Sunday, December 02, 2007

டிக்கட் வாங்கி இருக்கீங்களா?

இவ்வளவு தாமதமாகிடுச்சே, எப்படி வீட்டுக்குப் போவே?’
‘என்னோட வண்டியில் தான்!’
‘என்னது வண்டி வாங்கிட்டியா? ‘
‘ஓட்டவும் ஆரம்பிச்சிட்டியா?’
‘freewayல ஓட்ட தொடங்கிட்டியா?’
எல்லா கேள்விகளுக்கும் பெருமையாக ‘ஆமாம்’ சொல்லிவிட்டு வந்த அந்த வார இறுதியில் தான் தலையில் தட்டி உட்கார வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது. காய்கறி வாங்க கடைக்குப் போய்க் கொண்டிருந்த ஞாயிறு இரவு திடீரென்று பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் முன்விளக்கு கண்கூசவைக்கும் விதமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.. ‘யாருப்பா அது ??!’ என்று எரிச்சலுடன் கண்ணாடியைப் பார்த்தால், இங்கே செல்லமாக காப் என்று அழைக்கப் படும் போலிஸ் மாமா தான் வந்து கொண்டிருந்தார்.
காவல்காரர் இப்படி விளக்கை அணைத்து அணைத்து ஒளிர வைத்தால், வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டும் என்பது வரை நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் நிறுத்திவிட்டு கதவைத் திறந்து இறங்க முயலக் கூடாது என்று எந்த புத்தகத்திலும் கூட எழுதப்படவில்லை என்பதால், அந்த மிகத் தவறான செயலை நான் செய்ய முற்பட்டேன்.
‘இறங்காதே! கீழே இறங்காதே!’ என்று மிரட்டலாக கேட்கவும் இறங்கும் யோசனையைக் கைவிட்டு, ‘என்ன கேட்டுவிடப் போகிறார், லைசன்ஸ், இன்சூரன்ஸ், எல்லாவற்றையும் எடுத்து வைப்போம்’ என்று பையைத் துழாவினேன். நல்ல வேளையாக, அதற்குள் காவலரே இறங்கி அருகில் வந்தார். என் பக்கத்து சன்னலைத் திறக்கச் சொன்னார்.
‘நீங்கள் ஓட்டும் வண்டியில் ஒரு பக்க விளக்கு எரியவில்லை.. ‘ என்றவர், ‘இது யாருடைய வண்டி?’ என்றார்.
‘என்னுடையது தான்..’ என்றபடி கோப்புகளை எடுத்துக் காட்டினேன்.
‘இப்போது தான் வாங்கி இருக்கிறீங்களா?’ என்றவர், அடுத்து என் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டார்.
சென்னையில் பலபேர் சொல்லி, மிகவும் நல்ல பெண்ணாக நான் வாங்கிவைத்திருந்த ‘அகில உலக ஓட்டுனர் உரிம’த்தை கெத்தாக எடுத்து நீட்டினேன். தலைவர் ஆடிப் போய்விட்டார்.. அத்தோடு நில்லாமல் ‘இதெல்லாம் இங்க செல்லாதும்மா.. கலிபோர்னிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் கொடு, இந்த அகில உலகம் எல்லாம் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் தான் செல்லுமா இருக்கும்’ என்று சொல்லி என்னையும் கலவரப்படுத்திவிட்டார். ‘இருந்தாலும் நான் இதை விசாரித்துச் சொல்கிறேன்’ என்று போனவர், போனும் கையுமாக கொஞ்ச நேரம் பேசித் தீர்த்துவிட்டு,என்னிடம் ‘இந்த ஊருக்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆச்சு?’ என்றார்
‘மூணு வாரம் ஆச்சு’ என்றேன்.
‘கலிபோர்னிய சட்டப்படி நீங்க வந்து பத்து நாளில் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேணும். இல்லைன்னா வண்டி ஓட்டக் கூடாது. ‘ என்று தொடங்கினார்.
‘அதுக்கான வேலையெல்லாம் தொடங்கிட்டேன். இதோ பாருங்க, போன வாரம் பரிட்சை எழுதி பெயில் ஆகிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் படிச்சி எழுதி பாஸ் பண்ணி ‘ஓட்டப் பழகும் உரிமம்’ வாங்கிடுவேன்’ என்று இடையில் குறுக்கிட்டுச் சொன்னேன்..
ம்ஹூம். போயும் போயும் இந்த பரிட்சையிலா பெயிலாகணும் என்று ஏற்கனவே நான் புலம்பிக் கொண்டிருக்கும் அந்த பரிட்சைத் தாளை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்துவிட்டு, விட்டேனா பார் என்று ஒரு அடையாள டிக்கட் போட்டுவிட்டுத் தான் போனார் அந்தக் காவலர்.
‘அடுத்த 45 நாட்களுக்குள்,
1. எரியாத விளக்கைச் சரிசெய்துவிட்டு
2. ஒழுங்கான ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட்டு
3. வண்டிக்குள் வைக்காத வாகனக் காப்புப் பத்திரங்களை வைத்துவிட்டு
போக்குவரத்து வழக்காடு மன்றத்துக்கு நேரில் போய் பத்து டாலர் கட்டி இதெல்லாம் செய்ததாக நிருபிக்க வேண்டும் ‘
என்றது அந்த டிக்கட் எனப்படும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்குக் கொடுக்கப்படும் குற்றப் பத்திரிக்கை போன்ற சீட்டு.
திரைப்படங்களில் என்னதான் நீதிமன்ற காட்சிகளை விரும்பிப் பார்ப்பேன் என்றாலும், சொந்த நாட்டிலேயே கோர்ட்டுப் படியேறாத என்னை (அதுக்காக தாண்டி குதித்துப் போயிருக்கிறேன் என்று பொருளில்லை ;-) ), அயல்நாட்டுக்கு வந்து நீதிமன்றம் போக வைத்த அந்த போலிஸ்காரனையும், உலக உரிமம் பெற்றாலே எல்லா இடத்திலும் செல்லும் என்று சொல்லி கொடுத்த தென்னிந்திய வாகன சங்க அலுவலரையும் திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
அதன்பிறகு ஒரு இரண்டு வாரம் வண்டியைக் கையால் தொடவும் ஒரே பயம். என்னைப் பிடிக்கவென்றே இந்த ஊர் போலிஸ் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருப்பது மாதிரி…
அவசர அவசரமாக படித்து அடுத்த வாரமே எழுத்துத் தேர்வில் தேறி, அதற்கடுத்த வாரமே வண்டி ஓட்டிக் காட்டி அதிலும் தேறி, நீதிமன்றத்துக்குப் போய் அங்கே குமாஸ்தாவிடம் எல்லாவற்றையும் காட்டி நிருபித்து.. இது போதாதென்று, விளக்கை சோதனை செய்யவந்த போலிஸ்காரர் வேறு ‘டிக்கட் வாங்கினதுனால தான் இந்த பர்மிட்டை அவசரமா வாங்கினீங்களா?’ என்றார்.
‘அட, எங்க ஊர்ல டிக்கட் வாங்குறதுன்னா அர்த்தமே வேறய்யா… ‘என்று புலம்பிக் கொண்டே பணம் கட்டிவிட்டு வந்து சேர்ந்தேன்.
நீதி
1. அகில உலக ஓட்டுநர் உரிமம் என்று பெயர் வைத்திருந்தாலும், எங்க ஸ்வாசினேகர் ஊரில் ஒண்ணும் செல்லுபடியாகாது.. அதை எல்லாம் நம்பி இங்கே வராதீங்க.
2. போலிஸ்காரர் வண்டியை நிறுத்தினால் அனாவசியமா பதற்றப்பட்டு நம்ம ஊர் மாதிரி எல்லா டாகுமெண்டையும் தேடும் வேலை எல்லாம் வேண்டாம். என்னவோ துப்பாக்கி தான் தேடுகிறோம் என்று சுட்டுப் போட்டுவிட்டுப் போகும் வழக்கம் அதிகமாம் இங்கே… சும்மா உட்கார்ந்து அவர் கேட்கும் போது பதில் சொன்னாலே போதும்.
3. டிக்கட் வாங்குவது, கொடுப்பது எல்லாம் நம்ம ஊர் டவுன் பஸ்ஸில் நடப்பது போல் தான். அதனால், அதை நினைத்தோ நினைக்காமலோ கவலைப்படாமல், இருந்தாலே போதும். பொதுவாக வாழ்க்கையில் எதுக்குமே கவலைப்படாத அலட்சிய மனோபாவம் கொண்ட என்னையே டிக்கட் பற்றிப் பேசிப் பேசிப் பயமுறுத்திவிட்டதால், ரொம்பவும் பயந்து நடுங்கிக் கொண்டு தான் காவற்காரரிடம் நடந்து கொண்டேன். அதெல்லாம் பிரச்சனையே இல்லை என்பது புரிய கொஞ்ச நாள் ஆனது..
அப்புறமென்ன.. மேலே இருப்பவற்றுடன்,
‘என்னது, அதுக்குள்ள டிக்கட் கூட வாங்கிட்டியா?’
என்ற கேள்வியும் சேர்ந்துகொண்டுவிட்டது ;-)

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

குமரன் (Kumaran)

முதல்ல வாழ்த்துகளை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் டிக்கட் மேட்டருக்கு வருகிறேன். :-) கார் வாங்கியதற்கு வாழ்த்துகள். இப்போது குளிர் காலம் என்பதால் கார் இருப்பது நல்லது தான். உங்கள் ஊரில் அவ்வளவாகக் குளிராது; பனியும் பெய்யாது என்று நினைக்கிறேன். ஆனால் சரியாகத் தெரியவில்லை. அந்த வகையிலும் கார் இருப்பது நல்லது தான். குளிரில் அலைய வேண்டாம் பாருங்கள்.

கார் வாங்கி கொஞ்ச நாளிலேயே டிக்கட் வாங்கியாச்சா? அதுக்கும் வாழ்த்துகள். என் பக்கத்து வீட்டுக்காரர் 65 வயசு இருக்கும் - இது வரைக்கும் டிக்கட் வாங்கியதே இல்லைன்னு ஒரு தடவை சொன்னார். டக்குன்னு நீங்க எத்தனை வருஷத்துக்கு ஒரு தடவை கார் ஓட்டுவீங்கன்னு கேட்டேன். :-) நான் இது வரைக்கும் அதிவேகத்திற்காக ரெண்டு தடவை டிக்கட் வாங்கியாச்சு. ஒவ்வொரு தடவையும் 120 டாலர் கட்டினேன். நீங்க பத்து டாலர் கட்டுனதுக்கு அலுத்துகிறீங்க?! :-0
December 2nd, 2007 at 11:40 am
இலவசக்கொத்தனார்

‘என்னது, அதுக்குள்ள டிக்கட் கூட வாங்கிட்டியா?’ :))
December 2nd, 2007 at 5:37 pm
மஞ்சூர் ராசா

வணக்கம். நலம் தானே

நலம் விசாரிக்க மட்டுமே
December 3rd, 2007 at 12:18 am
யெஸ்.பாலபாரதி

:)

வாழ்க்கையை என்சாய் பண்றேன்னு சொல்லுங்க மேடம்!
அமெரிக்க போலீஸ்காரனைப் பார்த்து பிளிறி இருந்தா ஓடியே போய் இருப்பார். டிக்கெட் எடுத்துருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. :))

பொன்ஸ்~~Poorna said...


December 4th, 2007 at 10:48 pm
சிவஞானம்.ஜி

ம்ம்….அனுபவம் பேசுது..
December 5th, 2007 at 4:43 am
காட்டாறு

ஹா ஹா ஹா… டிக்கட் வாங்கியாச்சா? அப்போ நீங்க அமெரிக்கா வந்துட்டீங்க. டிக்கட் வாங்கலைன்னா தான் இங்கே உங்களோட ஓட்டும் திறமையை (நான் காரை சொன்னேனப்பா) தப்பா நினைப்பாங்க.
December 6th, 2007 at 7:54 am
நாகு

கார் வாங்கினதுக்கும், டிக்கெட் வாங்கினதுக்கும் வாழ்த்துக்கள். இப்படி பாருங்க… நீங்க போலிஸ்மாமாக்கிட்ட டிக்கெட் வாங்கறது, வண்டி ஓட்டி யாருக்காவது ‘டிக்கெட் குடுக்காம’ இருக்கறது மேல் இல்லையா?…

பாலபாரதி சொல்றமாரி பிளிறி கிளிறி வெச்சிராதீங்க… உடனே பத்து கார்ல வந்து சுத்திருவானுங்க…
December 6th, 2007 at 9:35 am
நந்தா

ஏங்க அப்படியே ஒரு பி.ந கவிதையை ஆங்கிலத்தில மொழிபெயர்த்துச் சொல்லி இருந்தீங்க்கன்னா, அந்த போலிஸ்காரர் டிக்கெட்டே கொடுக்காம துண்டை காணோ, துணியை காணோனு ஓடி இருப்பாரு இல்லை.

என்னா போங்க………சூது வாது தெரியாம இருக்கீங்களே……
December 6th, 2007 at 1:02 pm
லக்கிலுக்

போனவாரம் கூட ஜி.என்.செட்டி ரோடு சிக்னல்லே மாமாகிட்டே அம்பது ரூபா அழுதேன் :(
December 6th, 2007 at 6:30 pm
tamilnathy

ஆஹா! அங்க பின்னூட்டம் போடப் போனா… விடமாட்டேன் போ’ங்குது. அந்தக் கதைக்கு இங்கே வந்து பின்னூட்டமிட வேண்டியிருக்கிறது. ‘சற்றே பெரிய சிறுகதை’யின் இரண்டாவது முடிவுதான் எனக்கும் பிடித்திருந்தது என்று சொல்லவே தேவையில்லை. இப்படியெல்லாம் நடக்குமளவிற்கு ஆரோக்கியமான சமூகத்தில் நாம் வாழ்கிறோமா என்ன… மன ஊனம் உடையவர்கள் மத்தியில் அல்லவா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கதை என்னை நெகிழ்த்தியது. அண்மையில் இதே சாயலில் நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஆழியூரான் அதில் போட்ட பின்னூட்டத்தின் பொருளை இந்தப் பதிவில் உணர்ந்துகொண்டேன்.
December 6th, 2007 at 6:36 pm
tamilnathy

பொன்ஸ்!கனடா,அமெரிக்கா பொலிஸ்காரர்கள் நம்ம இலங்கை, இந்தியாவோடு ஒப்பிடும்போது தங்கமானவர்கள். ஒரு சிலருக்குத்தான் ‘கலர்’காய்ச்சல் இருக்கிறது. மற்றபடி நியாயமென்றால் நியாயந்தான். உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே… நான் என்ன சொல்றது?
December 7th, 2007 at 11:29 am
Nivi

பூர்ணா! இப்போ தான் உங்க BLOGS அ படிக்கறேன். OFFICE போனா தான் கிடைக்கும் போல. :) ரொம்ப தமாஷா இருந்தது. ! கலக்குங்க!
December 13th, 2007 at 3:14 am
ravishankar

அமெரிக்கா வேற உலகம் வேற..இது கூட தெரியாம எப்படி உலக உரிமம் வச்சுக்கிட்டு அங்க
போனீங்க ;)
December 15th, 2007 at 9:38 pm
muthuletchumi

:) vazthukkal
December 18th, 2007 at 11:14 pm
Balaji

:)
December 20th, 2007 at 1:35 pm
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்

எதுக்கு அவசரப்பட்டு லைசென்ஸ் எடுத்தீங்க? அர்னால்ட எனக்கு நல்லாத் தெரியும்னு “பிட்”டப் போட்டுப் பார்த்திருக்கலாம்ல?!!
December 21st, 2007 at 11:18 am
சாணக்கியன்

ஆஹா!, வண்டி ஓட்ட என்ன விதின்னு கூட தெரியாம ஓட்ட ஆரம்பிச்ச உங்க ‘கெத்’-தை பாராட்டதான் செய்யனும் :-)

இத வெச்சு நானும் ஒரு பதிவு போட்டாச்சு!