Friday, November 03, 2006

இலவசமாய் ஏதுமில்லை..

"இந்த இடம் வரை 10ன்னு வருவது எப்படி திடீர்னு இங்கே வரும்போது 12 ஆகுது?" கணினியில் தட்டிக் கொண்டிருந்த சீ ப்ரோகிராமைப் பார்த்துக் கேட்டபின் தான் அதை வாய்விட்டு கேட்டுவிட்டதை உணர்ந்தாள் ராதிகா. லேசாக நாக்கைக் கடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது பிரபாகர் பின்னால் நின்றிருந்தான்.

கணினியுடன் பேசிக் கொண்டிருந்த காமெடியைப் பார்த்திருப்பானோ என்று அவஸ்தையாய்ச் சிரித்தபடி "எப்போ வந்தே பிரபா?" என்றாள்.

"நீ சீ(C) கம்பைலரோட பேசத் தொடங்கினப்பவே வந்திட்டேன்.. என்ன சொல்லுது உன் ப்ரோக்ராம்? சொன்னபடி கேட்குமாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான் பிரபாகர்.

"எங்கே?! அது அப்படியே என் தம்பி சுரேஷ் மாதிரி இருக்கு. நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறதுன்னு ஒரே அடம்.."

"ஏதாச்சும் உதவி வேணுமா? நான் பார்க்கவா?"

"வேணாம் வேண்டாம்.. எல்லாம் சுரேஷுக்குச் செய்கிற மாதிரி கன்னத்துல ரெண்டு, முதுகில ரெண்டு கொடுத்து வழிக்குக் கொண்டு வந்துக்கிறேன். நீ எதுக்கு வந்தே, அதைச் சொல்லு.. இத்தனை தூரம் என்னைத் தேடி வரவே மாட்டியே பொதுவா.."

"ம்ம்... " என்றவன் சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தான்.. "அப்படியே காபி மெஷின் வரை போய்ட்டு வருவோமா? இங்கே வச்சி சொல்றது ரொம்ப கஷ்டம்.."

"சரி சரி வா.. காபி குடிக்கிற நேரம் தான்" என்றபடி ராது எழுந்து கொண்டாள்.

அவர்கள் காபி போடும் இயந்திரத்தை நெருங்குமுன் அவர்களின் சின்ன முன்கதைச் சுருக்கம்: ராதிகாவும் பிரபாகரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகாமை வீடுகளில் வளர்ந்தவர்கள். சிலகாலத்தில் இரண்டு வீட்டாருமே புறநகரில் சொந்தவீடு கட்டிக் கொண்டு வெளியேறியபோதும் அதிசயமாக அங்கும் ஒரே பள்ளியில் சேர்ந்து, ஒரே கல்லூரியில் கூத்தடித்து - கவனிக்கவும், எங்குமே படித்தார்கள் என்று சொல்லவில்லை, ஏனெனில் அதைப் பற்றி அவர்களுக்கே சந்தேகம் உண்டு.. - ஒரே பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தால் "வளாக வேலைவாய்ப்புத் திட்டத்தில்" (காம்பஸ் ரெக்ரூட்டை எப்படிங்க சொல்றது? ) வேலை கிடைக்கப் பெற்று நல்லவேளையாக இங்கேயாவது வெவ்வேறு குழுவில் இவள் சீயும்(C) அவன் கோபாலுமாக (COBOL) பொட்டி தட்டிக் கொண்டு, இப்போதெல்லாம் பொட்டியுடனும் நிரலியுடனும் பேசிக் கொண்டுமிருக்கிறார்கள்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இந்த ப்ளோரில் காபிக்குச் சக்கரையே பத்தமாட்டேங்குது.. ஏன்னு புரியவே இல்லை.." என்றபடி வெளியில் வந்து பால்கனியருகில் நிற்கலானாள் ராதிகா.

"எல்லாம் உன்னை மாதிரி சக்கரை வியாதி கேஸ் இருக்குன்னு அவங்களுக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கும்.. "

"என்னது? சக்கரை வியாதியா? எனக்கா?"

"அதாம்மா, சக்கரையைப் பார்த்தாலே அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும் வியாதி. "

"சொல்ல மாட்டே.. சரி, என்ன திடீர்னு ஐயாவுக்கு வேலை நேரத்தில் என் நினைவு? "

"ம்ம்.. அது வந்து.. இன்னிக்கு ஈவினிங் சீக்கிரம் கிளம்ப முடியுமா உன்னால?"

"கிளம்பலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனா, என்ன மேட்டர்?"

"இல்லை.. அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க... கோடம்பாக்கம் வரை போறோம்.."

"என்ன விஷயம்? எனக்குத் தெரிஞ்சு கோடம்பாக்கத்தில் எல்லாம் உனக்குச் சொந்தக்காரங்க கூட கிடையாதே! "

"அது வந்து.. அங்க.. அங்க எனக்கு... பொ... பொண்ணு பார்க்கப் போறோம்.. நீயும் கூட வந்தால் எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்.." மென்று விழுங்கிச் சொல்லும் தன் நண்பனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது ராதுவுக்கு..

"அப்படிப் போடு! கலக்கல்.. கங்கிராட்ஸ்.. யார் வாழ்க்கையைக் கெடுக்கப் போறே?! இந்தப் பாவத்துக்கு நானும் உடந்தையா இருக்கணுமா?!"

"போடி ராது, ரொம்ப கிண்டல் செய்யறதாக இருந்தா நீ வர வேணாம்.. நானே தனியாப் போய்க்கிறேன்.. ஏதோ எங்க அம்மா உன்னைக் கேட்கச் சொன்னாங்களேன்னு கேட்டேன்.." முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரபாகர்.

"சரி சரி.. மாப்பிள்ளை முறுக்கெல்லாம் பத்திரமா வச்சிக்கோ. போற இடத்துல காட்டிக்கிடலாம். இப்போ உனக்குத் தோழியா இருந்த பாவத்துக்கு வந்து தொலையறேன்.. அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு முடிஞ்சா கொஞ்சம் எச்சரிக்கையும் செய்யலாம் இல்ல.."

கிண்டலும் கேலியுமாக காப்பி முடிந்து பிரபாகர் முகமெல்லாம் வெட்கமும் சந்தோசமுமாக அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறி அவனுடைய பணியிடத்துக்கு விரைந்தான்.

ராதிகா தொடர்ந்து சில நிமிடங்கள் காலி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள் - லேசான சோகமும் எட்டிப் பார்க்க.. கூடவே வளர்ந்தவனுக்குக் கல்யாணமே வந்துவிட்டது. அவளுக்கு இன்னும் லைன் கிளியராகும் வழியைக் காணோம். அவளின் அக்கா ரஞ்சனிக்கு அப்பா வரன் பார்த்துப் பார்த்து ஓய்ந்தே விட்டார். இந்தச் சந்தையில் அவளுக்கான விலையைக் கொடுக்கும் வசதியோ சக்தியோ அப்பாவுக்கு இல்லை. முதல் மகளான ரஞ்சனிக்கே இப்படி என்றால், ராதுவுக்கு என்று வரும் போது இன்னும் எத்தனை நாள் போகுமோ.. பெருமூச்சுடன் காலி கோப்பையைக் குப்பையில் போட்டுவிட்டு பத்து பன்னிரண்டான மாயத்தைப் பார்க்க இருக்கைக்கு விரைந்தாள் ராதிகா.



~~~~~~~~~~~~~~~~~~~~~~



"ராது, என்ன சொல்றே? மஞ்சு எப்படி?" மதிய உணவுக்கு வெளியில் போகலாம் என்று பிரபாகர் சொன்ன போதே தெரியும் இதைப் பற்றித் தான் பேசப் போகிறான் என்று.

"நல்லாத் தான் இருக்கா.. நீதான் முடிவெடுக்கணும்.. உனக்கு எப்படித் தோணுது?" பந்தை அவன் பக்கம் அனுப்பினாள் ராதிகா.

"ரொம்ப அழகா இருக்கா ராது.."

"ம்ம்.."

"எத்தனை இனிமையான குரல் அவளுது.! "

"ம்ம்.."

"அவ டிரெஸ் சென்ஸ் கூட பயங்கர ரசனையா இருக்கு.. டிப்ளோமெட்டிக்கா பேசுறா.."

"அப்புறம்?"

"ரொம்ப நல்ல பொண்ணு.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட அவளை ரொம்ப பிடிச்சிபோச்சு." பேசும்போதே துள்ளி குதித்துக் கொண்டு பேசினான் பிரபாகர்.

"ம்ம்.. "

"என்ன ராது, ரொம்ப ஆர்வமே இல்லாம கேட்குறே.. நேத்தே பார்த்தேன், உன் முகம் அத்தனை தெளிவா இல்லை. கோடம்பாக்கம் வரை வரும்போதும் சரி, அங்கே மஞ்சுவைப் பார்த்துப் பேசும் போதும் சரி.. நீ ஏதோ யோசனையிலேயே இருந்தா மாதிரி இருந்தது.. தப்பா நினைக்கக் கூடாது.. ராம் சொல்றான், நான் வேற இடத்தில் பெண்பார்க்கப் போனது, அதுக்கு உன்னையே செலக்ஷன் கமிட்டிக்குக் கூப்பிட்டது அது தான் உனக்குப் பிடிக்கலைன்னு.. அதான்.. அதான்.. அதனால உனக்கு ஏதும் ?" கேள்வியை முடிக்க முடியாமலேயே பிரபாகரன் திக்கியபோது வெகு நேரத்துக்குப் பின் ராதிகாவுக்குச் சிரிப்பு வந்தது.

"ராமை விடு, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"ம்ம்.. கேளு.. உனக்கில்லாத உரிமையா.." ஏதும் சங்கடமான கேள்வியாக இருக்கக் கூடாதென்று பிரபாகரன் இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்வது அவன் முகத்தில் தெள்ளெனத் தெரிந்தது.

"உனக்கு எவ்வளவு சம்பளம்?"

"உன் சம்பளமே தான்.. மாசம் முப்பதாயிரம் தான்.. நான் கொஞ்சம் டாக்ஸ் ஸேவிங்க்ஸ் எல்லாம் செய்திருக்கிறதுனால கூட ஒரு மூவாயிரம் வரும்.."

"உங்க கொட்டிவாக்கம் வீடு சொந்த வீடு தானே? ஒரே பையன்ங்கிற முறையில் அதுவும் உனக்குத் தானே?"

"ஆமாம்.. அப்பா பேரில் இருக்கு ஆனா, என் வீடு தான்.. என்ன சந்தேகம் திடீர்னு?"

"மஞ்சுவுக்கும் கிட்டத் தட்ட இதே சம்பளம் தானே?"

"ஆமாம். அவளுக்கு ஒரு ஐயாயிரம் குறைவுன்னு நினைவு.."

"நல்லா படிச்சிருக்க, சொந்தமா வண்டி வேற வாங்கிட்டே.. வீடு இருக்கு. மாசா மாசம் கைநிறைய சம்பளம். மஞ்சுவின் சம்பாத்தியமும் இனிமே உனக்குத் தான் வரப் போகுது. அப்புறம் ஏன் உங்கம்மா நேத்து அந்த மஞ்சு வீட்டில் அத்தனை கண்டீஷன் போடறாங்க?!"

"என்ன கண்டீஷன்?"

"ஆகாகா.. என்னவோ தெரியாத மாதிரி கேட்கிறே! நீ மஞ்சுவோட தனியாப் பேசணும்னு வெளியில் போனப்போதான் பேசிகிட்டிருந்தாங்க.. ஒரு லட்சம் ரொக்கம், ஐம்பது சவரன் நகை.. அப்புறம் ஐயாவுக்கு ஒரு கார் வேற வேணுமாமே, பேரம் பேசுறது மாதிரி ஒரு பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இந்த காரை வேணாம்னு சொல்லிகிட்டாங்க.. உனக்கெதுக்கு இதெல்லாம் இப்போ?!!"

"இதெல்லாமே கேட்டாங்களா அம்மா?! " பிரபாகரனின் முகம் கொஞ்சம் மாறியது போலிருந்தது.

"ஓ உனக்குத் தெரியாதா?! சொல்லவே இல்லையா?! " தன் நண்பனுக்கு இந்த அநியாயத்தில் பங்கில்லை என்று தெரிந்தபோது ராதுவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"சொல்லவே இல்லை.. ம்ம்.. இருக்கட்டும், அம்மா கேட்டால் கேட்கட்டுமே...என்ன வந்தது இப்போ. " ஒன்றுமே நடக்காதது மாதிரி இனிப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் பிரபாகர்..

"டேய் என்னடா சொல்ற நீ? வரதட்சணை வாங்குறது பாவமில்லையா! இந்தப் பணம் வந்து தான் உனக்கு அடுத்த வேளை சாப்பாடுன்னு இல்லையே! "

"இருக்கட்டுமே ராது, ஃப்ரீயா விடு, இலவசமா வர்றது தானே.. என்ன மாதிரி வந்தா என்ன, மஞ்சுவுக்கு தானே அவுங்க வீட்ல செய்யப் போறாங்க.. நானா கேட்டேன்? தானா வரப் போகுது, நான் கேட்கலை, வேணாம்னும் சொல்றதாக இல்லை. நீ சாப்பிடு.."

ராதிகா அருகிலிருந்த சர்வரை அழைத்து சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.."நான் கிளம்புறேன் பிரபா, என்னோட தோசை வரும், அதையும் நீயே சாப்பிட்டுடு.".

"ஹே ராது, எங்க போறே? "

"எதுவுமே இலவசமா வருவதில்லை பிரபா, உன் திருமணத்துக்கான இலவச இணைப்பா நீ நினைக்கிற அந்த காருக்கும் நகைக்கும் நீ கொடுக்கும் விலை, உன் இளம்பருவத் தோழியின் நட்பு. இனிமேல் என்னைப் பார்க்க வராதே.. குட் பை.."

விளக்கங்களுக்கோ விவாதங்களுக்கோ நேரம் கொடுக்காமல் நடந்து கொண்டிருந்த ராதிகாவை வியப்புடன் பார்க்கத் தொடங்கினான் பிரபாகர்.