Wednesday, March 07, 2007

பா.கே.ப.பி

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித் தொடரின் சுருக்கம்..

இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..

பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...

எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:

பார்த்ததில் பிடித்தது:
1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், ப்ளைட் 172.




மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..

2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம ஹாப்பி பீட் தான்..




கேட்டதில் பிடித்தது
1. சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.

ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.

அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

2. சமீபத்தில்: போக்கிரி படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.





படித்ததில் பிடித்தது.
1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், சிறுவர்மலர். அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்



2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : இரா.நடராசனின் ஆயிஷா.


பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....