The Pianist, முந்தைய இரு படங்கள் போல குழந்தைகள் பற்றி இல்லாமல், ஒரு கலைஞன் பற்றியது. சோகக் கதையையும் இவ்வளவு இசை மயமாக எடுத்திருப்பது அருமை. போலந்தில் ஹிட்லரின் படைகள் வந்திறங்கிய விதம் குறித்தும் போர்வியூகங்கள் குறித்தும் பல முறை படித்திருக்கிறேன். ஆனால் சில நுண்தகவல்களை இந்தப் படத்தில் புதிதாக தெரிந்து
கொள்ள முடிந்தது உண்மை தான்.

யூதர்களை நகரத்தின் நடுமத்திக்கு அனுப்ப ஹிட்லர் முடிவு செய்வது, எல்லா யூதர்களும் வலது கையில் தாம் யூதர் என்பதற்கான அடையாளத்தைத் தாங்க வேண்டும் என்ற விதி, என்று புதுப் புது விவரங்கள்.. தெரிந்து என்ன செய்வது என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது உலக குடிமகள் என்ற முறையில் என்னுடைய கடமையும் கூடத் தான். முழு படமுமே நெஞ்சைத் தொடும் என்றாலும், ஸ்பில்ஸ்மென் குடும்பத்தினர் கடைசியாக இறப்பை நோக்கிப் போவதற்கு முன்னால் குடும்பத்துடன் ஒன்றாக உண்ணும் கடைசி உணவான அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஒற்றைச் சாக்லெட் பற்றிய காட்சியும், உணவுக்கு ஏங்கி தரையில் கொட்டிக் கிடக்கும் கோதுமையைக் கூட உண்ணத் தயாராக இருக்கும் வயதான யூதர்கள் பற்றிய காட்சியும் நினைவில் நிற்பவை. கடைசி சில காலம் ஸ்பில்ஸ்மென் உயிருடன் இருக்க உதவும் ஜெர்மனிய ராணுவ அதிகாரி பரிதாபகரமாக ரஷ்ய சிறைக் கேம்பில் இறப்பது பெரிய நகைமுரண்.
முக்கியமாக கதையின் ஆரம்பத்தில் வரும் சொந்த மக்களை வருத்தி வேலையில் இருக்க நினைக்கும் யூதப் போலீஸ்காரருக்கும், யூதர்களை ஆதரிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் யூதனுக்கு உணவு கொடுத்த ஆதரித்த ஜெர்மனிய ராணுவ அதிகாரிக்கும் ஒரே முடிவு வாய்க்கிறது.
ஸ்பில்ஸ்மென் பிழைத்து வந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தக் கதையை எழுதிவிட்டதால் இதில் நிறைய கற்பனை கலக்க வாய்ப்பில்லை. ஆனால் இது எழுதிய உடனேயே வெளிவராமல் போக ரஷ்யர்கள் விடவில்லை என்று சொல்லப்படுவதற்கு சரியான காரணம் தான் எனக்குக் கிடைக்கவே இல்லை.
[கூடியவரை கதை சொல்லாமல் எழுத முயன்றிருக்கிறேன். முழுமையடையாதது போன்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவல்லை.. ]