Wednesday, January 24, 2007

தேடல் தொடர்கிறதே

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன்.

DR. சிவகுமார்,
9, பதி தெரு,
சேத்துப் பட்டு,
சென்னை.


'கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?' என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், "இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே.." என்று சொல்கிறார் அந்த வீட்டம்மாள்.

அந்தத் தெரு தான் பதி தெரு என்று பலபேர் உறுதி கூறினார்கள். ஆனால், அந்தத் தெரு மட்டுமன்றி, அதன் வலது, இடது பக்கத்து அடுத்தடுத்த தெருக்களில் கூட மருத்துவர்களின் வாசனையே இல்லை என்று பல்குத்திக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார்.

தெருமுனை டீக்கடையில் இன்றைக்கு நான் தான் சூடான விவாதப் பொருள்.
"அந்தாள் சரியாத் தாம்லே கேட்குறாரு.. பார்சலைத் தான் நான் கைல வாங்கிப் பார்த்தேன்லா" என்றும், "எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பெருசு. ஏதாச்சும் புள்ள புடிக்கிறவனா இருக்கப் போறான், சாக்கிரதையா கவனிக்கோணம்" என்றும் என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தார்கள்..

"ஏன் சார், நீங்களாவது சொல்லுங்க, இது சென்னை தானே?" என்பதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. மற்ற எல்லா கேள்விகளையும் கேட்டாகி விட்டது.

இன்னும் நான் வழி கேட்காத ஒரே ஜீவன் அதோ அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சின்ன பையன் மட்டும் தான். பாவம், அவன் கையில் இருந்த பிளாஸ்டிக் பொம்மை சிகப்பா, பச்சையா என்று கேட்டால் கூட அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்போது போய் அவனிடம் பதி தெரு என்றால், டீக்கடைக்காரர்கள் ஒரு முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனால், "மரமே, டாக்டர் சிவகுமாரைத் தெரியுமா?", "கொசுவே! சிவகுமார் வீடு எது?" என்று நான் விசாரிக்க வேண்டியது தான். கடைசி முயற்சி ஒன்று செய்துவிட்டு, பார்சலைத் திரும்பி அனுப்ப வேண்டும்..

கடைசி முயற்சி..., கடைசி முயற்சி? என்ன செய்யலாம்? ஆங்! பத்தாவதில் பொற்கைப் பாண்டியன் கதை படித்தது நினைவுக்கு வந்தது; அதைத் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கேட்டுவிட வேண்டியது தான். கை போனால் கஷ்டம் தான். எதற்கும் திருடன் என்று சந்தேகிக்கும் அந்த டீக்கடை ஆசாமியை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். வெகுநேரம் ஆனதால் எங்கோ போய்விட்டார் போலும், ஆளைக் காணவில்லை. நான் தைரியமாக போய் ஒன்றாம் எண் வீட்டின் கதவைத் தட்டினேன். நல்லவேளையாக அந்தத் தெருவில் முப்பத்தி ஓரு வீடுகள் தாம் என்பது எதேச்சையாக நினைவுக்கு வந்து ஒருவித நிம்மதி அளித்தது.

கதவைத் திறந்தவருக்குச் சுமார் முப்பது முப்பத்தியைந்து வயதிருக்கலாம். முன்வழுக்கை வேறே. "ஏன் சார், டாக்டர் சிவகுமார்ங்கிறவரு.. இந்த வீட்ல இருக்காருங்களா?"

"டாக்டரா?" தொடங்கிவிட்டார். இனிமேல் இல்லை என்பதை நீட்டி முழக்கிச் சொல்வார். ஏமாற்றத்திற்குத் தயார் செய்தபடி "ஆமாம் சார்" என்றேன்.

"இந்தத் தெரு தானுங்களா?"

தலையாட்டினேன். வாய்திறக்கும் பொறுமை இருக்கவில்லை.

"இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!" என்றார் அவர்..

குழப்பம் எனக்கும் தொற்ற, அவசர அவசரமாக அந்தப் பார்சலை எடுத்து அவரிடம் நீட்டினேன். "இந்தத் தாளைப் பாருங்க.."

படித்தவர் பெரிதாகச் சிரித்தார்.

"என்ன சார்?"

"இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவகுமார் இல்லை.. டி.ஆர். சிவகுமார். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க..."

இன்னும் பெரிதாக அவர் சிரித்துக் கொண்டே போக, ஆளைக் கண்டுபிடித்த நிம்மதியும், அதுவரை அலைந்த களைப்புமாக, அவர் வீட்டு வாசற்திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.

Tuesday, January 23, 2007

புத்தகக் கண்காட்சி - படித்தவை

புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பதிவிட்டதிலிருந்து, வாங்கிய புத்தகங்களின் பட்டியலைக் கேட்காதவர்கள் இல்லை. வாங்கி, புதுக் கருக்கு கலையாத புத்தகமாக பட்டியலிடுவதை விட, படித்துப் பார்த்து அவை பற்றி எழுதுவோமே என்று தான் பட்டியல் தராமலே நழுவிக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவிலிருந்து அவ்வப்போது படித்த புத்தகங்களைப் பற்றிய பார்வையுடன் வாங்கிய புத்தகங்களின் பட்டியலும் இடம்பெறும்.

ச. தமிழ்ச்செல்வனின் நமக்கான குடும்பத்திலிருந்து தொடங்கியது என் இந்த வருட புத்தகக் கண்காட்சித் தொகுப்பு. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "நமக்கான குடும்பம்" பதினாறு பக்கங்களே அடங்கிய குறும்பதிப்பு. நமது இன்றைய குடும்ப அமைப்பினைப் பற்றி, பெண்களும் ஆண்களும் 'உருவாக்கப்படுவது' பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தப் புத்தகம், கண்காட்சியைச் சுற்றிப் பார்க்கும் போதே கால் வலிக்காக உட்கார்ந்து இளைப்பாறிய பதினைந்து நிமிடங்களில் படிக்கக் கூடியதாக இருந்தது.

அடுத்து படித்து முடித்தது, க்ரியா பதிப்பகத்தாரின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" - ஆசிரியர் அம்பை. ஆண் பெண் உருவாக்கத்தை ஒட்டிய "புனர்" என்ற சிறுகதையும், சிலே புரட்சியில் வீணாகக் கைதாகி வாழ்க்கைப்பாதை மாறிப் போன பெண்ணின் "வயது" கதை,சமையலறை அதிகாரமும் அடுத்த நாள் சமையலை முடிவு செய்வதும் மட்டுமே தனது ராஜ்யம் என்று நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பற்றிய தொகுப்புக்குத் தலைப்பு கொடுத்த கதை, எல்லாமே ரசித்துப் படித்தவை. இந்தத் தொகுப்பை விட, ஓரளவு தமிழ்நாட்டுச் சூழ்நிலையில், இன்னும் சுலபமாக என்னால் உணரக் கூடிய பின்னணிகளில் இயற்றப்பட்டிருந்த "காட்டிலொரு மான்" தொகுப்பு எனக்கு அதிகம் பிடித்ததாயிருந்தது. சம உரிமை கேட்டு சண்டைக்குப் போகாமல், தானே உருவாக்கிய நிறுவனத்தில் தனக்கு உரிமை இல்லாமல் போனதை எண்ணி வருந்திக் காட்டுக்குப் போகும் நாயகியும், கணவரின் ஈகோவிற்காக, ஆசைப்பட்டு கற்ற வித்தையை சபையில் காட்ட முடியாமல் போவதை எதிர்த்துப் போராடும் பாடகியும் இன்னும் மனதில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லாக் கதைகளிலும் பெண்களே கதாநாயகிகள். உடனே, நமது மெகா சீரியல்கள் போல, ஆண் தான் வில்லனா என்று சீறி வந்துவிடக் கூடாது. பெண் என்ற வார்த்தைக்கு சமூகம் கட்டிவைத்திருக்கும் இலக்கணம் தான் நாயகியின் நேரெதிர் நாயகன். அதே சமயம், "பெண்ணைப் பற்றிப் எழுதும் பெண் என்பதால், பெண் எழுத்தாளர் என்று என்னைச் சொல்லாதீர்கள்" என்கிறார் அம்பை, தனது "ஆண் பெண்ணெல்லாம் எழுத்தில் இல்லை" குறுவெளியீட்டில்.

வம்சி புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கிய இந்தச் சிறுவெளியீடும் பதினாறு பக்கப் புத்தகம் தான். அம்பையின் எல்லா கதைத் தொகுதிகளைப் பற்றிய குறிப்புகளுடன் மேடைப் பேச்சு மாதிரியான நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.


"இதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால தான் நீர்மை வெளியிட்டிருக்கீங்க. முத்துசாமியோடது. முத்துசாமியோட அத்தனை கதைகளின் மையம் வந்து maleதான். மூன்று வயசில கெணத்துல விழுந்த பையன்ல இருந்து எல்லாமே ஆண் தான். அப்ப நீங்க ஏன் எழுதல, ஆண்களைப் பற்றிய கதைகள்னு? ஏன்னா ஒரு ஆணைப் பற்றி ஆண் எழுதினாலும் கூட ஒரு ஆணைப் பற்றிய அனுபவம் என்பது ஒரு உலகார்ந்த அனுபவமாக அவங்க எடுத்துக்கிறாங்க. universal experiance ஆக எடுத்துக்கிறாங்க. ஆனா, ஒரு பெண் வந்து பெண்ணைப் பற்றி எழுதினா, அது ஒரு குறுக்கப்பட்ட அனுபவமா போயிடறது. அது உலகத்தைப் பற்றிய அனுபவம் அல்ல. அது பெண்ணைப் பற்றியது."

"இப்ப தி.ஜானகிராமன், நிறைய பெண் பாத்திரங்களை வைத்து அருமையான பல படைப்புகள் தந்தார். ஒரு முழு சிறுகதைத் தொகுப்புல வெறும் பெண் பாத்திரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் யாருமே அது பெண்களைப் பற்றிய கதைகள்னு சொல்லல. இது தி.ஜானகிராமன் எழுதிய வாழ்க்கை பற்றிய கதைகள் என்று தான் அறியப் பட்டது. ஆண் வந்து ஆணைப் பற்றி எழுதினால், அது உலகளாவிய விஷயம். பெண் பெண்ணைப் பற்றி எழுதினா அது குறுக்கப் படவேண்டிய விஷயம்னு அவங்க நெனைக்கிறாங்க. பெண் என்பது அவங்க மனதிலேர்ந்து போறதே இல்லை. "

என்ற கருத்தை முன்னிறுத்துவது தான் புத்தகம் முழுமையுமே. ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த மிக நல்ல புத்தகம்.


அப்புறம் படித்தது "எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே" - அ.மங்கை எழுதியது. அரவாணிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் தங்களுக்குள் பின்பற்றி வரும் சடங்குகள், அவர்தம் வாழ்வியல் நிலை, வரலாறு, போராட்டங்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுவெளியீடு இது. ஒருவழியாக அரவாணிகளுக்கும் வாக்காளர் அடையாளச் சீட்டு, கடவுச்சீட்டில் புதுப் பிரிவு சேர்ப்பது, ரேஷன்கார்டு வழங்கப்படுவது, என்று ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும், இன்னும் போராட்ட நிலையில் இருக்கும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம், திருமணம் செய்து கொள்ளும் உரிமை, சொத்துரிமை, கல்வியைத் தொடர்வதற்கான உரிமை, போன்ற இன்னும் அரசு கொடுக்க வேண்டிய அங்கீகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்புகிறது இந்த வெளியீடு.


படித்து முடித்த மற்றுமொரு சிறுவெளியீடு, இரா. நடராசனின் "சுற்றுச் சூழல் பிரச்சனை, கிரீன்பீஸ் மற்றும் நாம்..". பல மாதங்களுக்கு முன்னமேயே கிரீன்பீஸ் அமைப்புக்கு என்னாலான ஆதரவைத் தரத் தொடங்கியிருந்தாலும், அவர்களது மற்றைய செயல்பாடுகள் குறித்து நான் அறிந்தவற்றைத் தவிர இன்னும் பலப்பல உண்மைகளைச் சொல்கிறது இந்த வெளியீடு. ஸ்நேகா பதிப்பகம், இன்னும் கொஞ்சம் நல்ல வெள்ளைத் தாளில் வெளியிட்டிருக்கலாம். படித்து முடிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கிரீன்பீஸ் அமைப்பினர் இந்தியாவிலும் இன்னும் பல்வேறு நாடுகளிலும் இப்போது செய்து கொண்டிருக்கும் செயல்களையும், செய்யாமல் விட்டுப் போன, அல்லது இன்னும் குரல் கொடுக்காமல் அமைதி காக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் இரா. நடராசன். போபால் தொடங்கி, வேலூர், திருப்பூர், டெஹரி என்று விவரமாக நான் அறியாத பல பிரச்சனைகளையும் பேசுகிறது.


கொஞ்சம் லைட் ரீடிங்காக படித்தது, மதனின் கி.மு.- கி.பி. ஏற்கனவே, பலமுறை பாட புத்தகங்களில் படித்த விஷயங்கள் தான் என்றாலும், மதன் ஸ்டைலில் வரலாற்றைச் சுவைக்கலாமே என்று ஆசையுடன் படிக்கத் தொடங்கினேன். புதிதாக பல விஷயங்களையும் கற்க முடிந்தது உண்மை தான். ஹோமோ சாபியன்ஸ் வகை மனிதர்களில் முதலில் தோன்றியது பெண்ணே என்று தற்போதைய ஆராய்ச்சி ஒன்று நிரூபித்திருப்பதாகச் சொல்லும் மதன், அந்த முதல் பெண்ணுக்கு, தானே தனித்து இனப் பெருக்கமும் செய்யும் வகையில் ஆணுறுப்புகளும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதாகக் குறிப்பிடுகிறார். இப்படித் தொடங்கிய மனித இனம், அடுத்த சில பத்திகளிலேயே "முன்னேறி", ஆண்கள் வேட்டைக்குப் போகவும், பெண்கள் குடியிருப்புகளில் இருப்பதுமாக மாறிப் போவது எப்படி என்பதை விளக்காமலே விட்டுவிட்டார் மதன். அத்துடன் அப்படி வீட்டில் இருந்த பெண் கையில் இருந்து விழுந்து முளைத்ததே நாம் செய்த முதல் விவசாயம் என்பதும் நான் அறிந்து கொண்ட புது விஷயம். இந்திய நாகரிகத்தைப் பற்றியும் கிறிஸ்து பிறந்த ஆண்டு வரையிலான விவரங்களைச் சுவைபட விளக்குகிறது புத்தகம். ஏனோ, தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றிய விவரணைகள் அதிகமில்லை. கிரேக்க நாகரிகங்களைப் பற்றியும், சாக்ரடீஸ் போன்ற தத்துவ அறிஞர்களைப் பற்றியும், எகிப்தில் முதன்முறையாக சூரிய கடவுளை முன்வைத்துப் பேசிய அரசனைப் பற்றியும் நான் இதுவரை அறியாத பலவிவரங்கள் இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொண்டேன். இருப்பினும் இந்திய நாகரிகம் பற்றியும், மதங்கள் தோன்றிய விதம் பற்றியும் மதன் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து அடுத்தது எழுதலாம்; இந்தத் தலைப்புகளில் பலவற்றை கி.மு. கி.பி தாண்டிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது.


கிமு.கிபி முடித்த கையோடு கிழக்குப் பதிப்பகம், முத்துராமனின் சிரிப்பு டாக்டர். என்.எஸ்.கேவைப் பற்றிய சுவையான சம்பவங்களின் தொகுப்பு. அவரது வாழ்க்கை வரலாறு என்று முழுமையாக இல்லாதது போல் தோன்றினாலும், முக்கியமான பகுதிகளனைத்தையும் தொட்டுச் செல்கிறது. கலைவாணரின் ஆரம்பகால நாடகத்துறை வாழ்க்கை, அவரது கொடைக்குணம், பகுத்தறிவு சிந்தனைகள், லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்று கிட்டத்தட்ட எல்லாமும் பேசுகிறார் ஆசிரியர். எல்லாரையும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த கலைவாணரின் முதல் மனைவியையும் மூன்றாம் மனைவியையும் நல்லவிதமாக வைத்துக் கொண்டாரா என்பதற்கான விவரணைகள் மட்டும் இந்தப் புத்தகத்தில் இல்லை. "ஒரு பெண் தன்னந்தனியாக இரவு நகைகளுடன் தெருவில் நடக்கும் நாள் வர வேண்டும்" என்று காந்தியைப் போலவே கனவு கண்டவர், மதுரத்தை ஏமாற்றித் திருமணம் செய்த விதமும் கொஞ்சம் இடிக்கிறது. அதேபோல், குடிக்கெதிராக பிரச்சாரம் செய்தாலும், அதே குடிப்பழக்கத்தில் விழுந்ததும் அவர் செய்யாமல் இருந்திருக்கலாம்.

இவற்றிற்கு இடையில் மூன்றாம் முறையாக "ஒரு புளியமரத்தின் கதையைப்" படித்துப் பார்க்க முயன்றேன். வழக்கம் போல காத்தாடி மரத் தோப்பு பூங்காவாக உருமாறுவதற்கு மேல் படிக்க முடியாமல் அடுத்த புத்தகத்திற்குத் தாவி விட்டேன். அடுத்த முறையாவது அந்தப் புத்தகத்தை முழுதும் படிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


செந்தில்குமரன் பதிவு கிளப்பிய ஆர்வத்தில், மதனின் "மனிதனும் மர்மங்களும்" வாங்கியது நான் செய்த மிகப் பெரிய தப்பு. படிக்கத் தொடங்கி, ஆரம்பத்திலேயே பயந்து போய், அப்புறமும் விடாமல் படித்து, இரவு தூக்கம் வராமல், கண்ணை மூடினாலே, ஏதோ ஒரு பறக்கும் தட்டு என் முன்னால் பறந்து வந்து நிற்பதான கற்பனையில் தூக்கம் பிடிக்காமல் தவித்தது, படுத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று பற்றி எரிந்துவிட்டால் என்னாகும் என்று வேறு தனியாக யோசிக்கத் தொடங்கியது, இதெல்லாம் இப்போ வேண்டாமே..



மர்மங்களிலிருந்து விடுபட தற்போது கையில், "மிதமான காற்றும், இசைவான கடலலையும்" - தமிழினி பதிப்பகத்தின் தமிழ்ச்செல்வன் கதைகள். படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..

Friday, January 19, 2007

ஆண்களுக்காக...

ஆண்களின் ஆபத்தை நீக்க அவர்களது உறவு/நட்புப் பெண்கள் விளக்கேற்ற வேண்டும் என்று வதந்தி ஒன்று பரவி வருவதாக நண்பர் இட்லிவடை கூறியுள்ளார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலேயும், வலைபதியும் பெண் தோழிகள் விளக்கேற்றினால், தனக்கு நன்மை என்று நம்பும் எங்களின் நண்பர்களுக்காக, விளக்கேற்றுவது அவர்களின் நம்பிக்கையையும் துணிவையும் அதிகப்படுத்தும் என்பதால் விளக்கேற்றத் தொடங்குவோம்.

தற்போது வலைபதியும் ஆண்களுக்காக மட்டுமன்றி இனிமேல் வலைபதியப் போகும் சிறுவர்களுக்கும் உதவும் வகையில் சிறார் போர்னோகிராபிக்கும் எதிராக குரல் கொடுப்போம்.

வாருங்கள் தோழிகளே.. விளக்கேற்றுவோம்.

உங்களின் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒரு குழந்தைக்கு எதிரான சிறார் போர்னோகிராபியைத் தடுக்க ஒலிக்கும் எதிர்க்குரலாகவும், நமது சக வலைதோழர் ஒருவரின் நம்பிக்கையை வளர்க்கும் அருமருந்தாகவும் இருக்கட்டும்..




தொடர்புள்ள பிற பதிவுகள்:
1. சிறார் போர்னோக்கு எதிராக குரல்
2. சிறுவர் போர்னோகிராபி
3. ஆண்களுக்கு ஆபத்து
4. வதந்திகளும் நம்பிக்கைகளும்



Thursday, January 18, 2007

தமிழ் பேசு தங்கக் காசு

மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி "தமிழ் பேசு தங்கக் காசு". பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.

மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே அவற்றில் :( ] இன்னும் அதிகமாகவே தங்கம் கொட்டும் நிலையில், தமிழ் பேசித் தங்கம் வெல்ல எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,
-> ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்
-> ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்
-> தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல்
-> ஆங்கிலம் கலக்காமல்.

கடைசி விஷயம் மட்டும் தான் சுலபமாக இருக்கிறது, முன்பே பழகிக் கொண்டு வருவதால். பழைய வார்த்தை விளையாட்டு போல் போட்டியாளரை ஒரே சொல்லில் சிக்க வைக்கும் முயற்சியில் ஜேம்ஸ் வசந்தன் ஈடுபடுவதில்லை. மிக மிக இயல்பாக பேசிச் செல்கிறார். 'சொந்த ஊர் திருச்சி', 'படித்த ஊர் திருச்சி' என்று இரண்டு முறை சொல்பவரிடம், அடுத்ததாக திருச்சியைப் பற்றியோ, ஊரைப் பற்றியோ கேட்டு மூன்றாவது, நான்காவதில் சிக்க வைக்கும் முயற்சிகள் செய்வதில்லை. அதனால், பேச்சில் ஈடுபட்டு சொற்களின் எண்ணிக்கையை மறந்து ஏமாறுவது போட்டியாளருக்குச் சுலபமாக இருக்கிறது. வசந்தன் கூட இந்தக் கணக்கு வைத்துக் கொள்ளாமலே பேசுகிறார். வசந்தனைத் தவிர இன்னுமொரு பேராசிரியரை இந்த உரையாடலைக் கவனித்து நடுவராகும் முறையில் நியமித்திருக்கிறார்கள். நான் பார்த்த அன்று மூத்த கவிஞர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டேன் :() கூர்ந்து கவனித்து அவ்வப்போது ஒலிப்பானை அமுக்கி போட்டியாளர்களின் சாபத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார். :)

இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.

"வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதிரில் விழுந்தாள் கிழவி மகள்" போன்ற பழகிய சொற்றொடர்களுடன்

"தாதி தூதோ தீது. தத்தை தூது ஓதாது" போன்ற சங்கப் பாடல் தொடர்களும் கொடுக்கப்படுகின்றன.

இது போன்ற சொற்றொடர்களின் பொருளை விளக்கிவிட்டு திரும்பிச் சொல்லச் சொல்லலாம். அல்லது போட்டிகளில் பங்குபெறுபவர்களாவது வாய்விட்டுப் பொருள் கேட்கலாம். இரண்டும் இல்லாவிட்டால் இந்தச் சுற்று தமிழ் பேசித் தங்கம் வெல்வதை விட "மனப்பாடம் செய்தால் தங்கம் கிடைக்கும் " என்று மாறிவிடும் ஆபத்திருக்கிறது.

"புக்கு தெக்கு புக்கு
செக்கு தெக்கு செக்கு"

என்ற சொற்பயிற்சி எனக்குப் புரியவே இல்லை. யாருக்காவது புரிகிறதா?

இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இது கொஞ்சம் சுலபமான சுற்றாகத் தான் தெரிகிறது - சுலபம் என்ற சொல்லுக்கே தமிழ்ச் சொல் என்ன என்று கேட்கும் வரை! சுலபம், ஜாக்கிரதை போல் தினசரி பயன்படுத்தும் சொற்களையே தமிழில் சொல்லுங்கள் என்றால் அந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொஞ்சம் கடினமான வேலையாகத் தான் தோன்றுகிறது.

நான் பார்த்த உழவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி பங்கு பெற்றார். நிர்மலாவின் குரலை மட்டுமே கேட்டு, சலித்தே போயிருந்த எனக்கு, அவர் நொடிக்கொரு தரம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது மனதைக் கவர்ந்து விட்டது. பதில் தெரியாத கேள்விகளுக்கு அழகாகச் சிரிக்கிறார். அவருடைய மகன் மூன்றாம் வருடம் கல்லூரியில் படிக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் சந்தூர் விளம்பரம் போல் இருந்தது. அடுத்த முறை போட்டி வைக்கும் போது நிர்மலா சிரிக்கவும் தனியான நேரம் ஒதுக்கப் போவதாகச் சொல்லி கலாட்டா செய்தார் ஜேம்ஸ் வசந்தன்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பங்கெடுத்தனர். "ஸ்கூலுக்கு தமிழில் என்ன?" என்றால், "ஸ்கூல், தமிழ் தானே?" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! "ஃபேன் ஆங்கிலமா தமிழா?" என்று வசந்தன் கேட்டதற்கு, "ஆங்கிலம்னா?" என்று அற்புதமாகக் கேட்டு திகைக்க வைத்துவிட்டனர். வாழ்க பெற்றோர்.

இத்தனை குளறுபடிகள் இருந்தாலும், இரண்டாவது சுற்றில் மனப்பாடப் பகுதியை உச்சரிப்பு பிழையில்லாமல் சொல்லிக் காட்டினர். அதிலும் ஒரு சிறுவனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. வசந்தன் சொன்னதைக் கேட்டே அவனும் அழகாக மனப்பாடம் செய்து ஒப்பித்தான். நமது பள்ளிகள் மொழி கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ மனனம் செய்வது எப்படி என்று நன்றாகவே சொல்லிக் கொடுக்கிறது, மூன்றாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளாகவே!

நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாற்றினால், "திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!" என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது :)

Wednesday, January 17, 2007

புத்தகக் கண்காட்சி - கவனித்தவை

புத்தகக் கண்காட்சி தொடங்கி இரண்டாம் நாளிலிருந்து பல்வேறு நண்பர்களுடனும் தனியாகவும் தினம் தினம் போய்வந்து கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள், பழைய அலுவலகத் தோழர்கள், சென்னப்பட்டினம் குழு என்று போகும் ஒவ்வொரு நாளும் கண்காட்சியிலும் மக்கள் கூட்டம் என்னவோ அதிகமாகிக் கொண்டே இருப்பதாகத் தோன்றியது. இனி கவனித்தவை:

  • அருணா சூப்களில் மஷ்ரூமை விட காய்கறி சூப் சுவையாக இருக்கிறது

  • ஒரு நாளாவது மதுரையில் சாப்பிட்டது மாதிரியான சுவையான ஜிகிர்தண்டா போட்டுக் கொடுப்பார் என்று தான் நானும் பார்க்கிறேன். இருபது ரூபாய்க்கு வெறும் ஐஸ்கிரீம் தான் மிஞ்சுகிறது. உண்மையான ஜிகிர்தண்டா சுவையே மறந்து போச்சு :(

  • போண்டாவை விட பஜ்ஜி எண்ணை குறைவாக சுவையாக இருக்கிறது

  • கோபி மஞ்சூரியன் பஜ்ஜியின் இன்னுமொரு வடிவமாக மட்டுமே பொரிக்கப்படுகிறது.

  • டீயைத் தேத்தண்ணீர் என்றே சொல்லலாம், அத்தனை நீர்ச்சத்தோடு இருக்கிறது. அதனால் காப்பி இன்னும் சுறுசுறுப்பாக விற்பனையாகி சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. பன்னாட்டு நிறுவனமான ரைஸ் பவுலில் கிடைக்கும் தேநீரை விட, பள்ளிக் காண்டீனில் கிடைக்கும் தேநீர் இன்னும் கொஞ்சம் சுவையாக இருக்கிறது.

  • இரண்டாம் நாள் போனபோது நானூறு ஸ்டால்கள் முழுவதும் சுற்றி முடித்து வந்து தான் சாப்பிட எதுவுமே கிடைக்கும் என்ற நிலை மாறி மூன்றாம் நாள் அரும்பு பதிப்பக ஸ்டால் அருகில் டீ, காப்பி கிடைத்தது. நான்காம் நாள் இன்னும் முன்னேற்றம். பழ ரசங்கள் கூட கிடைத்தன. பேசாமல் ரைஸ் பவுலைத் தனியாக வைத்ததை விட நானூறு ஸ்டால்களுக்கு இடையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களில் பகுதி பகுதியாகப் பிரித்துச் சொருகியிருக்கலாம்..

  • கண்காட்சி ஸ்டால்கள் போடப் பட்டிருந்த ஆறு அடி உயர மேடையில் மக்கள் நடப்பதன் அதிர்வுகளை உணர முடிந்தது. கொஞ்சம் பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தேன்.

  • விடுமுறை நாட்கள் முழுவதும் கண்காட்சிக்குப் போய்விட்டாலும், ஒரு நாள் கூட சுட்டி விகடன் அறிவியல் அரங்கத்திற்கோ, திரைவிழாவிற்கோ போகமுடியவில்லை. சுட்டி விகடன் அரங்கம் எப்போதுமே வாயிலருகில் கூட்டமான கூட்டம். திரைவிழாவிற்கு நேரத்திற்குச் செல்ல முடியாமல் சோம்பேறித்தனம் :)

  • இரண்டாம் நாள் சென்ற போது, உள்ளே கழிப்பறை வசதிகள் இருக்கவே இல்லை. சுட்டி விகடன் அரங்கத்தில் பயிற்சிகளைச் செய்து காட்ட வந்திருந்த பெரம்பூர் பள்ளியைச் சேர்ந்த பெண்குழந்தைகள் பாடுதான் அதிக திண்டாட்டம். "எங்கயோ ஸ்கூலுக்குள்ள இருக்கு டாய்லெட்" என்று சந்தேகமாகவே சொன்னார்கள். அடுத்த நாள் முதல் தற்காலிகமான கழிப்பறைகளை அமைத்துவிட்டார்கள். தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் இருந்த அந்தக் கழிப்பறைகளில், சிலவற்றில் உள்தாழ்ப்பாள் இல்லை, சிலவற்றில் தண்ணீர் வெளியேற சரியான வழிகள் இல்லை. ஆனால், எதுவுமே இல்லாததற்கு இது தேவலாம் தான்.

  • வாகன நிறுத்த மேற்பார்வையை அவுட்சோர்ஸ் செய்திருக்கிறார்கள் போலும்; வாகனம் நிறுத்துமிடங்கள் ஒரே புழுதி மயம். முதல் நாள் தெரியாத்தனமாக என் தலைக்கவசத்தை எடுத்துப் போனதில் கருப்பு நிற தலைக் கவசம் எனக்கே அடையாளம் தெரியாத பழுப்பு நிறமாகி விட்டிருந்தது.

  • சனி, ஞாயிறுகளில் அதீத கூட்டம் வந்த போதும் நிறுத்தத்திற்கான நுழைவுச் சீட்டு கொடுப்பவர்கள் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தார்கள். வெகு நேரம் காத்திருந்து சீட்டு வாங்க வேண்டியதாகியது.

  • வண்டிகள் உள்ளே அனுமதிக்கப்படும் வாசலும் வெளியேறும் வாசலும் வேறுவேறாக இருந்தாலும், உள்ளே கொஞ்ச தூரம் வரை வெளியேறும் வண்டிகளும் உள்ளே வரும் வண்டிகளும் ஒரே தடத்தை ஆக்ரமித்துக் கொண்டதில், கொஞ்சம் குழப்பம். கூட வந்திருந்த என்.ஆர்.ஐ நண்பர் ஒருவர், "என்னங்க இது, இன் அவுட் தனித்தனி வழி வைக்க மாட்டாங்களா?" என்று அங்கலாய்த்தார்.

  • உள் நுழையும், வெளியேறும் வழிகள் மிக மிக உயரமாக இருந்தன. எனக்கு முன்னால் வண்டி ஓட்டி வந்த ஊனமுற்றவர் ஒருவரால் வண்டியை உள்ளே ஏற்றவே முடியவில்லை. அப்புறம் போலீஸ்காரர்கள் வண்டியைத் தள்ளிக் கொடுத்தார்கள்.

  • உள் நுழையும், வெளியேறும் வழிகளைப் பற்றிய அறிவிப்பு பள்ளி வளாகத்து வாயிலுக்கும் இல்லை, உள்ளே ஸ்டால்களிலும் இல்லை. எப்போதுமே அவுட் கேட் அருகில் இரண்டொருவர் வண்டியை மெதுவாக்கி அந்த வாயிற்காப்பாளனிடம் உறுதி செய்து கொண்டு உள் வழியே நுழைந்து கொண்டிருந்தனர்.

  • ஸ்டால்கள் நிலை இன்னும் மோசம். "உள்ளே" "வெளியே" அறிவிப்புகள் இல்லாத காரணத்தால் எல்லா பக்கத்திலிருந்தும் எல்லாரும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் ஒரு ஒழுங்கே இல்லாமல் இருந்தது. விகடனோ, அல்லது வேறெதோ ஒரு ஸ்டாலில் மட்டுமே IN, OUT என்று பெரிதாக எழுதி வைத்திருந்தார்கள்.

  • ஸ்டால்கள் முழுவதும் சுற்றிக் களைத்து வருபவர்கள் உட்கார வெளியில் சேர் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி வந்து உட்காருபவர்களை நம்பித்தான் மாலை 6:30 மணி முதல் நடக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறதோ என்று சந்தேகம் எனக்கு. (இந்த மாலை நிகழ்வுகள் சென்னப்பட்டினம் பக்கத்தில் தகவல் பட்டியில் தினசரி சேர்க்கப்படுகின்றன)

  • சனிக்கிழமை நான் போய்ச் சேர்ந்த அதே நேரம் நடிகர் சிவகுமார் வந்து இறங்கினார். டிக்கெட் வாங்கியவர்கள், வாங்குபவர்கள் என்று எல்லாரும் விரைந்து வந்து "சிவகுமார் சிவகுமார்" என்ற மேடைக்கருகில் குழுமிவிட, புத்தகக் கடை வாசல் பக்கம் ஒரு நிமிடம் கூட்டம் குறைந்தே போய்விட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரின் ஏழு வயது மகன், "அப்பா, புக்கு வாங்க வந்தோமா இல்லை சிவகுமாரைப் பார்க்க வந்தோமா.. வாப்பா புஸ்தகம் வாங்கப் போகலாம்" என்று தந்தையின் கையைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துவிட்டான். அப்புறம் அவன் ஏதோ கணிதப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

  • உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம், புத்தகங்களுக்கான மொத்த செலவு சுமார் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்கள் மட்டுமே.. உஷ்.. ஐநூறு என்ற பாதி உண்மையை மட்டும் தான் அம்மாவுக்குச் சொல்லி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மீதி ஆயிரத்தையும் சொல்ல வேண்டும் ;)

  • கண்காட்சியில் வாங்கியதில் மிக மிக முக்கியமான புத்தகத்தின் புகைப்படம் உங்களுக்காக:


    :))) சுவாரஸ்யமான புத்தகமும் கூட. அங்கேயே படித்து முடித்துவிட்டேன் ;)

Tuesday, January 16, 2007

சுஜாதா (குமுதம் சிறுகதை)

[இன்றைக்குத் தமிழ்ப் பதிவுலகில், மிக மிக சூடாக விற்பனை ஆகிக் கொண்டிருப்பது சுஜாதாவின் சிறுகதை தான். அதான், நானும் ஒரு பதிவு போடலாமே என்று..
தொடர்புள்ள சுட்டிகள்:
சிறுகதை-1
சிறுகதை-2 ]


"ஏய்! உங்கப்பன் வீட்டுக்குப் போய் மோதிரம் வாங்கிட்டு வான்னு சொன்னேன் இல்ல?" கணவன் சுந்தருக்கு இவ்வளவு கோபம் கூட வரும் என்று சுஜாதா எதிர்பார்க்கவே இல்லை.

"நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்பத் தான் வீட்டை வித்து கலாவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்பப் போய் மோதிரம் போடு, பிரேஸ்லெட் போடுன்னா, எப்படிச் செய்ய முடியும்? கொஞ்சம் மனுசத்தன்மையோட பேசுங்க!"

"கலா புருஷன் நிரஞ்சனுக்கு மட்டும் மோதிரம் போட்டிருக்காங்க, நான் என்ன இளிச்சவாயனா? அவன் என்னடான்னா, ஆபீஸுக்கு தெனக்கும் போட்டுகிட்டு வந்து அலட்டக்கிறான். என்னை எல்லாரும் கேனயன் மாதிரி பார்க்கிறாங்க!"

கலாவின் கணவனும் சுஜாவின் கணவனும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் கலாவுக்குத் திருமணப் பேச்சு வந்த போது நிரஞ்சனை வழிமொழிந்தவனே சுந்தர் தான்.

"அவரு வீட்ல அதைத் தவிர வேறெதுவும் கேட்கலே. இங்க அப்படியா? ஒட்டியாணம் என்ன, தோடு என்னான்னு அநியாயமா கேட்கலியா உங்கம்மா? இப்ப உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த ஒட்டியாணத்தை அழிச்சு நாலு மோதிரமா பண்ணிடுவோம்!"

இந்தக் கீதை எல்லாம் நிரஞ்சனின் மோதிரத்தின் முன் தவிடு பொடியானது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் சுஜாதா பெட்டியுடன் தாய்வீட்டு வாசலில் நின்றாள்.

"என்னம்மா சுஜாதா! திடீர்னு வந்திருக்கே!" அம்மாவின் ஆதரவான கேள்விக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கடன்காரன், பால்காரன், சத்திரத்து காண்டிராக்டர் கணக்குகள் சுஜாதாவின் வாயை மொத்தமாக அடைத்துவிட்டன.

"ஒண்ணுமில்லைம்மா.. அவரு ஒரு மாசம் டெல்லிக்கு டூர் போகிறாரு. அதான், கலா வேற இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப போரடிச்சி போயிருப்பீங்களேன்னு வந்தேன்!" என்று அப்போதைக்கு ஏதோ சொன்னாள் சுஜா.

சுஜாதா தாய்வீட்டுக்கு வந்து ஒருவாரம் போயிருக்கும். அம்மாவுடன் சேர்ந்து கல்யாணம் விசாரிக்க வருபவர்களைக் கவனிப்பதிலும், அப்பாவுடன் கணக்குகளில் உதவுதலிலும், அலுவலக பிஸியிலும், நாட்கள் போனதே தெரியாமல் போயிற்று. சுஜாதான் கல்மனசு என்றால், சுந்தர் இன்னும் கடுமையான கோபத்தில் இருந்தான். "மாப்பிள்ளை ஒரு போன் கூட செய்யலியே" என்று அம்மாதான் மாய்ந்து போனாள். "போன எடத்துல நேரம் இருந்திருக்காதம்மா..", "ஆபீஸுக்குப் பேசிட்டாரம்மா!" போன்ற சமாதானங்களுடன் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமை வங்கிக்குப் போன அப்பாவே தற்செயலாக சுந்தரைப் பார்த்துவிட்டார். குரல் தழதழக்க சுஜாதாவைக் கேட்கவும், மோதிரக் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. இன்னும் யாரிடம் கடன் வாங்கவில்லை என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுஜாதா, நிச்சயமாய்ச் சொல்லிவிட்டாள் "நீங்க எதுக்கப்பா போடணும்? பெத்து வளர்த்து நல்ல வேலையிலும் அமர்த்தி அந்த வருமானத்தோட பலன் கூட உங்களைச் சேராதபோது, நீங்க எதுக்கு இன்னும் மேல மேல செய்யணும்?" என்ற சுஜாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அம்மாவும் அப்பாவும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

"இங்க பாருங்க, இதை விக்கலாமா, அதை அடகு வக்கலாமான்னு யோசிச்சிகிட்டே இருந்தீங்கன்னா, நான் டைவர்ஸ் கேஸ் போடுறது பத்தி யோசிக்க வேண்டியதாகிடும்! அவரா வந்து அழைச்சிகிட்டு போனா பார்க்கலாம், இல்ல அந்த மோதிரம் தான் முக்கியம்னா இப்படியே இங்கயே இருந்துட்டு போறேன். வயசான காலத்துல உங்களுக்கும் துணைக்கொரு ஆளாச்சு!"

ரணகளமாக இருந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கலா வந்தாள். "ஏய் சுஜா! இங்க தான் இருக்கியா? உங்க ஹஸ்பெண்ட் கையை வெட்டிகிட்டார்னும் செப்டிக் ஆகிடுச்சு, ஜுரம் அது இதுன்னு இவர் சொன்னாரே!" என்ற சேதியுடன்.

அவ்வளவு தான்; சுஜாதா, தான் கொண்டுவந்த பெட்டியைக் கூட மறந்து போனாள். உடனடியாகக் கிளம்பி வீட்டுக்குப் போகவும், சுந்தர் வீட்டில் தான் இருந்தான். மிகப் பயங்கர அமைதியில் இருந்த வீட்டில் அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மாதிரி, சுந்தர் சுஜாவைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"சாரி சுஜா! நீ இல்லைன்னா எத்தனை கஷ்டம்னு இப்போத் தான் புரிஞ்சிகிட்டேன்.! நிம்மதியா தூங்க முடியலை, நீ பேசுறதைக் கேட்காம சாப்பாடு கூட இறங்கலை! காய் நறுக்கும் போது மோதிரவிரலில் வெட்டிகிட்டு... இங்க பாரு! இனி மாமனாரே வாங்கிக் கொடுத்தாலும் மோதிரமே கேட்பேன்? ம்ஹூம்!" சுந்தர் வெட்டுப்பட்ட விரலைக் காட்டினான்.

"நீங்களா கேட்கலைன்னாலும், எங்க அப்பா கொடுத்துவிட்டிருக்காரு, எங்க கைய நீட்டுங்க!" என்று சொல்லி கொண்டுவந்திருந்த பாண்ட் எய்டை விரலில் மாட்டிவிட்டுச் சிரித்தாள் சுஜாதா.

[வேற எதுனா எதிர்பார்த்து வந்திருந்தா, ஹி ஹி ;) மேல இருக்கும் தொடர்புள்ள சுட்டிகள் குமுதம் ஒரு பக்க வகையில் முயன்ற என்னுடைய பழைய சிறுகதைகள் ;) ]

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்....




தமிழ் வலைப் பதிவர் அனைவருக்கும்



என்




அன்பார்ந்த




மாட்டுப் பொங்கல்




நல்வாழ்த்துக்கள் :)))))))


Thursday, January 11, 2007

தண்ணீருக்காக ஒரு ஓட்டம் - மதுரக்காரய்ங்க கவனிக்க

இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன - ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது மதுரை மராத்தான்.

பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.



தான் அமைப்பினரால் நடத்தப்படும் இந்த மதுரை மராத்தான் நடக்கப் போகும் நாள் 13- ஜனவரி-2007 - பொங்கலை ஒட்டி.



நிகழ்வுகள்:

  1. மினி மராத்தான் ஓட்டம்
  2. நீருக்காக ஒரு நடைபயணம்
  3. புகழ்பெற்றவர்களுடன் நடை
  4. வித்தியாசமான உடல்நிலையாளர்களின் ஓட்டம்
  5. ஸ்கேட்டிங்
  6. நீர் சேமிப்பு பற்றிய கலை நிகழ்ச்சிகள் - மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
  7. நீர்க் கண்காட்சி

நாம் செய்யக் கூடியது:

  • பொங்கலை ஒட்டி மதுரையில் இருக்க வசதிப்பட்ட நண்பர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். அனுமதிக்கட்டணங்கள் உள்ளன, ஒரு அடையாளக்கட்டணமாக.

  • மண்ணின் மைந்தர்கள், தமக்குத் தெரிந்த, தாம் அறிந்த பழைய நீர்வளமிக்க மதுரையைப் பற்றிய விஷயங்களைக் கட்டுரையாக, வரைபடமாக, புகைப்படங்களாக, பழைய பத்திரிக்கைச் செய்திகளாக, விருப்பப்பட்ட வகையில் மதுரை மராத்தான் குழுவினருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இன்றைய மதுரைவாசிகள் மதுரையின் பழைய நீர்வளத்தை அறிந்து கொள்ளவும் அவற்றை மீட்பதற்கும் ஏதுவாகும்.

  • "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமான கட்டுரைகளை (ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில்) எழுதிக் கொடுக்கலாம். விழிப்புணர்வைத் தூண்டும் இது போன்ற கட்டுரைகள் மதுரை நகர செய்தித்தாள்களில் இடம்பெற்று அனேகரைச் சென்றடையக் கூடும்.

  • தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்புக்கான வழிமுறைகளைப் பற்றியும் கட்டுரைகள் மூலம் பகிரலாம்.

  • பங்கெடுப்பவர்களுக்கு உதவுமுகமாக உங்களால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம். அது பற்றிய விவரங்கள் அறிய இங்கு சுட்டவும்.

  • மதுரை வாசியாக இருந்தால், பங்கெடுப்பவர்களுக்கு உதவவும், அவர்களை நெறிப்படுத்தவும், பங்கெடுக்கும் பொது மக்களை நெறிப்படுத்தி உதவவும் தன்னார்வலராகப் பணிபுரியலாம்.

மதுரை மராத்தான் குறித்து மேலும் அறிய:

  1. பலூன்மாமாவின் பதிவு
  2. மதுரை மராத்தான் குழுவினர்

[இந்த இடத்தில் தண்ணீரைப் பற்றிய என்னுடைய பழைய கவுஜயை நினைவுறுத்த விரும்புகிறேன். ஓடத் தயங்குபவர்களிடம் கவுஜ படித்துக் காட்டினால், தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது உறுதி :-D ]

Tuesday, January 09, 2007

The Fountain Head - Ayn Rand

அயன் ராண்ட் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, The Fountain Head புத்தகத்தின் மீதான ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் சமீபத்தைய பதிவர் சந்திப்பின் போது மா.சிவகுமார் மூலம் புத்தகமும் கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாவலின் வாசிப்பனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

கடைசிவரை அதீத ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவே பயணிக்கும் கதைபேசும் சில தத்துவங்களுடன் முழுமையாக ஒப்ப முடியாவிட்டாலும் பொதுவில் நல்ல வாசிப்பனுபவம்தான்.

ஹோவார்ட் ரோர்க்(Howard Roark) என்ற ஒட்டுமொத்த மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த விரும்பும் மனிதனைப் பற்றியது கதை இது. உலகில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது மனிதன் தான்; கடவுளின் மிக அற்புத படைப்பு மனிதன் மட்டுமே என்று முழுமனதோடு நம்பும் கதாநாயகன் ரோர்க். எல்ஸ்வோர்த் மோங்க்டன் டூஹி(Ellsworth Monkton Toohey) நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை ஒன்றின் பத்தி எழுத்தாளர். தன் எழுத்துக்களால் நரியைப் பரியாகவும் பரியை நரியாகவும் ஆக்கக் கூடிய ஒரு விமர்சகர். அதே சமயம் தனக்குப் பிடிக்காதவர்களை மொத்தமாக அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய மக்கள் சக்தி தன் பின்னால் இருப்பதாக நம்புபவர்.

உண்மையான, நேர்மையான, பழுதில்லா திறமைக்கும்(ரோர்க்) வெற்று மக்கள் சக்திக்கும் (டூஹி) இடையிலான கண்ணாம்பூச்சி விளையாட்டே ஃபவுண்டன் ஹெட்.



ரோர்க் ஒரு கட்டிடக் கலைஞன். ஸ்டேன்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், போதிக்கப் பட்ட "பழைய முறைகளைப் பின்பற்றவே மாட்டேன்" என்று வணங்காமுடியாக நின்று பட்டம் பெறாமல் வெளியேறுகிறான் ரோர்க். அதே சமயம், அவன் வாழ்ந்த அதே வீட்டில் இருந்த பீட்டர் கீட்டிங்(Peter Keating), ஸ்டேன்டனின் நிகரற்ற முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஆர்க்கிடெக்டாக வெளியேறுகிறான்.

ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன். ஆகவே, அவனை போன்றே மார்டனிஸ்டான ஹென்றி காமரூனிடம்(Henry Camaron) உதவியாளனாகச் சேருகிறான்.

காமரூன் தன் ஆரம்ப காலத்தில், அற்புதமான புதுமையான வீடுகளுக்காகவும் வானை எட்டும் கட்டிடங்களுக்காகவும் பெருமை பெற்றவர். ஆனால், யாருக்காகவும் தன் கட்டிடங்களில் சின்ன மாற்றத்தைக் கூட செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக நிற்பவர், ரோர்கைப் போலவே. மற்றவர்களுக்கான மாற்றத்தையும் வெறுத்து, அவ்வப்போது வாடிக்கையாளர்கள் மீதும் கோபப்பட்டு, தன் பணிக்காலத்தின் கடைசியில், உலகம் முழுவதையும் பகையாக்கிக் கொண்ட ஒரு தோல்வியாளர் - மக்களின் பார்வையில். பீட்டர் கீட்டிங், காமரூனிடமே ஆரம்பத்தில் வேலை கற்று அதன் பின் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும், தலைசிறந்த கட்டிடக் கலைஞரான கை ப்ராங்கனிடம்(Guy Francon) சேருகிறான்.

இருவருடைய முதல் கட்டிடம் முதற்கொண்டு இவர்களிடையே உள்ள வளர்ச்சி வித்தியாசங்களை முன்வைத்து நகர்கிறது கதை. ஒவ்வொரு மனிதருக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொண்டே வேலை செய்யும் கீட்டிங், உயரங்களுக்குப் போகிறான். மிகக் குறைந்த காலத்தில், ப்ராங்கனின் நிறுவனத்தில் பார்ட்னராகி, அவனுடைய நிறுவனத்தின் முழு நிர்வாகியாகவும் உயர்ந்து, அப்போதைய அமெரிக்காவின் தலைசிறந்த கட்டுமானத்துறை வல்லுனராகவும் பரிணமிக்கிறான்.

காமரூனின் ஓய்வுக்குப் பின் ரோர்க், கீட்டிங்கிடமே வெறும் வரைபடம் எழுதுபவனாகச் சேர்ந்து, அங்கு கிடைக்கும் வாய்ப்பில் தன் முதல் கட்டிடத்தைக் கட்டத் துவங்குகிறான். முதல் இரண்டு கட்டிடங்களுக்குப் பின் தனக்கான இடம் என்று ஒன்று இல்லாமல் போக, சமரசங்களை விரும்பாமல் எங்கெங்கோ வேலை செய்து, ஒரு கட்டத்தில் கல்லுடைக்கும் சுரங்கங்களில் கூட வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

ரோர்கின் சில கட்டிடங்களைப் பார்த்த ஓரிருவர் அவனைத் தேடி வந்து வேலை கொடுத்த பின்னர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வாழ்க்கை முறை மாற, இறுதியாக ஸ்டோர்டார்ட்(Stoddard) என்பவர் எல்லா மதங்களுக்கும் பொதுவான கோயிலொன்றைக் கட்ட வேண்டி ரோர்க்கிடம் வந்து சேருகிறார். உலகின் எந்த மதத்தின் கோயிலையும் படியெடுக்காத, அதே சமயம் மனிதனின் ஆழ்மன நம்பிக்கையை, அல்லது, மனசாட்சியைப் பிரதிபலிக்கும் கோயிலொன்றை ரோர்க் கட்டித் தருகிறான்.

கட்டிடக்கலை விமர்சகரான டூஹி, கீட்டிங்கை முன்னிலைப்படுத்தி, ரோர்க்கைப் புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறான். பல்வேறு வகையான கலைஞர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு மிக்க டூஹி, ரோர்க்கை வேண்டுமென்றே புறக்கணிப்பதிலும், அவனுடைய இடத்தில் கீட்டிங்கை முன்னிறுத்தவதிலும் மிகத் தீவிரமாக உள்ளான். ஸ்டோடார்டின் கோயிலை, அது கோயில் என்ற கட்டிடத்தின் மாதிரியில் சேராது என்று சாட்சி சொல்லி ரோர்க்கின் மிகப் பெரிய வாழ்க்கைச் சரிவை உருவாக்குவதில் டூஹி, கீட்டிங் முதலானோர் முன்னணியில் நிற்கின்றனர்.

ரோர்க்கைப் போலவே வணங்காமுடியாகவும், சமரசங்களை விரும்பாத பத்திரிக்கையாளராகவும் வரும் ரோர்கின் காதலி டோமினிக் ப்ராங்கன்(Dominique Francon), இந்தக் கட்டத்தில் உலகின் மீது கோபம்கொண்டு, பழி வாங்குதலாக பீட்டர் கீட்டிங்கை மணந்து ரோர்கின் வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறாள்.

ரோர்க் தன் சக்தியை உலகுக்கு எப்படி நிரூபிக்கிறான், டோமினிக்கின் பழிவாங்குதல் என்ன ஆகிறது என்று போகிறது கதை.

ரோர்க், தனிமனித ஒழுக்கம் நிரம்பியவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். வஞ்சகத்தாலும் வீண் புகழ்ச்சியாலும் முன்னேறத் துடிக்கும் பீட்டர் கீட்டிங் போலல்லாமல், தன் வேலைக்கேற்ற உயர்வையே விரும்புபவன்; டூஹி போல் பிடிக்காதவரைக் கெடுக்க நினைப்பதிலிருந்து காலி டப்பாக்களைக் கூட பிடித்திருந்தால், 'அற்புதக் கலைஞர்' என்று உயர்த்தி விடுவது வரை செய்வதை வெறுப்பவன் ரோர்க்.

ஒரு விதத்தின் எல்லா நாவல் கதாநாயகர்கள் போலவும், "வாழு வாழவிடு" கொள்கையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் ரோர்க். ஆனால், வாடிக்கையாளரின் வசதிக்காக, திருப்திக்காக கூட தன் கட்டிட அமைப்பில் ஒரு சின்ன மாறுதல் கூட செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போதும், வரைந்து கொடுத்துவிட்ட தன் கட்டிட அமைப்பைக் கொஞ்சமே சிதைத்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக, கட்டிடத்தையே தகர்க்க விரும்பும் போதும் ஏனோ, கொஞ்சம் அதீதமான ஒரு கதாபாத்திரமாகத் தோன்றுகிறது.

ரோர்க்கின் கண்களில் அடுத்தவருக்கான பரிவோ, பாசமோ, ஏன், அடுத்த மனிதர் ஒருவர் எதிரில் இருக்கிறார் என்ற அங்கீகாரமோ கூட இருப்பதில்லை என்கிறான் பீட்டர் கீட்டிங். சக மனிதரை அங்கீகரிக்காத, "நான்" தான் ரோர்க்கின் குணம் என்றால், அதுவும் கொஞ்சம் இடறுகிறது.

"என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டேன்," என்ற ரோர்க்கை விட, அந்த மனிதர்களின் பிரச்சனைகளை அவர்களுக்கே புரியவைக்க உலகத்திற்கெதிராக தனியொருத்தியாக போர் தொடுக்கும் டோமினிக் ஏனோ எனக்குப் பிடித்த பாத்திரமாகிப் போய்விட்டாள். கீட்டிங்கின் தனித்தன்மையற்ற நினைவுகள், சுயநலம், போன்றவற்றை அவனே உணரச் செய்வதிலாகட்டும், தான் வேலை செய்த பத்திரிக்கையின் முதலாளி வையனாண்ட்டுக்கு(Wynand) தனக்கே நம்பிக்கையே இல்லாத விசயங்களைப் பதிப்பித்து பணம் செய்யும் அவருடைய போலித் தன்மையைப் புரியவைப்பதிலாகட்டும், டோமினிக் சரியான போராளியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாள்.

"ஒவ்வொரு மனிதனும் இந்த உலகின் கதாநாயகன். தன்னுடைய மகிழ்ச்சியே அவன் வாழ்க்கையின் காரணம். அவன் படைப்புத் திறனே அவனுடைய மிக உயர்ந்த வேலை;" என்பதே ஆப்ஜக்டிவிசம்(Objectivism) என்ற அயன் ராண்டின் புதிய சித்தாந்தத்தின் கூறு. இந்த சித்தாந்தத்தை முன்னிறுத்துவதாகவே பவுண்டன்ஹெட்டும், அவருடைய மற்ற படைப்புகளும் அமைந்திருக்கின்றன.

தியாகமும் சமூக மகிழ்ச்சியுமே மனிதனின் முக்கிய வாழ்க்கைப் பயன் என்று போதித்து வளர்க்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக் காரணம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது. அடுத்தவருக்கு எந்தப் பிரச்சனையும் உருவாக்காத தனி மனித மகிழ்ச்சியே வாழ்க்கையின் காரணம் என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும், சமூகம் என்பது மனிதர்களின் கூட்டணி என்பதையே மறுக்கும் ஆப்ஜக்டிவிசம் முழுமையாக ஒப்புக் கொள்ளும்படி இல்லை.

படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ரோர்க் போலவோ, டோமினிக் போலவோ ஆகும் ஆசை ஏற்படுவது உண்மை தான். ஏனெனில், கதையில் அடுத்தவரைத் தொல்லை செய்யாத பாத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பவை இவை போன்ற ஆப்ஜக்டிவிச பாத்திரங்கள் மட்டும் தான்.

டூஹி, கீட்டிங் போன்ற அடுத்தவரின் இடத்தைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடிய மனிதர்கள் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்பவன் என்ற முறையிலும் ரோர்க்கின் கதாபாத்திரம் மனம் கவர்வதாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு படித்த நாவல் என்றாலும் ஏதோ ஒரு விதத்தில், ஆப்ஜக்டிவிசக் கூறுகளை ஒப்புக் கொள்ள முடியாமல் போனதால், நிறைவுபெறாத வாசிப்பனுபவமாகவே போய்விட்டது.

Saturday, January 06, 2007

Happy Feet

கடைசியாக நானும் ஹாப்பி பீட் என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்.




அண்டார்டிகா கண்டத்து பெங்குயின்களும், அவற்றின் மீன் தட்டுப்பாடும், மனிதர்கள் பெங்குயின்களின் தட்டுப்பாட்டை உணர்ந்து தமது ஆழ்கடல் மீன் பிடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதும் தான் படத்தின் முக்கிய கதை. கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தெக்கிக் காட்டானின் பதிவைப் பார்க்கலாம்.

பலரும் சொல்லிவிட்டது போல், இசை மிக மிக அழகு. கொள்ளை கொள்ளும் பாடல்கள். அத்துடன் நடனமும்.




முக்கிய விஷயமான ஆழ்கடல் மீன்பிடித்தலைத் தவிர எனக்கு இந்தப் படத்தில் தென்பட்ட சில விசயங்கள்:

  • Disabled Penguin ஆக சித்தரிக்கப் படாமல் Differently Abled Penguin ஆக முன்னிறுத்தப் படும் மம்பிளின் சந்தோசக் குதிப்பு.


  • பெங்குயின் மொழி என்று பிரித்துச் சொல்வதன் மூலம் அது மனிதர்களுக்குப் புரிவதில்லை என்று உண்மை காட்டியிருக்கும் விதமும் அழகு.


  • பெங்குயின் கார்ட்டூன்கள் வழக்கம் போல் அழகு. முக்கியமாக கதாநாயகனைப் பிரித்துக் காட்ட முதுகில் ஒரு வெள்ளை நிறமும், அவனது அம்மாவைப் பிரித்துக் காட்ட மச்சம் வைத்திருந்த விதமும் எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றியது


  • வித்தியாசமான திறமையுள்ள மம்பிளை அதன் கூட்டத்தார் ஏற்காமல் போவது கூட மனித வாழ்க்கைக்கு மிக மிக அருகில் உள்ள விஷயமாக இருக்கிறது.


  • "எல்லாரிடமும் ஒரு நல்ல பக்கம் இருக்கும், அந்தப் பக்கத்தில் அணுகினால், நாம் சொல்வதைக் கேட்க வைக்க முடியும்" என்ற மம்பிளின் அணுகுமுறை இன்னுமொரு அற்புதமான பாடம்.


  • பெங்குயின் பற்றிய புனைவிலும் லவ்லேஸ் போன்ற போலிச் சாமியார்களைச் சேர்த்து மூடநம்பிக்கைகளையும் சாடியுள்ளமை மற்றொரு அழகு


  • Alien என்று பிற கிரக, பிற சூரிய குடும்ப உயிர்களை நாம் அழைத்தால், இதே பூமியில் இருக்கும் ஒரு உயிரினம்/பல உயிரினங்கள், மனிதனையும் alienஆக நினைக்கக் கூடிய அளவில் தான் நாம் நமது சக பூமிவாசிகளை மதிக்கிறோம் என்றும் நிறுவியிருக்கிறார் கதாசிரியர்.


  • உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் "இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்" என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.




  • எப்படியும் படம் பார்த்து முடிக்கும் போது, "ஆக, இப்படி ஏதாவது சந்தோஷக் குதிப்பு, போன்ற வித்தியாசமான செயல்தன்மை இருந்தால் தான் இயற்கையின் எல்லா விலங்குகளையும் உயிரோடு இருக்க விடப் போகிறானா மனிதன்?!" என்ற கேள்வி திரும்பி வரும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது..

    தொடர்புள்ள பதிவு: Happy Feet பற்றிய அஞ்சலியின் பார்வை

    Friday, January 05, 2007

    ஒரு நிமிடக் கதை?

    "டேய்! இது தப்புடா!" பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

    "என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்? எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?" ராம் சீறினான்.

    "மாப்பிள்ளை என்ன சொல்றாரு?" தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.

    "வந்து.." அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்

    "நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!" கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    "இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்" சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.

    ******************
    ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.

    "டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு" அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை

    "அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?" இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.

    "ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?" என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.

    *********

    "என்ன ராம், பொண்ணு எப்படி?"

    பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.

    "எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்.." என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.

    பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.

    "என்ன சொல்றா பொண்ணு?" இராம்குமாரின் தந்தை

    "அது.. வந்து.. " பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.

    "சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா.."

    இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
    "என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?" அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.

    "அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.." என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.

    [பத்து வருடங்களுக்கு முன்னால், குமுதம் ஒரு பக்கக் கதைகள் வகையில் முயற்சித்தது..