Wednesday, March 22, 2006

சும்மா இருந்தா

"சும்மா இருந்தா சோத்துக்கு கஷ்டம்
சோம்பல் பட்டா நாட்டுக்கு நஷ்டம்."


இப்படி ஒரு பாட்டை எங்க அப்பா நேரம் அடிக்கடி பாடுவாரு. (சினிமா பாட்டுங்கறாரு..தெரியலை).

ஒரு நாள் கூட நாங்க சும்மா சோம்பல்பட்டுகிட்டு உக்காந்திருந்தா அவருக்குப் பொறுக்காது. ஏதாவது வெளிவேலை கொடுத்துடுவாரு இல்ல வீட்டைக் க்ளீன் பண்ணலாம்னு ஆரம்பிச்சிடுவாரு..

அப்படி இருந்த நான் இந்தக் கம்பனில சேர்ந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டேங்க.. [எந்தக் கம்பனின்னு கேக்காதீங்க.. நான் இன்னும் ரொம்ப நாள் இங்க இருக்கணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்.]

முதல் ஒரு வாரம் தலை நிமிர முடியாமல் வேலை.. நான் போகவேண்டிய கட்டாய பயிற்சிகளைக் கூட அடுத்த மாதம் பார்த்துக் கொள் என்றார் என் மானேஜர்.


எல்லாம் வெட்டி வேலை தான். இருந்தாலும் ரொம்ப அவசரம் என்பதால் முக்கியமாகி விட்டது. ஒரு வாரம் முழுவதும் என் மானேஜரே நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து "என்னாச்சு?" என்று நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தார்


அந்த ஒரு வாரம் முடிந்ததும் அதுவும் இல்லாமல் போனபோது தான் அந்த வேலையின் அருமை புரிந்தது. ரெண்டு வாரம் சும்மானாச்சுக்கும் ஆபீஸ் வந்தேன். அப்படியும் வராமல் இருக்க விடுகிறார்களா.. அது எப்படி முடியும்? ஒவ்வொரு நாளும் வந்துட்டு வேலை இருக்கான்னு கேக்கணும், இல்லைன்னா நம்பளை மறந்துட்டாங்கன்னா?!!! தவிரவும், இப்படி ஒழுங்கா ஆபீஸ் வந்தா, வெட்டியாக இருப்பது நான் மட்டும் இல்லை என்று கொஞ்சம் சின்ன ஆறுதல்.


காலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு

கனிவு கொடுக்கும் நாலு forwards

மாலை முழுதும் மீண்டும் காபி - இடையில்

மூன்று மணிவரை மதிய உணவு


என்று நாளொரு தலைப்பும் பொழுதொரு அரட்டையுமாக இருந்த என் நாட்கள் ஒரு மாதம் போல எல்லா கட்டாயப் பயிற்சிகளுக்கும் செல்வதிலேயே கழிந்தது.


அடுத்த மாதம் நான் ஒரு முடிவுக்கு வந்து, என் மானேஜரைப் போய்ப் பார்த்தேன்.


"ரஞ்சித், அந்த ப்ராஜக்ட் முடிஞ்சிடுத்தே.. க்ளயண்ட் கன்ஃபர்ம் பண்ணிட்டாரா?"

"பண்ணிட்டாங்களே, உங்களுக்கு அந்த மெயில் வரல்லயா?"

நான்: (மனதுக்குள்)அனுப்பினாத்தானேய்யா வரும்; (வெளியில்) இல்லயே எனக்கு cc இருக்கா?

ரஞ்சித்: ஓ, உங்க பேர் இல்ல.. சரி இப்போ அனுப்பிடறேன். (அப்புறம் இன்னும் என்ன என்பது போல் ஒரு பார்வை)

நான்: அடுத்து ஏதாவது ப்ராஜக்ட் வருதா?

ரஞ்சித்: இந்த க்ளயண்ட் கிட்டேர்ந்து தான் அடுத்த ப்ராஜக்ட் எதிர்பார்க்கறோம். இன்னும் ஒரு மாசத்துல தெரியும்.

நான்: அப்டீன்னா, இப்போ இன்னும் நாலு வாரத்துக்கு ஏதேனும் ட்ரெயினிங் இருக்கா?

ரஞ்சித்: நீங்க அந்த மேண்டேடரி ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா??

நான்: அதெல்லாம் ரெண்டு வாரம் முன்னாடியே முடிச்சாச்சு

ரஞ்: (பேனாவை உருட்டியபடி தீவிரமாக சிந்தித்தவாறே) உங்களுக்கு ஜாவா தெரியுமா?

நான்: தெரியும் ரஞ்சித்

ரஞ்: ஆரக்கிள்?

நான்: (சரிதான் ஜாவா ஆரக்கிள் என்ற புது ப்ராஜக்ட்டில் போடப் போகிறார் போலும் என்று எண்ணிக்கொண்டே) நல்லா தெரியும், ரெண்டு ப்ராஜக்ட் பண்ணி இருக்கேன்

ரஞ்: A S P?

நான்: அது தெரியாதே...

ரஞ்:(ரஞ்சித் முகத்தில் இப்போ ஒரு தெளிவு. இத இதத்தான் எதிர்பார்த்தேன் என்று மனதிற்குள் சொல்லிக்கிறார் போல) J2EE?

நான்: இல்லை, ஆனா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்

ரஞ்: பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை. நீங்க இன்னும் மூணு மாசத்துல ASP, J2EE எல்லாம் படிச்சிடுங்க... மூணு மாசத்துல இந்த க்ளயண்ட்டே இன்னோரு ப்ராஜக்ட் குடுக்கறதா சொல்லிருக்கான்.

(கவனிக்க, இப்போ மூணு மாசம் ஆய்டுச்சு...)

நான்: இப்போ பண்ண ப்ராஜக்ட் C++ தானே?!?!

ரஞ்: புதுப் ப்ராஜக்ட்டும் C++ தானிருக்கும். நீங்க எதுக்கும் தெரிஞ்சு வச்சிகிட்டா நல்லது தானே? அதோட, உங்களுக்கு லீவ் ஏதாவது வேணும்னாலும் இந்த மூணு மாசத்துல எடுத்துக்குங்க. அப்புறம் கஷ்டம் தான்.


இத்துடன் அவர் போன் பேச ஆரம்பித்துவிட்டார்.

நான் திரும்பி வந்தேன். நானும் இந்த வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஜாவா படித்துக் கொண்டே தான் இருக்கிறேன், இதுவரை உபயோகிக்கும் யோகம் வரவில்லை, இனிமேல் J3EE வேறு படிச்சு அதை வேற மறந்து போகணுமா.. ம்ஹ்ம்..

இனி ஒருமுறை அவர்கிட்ட போய் வேலை கேக்கறத விட பழையபடி ஒரு நாளைக்கு நாலு காபி, ரெண்டு சிற்றுண்டி, ஒரு பேருண்டின்னு நாளை ஓட்டிடலாம்னு பாக்கறேன்..

எல்லாம் ஒரு நாலு மாசம் கழிச்சு பாக்கலாம். இப்ப தான் இந்த தமிழ் மணத்தைக் கண்டுபிடிச்சிட்டோமே.

5 comments:

கைப்புள்ள said...

//காலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு

கனிவு கொடுக்கும் நாலு forwards//

"இதோட ஒரு நாளைக்கு ஆறு பதிவு"ன்னும் உங்க டைம் டேபிள்ல எழுதி வச்சுக்குங்க. மூணு மாசம் போறதே தெரியாது.
:)-

பொன்ஸ்~~Poorna said...

கைப்புள்ள, நல்ல யோசனை.. இப்போ தான் பப்ளிஷ் பண்ணிட்டு பாக்கறேன், அதுக்குள்ள பின்னூட்டம் போட்டுட்டீங்க...!!!

கைப்புள்ள said...

இன்னைய கோட்டால இன்னும் அஞ்சு பதிவு பாக்கி இருக்கு...ரெடி...ஸ்டெடி...கோ
:))-

Ms Congeniality said...

Poons,
Good one!!! Namma ellaam ore kuttaila oorina mattainga only :-)

பொன்ஸ்~~Poorna said...

Ms.Congeniality, Hope you know whom we are talking about.. though this is the case in every company ;)