Saturday, February 16, 2008

ஒரே ஒரு சந்திப்பு

“அப்பா! உங்க கிட்ட ஒரு விசயம் பேசணுமே!’
பரத் கண்களில் ஆச்சரியம் மின்ன திரும்பிப் பார்த்தார். அவரின் ஒரே செல்ல மகள் சத்யா அவரிடம் பேசவே அனுமதி கேட்கிறாள்!
‘சொல்லுடா!’ என்றார் அவள் தோளைத் தொட்டு அமர வைத்துக் கொண்டே!
‘வந்து… வந்துப்பா… நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?’
பரத் வெடித்துச் சிரித்தார். ‘என் செல்ல பொண்ணு நீ, உன்னை என்னைக்காவது தப்பா நினைச்சிருக்கேனா? நான் உன் நண்பன்டா! என் சத்யாவின் முதல் பாய் பிரண்ட் நான் தானே?!’ என்றபடி அவளின் தலையில் மெல்ல தட்டினார்..
‘ஆமாம்பா.. அதனால் தான் என் இரண்டாவது பாய்பிரண்ட் யாரா இருக்கணும்னு, உங்ககிட்டயே சொல்லிடலாம்னு…’ உடனே முடிக்கக் கூடியவள்தான், ஆனால் சத்யாவுக்குக் கூட அப்போது வெட்கம் வந்துவிட்டது போலும்.
படபடவென்று எப்போதும் சிறகடித்துக் கொண்டிருக்கும் தன் மகள் முதன்முறையாக தயங்கி மயங்கி பேசுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டே, ‘இன்டரெஸ்டிங்! என் கஷ்டத்தைக் குறைச்சிட்டாய்! யார் அந்த அதிர்ஷ்டசாலி?!’ என்றார் பரத்.
‘உங்க பார்ட்னர் சிவசாமி அங்கிள் மகன் சந்துரு!’ எப்படியோ சொல்லி முடித்துவிட்டாள் சத்யா.
‘சந்துருவா?! ஆறாவதிலிருந்து உன்கூட படிச்சு தினம் தினம் ரெண்டு சண்டையாவது போடுவானே அந்த சந்துருவா?’
‘ஆமாம்பா! படிக்கிற காலத்தில், அவனோட சும்மா சண்டை போட்டுகிட்டே இருந்தேன்! இப்போ நினைச்சா ஆச்சரியமா இருக்கு! ரெண்டு வருசம் அவன் கூட பேசாம பார்க்காம இருந்த இந்த டைம்ல தான் அவன் அருமை புரியுது. அவனையே எனக்கு.. ‘
‘நீ கேட்டு நான் மறுத்திருக்கேனா செல்லம்மா! அவன் தான் நம்ம மாப்பிள்ளை போதுமா?’
*****************
‘என்னது? சந்துருவா? ரேவதி பையனையா சொல்றா? உங்க பொண்ணு சீரியசாத் தான் சொல்றாளா? இல்லை உங்க காதுல ஏதாச்சும் கோளாறா?’ பரத்தின் மனைவி பத்மா அதிசயப்பட்டாள்.
‘அவனேதாம்மா! இவ முகத்தைப் பார்த்தா பொய்யாத் தெரியலை. தவிரவும் காதல் கண்ணில் ்தெரியும் இல்லையா?’ கண்சிமிட்டிக் கேட்டார் பரத்
‘கண்ணுல எல்லாம் தெரியும் தான், ஆனா நீங்க கண்ணாடி போட்டு பார்த்தீங்களா?’ பத்மா சீண்டினாள்.
‘ம்ஹூம்! எம் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா?’ முகத்தைத் திருப்பிக் கொண்டார் பரத்.
‘சரி சரி! அவ ஒண்ணும் உங்களுக்கு மட்டும் பொண்ணில்லை.. எனக்கும் தான். நான் பார்த்தவரை காலேஜில் எலியும் பூனையுமா அடிச்சிக்குவாங்க! அந்தப் பையன் ஒத்துகிட்டானா என்ன?’
‘இனிமே தான் கேட்கணும். யாரா இருந்தாலும் என் பொண்ணை வேண்டாம்னு சொல்லிடுவானா?’
‘அதெல்லாம் சந்துரு விசயத்தில் சரிபடாது! அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்ட அழகைக் கண்ணால பார்த்திருந்தா, இப்படிச் சொல்ல மாட்டீங்க!’
‘இங்க பாரு பத்மா, நம்ப பொண்ணு ஆசைப்பட்டுட்டா! அதைக் கூட நிறைவேத்தாத, நம்ம எதுக்கு அப்பா, அம்மா? உனக்கும் சிவா வொய்ப் ரேவதி அண்ணி ரொம்ப பிரண்டு தானே, அவங்க கிட்ட பேசி பையனைச் சம்மதிக்க வைக்கச் சொல்லு. அதைத் தான் உன்கிட்ட சொல்ல வந்தேன்.’
‘முயற்சி பண்றேன். ஏனோ எனக்குஅவ்வளவு நம்பிக்கை இல்லை.’ என்று பேச்சை முடித்தாள் பத்மா
***************************
‘அப்பா கிட்ட சொன்னதெல்லாம் உண்மைதானா?’ உறுதிப்படுத்திக் கொள்ள மகளிடமும் வந்தாள்.
‘எது?ய என்றவள் சட்டென புரிந்து கொண்டு, கணனியிலிருந்து தலைதிருப்பிச் சொன்னாள் - ‘ஓ! சந்துரு விசயமா! ஆமாம் அது உண்மை தான். ஏம்மா இப்படி சந்தேகம் அதில்? ‘
‘இல்லைம்மா, நீங்க ரெண்டுபேரும் கடைசியா மூணு வருசம் சண்டை போட்ட அழகை உங்க கிளாஸ் ப்ரொபஸரா நான் கண்ணால் பார்த்தேன். சின்னச் சின்ன விசயத்திலேர்ந்து பெரிய விசயங்கள் வரை யோசிச்சு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாத ஒரு ஐட்டமே காலேஜில் இ்ல்லை.. அவனைப் போய்..’
சத்யாவிடமிருந்து பதிலே இல்லை. யோசிக்கிறாள் போலும்.
”ஃபேர்வெல் பார்ட்டியில் கூட, மத்தவங்க எல்லாம் உருக்கமா ஒருத்தரை ஒருத்தர் பிரியணுமேன்னு ஃபீல் பண்ணா நீ என்ன செஞ்சேன்னு நினைவிருக்கா?’
‘நல்லா நினைவிருக்கும்மா! வேணும்னே சந்துருகிட்ட நீ எங்க வேலைக்குப் போவேன்னு இப்பவே சொல்லிடு, அங்கயே நானும் வந்து சேராம இருக்கேன்னேன்…’
‘அதுக்கு அவனும் நல்லா திருப்பிக் கொடுத்தான் இல்ல?’
‘ஏதோ இல்லைம்மா, ‘தாயே, உங்க அப்பாகிட்ட தான் அசிஸ்டண்டா சேரப் போறேன், அங்க மட்டும் வந்துடாதே!’ன்னான்’ சத்யா இந்தப் பதிலை ரசித்தாள் போலும், இயல்பாகச் சிரித்தாள்.
‘இந்த எல்லாத்தையும் எதுக்கு இப்ப நினைவுப்படுத்தினேன்னா, அவ்வளவு தூரம் வெறுக்கப் பேசினவன், உன்னை மணக்கச் சம்மதிப்பானா?’
‘ ‘
சத்யாவுக்கு யோசிக்க நேரம் கொடுத்துவிட்டு பத்மா வேறு வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
சில நிமிட யோசனைக்குப் பின் சத்யா தாய் இருந்த இடம் தேடி வந்து சொன்னாள், ‘அம்மா! அவன் ஒருவேளை ஒப்புக்கலைன்னா, ஒரு தரம், ஒரே ஒரு தரம் நான் அவனைச் சந்திக்க ஏற்பாடு பண்ணு! அவனைத் திருப்ப முடியும்னு நான் நம்பறேன்’ திடமாகச் சொன்னாள் சத்யா.
(தொடரும்)