Thursday, March 23, 2006

ஆபீஸ் கிளம்பலியோ ஆபீஸ்...

"ஏய்.. சீக்கிரம் எழுந்துர்றீ.. மணி ஆறாயிடுச்சு.. " -- வேற யாரு, எல்லாம் என் செல்லத் தங்கை தான்.

"ஏழு மணிக்கெல்லாம் பஸ் வந்துரும்... சரியான சோம்பேறிடி நீ"

நானே கஷ்டப்பட்டு எழுந்துகிட்டிருக்கேன். இப்பிடி பயமுறுத்தினா என்ன பண்ணுவேன் சொல்லுங்க... மனுஷனை(ஷியை) நிம்மதியாத் தூங்கக் கூட விடாம.. ம்ஹ்ம்.. முனகிகிட்டே எழுந்து வர்றேன்.

"பல்லு தேச்சாதான் காபி"

அம்மா வேற.. எனக்கு எதுக்கம்மா காபி, அப்டியே விட்டா போய்த் திருப்பித் தூங்கிடுவேன்.

"இன்னிக்கு ஆபீஸ் இல்லையா??" இது அப்பா..

ஒருவழியா பல் தேச்சிட்டு காபி குடிச்சிட்டு ("சூடா இருக்கும்மா"ன்னு சொல்லி உக்காந்துகிட்டே கொஞ்சம் தூக்கமும் போட்டுட்டு) குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிகிட்டு... இன்னும் எத்தனை கிட்டு.. ச்ச...

"இந்தா! இதுல டிபன் கீரை தோசையும் சாம்பாரும் இருக்கு" - இது தங்கை - அப்டியே சமைச்சா மாதிரி.. எல்லாம் எடுத்து வைக்கிற வேலை தான்.

"இதுல மதியானத்துக்கு சாப்பாடு வச்சிருக்கேன். எடுத்து வச்சிக்கிறியா?" இது அம்மா.

"தண்ணி பாட்டில் எங்க??" ஒருவழியா நான் முழிச்சிகிட்டேன்.

"இந்தா கழுத்து மட்டுக்கும் வச்சிருக்கேன். வீணடிச்சிடாத..."- அப்பா. பாட்டிலுக்கெல்லாம் கழுத்தா!!! ம்ம்ம்...

"ம்ச்.. எல்லாம் எனக்குத் தெரியும். பாரு மொதல்லயே தண்ணி ரொப்பி வச்சிருக்கலாம் இல்ல?!! லேட் ஆய்டுச்சு. பஸ்ஸு போயிருக்கும்"

"இரு இரு.. நான் வந்து ஏத்தி விடறேன். இந்த ஸ்டாப் விட்டா, அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிடலாம்" அப்பா சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.

"அய்யோ... போற போக்கப் பாத்தா நான் அடுத்த ஸ்டாப்ல கூட பிடிக்க முடியாது போலிருக்கே.."

"ஏய்!!! என்னடி பண்ற.. இப்போவே பஸ்ஸு அது இதுங்கற!!!" எழுப்பி விட்டாள் என் "அறை"த்தோழி. " இப்போ தான் எட்டு மணி ஆகுது; எட்டரைக்கு தான் ஆபீஸ், இதோ இங்க இருக்கு.. பொறுமையா போகலாம்.. "

சரிதான்.. எல்லாம் கனவு தான்... ம்ம்ம்...

வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்போ ஆபீஸ்ல போய் அந்த வேகாத இட்டிலியையும் காரமான சட்னியையும் தின்னறதுக்கு..

9 comments:

துளசி கோபால் said...

பூன்ஸ்,

வாங்க வாங்க. இந்த ஜோதியிலே அதாங்க 'தமிழ்மணம்' ஜோதியிலே அப்படியே வந்து ஐக்கியமாயிருங்க.

இப்பத்தான் புதிதாக இணைக்கபட்டவைகளில் உங்க பேரைப் பார்த்து 'பாய்ஞ்சு' வந்துட்டேன்.

இதுவரை போட்ட எல்லா பதிவுகளுமே அட்டகாசமா இருக்கு. அதிலும் ,நம்ம 'மனு' மனசைக் கஷ்டப்படுத்திட்டான்.
என்ன செய்யறது? விதி முடிஞ்சாப் போகவேண்டியதுதானே எல்லோரும்?
நான்வேற பொலம்ப ஆரம்புச்சுட்டேன்( ஆரம்பிச்சா நிறுத்தறது ரொம்பக் கஷ்டம்)

சரி, போட்டும்.
இன்னும் எழுதுங்க. வாசகர் வட்டம் பெருகட்டும்( ஆசீர்வாதமுங்க)

நல்லா இருங்க.( இதுவும் ஆசீர்வாதம்தான்)

என்றும் அன்புடன்,
துளசியக்கா

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா,
எல்லா பதிவையும் படிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. ஒருவழியா நானும் தமிழ்மணத்துல சேர்ந்துட்டேன். உங்க எல்லாரோட ஆசிர்வாதம் இருந்தாத் தான் நான் இன்னும் நிறைய எழுத முடியும்.

தொடர்ந்து படிச்சு பிடிச்சிருந்தாலும், தப்பு இருந்தாலும் சொல்லுங்கக்கா..

- யெஸ்.பாலபாரதி said...

பொன்ஸ்... பேசாம நான் கடய மூடிடலாமான்னு யோசிக்கிறேன். அட்டகாசமா எழுதுறீங்க... வாசகர் வட்ட்மும் பெருகுது... சீக்கரமே.. ஸ்டார் ஆகிடுவீங்க போல...
ம்ம்
வாழ்த்துக்கள்..
(வயித்தெரிச்சல் தாங்க,...
)

Karthik Jayanth said...

பொன்ஸ்,

ஸ்.ஸ்..ஸ்...ஸ்....

வேணாம்.. நல்லா இல்ல சொல்லிட்டேன்.....

இது வேற ஒண்ணும் இல்லங்க.. நீங்க பாட்டுக்கு இட்லி, தோசை அதுவும் வீட்ல சுடுறது, தண்ணி வைக்க அப்பா, சமையலுக்கு அம்மா, அதை கொண்டு வந்து வைக்க தங்கச்சி இப்படி சொல்லுறது உங்களுக்கு வேணும்ன்னா சாதாரணமா இருக்கலாம்.. இத படிச்சிட்டு என் காது வழியா வந்ததுதான், இந்த புகை..

இப்படி போட்டு தாக்குனா.. நாங்க எல்லாம் கட பக்கம் வர்ரதா.. இல்லயா.. :-)

பொன்ஸ்~~Poorna said...

பாலா,
//பேசாம நான் கடய மூடிடலாமான்னு யோசிக்கிறேன்//

னீங்கள்ளாம் போய்ட்டா எப்படி.. உங்களைப் பார்த்து தான் என்னை விட ஒழுங்கா எழுதறவங்க (என்னை மாதிரின்னு எப்படி சொல்ல முடியும்?!!) எல்லாம் எழுத வருவாங்க.. இதெல்லாம் எழுதலாம்னு ஐடியா கொடுத்ததே நீங்க தானே..

கார்த்திக்,
//இத படிச்சிட்டு என் காது வழியா வந்ததுதான், இந்த புகை..//

எழுதினதே இதுக்குதேன்.. :)

கைப்புள்ள said...

//இந்தா கழுத்து மட்டுக்கும் வச்சிருக்கேன்//

ரசிச்ச வரி...இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான் கேஷூவலா எழுதும் போது சுவாரசியத்தைக் கூட்டறது.

கார்த்திக் சொன்ன மாதிரி காலைல டிபனுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸும், ஓட்ஸும் திங்கற பயலுங்க கிட்ட நீங்க இட்லி, தோசைன்னு எல்லாம் வெறுப்பேத்தறது நல்லால்ல.

டாய்...டேய்...இப்பிடியே கூப்பிட்டு கேக்கப் பழக்கப் பட்டவனுக்கு 'அண்ணா'னு சொல்ல கேக்க ரொம்ப மகிழ்ச்சி.

பொன்ஸ்~~Poorna said...

//கார்த்திக் சொன்ன மாதிரி காலைல டிபனுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸும், ஓட்ஸும் திங்கற பயலுங்க கிட்ட நீங்க இட்லி, தோசைன்னு எல்லாம் வெறுப்பேத்தறது நல்லால்ல.//
இனிமே தான் ஊர்ப்பக்கம் வந்துரப் போறீங்களே.. இனி தெனைக்கும் இட்லி தான், பொங்கல் தான் இல்லியா?

கார்த்திக் பாவம் தான். அதுக்கு ஒன்னியும் பண்ண முடியாதுங்கோ..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சரிதான்.. எல்லாம் கனவு தான்... ம்ம்ம்... //

என்ன அப்துல்கலாமோட கனவை மெய்ப்பிக்கிறீங்களோ..? :)

வலைப்பூவில் நிறைய எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..

பொன்ஸ்~~Poorna said...

//வலைப்பூவில் நிறைய எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..
//

நன்றிங்க ஞானியார்...