரி தான் இருக்கு. நம்ம பதிவுல இருக்குற காயத்ரியும் ஃபாத்திமாவும் ஆப்பிரிக்கன் பியூட்டீஸ் :))

VSK said...

என்னங்க, கைப்புள்ள,
அந்த யானையைப் பாத்துட்டுதானே, அது இந்திய யானைன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே, 'பிடி'ன்னு சொன்னோம்!
இதுக்குப் போயி ஒரு பிடி பிடிக்கிறீங்களே!!

பொன்ஸ்~~Poorna said...

சிபி, தேவ், கைப்ஸ், சந்தோஷ், சங்கத்து சீனியர் மெம்பர்ஸே இப்படி லேட்டா வந்தா என்ன செய்யறது? எப்படியோ புதுப் புது செய்திகள் சொல்லி இருக்கீங்க.. தேவ் வேற பார்ட்டு பார்ட்டா பிரிச்சி ரசிக்கிறாரு.. அதனால மன்னிச்சி விட்டிடறேன்..

துவா. எங்க சுட்டா என்னாங்க?!! சரி சரி..அடக்கி வாசிங்க.. அமீரகம் வந்தேன்னா நல்லா வடை சுட்டுத் தாரேன்.. இந்த சுட்ட யானை சுடாத யானை பேச்சு நமக்குள்ள இருக்கட்டும் :)

//...நேட்ஜியோவுல ரெண்டு நாளா பாத்ததை எல்லாம் கொட்டி தீர்த்தாச்சு :)//
அது சரி.. அதுக்கெல்லாம் பொன்ஸ் பக்கம் தான் கிடைச்சிதா!!

எஸ்கே, உங்க தொடர்ந்த ஆதரவை எப்படிப் பாராட்டறதுன்னு தெரியவே இல்லை!.. பாட்டு தந்ததுக்கு பரஞ்சோதி வேற பாராட்டிட்டாரு.. :)

தாணு said...

ஓடுற யானையைத் துரத்திட்டு வர்றதுக்கு ரெண்டு மூணு நாளாயிடுச்சு. உங்க பொன்ஸ் படத்தைப் பார்த்துட்டு சன் டிவி `தங்க வேட்டைக்கு' அள்ளிட்டுப் போயிடப் போறாங்க. பத்திரம்

VSK said...

//எஸ்கே, உங்க ""தொடர்ந்த"" ஆதரவை எப்படிப் பாராட்டறதுன்னு தெரியவே இல்லை!.. //



இந்த யானை பின்னாடியே வற்றதைத்தானே அப்படி உள்குத்து விட்டுறிக்கீங்க!

நடத்துங்க! ஸாரி! ஓட்டுங்க!!

Geetha Sambasivam said...

அம்மா பொன்ஸ், ஏதோ இந்த தலைவலி நினைவு வந்துச்சே உங்களுக்கு அதுவரை சந்தோஷம். வாங்க வாங்க மெதுவாவே வாங்க.

Maraboor J Chandrasekaran said...

யானை வரும் பின்னே, பொன்ஸ்மணி கொட்டும் ஓசை வரும்முன்னே! அதெப்படி, இந்த ஓட்டம் ஓடிகிட்டு, சிரிச்சுகிட்டேயிருக்கு இந்த யானை?

பொன்ஸ்~~Poorna said...

தாணு, அப்படி யாரும் அள்ளிகிட்டு போய்டக் கூடாதுன்னு தானே பொன்னை ப்ரொபைல்லேர்ந்து எடுத்திட்டேன்.. அப்படியும் இந்த மனசு கொஞ்சம் எடுத்துகிட்டாரு.. ம்ச் :)))

எஸ்.கே, யானை முன்னாடி ஓடுது.. நம்ம(அதாவது நானும் யானையும் :)) எப்போவுமே பின்னாடி பார்க்க மாட்டோமே.. எல்லாம் முன்நோக்கிய பார்வைதான் :)

சந்திரா, எங்க போயிருந்தீங்க.. ரொம்ப நாளா ஆளைக் காணோம்?!! சிரிச்சிகிட்டே பார்த்தா யானையும் சிரிச்சிகிட்டே தான் இருக்கும்... எனக்கும் சிரிச்ச முகமா அதான் :) ஹி ஹி :))

இலவசக்கொத்தனார் said...

மதமில்லா யானை மனநிறைவு இங்கே
மதத்தாலோ சண்டைகள் மண்ணில் - இதமாய்
பரபரப்பில் லாமல் பதமாய் படிக்க
தரமாய் பதிவொன்று தா

பெருசு said...

புதரக புதுமுக வருமிக தமிழக
பிடியக கண்டக அகமிக மகிழக
நகையக அருளக உறுமிக தனையக
பதிவக சுழலக பெறுக.

படம் போட்டதுக்கு தங்கக்கா
ஒரு வாழ்த்துப்பா.

ரொம்ப தேங்ஸ்ப்பா அப்படின்னு முடிக்காம ஒரு பதில் வெண்பா போடவும்.ரொம்ப நாள் ஆச்சுப்பா வெண்பா பாடி.(பொற்கிழி தயார்).

பெருசு said...

தங்கக்கா பிளாக்கர் சொதப்புது.
புதுசா ஒரு வெண்-வாழ்த்துப்பா எழுதி போட்டேன்,
என்னோட சிலேட் லயும் எழுதின அழிச்சுட்டேன்.
இப்ப புதுசா முயற்சி செஞ்சு எழுதறேன், பாக்கலாம்.
ஆனா எனக்கு முன்னாடி இலவசம் முந்திட்டாரே.


புதரக வருமிக தமிழக புதுமுக
பிடியக தனையக கண்டக மகிழக
நகையக அருளக உறுமிக அகமிக
பதிவக சுழலக பெறுக.

பொன்ஸ்~~Poorna said...

பெருசு, கொத்ஸ்,

நேரமே இல்லை வெண்பா எழுத
பாரமாய் ஆனது தளை தட்டிச் சேர்க்க
ஓரமாய் அமர்ந்து பார்த்து ரசிக்கின்றேன்
காரமாய் வெண்பாக்கள் பரிமாறும் ஆறு..


அடுத்த பதிவு சீக்கிரம் போடணும்.. அப்போ தான் இந்த வெண்பாவிலிருந்து தப்பிக்கலாம் :)

இலவசக்கொத்தனார் said...

நேரமே இல்லையாம் நேர்த்தியாய் பாவடிக்க
பாரமாய் ஆனதாம் பாவமாய்ச் சொல்கிறார்
ஓரமாய் ஓரிடம் உட்கார்ந்தால் போதுமோ
காரமாய் கேட்பேனே காண்

பெருசு said...

இலவச மேதாக் குதாக்குக என்றுமே
பரவச மேதான் தோன்றுக தானுமே
பெருசும் முயற்சி தான்செய் தாலுமே
சிருசும் கூடாதே வெண்பா.

Unknown said...

ஒரு யானை படம் போட்டாலும் போட்டீங்க. ஊரே திரண்டு வந்துருச்சே. போனதடவை பாத்ததுக்கு இந்த தடவை யானை கொஞ்சம் ஸ்லோவா நடக்கறமாதிரி இருக்கே.. களைச்சுப்போச்சா.. நல்ல Carls Jr பர்கரா வாங்கிப்போடுங்க.

Prabu Raja said...

யானை புடிக்கும்
3D படம் பாக்கத் தெரியாது.
இந்த லின்க்ல ரெண்டு யானை சேத்து 3D படமா குடுத்துருக்கறார் நம்ம அரவிந்தன்.

http://aravintaz.blogspot.com/2006/05/2.html

யானையாவது 3Dல தெரியுதா பாருங்க..

தி. ரா. ச.(T.R.C.) said...

அது என்ன யாணை பாதி வெள்ளையாகவும் பாதி கருப்பாகவும் இருக்கிறது கருப்பு வெள்ளை வகையயைச்சேர்ந்ததா? தி ரா.ச

பொன்ஸ்~~Poorna said...

நடந்து நடந்து களைச்சிருக்கும் ரமணி. அதான் மெதுவாகிடுச்சோ என்னவோ. பர்கர் வாங்கிக் குடுத்துப் பார்க்கிறேன்.

பிரபு ராஜா, உங்களுக்கே ஓவராத் தெரியலை. நிஜமான 3D படம் வேணும்னா எங்க தல கைப்பு நிறைய போட்ருக்காரு. அங்க போய் பாருங்க. இதெல்லாம் 3Dன்னு சொல்லிகிட்டு. 1D கூட இல்லை நீங்க காட்டின லிங்க்ல!! :)

தி.ரா.ச, ஆமாங்க, இது கறுப்பு வெள்ளை யானை:).. அடுத்து ஒரு கலர் யானை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. நல்ல நேரம் பார்த்து செய்யணும் :)

Prabu Raja said...

ஆமா. எனக்கும் 3D மாதிரி அது தெரியல. உங்களுக்காவது தெரியுதான்னு பாத்தேன். தெரியலயா?

;)

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்த 'படம் காமிக்கிற' கோஷ்டிலே நீங்கலுமா உறுப்பின்ர்.உங்க அறிவென்ன அழகென்ன(எது பொருந்துகிறதோ அதை எடுத்துக்கொள்ளவும்) நம்ப முடியவில்லை.
கலர் யாணை படம் போட நல்ல நேரம் பார்க்கவேண்டாம் பேசாமல் 'நல்ல நேரம்' படத்தையே போட்டுவிடுங்கள் நிறைய யாணைகள் இருக்கு. தி ரா. ச

பொன்ஸ்~~Poorna said...

தி.ரா.ச., நீங்களும் சேர்ந்து ஓட்டறீங்களா.. நடத்துங்க நடத்துங்க..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எங்க ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா ஆனை வளர்க்கலியே ;)