Saturday, April 28, 2007

பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை

புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.

கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..

குழலியின் பழைய பக்கத்திலிருந்து நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்

ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் தமிழைசர் நிரலியை என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் புதுப் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.

  • தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல்,
  • பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல்,
  • புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல்,
  • தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்

- இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.

மேலும் செய்ய எண்ணி இருப்பவை:

  1. தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting - என் பதிவில் வருவது போல்)
  2. முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல்
  3. தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.

கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்கத்தில், ஏதும் நுட்பச் சிக்கல்கள் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னால் உதவியாக இருக்கும். மேற்குறிப்பிட்டவை தவிர, "இதுவும் செய்யலாமே" என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள்.

Monday, April 23, 2007

சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்

சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.

"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.

சாகரன்
தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.

அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)

மாற்று! - சிறில்
அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)

"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.

வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கி
அடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.

ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா
ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.

அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.

வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி
பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.

அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?

மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும்
தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.

மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.

சிறுவர் திரட்டி- அனானி
"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.

எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்
இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.

தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.

இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.

தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.

தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )
1. உங்கள் நண்பன் சரவணன் : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)
2. மா. சிவகுமார்
3. தருமி - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..
4. வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
5. ஓகை நடராஜன் - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. லக்கி சொல்லிட்டாரு ;)
6. ஐகாரஸ் பிரகாஷ்
7. பாஸ்டன் பாலா
8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.
9. விக்கி
10. சிறில் அலெக்ஸ்: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..
12. இராம.கி ஐயா
13. லக்கிலுக்: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.
14. நந்தா: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.
15. உண்மைத் தமிழன்: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார் ;)
16. சுந்தர்: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)
17. ஓசை செல்லா : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)
18. ப்ரியன்: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
19. சு.க்ருபாசங்கர்: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.
20. மோகன்தாஸ்: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]
21. ஜி.ராகவன் : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..
22. முத்து தமிழினி
23. பகுத்தறிவு
24. பொன்ஸ்
25. We the People
26. ஜே கே : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)
27. நாமக்கல் சிபி : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..
28. விஜயராஜ்
29. மாரிக்கனி
30. மாஹிர் : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.
31. நவீன் பிரகாஷ்
32. தமிழ்வாய்ஸ்
33. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்
34. யோசிப்பவர்: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)
35. நிலாரசிகன்
36. தங்கவேல்: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா?
37. மிதக்கும்வெளி: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)
38. செந்தில்
39. WeeBee
40. ஜி. கௌதம்: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.
41. வடுவூர் குமார்: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.
42. சார்லஸ்: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
43. யெஸ். பாலபாரதி
இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இட்லிவடை ;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.

சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:
1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி
2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா
3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா

நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ், பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :((((

Monday, April 16, 2007

ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.

எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது "லவ் ஸ்டோரி"(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த டாக்டர்ஸும்(Doctors) சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த "Acts of Faith"திலும் காணக் கிடைப்பது கண்கூடு.

"Acts of Faith" மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.


டேனியல்(Daniel), அவன் தமக்கை டேபோரா(Deborah), அவளுடைய காதலன் டிமோத்தி(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.

தந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

டெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.

நமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.

யூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.

மெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.

டிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா 'புண்ணிய பூமி'யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.

இதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.

நாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.

பாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.

இருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.

நல்ல மகனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.

ஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.

மதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.
புத்தகம் : Acts of Faith
ஆசிரியர் : Erich Segal
வெளியிட்டோர் : Bantam Books
பதிப்பு : April 1992
குறிப்புகள்:
1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் :)
2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.

Monday, April 09, 2007

பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.

தோழி ஒருவர் அழைத்து, "பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?" என்று கேட்டபொழுது, "அப்படியா!" என்று வியக்கத்தான் முடிந்தது.

பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..

சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: போலி மட்டுமா போலி பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]

இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.

எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், இங்கு பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு:
1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)
2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..