Sunday, August 26, 2007

‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)

ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு என்றவுடன் ‘ஓ! வச்சிக்கலாமே!’ என்று பெரிதாக தலையாட்டியது நான் தான். ஆனால், அன்றைய மிக முக்கியமான சில அப்பாயிண்டமெண்ட்கள், அந்த நாள் முழுவதையுமே அடித்துக் கொண்டு போகக் கூடியவை என்பது அப்போது தெரியவில்லை…
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று கிட்டத்தட்ட பத்து வருடம் ஒன்றாக பழகிய ஒரு தோழனின் திருமணம், அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன், ஒரு சமயம் அறைத்தோழியாகவும் இருந்த நெருங்கிய தோழியின் அண்ணன் திருமணம் என்று இரண்டு முக்கிய நிகழ்வுகளும், இந்த இரண்டிலும் கலந்துகொள்ள இவர்கள் போலவே இன்னும் நெருங்கிய தோழி சென்னை வந்திருந்ததுமாகச் சேர்ந்து ‘வலைப்பதிவர் சந்திப்புக்குத் தலைகாட்டவும் முடியுமா?’ என்றே சந்தேகமாகிவிட்டது..
எப்படியோ தோழியிடம் அனுமதி பெற்று, ஐந்தேகாலுக்கு சந்திப்புக்குப் போய்ச்சேர்ந்து, ஆறேகாலுக்கு கிளம்பவேண்டியதாகிவிட்டது.
யார் என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது.
* நான் போனபோது மா.சிவகுமார் பதிவர் பட்டறை குறித்து எல்லாரையும் பேச வைத்துக் கொண்டிருந்தார். இராம.கி ஐயா, சொர்ணம் சங்கரபாண்டி, சுந்தரவடிவேல் என்று வரிசையாக எல்லாரும் பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்துப் பேசினர். கருத்து சொல்லும் அளவுக்கு அவர்களின் பேச்சைப் பின்பற்றவில்லையாதலால், அறிமுகம் கொடுக்க நேர்ந்த போது பேசிவிட்டு வெளியே வந்து காபிக்கு ஆர்டர் கொடுத்தேன்.
* சங்கரபாண்டி பதிவர் இல்லையாம்! பின்னூட்டம் மட்டுமே இடுவாராம்! அவரின் கூர்மையான பின்னூட்டங்களைப் பலவிடங்களிலும் படித்திருந்ததால், என்னால் நம்பவே முடியவில்லை.
* சுந்தரவடிவேலிடம் கடைசியாகச் சொல்லிக் கொண்டு கிளம்பவே நேரமிருந்தது. போன ஒரு மணி நேரத்திற்கு தமிழ்மணம் டீசர்ட் லாபம்! ;)
* தமிழ்மண நிரலியை ஒவ்வொரு பதிவிலும் கட்டாயமாக்க வேண்டிய அவசியமின்மையையும் இந்திய நேரத்தில் தமிழ்மண தொழிற்நுட்ப உதவி கிடைக்காமல் போவது பற்றியும் சொல்லிவிட்டு ஓடவேண்டியதாகவிட்டது..
* அங்கும் இங்கும் சித்தார்த் துபாயிலிருந்து வந்திருந்தார். சில வார்த்தைகள் பகிர்ந்து கொண்டதுடன் தொலைபேசுவதாக சொன்னேன்.. பேச வேண்டும்
* நந்தாவின் புத்தகங்களைத் திருப்பிவிட்டு வேறு ஒரு புத்தகம் பெற்றுக் கொண்டேன்.
* அண்ணன் உண்மைத்தமிழன் அமைதியாக அமர்ந்திருந்தார். எங்கள் எல்லாரையும் விட அவரின் விவரக் குறிப்பு தெளிவாகவே வரும் என்று நம்புகிறேன்.
* அதியமான் வழக்கம் போல சலம்பிக் கொண்டிருந்தார் ;). நதியக்காவின் புத்தகம் என் கைக்கு வரும்முன்னரே வாங்கிப் பார்க்க முயன்றார். “கவிதைப் புத்தகம், உங்களுக்கு உதவாது” என்று நான் சொல்லவும், ” ஏன், இப்ப கூட மாசி வச்சிருக்கார் பாருங்க அந்தக் கவிதைப் புத்தகம் நான் படிச்சிட்டு கொடுத்தது தான்” என்றார். அப்படி என்ன புத்தகம் என்று பார்த்த போது அது சுஜாதாவின் புறநானூறு… !
* நதியக்காவின் சூரியன் தனித்தலையும் பகல் எப்படியும் நண்பர்களிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். அக்காவுக்காவது ஒரு காப்பி மிச்சமாகும் என்று நினைத்து சொன்னேன்.. ஆனால் “இல்லை இல்லை உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கணும். நீங்க முக்கியமானவர்” என்று சொல்லி கையில் கொடுத்துவிட்டார்..
* இரண்டு மூன்று புதிய பதிவர்கள், சில பின்னூட்டக்காரர்கள், பதிவர் பட்டறையில் பதிவு தொடங்கிய நண்பர்கள் சிலர் என்று புதியவர்களும் வந்திருந்தார்கள்.
* சொந்த சோகம் இருந்தாலும், பதிவர் சந்திப்பை விட்டுக் கொடுக்காமல் வந்திருந்தார் லக்கிலுக். சீக்கிரமே கிளம்பிவிட்டதாக சொன்னார்கள்.. ஆனால் அவரை விட சீக்கிரமாக நான் கிளம்பிவிட்டேன்..
* வினையூக்கியின் அதிர்ச்சி பரவாயில்லை என்னுமளவுக்கு எனக்கு அதிர்ச்சி - பதிவர் பட்டறை அன்று வினையூக்கி சொன்னாரே என்று, நான் தமிழ்99 சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது சுரதாவுக்கும் அவரின் தம்பிக்கும் தான் என்று அறிந்த போது…
“எனக்குத் தமிழ்த்தட்டச்சு தெரியும், தமிழ்99 எண்டால் நாங்கள் மீண்டும் சொல்லிக் கொள்ள வேணுமோ?” என்று அவர்களில் ஒருவர் கேட்ட போது, “தட்டச்சு தெரிந்தால் நீங்கள் பாமினி முறைப்படி தட்டலாம்.. ஆனால் அது எனக்குப் பழக்கமில்லையே!” என்றேன். “எனக்கு பாமினி தெரியும். நான் அப்புறம் சொல்லிக் தாரேன்” என்று அப்போதைக்கு காப்பாற்றியவரும் சுரதா தான்.
அகிலனைப் பற்றி அவர்கள் விசாரித்ததால், இவர்கள் அகிலனின் நண்பர்கள் என்றும் அது காரணமாகத் தான் பதிவர் பட்டறைக்கு வந்திருக்கிறார்கள் என்றும் நினைத்திருந்தேன். காசியைப் பார்க்க வேண்டும் என்று பட்டறையன்று சுரதா கேட்டதற்காக அவருடன் கொஞ்சம் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிய போதும், இவர் சுரதாவாக இருக்கக் கூடும் என்று நினைத்திருக்கவில்லை..
இப்படி ஒரேயடியாக, சுரதாவுக்கே தமிழ் தட்டச்சக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்தது கூட இல்லை! சந்திப்பன்று ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ என்று கேட்டால், “என்ன அக்கா, உங்கள் மாணவன் எண்டால் பெருமை தானே! ” என்று சேம் சைட் கோல் வேறு!
சுரதாவுக்கு எங்களின் முக்கியமான வேண்டுகோள்: மாறுவேடத்தில் வந்து நல்லா பீதியைக் கிளப்பிட்டீங்க.. ஊருக்குப் போன பின்னாடி, பட்டறையைப் பற்றிய உங்க அபிப்பிராயத்தை எழுதினால், செப்பனிட எங்களுக்கு உதவியாக இருக்கும்..
பிகு: பதிவர் சந்திப்புகள் திகட்டும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறதாக எனக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது.. இந்தமுறை அதிகம் கலந்துரையாடல் இல்லாத சந்திப்பாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம். பதிவர் பட்டறை போன்ற பெரிய அளவிலான நிகழ்வுகள் நடந்தபின் சந்திப்புகள் மிகவும் தேக்கமடைந்ததாக தோன்றுகிறதோ என்னவோ..
எனவே பொன்ஸின் கருத்து கந்தசாமி சொல்வது என்னவென்றால்,
* கூடியவரை அதிக இடைவெளி விட்டு அடுத்தடுத்த சந்திப்புகள் நடத்தலாம்.
* பதிவர் பட்டறையை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ஏற்கனவே பதிந்து கொண்டிருப்பவர்களுக்கான கணினிப் பயிற்சியையும் பதிவர் சந்திப்பையும் சேர்த்து ஏற்பாடு செய்தால் ஒருவேளை இன்னும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமையலாம்..

Monday, August 06, 2007

பதிவர் பட்டறை - என் பார்வை..

எங்க அக்கா (பெரியம்மா மகள்) கல்யாணம் நடந்து முடிந்த அன்று இருந்தது போன்ற, நிறைவு, மகிழ்ச்சி, சலசலப்பு, களைப்பு, நிம்மதி, கூட இன்னும் கூட நல்லா செய்திருக்கலாமே என்ற ஏக்கமும் நிறைந்திருக்கிறது… சனி மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகையில் அம்மா கையால் குடித்த தேநீர் தான் ஆர அமர சாப்பிட்டது.. அதற்கு அப்புறம் இன்று காலை வரை ஓரே ஓட்டம் தான்..
வாங்க வேண்டிய டேப், பிசின், கத்திரிக்கோல், ஸ்டேப்ளர், சார்ட் பேப்பர் என்று லக்கி மற்றும் இவானுக்குப் பட்டியல் போட்டுக் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டு, feedback formகளுக்கான கேள்விகளையும், ஒழுங்கையும் டிசைன் செய்து நிமிருகையில் குறுவட்டுக்கள் வந்திறங்கின. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஒன்றிலிருந்து இருநூற்றைம்பது எண்ணியது இப்போதான் முதல் முறை ;) வாங்கி வைத்துவிட்டு பார்த்தால் பேனர்கள் வந்திறங்கின. பிரித்துச் சரிபார்த்துவிட்டு அவற்றை ஆட்டோவில் போட்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒழுங்கு செய்திருந்த பின்னூட்ட பாரத்தை அச்செடுக்க பதிப்பகம் போனேன்.
‘கிளம்பும் நேரம் வரீங்களே’, என்று அலுத்துக் கொண்டே அச்சிட்டுக் கொடுத்தார்கள் மாணவர் மறுபதிப்பு அச்சகத்தில்.. பிரதிகளை எடுத்துக் கொண்டு பல்கலைக்கழகம் வந்த போது,
1. கணினிக்கள் தயாராக இருந்தன. ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார்கள் ஜேகேவும் வினையூக்கியும்
2. செல்லா, நந்தா, அருள்குமார், ஜெய், சிவகுமார், சுந்தர் எல்லாம் சேர்ந்து மறுநாள் கொடுக்க வேண்டிய பைகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்
3. பாலாவும் லக்கியும் குறுவட்டுகளையும் இன்னும் விடுபட்ட பேனர் முதலானவற்றையும் எடுத்து வந்துகொண்டிருந்தனர்.
4. விக்கி அடுத்த நாளுக்கான கலந்துரையாடல் திட்டத்தை மாற்றி, மறுசீரமைத்துக் கொண்டிருந்தார். புதிய பேச்சாளர்களிடமும் பேசி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்
என் பங்குக்கு நானும் சில கணினிக்களைச் சோதித்து பார்த்து, இகலப்பை, பையர்பாக்ஸ் என்று மென்பொருள் நிறுவிவிட்டு கிளம்பி வீடு சேர்ந்த போதே பதினொன்றாகிவிட்டது.. செல்லா முதலானோர் கிளம்ப இன்னும் தாமதமாகிவிட்டதாக கேள்வி…
காலை எழும்போதே ஜெயா போன் செய்து என் பொறுப்பில் நான் எடுத்து வர வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டார். ஜேகே தன் பங்குக்கு, ‘நீங்க வராட்டாலும் பரவாயில்ல, அந்த எக்ஸ்டெசன் கேபிளை அனுப்பி வச்சிடுங்க’ என்று பீதியைக் கிளப்பினார்..
ஏழரைக்கே கணினிகள் இணைப்புகளுடன் தயாராக இருந்தன. வினையூக்கி இன்னமும் சோதனை செய்து கொண்டிருந்தார். பரிமேலழகர் அறையில் செய்முறைப் பயிற்சியும், திருவள்ளுவர் அறையில் செய்முறை விளக்கமும் என்று எழுதி ஒட்டிவிட்டு, நிகழ்ச்சி நிரலையும் எழுதி வைத்தோம். கிழக்குப் பதிப்பகத்தின் ப்ரோஜக்டரை நிறுவி சோதித்தோம். இதற்குப் பிறகு கீழே அரங்கத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது எனலாம்..
முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.
அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!
HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!
காலை சென்னை வந்திறங்கி வூட்டம்மாவைக் கூட பார்க்கப் போகாமல் நேரே பதிவர் பட்டறைக்கு வந்த பெனாத்தல் சுரேஷ், பிளாஷ் அறிமுகம் கொடுத்தார். செய்முறை விளக்க வகுப்புகளில் இறுதி வகுப்பாக அமைந்த இந்த நிகழ்வையும் மக்கள் அதி ஆர்வத்துடன் கவனித்து கேட்டார்கள். மற்ற வகுப்புகளைவிட இந்த வகுப்புக்கு கூட்டம் அதிகம். மேசைகள் ரொம்பிப் போக, தரையில் அமர்ந்தெல்லாம் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
சுழற்சி முறையில், வினையூக்கி, நான், ஜேகே, சுந்தர், ஜெயா, கோபி, ஸ்ரினிவாசன் என்ற கடலூர்க்காரர் எல்லாரும் பரிமேலழகர் அறையில் பதிவு தொடங்கிக் கொடுப்பது, ஜிமெயில் கணக்கு, தமிழ்99 தட்டச்சு என்று ஆரம்ப பாடம் எடுத்தோம். கற்றுக் கொண்ட சில மாணவர்கள், தாமே நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுத்த போது நிறைவாக இருந்தது. டோண்டு சார் கூட யாருக்கோ பதிவு தொடங்கச் சொல்லிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தேசிகனும் சிலருக்கு பதிவுகள் தொடங்கிக் கொடுத்தார்.
கலந்துரையாடல் அரங்கமும், செய்முறை விளக்க வகுப்பும் - இரண்டுமே போரடிப்பதாக தோன்றம் நபர்கள் வந்து கற்றுக் கொள்ளவே செய்முறை பயிற்சி அறையான பரிமேலழகர் அறையை வைத்திருந்தோம். மதியத்திற்கு மேல் பரிமேலழகரில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது.. மக்கள் கலந்துரையாடலையும், செய்முறை விளக்கத்தையும் ரசித்துக் கேட்பதற்கான அறிகுறியல்லவா அது?!
மாலை வலைப்பதிவுகள் சார்ந்த புதிய முயற்சிகள் பற்றி அரை மணியில் தொகுத்து, அடுத்த அரை மணியில் அறிமுகம் கொடுத்து என்று அதுவும் ஒரு த்ரில்லாகி விட்டது.. எழுத்துரு மாற்றப் பயிற்சி, ஏற்கனவே தமிழிணையத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் என்றுவிட்டார் கோபி. கடைசியாக அதில் ஆர்வம் காட்டிய எனக்கும், க்ருபாசங்கருக்கும் மட்டும் தனி பயிற்சி வகுப்பாக exclusiveஆக சொல்லிக் கொடுத்தார் கோபி..
சுவையான சில:
* லக்கியின் புகைப்படம் சீர்ப்படுத்துதல் வகுப்பை ஆர்வமாக விரும்பிய டோண்டு சார் மதியத்திற்கு மேல் கிளம்பிவிட்ட படியால் அந்த வகுப்பு நடத்தும் ஆர்வம் லக்கிக்கும் குறைந்துவிட்டது.
* மேலிருந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஓடிக் கொண்டிருந்தபோது, ‘என்னம்மா, நின்னு பேச மாட்டேங்கறீங்க!’ என்றார் அருணா ஸ்ரினிவாசன். ‘அவங்க கல்யாண வீட்டுக்காரங்க.. அப்படித்தான் பரபரப்பா இருப்பாங்க’ என்று பதில் சொல்லி கலாய்த்தார் காசி
* புதுவையிலிருந்து இரா. சுகுமாறன் வந்திருந்தார்.
* ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் - இவற்றில் செய்தியைப் பார்த்துவிட்டும் சிலர் வந்திருந்தார்கள். அதிலும் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் மாலதி பதிவுகளைக் கவனிப்பதாக சொன்னார்.
* நமது கல்வித்திட்டம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ரிடையர்டு ஆசிரியர் ஒருவர் தம் மனைவியுடன் வந்திருந்தார். பதிவுகள் தொடங்க ரொம்பவே ஆவலாக இருந்தார்
* நாளிதழ்களில் எழுதும் மற்றுமொரு எழுத்தாளர், முதியவர், வலைப்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடன் வந்திருந்தார்
* ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஆங்கிலத் தளம் ஒன்றில் அங்கமாக இருக்கும் பெண் ஒருவர் தமிழில் இதை எப்படிச் செய்வது? என்று கேட்டுக் கொண்டு வந்திருந்தார்
* மாணவ, மாணவிகள் அதீத ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள்.. காலை சிஃபி இணைப்பு மிகவும் மோசமாக இருந்த போதும், கிட்டத்தட்ட 50 புதிய வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் உருவாக்கி இருப்போம்..
* சி என் என், விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், உண்மை, ஜெயா டீவி நிருபர்கள் வந்தது மட்டுமே எனக்குத் தெரியும்.. வேறு யார் யார் வந்தார்கள் என்று கலந்து கொண்டவர்கள் சொன்னால் தான் உண்டு
இப்போதைக்கு இவ்வளவு தான்.. மற்றவை அவ்வப்போது நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்…
ஆரம்பத்துல இத்தினி அமைதியாத்தான் இருந்திச்சு அரங்கம்

அப்பாலிக்கா தான் இப்படி ஆகிடுச்சு….

அஜண்டா எல்லாம் எளுதி பக்காவாக் கீது பாரு..






ஞாயித்திக் கிழமை சென்னையில் நில நடுக்கம்னு நியூஸ் வந்திருக்குமே?!

ஓ… இட்லிவடை சுடத் தான் இத்தினி வேகமா?!

பாலபாரதியின் நண்பர் கார்ட்டூன் பாலா எங்க பக்கத்தில் உட்கார்ந்து ரெண்டு வார்த்தை பேசினார்.. அதுக்குள்ள அவர் விரல்கள் பேசியது தான் கீழே பார்ப்பது..

இந்தப் படம் பார்த்து எங்க அம்மாவின் கமெண்ட் : இவங்க இரண்டு பேரையும் ஒரே இடத்தில் கொண்டுவர கார்ட்டூன்ல தான் முடியும்..

செந்தில், சுகுணா.. இதைத் தாண்டி உள்ளே வரவே இல்லையே!

புறமுதுகு காட்டுவது அருள்

பேராசிரியர் தமிழி ;)