Wednesday, September 27, 2006

விடைகள்..... மான்குட்டி..

    அட அடுத்து அக்டோபர் மாதம் புதிர்களுக்கான விடைகள், மற்றும் விளக்கங்கள். இத்துடன் ஐயா ப்ளோரைப் புயல் அவர்கள் அளித்த வெண்பாக்களையும் இங்கே பதிக்கிறேன்..:

  • 1. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?
    முடியாது

    2. அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?
    அதிகபட்சம் - மூன்று
    குறைந்த பட்சம் - ஒன்று

    விளக்கம்:

    படத்தில் உள்ள விவரத்தை வைத்து remainder- கள் 0- 6 வரை வரலாம். இதில் 0 என்றால், ஜனவரி ஒன்று என்ன கிழமையோ, அந்த மாதத்தின் 13 ஆம் தேதியும் இதே கிழமை தான். 1 என்றால் ஜனவரி 1 இல் இருந்து அடுத்த கிழமை. இப்படிப் பார்க்கும் போது, 0-6 வரை எல்லா எண்களும் ஒரு முறையாவது வந்து விடுகிறது. எனவே இதில் வெள்ளிக்கிழமை ஒரு முறையாவது வந்துவிடும். அதே போல் சாதா ஆண்டுகளில் 2 என்னும் எண்ணும், லீப் வருடங்களில் 6 என்னும் எண்ணும், மூன்று முறை வருகின்றன. இந்த வகையில் சாதா ஆண்டுகளில் ஜனவரி 1 புதன் கிழமையாக இருந்தால், 3 13-வெள்ளிகளும், லீப் வருடங்களில் ஜனவரி 1 சனிக் கிழமையாக இருந்தால், மூன்று 13-வெள்ளிகளும் சாத்தியம். எனவே குறைந்த பட்ச எண்ணிக்கை 1, அதிக பட்ச 13 வெள்ளிகளின் எண்ணிக்கை 3

    பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
    அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
    பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
    பதிலாக நிற்கும் பிரிந்து.
    [XIII - X - முடியாது என்பதைக் குறிக்க, III - அதிகபட்சம் 3 வெள்ளிகள் என்பதைக் குறிக்கிறது.]

  • பெருக்குத் தொகை 36 வர வேண்டுமெனில், அதன் factors (தமிழில்? :( )
    1, 2, 18 = 36, 21
    1, 3, 12 = 36, 16
    1, 4, 9 = 36, 14
    1, 6, 6 = 36, 13
    2, 2, 9 = 36, 13
    2, 3, 6 = 36, 12
    3, 3, 4 = 36, 10

    இதில் 13 என்பது பக்கத்து வீட்டு எண்ணாக இருந்தால் மட்டும் தான் குழப்பம் வரவாய்ப்பிருக்கிறது. இதில் முதல் மகள் பள்ளிக்குப் போவதால், மற்ற இரு மகள்கள் தான் இரட்டையர்களாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான விடை 2, 2, 9




  • விடை:

    அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
    அருக்கணுமே மூன்றாய் அவற்றை - வருகும்
    முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
    ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.




  • இந்தத் தேதி ஒரு 3 எண்களின் பெருக்குத் தொகை. அத்துடன் நான்குவிதமான பெருக்கல்கள் மட்டுமே சாத்தியமான ஒரு எண்.
    எனவே விடை 24. இதன் factors:
    1, 2, 12
    1, 3, 8
    1, 4, 6
    2, 2, 6 (இது ஆட்டைக்கு சேர்த்துக் கொள்ளப் பட மாட்டாது. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான மக்கள் இருந்தார்களே!)
    2, 3, 4.

    ராமு கேட்ட கேள்வி = ஒரு குழுவில் ஒரே ஒருவர் இருப்பது சாத்தியமா? என்பதாகும்.

    இல்லை என்று சொன்னவுடன், பதிலான 2,3,4 என்பதைச் சொல்லிவிட்டார்.

    சிவஞானம்ஜி, சிவகுமார், கத்திரிக்காய் ஆகியோர் சொன்ன 30உம் சரிதான்.
    (factors:
    1, 2, 15
    1, 3, 10
    1, 5, 6
    2, 3, 5)
    ஆனால், இந்த மாதம் என்ற சொல்லை இந்தப் புதிரில் சேர்த்ததே கடந்து போன தேதி என்பதைக் குறிக்கத் தான் :)

புதிரில் கலந்து கொண்ட செந்தில் குமரன், ஜயராமன், ராசுக்குட்டி, சிவஞானம்ஜி, சிவகுமார், மனதின் ஓசை, முரட்டுக் காளை, ஆவி, கத்திரிக்காய், ப்ளோரைப் புயலார், உதயகுமார், எல்லாருக்கும் நன்றி :) . போட்டிக்கு சைடில் நின்று பின்னூட்ட ஆதரவு மட்டும் கொடுத்த ராம் மற்றும் ஸ்யாமுக்கு ஹி ஹி.. வேறென்ன, நன்றி தான்:)

சரியா பதில் சொன்னவங்களுக்கு இதோ பரிசு, சர்வீஸ் போய் புதுப் பொலிவுடன் வந்த மான்குட்டியின் போட்டோ:

Tuesday, September 26, 2006

அட! அடுத்தது அக்டோபர் மாதம்..

"அடங்கவே மாட்டியா" என்று கேட்பதற்கு முன்னால், எல்லாக் கிழமையும் ஒரு சுற்று வந்துடுச்சே.. அதான் மாதத்துக்குப் போக வேண்டியதாப் போச்சு.. இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க நினைக்கிறவங்க, கடைசி வரை படியுங்க பார்க்கலாம்:

  • 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வந்தால் அதை நமது ஆவிம்மணிக்குரிய நாளாகக் கருதுகின்றனர் அமெரிக்கர்கள்( ஐரோப்பியர்கள்?). ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா? அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?

  • துப்பறியும் நிபுணர் வேம்பு, ராதிகாவிடம் அவரது குழந்தைகள் பற்றிக் கேட்டார். "எனக்கு அன்னம், ஆதிரை, இனியான்னு மூணு பொண்ணுங்க... அவங்க எல்லார் வயதின் பெருக்குத் தொகை 36. கூட்டுத் தொகையோ, எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டு எண். "

    வேம்பு பக்கத்துவீட்டில் போய் பார்த்துவிட்டு வந்து ராதிகாவிடம், "இன்னும் முழுதாகச் சொல்லவில்லை நீங்கள்" என்றார். "ஓ, மறந்துட்டேன், என் பெரிய பொண்ணு பள்ளிக்குப் போயிருக்கா" என்றாள் ராதிகா.

    "அப்படியானால் சரி" என்றார் வேம்பு. அவர்களது வயது என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

  • அருகில் இருக்கும் படத்திலிருந்து மூன்று தீக்குச்சிகளை எடுத்தபின் ஒரே பரப்பளவிலான மூன்று முக்கோணங்கள் மிஞ்சவேண்டும், அந்த மூன்று முக்கோணங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் இருக்க வேண்டும். முடியுமா?



  • ராமு அவன் டியுசன் வாத்தியார் சரவணனைப் பார்க்க இந்த மாதம் போயிருந்தான். சரவணனுக்கு மிக்க மகிழ்ச்சி, "அட, ராமுவா, வா! வா! ஆச்சரியம் பாரு, இன்னிக்குன்னு பார்த்து என்னோட பழைய மாணவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இப்போ நீ வருவதற்கு முன்னால் கூட மூன்று வேறு மாணவர் குழுக்கள் வந்து போச்சு. அதுல பாரு, ஒவ்வொரு குழுவிலுமிருந்த மாணவர் எண்ணிக்கை வேற வேற. எல்லாக் குழுவின் எண்ணிக்கையையும் சேர்த்துப் பெருக்கினால், அதன் பெருக்குத் தொகை இன்னிக்கு தேதி தான். எங்கே, ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தாங்கன்னு சொல்லு பார்ப்போம்.." என்றார்.

    "இது ஏதடா, இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கே" என்று நினைத்துக் கொண்டாலும் கணக்குப் போடத் தொடங்கினான் ராமு. தேதியைப் பார்த்தபோது, நான்கு வெவ்வேறு பதில்கள் சாத்தியம் என்று தெரிந்தது. சரவணன் சாரிடம் இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்டதற்கு சார் "இல்லை" என்று சொல்லிவிட்டார். இதைச் சொன்னது தான் தாமதம், நம்மாள் பட்டென்று விடை சொல்லிவிட்டான்.

    ராமு சரவணனைப் பார்க்கப் போனது என்ன தேதி? சரவணன் சார் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன? சரவணன் சாரிடம் ராமு கேட்டது என்ன கேள்வி?

[பிற்சேர்க்கை: இந்தப் புதிரில் குழு என்பதை batch என்ற பொருளில் படிக்கவேண்டும்..]


தலைப்புக்கு காரணமா? என்னங்க நீங்க? இன்னுமா அதை மறக்கலை? ;)

அதான் தேதியில் ஆரம்பிச்சி மாசத்துல முடிச்சிருக்கேனே!

என்னருமை மான் குட்டி

'இருசக்கர வாகனத்தை சர்வீஸுக்கு விடப் போகிறேன்' என்று வீட்டில் அறிக்கை விட்டுக் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. இன்று தான் அதற்கு நேரம் வாய்த்தது. வண்டியை விட்டுவிட்டு, அதன் தற்போதைய பிரச்சனைகளை பொறியாளரிடம் சொல்லிவிட்டு ஆட்டோ பிடிக்கையில் ஒரு லேசான தயக்கம். முதல் நாள் குழந்தையை பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டு வரும் அம்மா மாதிரி வண்டியை ஏக்கத்தோடு நான் பார்க்கவும், அந்த மெக்கானிக் என்னைப் பார்த்து "கவலைப்படாம போய்ட்டு வாங்க மேடம்" என்பது போல் தலையசைத்ததைப் பார்த்து என்னிடம் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது.

நினைவு தெரிந்தது முதல், பொருளாதார சுதந்திரத்தைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த என் போக்குவரத்துச் சுதந்திரம். கல்லூரிக் காலங்களில் என்னிடம் ஒரு டி.வி.எஸ் 50 இருந்தது. அம்மா ஆரம்ப காலத்தில் ஓட்டிப் பழக வாங்கிய வண்டி. அதற்கு எங்கள் வீட்டில் வைத்திருந்த பெயர் பூனை. [அம்மாவின் கைனடிக் ஹோண்டா அதன் பருமனான உடலுக்காக யானை என்றும் அப்பாவின் புல்லட் தன் சத்தத்திற்காகவும் அழகுக்காகவும்(?) காண்டா மிருகம் என்றும் அண்ணனின் சுசுகி மாக்ஸ்100R குதிரை என்றும் குறிக்கப் பட்டிருந்தன. வீட்டுக்கு 'உள்ளே' சக மிருகங்களான நாங்களும் இருந்தோம்;)]

என் பூனை மிக சாதுவானது. இரண்டு வருடங்கள் கல்லூரிக்கும், பின்னர் கடைசி ஆறு மாதம் தொழில் முறைப் பயிற்சிக்காக புற நகரிலிருந்து சென்னைக்கு நான் வந்து சென்று கொண்டிருந்த காலத்தில் கிட்டத்தட்ட 50 கி.மீட்டர் தினசரி ஓடி சாதனை படைக்கவும் செய்தது அந்த 1989 வருடத்தைய "நம்ம ஊரு வண்டி..". அந்த நாட்களிலேயே வண்டி ஓட்டுவதில் என் ஆர்வம் கட்டுக்கடங்காததாக இருந்தது என்பதை சமீபத்தைய சில நாட்களாகத் தான் உணர்கிறேன். வீட்டிலோ தோழியரிடையிலோ, ஏதும் சண்டை, சச்சரவு ஏற்படும் காலத்தில் வண்டியை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் ஓட்டினாலே என் கோபம், தாபம் எல்லாம் போன இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுவது உறுதி. வண்டியை ஏதும் மணற்பாங்கான இடத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போது, "சமர்த்தா நிக்கணும் செல்லம், சீக்கிரம் வந்துடுவேன்" என்று சொல்லிச் செல்வதும், வண்டியில் இப்படி தூரங்கள் ஓட்டும் போது அதற்கும் எனக்கும் போரடிக்காமல் இருக்க கதை சொல்லுவதும் என்று வண்டியை என் உடன்பிறவா குடும்ப உறுப்பினராகவே நினைப்பது என் பழக்கம்.

பூனைக்கு முன்னால் என் ஆஸ்தான வாகனம், ஒரு எருமை மாடு - அதாவது, டயர்கள் பருத்த ஹீரோ சைக்கிள் ஒன்று. அந்த சைக்கிள் ஓட்டுவது கொஞ்சம் கஷ்டம். ஆரம்பத்தில் ஏறி மிதித்தால், அப்புறம் கொஞ்சம் வேகமாகப் போகும். எங்கள் கல்லூரிப் பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு கி.மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் ஓடிக் கடக்கும் அந்த சைக்கிள். வெளியூர்களில் வேலை பார்த்துத் திரும்பிய போது, பூனையும் எருமையும் இரண்டையுமே வெளியில் கொடுத்துவிட்டார் அப்பா. மத்திய சென்னையில் இருக்கும் புது வீட்டில் அத்தனை வண்டிகள் நிறுத்த இடமின்மையும் ஒரு காரணம்.

தங்கைக்கு வண்டி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த போது முதன் முதலில் பெண்களுக்கான இரு சக்கர வாகனங்கள் பற்றிய பல உண்மைகள் தெரியவந்தது.

பொதுவாக பெண்களுக்கான இரு சக்கர வாகனங்களில் எதிர்பார்க்கப் படுபவை:
1. அதிகம் கனம் இல்லாமை.- சுலபமாக வண்டி தள்ள முடியவேண்டும்
2. கிக் ஸ்டார்ட் இல்லாத பட்டன் கொண்டு இயக்கும் திறன்
3. முன் பக்கம் கால் வைக்க, குழந்தைகள் நிற்க, காய்கறி வைக்க இடம்.
4. வசதியான இருக்கை.

அதிக தூரம் ஓட்டப் போவதில்லை என்றே முடிவு செய்து அதற்கேற்ற வண்டிகளாக யோசிக்கிறார்களோ?

ஆனால், எங்கள் தேவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது - நல்ல வண்டி, புடவை கட்டினால் ஓட்டக் கூடிய வகையில் முன் பக்கம் பெட்ரோல் டாங்க் இல்லாத வண்டி. அவ்வளவே.

  • கைனடிக் ஹோண்டா, இப்போதைய ஸ்கூட்டி, போல் எல்லா பெண்கள் வண்டி என்று சொல்லப்படும் வண்டிகளிலும் சின்ன டயர்கள் இருப்பது ஏன்?

  • ஆட்டோ கியர் என்று சொல்லி எரிபொருளை தன் விருப்பத்துக்குச் செலவு செய்யும் வண்டிகளையே பெண்கள் வண்டிகள் என்று பிராண்ட் செய்து வைத்திருப்பது ஏன்?

  • பட்டனைத் தட்டினால் ஓடத் தொடங்கும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த விதத்திலும், சில வண்டிகள் பிரச்சனை ஏற்படுத்துகின்றன. எப்போதும் பட்டன் ஸ்டார்ட் என்றாலும் தினம் ஒரு முறை, வாரத்துக்கு ஒரு முறை கிக் ஸ்டார்ட்டும் பண்ணுங்க என்று அறிவுரை சொல்வதோடு, அப்படி வாரம் ஒரு முறை உதைக்கையில் வண்டி தொடங்காமலே காலை ஒரு வழியாக்கிவிடுவது ஏன்?

  • வெயிட் இல்லாத வண்டிகள் என்று சொல்லப்பட்டாலும் கைனடிக் ஹோண்டா, ஹோண்டா ஆக்டிவா போன்ற வண்டிகள், பின்புறம் மட்டும் அதிக கனத்துடன், எரிபொருள் இல்லாமல் மாட்டிக் கொண்டால், நிச்சயம் தனியாளால் தள்ளமுடியாமல் இருப்பது ஏன்?

    இத்தோடு இல்லாமல், சில பெண்கள் வாகனங்களில், அவற்றின் வண்டி பாகங்கள் முதலானவை பிரித்து ரிப்பேர் பார்க்க மிகக் கொடுமையாக இருக்கின்றன. என்னுடைய டீ.வி.எஸ் 50 இல் என்றாவது ஸ்பார்க் பிளக் பிரச்சனை கொடுக்கும் போது நானே கழற்றி ஊதி, துடைத்துப் போட்டுவிடுவேன். அதே, கைனடிக் ஹோண்டாவின் ஸ்பார்க் பிளக்கைக் கண்டுபிடிப்பதே ஒரு பெரிய சாதனைதான்..

    இப்படிப் பல்வேறு காரணங்களை உத்தேசித்து அப்போதைக்கு நாங்கள் வாங்கிய வண்டியின் போட்டோவை இங்கே போட்டிருக்கிறேன்.. இந்த எங்கள் மான்குட்டியைத் தான் இன்று சர்வீஸுக்கு விட்டாச்சு.. எப்படி இருக்கோ என் செல்லம்..? மாலை போய் எடுத்து வரவேண்டும்..

Friday, September 22, 2006

நல்லவேளை! இன்று வெள்ளிக்கிழமை [TGIF]








மதனின் இந்தச் சிரிப்புத் துணுக்குகளும் படங்களும் அனுப்பிய சுதர்சன் கோபாலுக்கு நன்றி!

என் எல்லாப் பதிவுகளும் போல் சிரிப்புப் பதிவிலும் சிறப்பு இட ஒதுக்கீடு - யானையாருக்கு - நன்றி போன வார விகடன்:

Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்





வான் மறைக்கும் மேகக்கூட்டம்
விளக்கடிக்க நிலவுமில்லாத அமாவாசைகள்
சூரியனும் மறைந்து போகும் கிரகணங்கள்...

வானையும் துண்டாடத் தூண்டும் விமானத் தாக்குதல்கள்..

எல்லாம் தாங்கியபடி..


இன்னும் இருக்கிறது ஆகாயம்


[ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஈஈஈஈஸ்!! "கவிதை"ன்னு யாரும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ் :) ]

Tuesday, September 19, 2006

யானையால் யானை காத்தற்று

பொதுவாக எங்கே யானை(ப்படம்) இருந்தாலும் என்னை அழைத்துக் காட்டுவது என் வீட்டினர் வழக்கம், நமக்கு இந்த யானை பூனை எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்குமே அதான்..

அது போலவே, இந்த ஞாயிற்றுக் கிழமை அம்மா என்னை அழைத்து "ஹிந்துவில் பிங்க் யானை போட்டிருக்கான் பாரு" என்று காட்டினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு கண்காட்சிக்காக, யானையை இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் பெயின்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். கண்காட்சி நடக்கும் வரவேற்பறையின் அதே நிறத்திலான இந்த வண்ணங்களுக்கிடையில் யானை மறைந்துவிடுகிறது. "இந்த அறையில் உள்ள யானையை எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையோ அது போல் தான் உலகின் பல்வேறு பெரிய பிரச்சனைகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்கள் வரவேற்பறையே உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்னும் பெரிய உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தத்துவத்தை உணர்த்தத் தான் தாய் என்ற பெயரிலான அந்த இந்திய யானை இப்படி பெயின்டைப் பூசிக் கொண்டு நிற்கிறதாம்!



இதைப் படித்த போது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இருக்கவில்லை. "சுற்றுச் சூழல் பாதுகாப்பை உணர்த்த இவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லையாமா?" என்று அப்போதே அம்மாவைக் கேட்டேன்.



இந்தியாவிலிருந்து ஏற்கனவே புலம் பெயர்ந்து, தனக்கு வசதியான தட்பவெப்ப நிலைகளையும் மலை, காடு முதலிய இயற்கை நண்பர்களையும் விட்டுவிட்டு வேறு கண்டத்துக்குப் போய் அங்கே கட்டுப்பட்டுக் கிடப்பதிலேயே யானைகள் தம் இயல்பையும் சுதந்திரத்தையும் இழந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை என்று சொல்லப்பட்ட செயின்ட் லூயிஸ் மிருகக்காட்சி சாலையில் இருந்த யானைகளே மிகவும் வருத்தமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. கோயில் யானைகளைப் பார்க்கும்போதே அந்த வருத்தம் ஏற்படுவதுண்டு..

இந்த அழகில், 38 வயதான அந்த யானையை நிற்கவைத்து, மக்களுக்கே வெயில் அதிகம் சூடாகத் தெரியும் தட்பவெப்ப நிலையில், என்னதான் ஆபத்தில்லாத வண்ணம் என்று இவர்கள் சொன்னாலும், அந்த வண்ணத்தை அடித்து, அதன் இயல்பில் இல்லாமல் ஒரு இடத்தில் அதிகம் ஆடாமல் நிற்கவைத்து, - கொடுமைப்படுத்துவதை யாரும் கேட்கக் கூட மாட்டார்களா என்று தோன்றியது.

இன்றைய செய்தி படித்த போது ஒரு மகிழ்ச்சி. லாஸ் ஏஞ்சிலீஸின் விலங்கு சேவை நிறுவனத்தின் தலைவரான எட் போக்கின் தலையீட்டால், இன்றோடு, அந்த யானையின் மீது தடவிய பெயின்டை மொத்தமாகக் கழுவி விட்டு, குழந்தைகள் பயன்படுத்து நீர் அடிப்படையிலான வண்ணங்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.


கலர் இல்லாத யானையின் போட்டோவும் காணக் கிடைத்தது.

(ஹோலி விளையாடி விட்டு வந்தவன் மாதிரி காதில் இன்னமும் வண்ணம் இருப்பதைப் பாருங்கள்! )

யானை இருப்பதைக் கண்டுபிடித்த ஒரு பார்வையாளர் சொல்வது போல், "யானைக்கு வண்ணம் கொடுத்ததைப் பற்றித் தவறேதும் இல்லை. ஆனால், அவனிடம்(அந்த யானையிடம்) அதற்குமுன் அவர்கள் வண்ணம் பூச அனுமதி வாங்கவில்லை. அது தான் மிகப் பெரிய தவறு"


மூன்று மாதத்திற்கு முன்னால், அதே ஊரின் மிருகக் காட்சி சாலையில் இருந்த கீதா(பக்கத்தில் உள்ள படம்) இறந்து போனது தான் மக்களையும் "தாய்" மீது கொஞ்சம் அனுதாபப் பார்வை வீசவைத்திருக்கிறது. போகட்டும், ஒரு இழப்புக்குப் பின்னாவது மற்றொரு யானையைக் காப்பாற்றினார்களே!


செய்திகள், படம்: Reuters , People pretty pissed about Banksy's painted pachyderm ,
http://blogging.la/archives/2006/09/nuditai.phtml#comments

Thursday, September 14, 2006

சமையல் - ஒரு குறிப்பு

சமையல் செய்வது ஒரு கலை. எல்லாவற்றையும் போல, நான் இதிலும் அரைகுறை தான். சமையலையும் அதி வேகமாகச் செய்துவிட்டு அப்புறம் டைனிங் டேபிள் மீது வைத்து உப்பு பார்ப்பதில் எனக்கு நிகர் நான் தான்.

அம்மாவிடமும், சமைத்துப் பார் புத்தகங்களுடனும் முட்டி மோதியதை விட, கையில் கிடைத்த எல்லா காயையும், மசாலாக்களையும் போட்டு இஷ்டத்துக்குச் சமைத்துவிட்டுப் பின்னர் சாப்பிட்டுப் பார்த்து பெயர் வைப்பது என் வழக்கமான வழக்கம். இப்படிப்பட்ட என்னைத் தவிர, சமையலைப் பற்றிய சிறுகுறிப்பை, யாரால் நன்றாக எழுத முடியும்? பெண்கள் பொதுவாக சமையல் செய்வது பிறருக்காகத் தான் என்பது காலம் காலமாக நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு வழக்கம். என் அம்மா முதல் என் அறைத் தோழிகள் வரை, தனியாக தனக்காக மட்டும் சமைக்க நேரும் நாட்களில், சமையல் செய்ததை விட இருக்கும் பொடி, ஊறுகாய் வகையறாக்களை வைத்து சமைத்ததாக பேர் பண்ணியது தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.



"ஏம்மா இந்தக் கீரையைக் கூட்டா செய்திருக்க? சாம்பார் வச்சா தானே உனக்குப் பிடிக்கும்" என்றால், "அப்பாவுக்கு இப்படித் தான் பிடிக்கும்டீ" என்பதிலிருந்து, அப்பாவுக்கு, பாட்டிக்கு, "எங்க பம்மிக்கு வெண்டைக்காய் பொறியல் ஆகவே ஆகாது" என்று சொல்லிச் சொல்லி பழக்குவதில், எப்போதும் சமையல் பொறுப்பில் இருக்கும் வீட்டுத் தலைவிக்கும், பிடிக்கக் கூடிய உணவு என்று ஒன்று இருக்கக்கூடும் என்பதும், எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் இல்லத்தலைவியின் உணவுப் பழக்கத்தையும் யாராவது கண்காணிக்க வேண்டும் என்னும் உணர்வோ இல்லாமலே போய்விடுகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் மருமகள், அந்த வீட்டின் அச்சாணி. 'சின்ன மச்சினனுக்கு இது பிடிக்கும்', 'பெரிய மச்சினனின் மகன் மால்டோவாவில் அதிக சக்கரை போட்டுக் கொள்வான்' என்பதில் இருந்து வீட்டின் நாய், பூனை வரை யாருக்கு என்ன வேண்டும் என்று அந்தந்த நேரத்துக்கு எடுத்துக் கொடுப்பவர் அவர். ஓரிரு நாள் தங்கிய எனக்கே காப்பி கொஞ்சம் அதிக கலருடன் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தவர். ரொம்ப சின்ன வயதில் மூளையில் ஏதோ பிரச்சனையாகி, பெயர் தெரியாத ஒரு நோயில், நோயின் அறிகுறிகளே புலப்படாத நிலையில் திடீர் மரணத்தைத் தழுவினார்.

இறந்த பின் பொறுமையாக வந்தன காரணங்கள்.. ஒரு வருடத்துக்கு முன்னேயே, பெங்களூரில் ஏதோ கல்யாணத்தில் கலந்து கொள்ளப் போயிருந்த காலத்தில் மயங்கி விழுந்ததாகவும், சமாளித்து எழுந்துவிட்டதால் வீட்டினரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகவும் மாமியார் சொல்ல, தினசரி காலை உணவே சாப்பிடாமல், மதியம் இரண்டு மணிக்கு மேல் கணவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவது தான் முதல் க்ளாஸ் பச்சைத் தண்ணி என்று மகன் தன் புதுக் கண்டுபிடிப்பைச் சொல்ல, 'எல்லாவற்றுக்கும் காரணம் தானே' என்று அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் வருத்தமாகி கிட்டத் தட்ட தேவதாஸ் நிலைக்குப் போய்விட, இன்று கவனிக்க யாருமில்லாமல், தாயை இழந்த கிட்டத்தட்ட தந்தையையும் இழந்த நிலையில் அவர்கள் மகன்!
இதற்கு யார் காரணம் என்றால், எனக்குத் தெரிந்து அந்தப் பெண் தான். குடும்பத்தைக் கவனிக்கிறேன் என்றால், தன்னைக் கவனிக்காமல் விடுவது என்று சொல்லிக் கொடுத்தவர்களை முதலில் நிற்க வைத்து உதைக்க வேண்டும். பாசத்துக்கும் அன்புக்கும் ஆதாரமே தியாகம் தான் என்று சொல்லும் நம் புராணங்களையும் பழங்கதைகளையும் கூட இன்றைய இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம்.

சாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன? மற்ற நேரங்களை விட, "இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே! பிறருக்காக சமைக்கும் போதும், தனக்குப் பிடித்த, அவர்களுக்குப் பிடிக்காத உணவு வகைகளையும் செய்து, தான் மட்டும் சாப்பிடுவதால் என்ன பாசம் குறையப் போகிறது?

உணவு மட்டுமல்ல, பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இதைப் பொறுத்திப் பார்க்கலாம். குடும்பத்தைப் பேணுவது பெண்ணின் தலையாய கடமை என்றால், தன்னைப் பேணுவதும் அதில் அடக்கம் தான். முதலில் தன்னைப் பார்த்து தன்னை நல்ல படியாக வைத்திருக்கும் பெண் தான் பிறரையும் நல்லபடியாகப் பேணிப் பராமரிக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் தன்னையும் கவனித்துத் தயாராகிப் பிறரையும் கவனிக்கும் போது, இந்த தியாக மனப்பான்மையை ஒத்திவைத்து விட்டு ஓரளவுக்கு திருந்திவிட்ட போதும், உடன் பணி புரியும் ஒரு சில தோழிகளைப் பார்க்கும் போது இது விஷயத்தில் நாம் மாற வேண்டியது இன்னும் மிக மிக அதிகம் என்றே தோன்றுகிறது.

(கோப்புக்காக, நன்றி: தமிழோவியம்)

Tuesday, September 12, 2006

மீண்டும் கோயிந்து

அன்றைய சந்திப்புக்குப் பின் கோயிந்துவைக் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு தலைவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.

பாலபாரதியிடமாவது விசாரிக்கலாம் என்றால், எப்போது பார்த்தாலும் அவரது தொலைபேசி பிஸியாகவே இருந்தது. காரணம் என்னவென்பதை சமீபத்திய வரவணையான் பதிவைப் பார்த்துத் தான் நானும் தெரிந்து கொண்டேன்... 'சரி, இது வேலைக்காவாது' என்று நேரடியாக நேற்று கிளம்பி கோயிந்துவைப் போய்ப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.

நான் போனபோது கோயிந்து கணினியைப் பார்த்தபடி என்னவோ ரொம்ப தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

"என்ன கோயிந்து, வலைபதிவர் சந்திப்புக்குக் கூட வராம அப்படி என்ன வேலை உனக்கு?" என்றேன்.

"அது வந்து பொன்ஸூ, புது டெக்னாலஜி கண்டுபிடிக்க முயற்சி செஞ்சிகிட்டிருக்கேன்.. எஞ்ஜினியர் சொல்லி இருப்பாரே.. "

"ஒண்ணும் சொல்லலியே.. என்ன டெக்னாலஜி அது?"

"இப்போ உன்னோட ரொம்பப் பழைய பதிவெல்லாம் இருக்கில்ல.. அதை
அன்னிக்கி தேதிக்கி பார்க்காம தவறவிட்ட ஆட்கள் இருப்பாங்கல்ல.. அவங்களுக்குக் காட்டணும்னு ஆசப் பட்டன்னு வை.. எப்படி பண்ணுவ?"

"அதான் இப்போ அந்நியலோகத்தின் featured post எல்லாம் இருக்கே.. அதில்
வந்துடுமே.."

"ஆமாம்.. ஆனா அதுல உனக்குத் தேவையான பதிவு வருமா? அந்நியலோகம் பூவா தலையா போட்டு தேர்ந்தெடுத்துக் காட்டுறது தானே!"

"அதுவும் சரிதான்.. அதுனால?"

"அதுக்குத் தான் ஏற்கனவே இருக்கிற பதிவ மக்கள் பார்க்க, திரும்பி பழைய
பதிவ எடுத்து மொத்தமா திருப்பி போடணும்னு தல சொல்லிகினாரு.. அதச் செய்ய புது டெக்னாலஜி கண்டுபிடிச்சிகிட்டிருந்தேன்.. அந்த கேப்ல வலைபதிவர் சந்திப்பு முடிஞ்சிடுச்சு."

"ஆமாம் கோயிந்து, அதுக்கு ஏன் இத்தனை கஷ்டப்படுறே? பேசாம ஒரு
மீள்பதிவு போட்டுற வேண்டியது தானே.. "

"மீள்பதிவா? ஐ.. இதப் பார்றா.. பேரெல்லாம் ஷோக்காத் தான் சொல்ற
பொன்ஸு.. எப்படிப் போடுவ மீள்பதிவு? "

"அட ரொம்ப சுலபம்பா.. உன்னோட பழைய பதிவை எடு. அதை எடிட் மோடில் திறந்துக்க. இப்போ இதுல கீழ ஒரு ஆப்ஷன் இருக்கு பாரு:
Post and Comment Options: அப்டீன்னு






அதைத் திறக்கணும்(அம்புக்குறி மாதிரி இருப்பதைக் க்ளிக் செய்யவும்).. அதுல பதிவுக்கு நேரம் இருக்கும்.




பதிவோட நேரத்தைத் தற்போதைய நேரமாகவோ, இல்லைன்னா,
உன்னுடைய சமீபத்திய பதிவின் நேரத்தை விட அதிக நேரமாகவோ ஆக்கிட்டு, அதை திருப்பி பப்ளிஷ் பண்ணனும்.

உதாரணத்துக்கு உங்காளு இப்போ சமீபத்துல ஒரு மீள்பதிவு போட்டார் இல்லையா.. அந்த அருணா பொண்ணு பத்தி.. அதை முதல் முதல் போட்டது -பிப்ரவரி 08, 2006 தேதி. அந்தப் பதிவை எடுத்துப் பார்த்தால், கீழே அந்தத் தேதி இருக்கும். அதுல அந்தத் தேதியை மாத்தி இன்னிக்கி தேதி வச்சிட்டு பப்ளிஷ் பண்ணியிருந்தார்னா, அந்தப் பதிவு புதுப் பதிவா ஆகி இருக்கும். இது தான் மீள்பதிவு"

"நீ சுளுவா சொல்லிக்கின.. இப்போ அப்படி எல்லாம் செஞ்சா பழைய பதிவு இருக்குமா? இருக்காதா?"

"பழைய பதிவு தான் புதுப் பதிவாகிடுச்சே.. அந்தத் தேதியில் இந்தப் பதிவு இருக்காது.. "

"அப்போ முத மொற போட்டப்போ நாலு பேர் பின்னூட்டம் போட்டிருப்பாங்க இல்ல? அந்த பின்னூட்டமெல்லாம் தொலஞ்சி பூடுமே.. அதை எல்லாம் என்ன மறந்துடச் சொல்றியா?"

"இல்ல கோயிந்து.. அந்தப் பின்னூட்டம் எல்லாம் உன்னோட புதுப் பதிவில
வந்திருக்கும். ஆக, புதுப் பதிவு வரும்போதே அந்தப் பின்னூட்டங்களோட
வரும்.. மக்கள் குழம்பாம இருக்க, மீள்பதிவுன்னு சொல்றது நல்லது.."

"சரி சரி.. ஏதாவது சொல்லச் சொன்னா போதுமே. பெரிய சாமியார் ரேஞ்சுக்கு
கடைசில நீதி சொல்லாம முடிக்கத் தெரியாதே உனக்கு.. மீள் பதிவுன்னு
எழுதுறாங்களாம்!! ரொம்பத் தான் படம் போடுறம்மணி.. சரி, இந்தப் படம்
போடுறதப் பத்தி சொல்றேன் சொல்றேன்னு சொல்லியே ஒரு மாசம் ஓட்டிட்டயே, அதுபத்தி சொல்லப் போறியா இல்லையா?"

"படம் போடுறது பத்தி என்ன?"

"பதிவுல படம் எப்படிப் போடுறது?"

"பதிவுல படம் போடுறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு, ப்ளாக்கரிலேயே
படத்தை ஏத்திட்டு, பதிவுல போடணும். இன்னும் ஒரு வழி, ப்ளாக்கர் அல்லாத வேற இடங்களில் படத்தை வலையேத்திட்டு, அதை லிங்க் எடுத்து ப்ளாக்கரில் கொடுத்திடணும்.."

"எங்க வலையேத்தலாம்னு சொல்ற?"

"இப்போ photobucket.com, flickr.com என்று பல்வேறு சைட் இருக்கே எதுக்குன்னு.. அதுல எதுலயாவது ஏத்திடவேண்டியது தான். இதெல்லாம் வேண்டாம்னா, இங்கே இன்னும் நிறைய படம் வழங்கி சேவைகளின் பெயர்கள் இருக்கு. இதில் படத்தை வலையேற்றும் போது உனக்கு ஒரு உரல் (லிங்க்) கிடைக்கும்."

"இந்த உரலை எங்க கொடுக்கணும்?"

"புதுப் பதிவு போடும்போது இதோ இந்த இடத்தில் இருக்கும் படம் மாதிரியான சின்ன பொத்தானைத் (ஐகான்) தட்டி அதுல கொடுக்க வேண்டியது தான்.. ரொம்ப சுலபம்.."





"ம்ம்.. ஆனா, சிலசமயம் இந்த ஐகானைத் தட்டி கொட்டிப் போட்டாலும் வராம இருக்கே, அப்போ என்ன செய்யுறது.. ?"

"இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் HTML தெரிஞ்சால், இதைச் செய்யலாம்.. படத்தை வலையேற்றிய பின், அதை எடுத்துப் பயன் படுத்த இந்த 'img' டேக்கை பயன்படுத்தலாம். கீழே இருக்கும் கோட் மொத்தமும் பயன்படுத்தி இந்தப் படத்தை உங்க பக்கத்தில் சேர்க்கலாம் :





இதில் படத்திற்கான உரலை மட்டும் மாற்ற வேண்டும்.. அவ்வளவு தான்.. ரொம்ப சுலபம்.. "

"அது சரி.. எனக்கென்னவோ இதை விட சுலபமான வழிமுறை இருக்குன்னு
தோணுது.. அம்மணி வழக்கம்போல தலையச் சுத்தி மூக்கைத் தொடுறீங்க..
இருக்கட்டும்.. யாராவது இன்னும் சுலபவழி சொல்லி அந்த மூக்கை உடைக்கிறாங்களா இல்லையான்னு பார்த்திடலாம்.. "

"சரி.. மத்த கேள்வியெல்லாம் ஒரு நாள் கேட்டியே, அதுக்கெல்லாம் பதில்
சொல்லவா?"

"ஆமாம்.. நீ ஒரு மாமாங்கம் கழிச்சி சொல்லுவ. அதுவரை எங்களுக்குத்
தெரியாதுன்னா நினைச்சிகிட்டிருக்க?"

"அப்போ தெரியுமா? நான் கிளம்பவா?"

"அட, இரு அம்மணி, எங்க தப்பிக்கிற? சொல்லு சொல்லு, நீ கத்துகிட்டு வந்தது சரியா இல்லையான்னு நான் செக் பண்ணனும் இல்ல?"

என் நிலைமையை நொந்து கொண்டு பதில் சொல்லத் தொடங்கினேன்..

[இந்தத் தொடரின் பழைய பகுதிகள் : 1 2 3 ]

பிற்சேர்க்கை: படம் போடுவதற்கு இன்னும் சுலபமான வழியை ரவி சொல்லி இருக்கிறார் இங்கே

தொடரும்

ராமைய்யாவின் குடிசை - என் பார்வையில்

The Roots நிறுவனத்தினரின், பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ஆவணப்படமான ராமைய்யாவின் குடிசையைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.

1968இல் நிகழ்ந்த கீழ்வெண்மணி கிராமத்தின் வர்க்கப் போராட்டங்களைப் பற்றிய இந்த ஆவணப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைத் தேடிப் பிடித்து அவர்களுடைய பார்வையில் சம்பவத்தை விவரிக்கும் நேர்த்தியும், கீழ்வெண்மணி சம்பவத்தில் இறந்து போனவர்களின் உறவினர்களைக் கண்டுபிடித்து அவர்களது நோக்கில் சொல்லப்பட்டிருப்பதும் மிகவும் நல்ல குறும்படமாக அமைகிறது.

30% நிலங்கள் 5% ஆட்களிடமே இருந்த நிலையில் வர்க்க ஏற்றத் தாழ்வுகளும் சாதிய அடக்குமுறைகளும் கைகோர்த்ததால் நிலவிய அடக்குமுறைகளைச் சொல்லியபடித் தொடங்குகிறது படம். பின்னர், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கிவைத்த பி.சீனிவாச ராவின் வருகை, 1968 இல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட "தஞ்சாவூர் பணியாளர் பாதுகாப்பு சட்டம்" மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களும், தினக்கூலி முறையும் அமலுக்கு வந்தது, ஒப்புக் கொண்ட கூலியைச் சரியாகக் கொடுக்காமல் நிலக்கிழார்கள் ஏமாற்றியது, விவசாயத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிர்ப்பாக நிலக்கிழார்கள் உருவாக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம், அரசாங்க சட்டத்தை மீறி உள்ளூர் ஆட்கள் இருக்கையிலேயே வெளியூர் ஆட்களை வேலைக்கமர்த்திய நிலக்கிழார்களை ஆதரித்து பாதுகாப்பு வேறு கொடுத்த போலீஸ் மற்றும் அரசின் பாரபட்சம், இந்த நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து உள்ளூர் தொழிலாளிகளை அமர்த்திய இரண்டு நிலக்கிழார்கள் கொலையுண்டது, விவசாயத் தொழிலாளர் சிக்கல் பக்கிரிசாமி கொலை என்று கீழ்வெண்மணி சம்பவத்தை நோக்கிய அனைத்து நிகழ்வுகளையும் காரணங்களையும் வரிசையாக அடுக்குகிறது ஆவணப்படம்.

கீழ்வெண்மணிக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல், அதன் பின் ராமைய்யாவின் குடிசை எரிக்கப்பட்ட நிகழ்வு. இறந்து போனது எத்தனை என்று கணக்கிடும் முன்பே 29 பேர் என்று தோராயமாகச் சொல்லிவிட்டு கேசை மூட முயன்ற போலீஸின் மெத்தனம்; சம்பவத்தைப் பற்றிய வழக்குகள், அவற்றிலிருந்து நிலக்கிழார்கள் மட்டும் வசதியாக பொய்சாட்சிகளின் மூலம் தப்பித்தது; இதன் பின் பத்து வருடங்களுக்குப் பின் இந்த நிகழ்வுகளுக்குக் காரணமான, சட்டத்தின் ஓட்டைகளில் தப்பிப் பிழைத்த கோயிந்தசாமி நாயிடு கொலையுண்டது என்று கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றிய முழுமையான ஆவணமாகத் தான் படம் காட்சியளிக்கிறது.

சம்பவங்கள் சொல்லப்பட்ட விதமும் அதைப் பதிவு செய்த நேர்த்தியும் மிக நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் படம் என்ற தோற்றத்தைக் குறைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கிய நிலக்கிழார்களின் உறவினர்களையும் பேட்டி கண்டிருப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஆவணப்படத்துக்கு மேலும் அழுத்தமும் அழகும் சேர்க்கிறது, பின்னணி இசை (இசை: இரா. ப்ரபாகர்)

படத்தில் எனக்குத் தெரிந்த சில குறைகள்:

1. தீக்கதிர் தவிர மற்ற பத்திரிக்கைகளைப் பற்றிச் சொல்லாமலேயே விட்டதால் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார படம் போன்ற ஒரு எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

2. நாயுடு இறந்ததைப் பற்றிய விவரங்களை அத்தனை தெளிவாகச் சொல்லாமல் விட்டதன் மூலமும் அதை நியாயப்படுத்துவதும் அதிகம் ஒட்டவில்லை.

3. எல்லாருக்குமே சப் டைட்டில்கள் போட்டிருக்கலாம்.. ஒரு சிலருக்கு மட்டும் போட்டுவிட்டது அந்தத் தமிழ்வழக்கு புரியாததால், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

எங்கேயோ இருக்கும் போபாலிலும், எப்போதோ நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகளையும் தெரிந்த எனக்கு, என் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்று ஒரு கிராமம் இருப்பதும், அங்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் தெரியாமல் போன அவலம் தான் படம் பார்த்ததும் முதலில் உறைத்த விஷயம். கொஞ்சம் பழைய ஜெய்சங்கர், சிவாஜி படங்களில் இப்படிப்பட்ட வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும், இந்தச் சம்பவங்களைப் பற்றிய புனைவுகளும் பார்த்திருந்தாலும், "சும்மா சோகத்தைப் பிழிவதற்காக இப்படியான காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள், இப்படி கூலித் தொழிலாளிகளை ஏமாற்றுவது எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை" என்று நினைத்து இம்மாதிரியான விஷயங்களைத் தாண்டிச் சென்றுவிடும் என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் போன்ற ஆவணப் படங்கள் தான் வரலாற்றையும் யதார்த்தத்தையும் உணர்த்துவதாக உள்ளன.

[ஆவணப்படத்தைப் பார்க்கத் தூண்டிய தொடர்புடைய விளக்கமான பதிவு இங்கே]

Monday, September 11, 2006

ஜில்லென்று 1 கல்யாணம்..

பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் "பூவே பூவே" என்று பாடிக் கொண்டு வந்த காலத்திலிருந்து எனக்கு ஜோதிகா பிடிக்கும்..

காக்க காக்க பார்த்ததிலிருந்து சூர்யாவும்..

திருமண அறிவிப்புக்கே பதிவு போட விரும்பினேன், ஆனால், கௌதமும், முத்துகுமரனும் முந்திவிட்டனர்..

இப்போ கல்யாணம் முடிந்துவிட்டது.. மண நாளுக்கு என் பதிவில் வாழ்த்துக்களுடன்..

திருமண புகைப்படங்களும்!!

















வாழ்த்துக்கள் ஜோ..

படங்களுக்கு நன்றி சென்னைப்பட்டணம் சீனு.

9/11

செப்டம்பர் 11, 2002


"மறக்கமுடியாததை நினைவுப்படுத்துவதற்கு ஆண்டுவிழாக்கள் தேவையில்லை. எனவே பயங்கரமான
நினைவுகள் நிரம்பிய இந்த செப்டம்பர் மாதத்தில், இன்று நான் அமெரிக்க மண்ணில்
நிற்பது ஒரு தற்செயல் நிகழ்வே! இத்தருணத்தில் எல்லாருடைய சிந்தனையிலும் , குறிப்பாக
அமெரிக்கர்களின் சிந்தனையில் மிகுந்திருப்பது ஒன்பது பதினொன்று என்று அறியப்படுகிற
அந்த நாளின் கொடூரம் தான். பயங்கரவாத தாக்குதலில் ஏறக்குறைய மூவாயிரம் குடிமக்கள்
உயிரிழந்த நாள் அது. அந்தத் துயரம் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கோபம்
இன்றும் கூர்மையாக உள்ளது. கண்ணீர்த் துளிகள் காயவில்லை. ஒரு விசித்திரமான,
விபரீதமான போர் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும் தான் நேசித்தவரை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஆழமாக ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். எந்தவொரு
போரும், எந்தவொரு பழிவாங்கும் செயலும், தரையோடு ஒட்டி எறியப்படும் கிரிக்கெட்
பந்துகளைப் போல் எத்தனை குண்டுகளை வேறொருவரின் நேசிப்புக்குரியவர்கள் மீதோ,
குழந்தைகள் மீதோ எறிந்தாலும், அவர்களின் இழப்பின் வலியை மட்டுப்படுத்தாது. அவர்கள்
நேசித்தவர்களின் உயிர்களை மீட்டுத் தராது. இறந்தவர்களுக்காக ஒரு போரினால் பழிவாங்க முடியாது. போர்
அவர்களைப் பற்றிய நினைவுகளின் புனிதத்தைக் கெடுக்கிறது.


செப்டம்பர்
11க்குப் பிறகுதான் அந்தத் தேதியின் அர்த்தம் என்ன என்பதை நாம் நினைத்துப்
பார்க்கிறோம். கடந்த வருடம் அதே தேதியில் நேசத்துக்குரியவர்களை இழந்த
அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி, உலகின் மற்ற பகுதியில் வாழ்பவர்களுக்குக் கூட
செப்டம்பர் 11 நீண்டகாலமாகவே முக்கியமான தேதியாக இருந்து வந்துள்ளது.

இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் அதாவது 1973 செப்டம்பர் 11 அன்று சிலி
நாட்டில், ஜெனரல் பினோசே, சி.ஐ.ஏ.வின் ஆதரவுடனான ராணுவ சூழ்ச்சி மூலம் ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அலெண்டே அரசாங்கத்தினைத் தூக்கி எறிந்தார்.
இராணுவ சதி முடிந்தபின் ஜனாதிபதி மாளிகைக்குள் சால்வடோர் அலெண்டேயின் சடலம்
கிடந்தது. அது தற்கொலையா கொலையா என்பது நமக்குத் தெரியாது. அதன்பின் வந்த பயங்கரவாத
ஆட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் "மறைந்து போயினர்".
துப்பாக்கிப் படையினர் பகிரங்கப் படுகொலைகளைச் செய்தனர். நள்ளிரவில் தட்டப்படும்
கதவுகள், "மறைந்துபோகும்" மனிதர்கள், திடீர்க்கைதுகள், சித்ரவதைகள் என்று பதினேழு
வருடங்கள் பீதியுடனே வாழ்ந்தனர் அந்நாட்டு மக்கள்.

தென் அமெரிக்கப்
பிரதேசத்தில் அமெரிக்காவின் தனி கவனிப்புக்கு உள்ளானது சிலி மட்டுமல்ல என்பது
வருத்தமான விஷயம். குவாட்டிமாலா, கோஸ்டா ரிகா, ஈக்வெடார், பிரேசில், பெரு,
டொமினிகன் குடியரசு, பொலிவியா, நிகராகுவா, ஹோண்டுராஸ், பனாமா, எல்.சால்வடோர்,
மெக்சிகோ, கொலம்பியா - இந்நாடுகள் அனைத்துமே சி.ஐ.ஏவின் ரகசிய - சில இடங்களில்
நேரடியான - நடவடிக்கைகளுக்கான விளையாட்டுத் திடலாக இருந்து வந்துள்ளன. அமெரிக்க
ராணுவத் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட வியட்னாம், கொரியா, இந்தோனேசியா, லாவோஸ்,
கம்போடியா போன்ற நாடுகளில் எத்தனை செப்டம்பர் மாதங்களில் எத்தனை பத்தாண்டுகளாய்ப்
பல லட்சக்கணக்கான ஆசியர்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகினர்? எரிக்கப்பட்டனர்? படுகொலை
செய்யப்பட்டனர்?

நூறாயிரக்கணக்கான சாதாரண ஜாப்பானியர்களைப் பலிகொண்ட
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நடந்த 1945 ஆகஸ்டுக்குப் பின் எத்தனை
செப்டம்பர்கள் கடந்து சென்றிருக்கின்றன! அந்த அணுகுண்டு தாக்குதல்களில் மடியாமல்
உயிர்பிழைத்த ஆயிரக்கணக்கான ஜப்பானியர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்,
குழந்தைகளின் குழந்தைகளும் ஜப்பானிய மண்ணும், வானமும், காற்றும், நீரும்,
நிற்பவையும், நடப்பவையும், பறப்பவையும் எத்தனை செப்டம்பர்களாக நரகவாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கின்றன?

செப்டம்பர் 11, 1922 தான் பிரிட்டிஷ் அரசாங்கம்
அரேபியர்களின் ஆவேச ஆட்சேபணைகளை மீறி பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களின் நாட்டை
உருவாக்கும் ஆணையைப் பிறப்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக 1948இல் பாலஸ்தீனியம் என்ற
நாடே இல்லாமற் போனது. அகதிகளாக்கப் பட்ட நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின்
சிந்தனையிலும் உணர்விலும் மட்டுமே அது நாடாக இருந்தது. வரலாற்றில் வேறெந்த
இனத்தையும் விட அதிகம் கொடுமைக்குள்ளானவர்களான யூத மக்களுக்கு அவர்களால்
தூக்கியெறியப்பட்ட பாலஸ்தீனியர்களின் பரிதாப நிலையையும் ஏக்கங்களையும் புரிந்து
கொள்ள இயலாதா? எப்போதுமே மிதமிஞ்சிய துன்பங்கள் மனிதனுக்குள் கொடூரத் தன்மையைத்
தூண்டிவிடுகின்றனவா? அப்படியென்றால், மனித இனத்துக்கு மிஞ்சியிருக்கும் நம்பிக்கை
தான் என்ன? போரில் வெற்றி பெறும் பட்சத்தில் பாலஸ்தீனியர்களுக்கு என்ன ஆகும்?
நாடில்லாத தேசிய இனம் ஒரு நாட்டைப் பிரகடனம் செய்தால் அது எத்தகைய அரசாக இருக்கும்?
ஒரு கொடியின் கீழ் எத்தகைய கொடூரங்கள் அரங்கேறும்?

மேற்காசியாவின் வேறு
பகுதியில் கூட செப்டம்பர் 11 சமீப கால நினைவுகளை எழுப்புகிறது. 1990 ஆம் ஆண்டு இதே
தேதியில் தான் அன்றைய அமெரிக்க அதிபரான சீனியர் ஜார்ஜ் புஷ் தன் அரசாங்கம்
ஈராக்கின் மீது போர் தொடுக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தின்
கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். ஈராக் அதிபர் சதாம் உசேன் கொடூரமான இராணுவ
சர்வாதிகாரி என்று அமெரிக்கா கூறுவதும் ஏறக்குறைய துல்லியமான விமர்சனம் தான்.
ஆனால், சதாம் உசேன் மோசமான அட்டூழியங்கள் செய்து வந்த காலத்தில் தான் அமெரிக்க,
பிரிட்டிஷ் அரசாங்கங்கள் அவருக்கு நெருங்கிய கூட்டாளிகளாக இருந்திருக்கின்றன.
வியட்னாம் யுத்தத்துக்குப் பின் உலகிலேயே நீண்ட காலமாக அமெரிக்க விமானத்
தாக்குதலைச் சந்தித்த நாடு ஈராக்தான். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க, பிரிட்டீஷ்
படைகள் ஈராக்கின் நிலப்பரப்புகள், வயல்வெளிகள் மீது 300 டன் எடை கொண்ட உள்ளீடற்ற
யுரேனியத்தினாலான கதிரியக்கத் திறனுள்ள ஆயுதங்களை பொழிந்துள்ளன.

"இப்புவியிலேயே மிக அமைதியான நாடு" என்று ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா
கடந்த ஐம்பது ஆண்டுகலாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வொரு வருடமும் போர் புரிந்து
கொண்டே இருக்கிறது. "


--நன்றி : செப்டம்பர் நினைவுகள், அருந்ததி ராய்

பாரதி புத்தகாலயம் வெளியீடான இந்தப் புத்தகத்தைத் தற்செயலாக இந்த வருட செப்டம்பரில் படிக்க நேர்ந்தது. நான்கு வருடங்கள் கடந்த பின்னரும் இந்தச் சொற்பொழிவின் பல பகுதிகள் இன்றும் உண்மையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதனை வாசித்திருந்தால் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சமீபத்தில் அமெரிக்காவில் இருந்த காலகட்டத்தில் பிடில் காஸ்ட்ரோவின் உடல்நிலையைப் பற்றிய செய்தியறிக்கை என்ற பெயரில் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், மெக்ஸிகோவே விழாக்கோலம் பூண்டிருப்பதாகவும் அறிவித்த அதீத வெறுப்பைக் காட்டும் செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்ததும் இஸ்ரேல்-லெபனான் போரைப் பற்றிய சி.என்.என் செய்திகளும் இந்தச் சொற்பொழிவின் பல பகுதிகள் உண்மை என்றே உறுதி செய்கின்றன.

Saturday, September 09, 2006

தேவைகள்

வெளியில் நன்கு இருட்டிவிட்டது. மாதக் கடைசி நாள் ஆதலால், கணக்கைச் சரி பார்த்து லெட்ஜரை மூடிவிட்டு எழுந்தாள் ராஜி. 8 மணி ஆக பத்து நிமிடம் இன்னும் உள்ளது என்றது சுவர்க் கடிகாரம். பாலு வந்திருப்பான். வீட்டுக்கு ஓட வேண்டும்.


நேற்று முழுவதும் மேனேஜர் ரத்னசாமி "ராஜி மேடம் மாதிரி வருமா. அவங்க சுறுசுறுப்பென்ன, வேலைல ஒழுங்கென்ன" என்று இனிக்க இனிக்க பேசியது எதற்கு என்று, இன்று இந்தக் கணக்குகளுக்கிடையில் தனியே விட்டு விட்டு, "மனைவியை ஷாப்பிங் செல்ல அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போன போது தான் புரிந்தது.

கிளம்பலாம் என்று பையை எடுக்கும் போது அருகிலிருந்த தொலைபேசி அடித்தது. எடுத்தாள், பயந்து கொண்டே.

"அம்மா, என்னம்மா, இன்னிக்கு கிரிக்கெட் பேட் வாங்கப் போகலாம்னு சொல்லி இருந்தியே.. மறந்தாச்சா?" பாலுவின் குரலில் வழக்கத்தை விட அதிக கோபம் தெரிந்தது.

"இல்லைடா கண்ணா, இன்னிக்கு புக் க்ளோஸிங் இல்லையா.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இதோ இன்னோரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். போய் பேட் வாங்கலாம். சரியா?"

"பேட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இன்னிக்கு எவன் இந்நேரத்துக்கு மேல கடை திறந்து வச்சிருப்பான்.. எல்லாம் நீயே வச்சிக்கோ.. எப்போ பார்த்தாலும் பாங்க்.. வேலை.. என்னை எல்லாம் நினைவிருந்தால் தானே?!!"

"அப்படி இல்லைமா பாலு" அதற்குள் எதிர்முனையில் பட்டென தொலை பேசி வைக்கப் பட்டது. ம்ஹும். இந்தக் கோபம் குறையாது. இன்றைக்கு பூரா தொடரும்.. நாளைக்கும்.. அடுத்த நாளைக்கும் கூட.. அப்பா இல்லாத பையன் என்று செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது. பத்து வயதில் எத்தனை கோபம்?, ஆத்திரம், எல்லாம்?!!

மெல்ல கை நீட்டி தொலை பேசி ரிசீவரை வைத்தாள். வைப்பதற்காகவே காத்திருந்தது போல் மீண்டும் அடித்தது. இந்த முறை பேசியது மோகன்.

"இன்னும் கிளம்பலியா? நேரமாகுமா?"

"கிளம்பிட்டேன் மோகன், எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"ஆமாம். உங்க வீட்டுக்கு இப்போ தான் வந்தேன்.. புக் க்ளோஸிங், லேட் ஆகிடுச்சுன்னு பாலு சொன்னான். அதான் கூப்பிட்டேன். நேரம் ஆகுமா? தனியா வந்திடுவீங்களான்னு கேட்கத் தான் உடனே திருப்பி போன் பண்ணினேன்"

"இல்லைப்பா, கிளம்பிட்டேன். நானே வந்திருவேன். "

"சரி, வாங்க. நானும் பாலுவும் வெளியே போகிறோம். சாவி இருக்கு இல்லையா?"

"ம்ம்.. இருக்கு. "

"சரி, அப்போ பார்க்கலாம்.. வைக்கிறேன். "

"ம்ம்..." போனை மீண்டும் வைக்க இருந்தவள், மீண்டும் அழைத்தாள் "மோகன்.. "

"சொல்லுங்க ராஜி,"

"ரொம்ப தாங்க்ஸ்"

"அட, இதிலென்ன இருக்கு.. "

மோகன் ஒரு அருமையான நண்பன். ராஜியின் அதிகம் பயனில்லாத குறுகிய திருமண வாழ்வில் கிடைத்த ஒரே நல்ல விஷயம் மோகனின் நட்பு.
யோசனைகள் அலைக்கழித்தாலும் ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வெளியில் வந்து வண்டியை எடுத்தாள்.

*************

வீட்டுக்கு வந்த போது மோகனும் பாலுவும் திரும்பி இருந்தனர். பாலுவின் கையில் ஒரு புதிய கிரிக்கெட் பேட். பந்து வேறே.. இருட்டில் வெளியில் விளையாட இடமில்லாமல் மோகனும் பாலுவுமே வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

"அம்மா.. இங்க பத்தியா, பேட்... அங்கிள் வாங்கிக் கொடுத்தாரு.. " என்றபடி ஓடி வந்த மகனின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்த ராஜியின் முகமும் நன்றியால் நிறைந்தது.

ராஜி நன்றி சொல்வதற்குள், மோகன் கிளம்பிவிட்டான்.

"நேரமாயிடுச்சு.. நீங்க இந்நேரத்துக்குப் பிறகு வந்து சமைக்க முடியுமான்னு தெரியலை. அதான்.. டிபன் வாங்கி வச்சிருக்கேன்.. கை கால் கழுவிட்டு சாப்பிடுங்க.." என்றபடி கிளம்பிப் போன அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் ராஜி புன்னகைத்தாள்.

************

அன்று ராஜி வீட்டுக்கு வந்த போது அவள் மாமியார் அமர்ந்திருந்தாள். மடியில் அவள் பேரன், பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருக்கும் பலகாரத்தைச் சாப்பிட்டபடி.

"ஏம்மா ராஜி, வாரத்துக்கு ஒரு முறை பிள்ளைய கூட்டி வந்து காட்டுறேன்னு சொல்லித் தானே தனியா போனே.. இப்போ ஒரு மாசமாச்சு பிள்ளையப் பார்க்காம என் கண்ணு ரெண்டு பூத்து போச்சு.. "

"இல்லத்தே.. ரொம்ப வேலை.. அதான்.. " என்றபடி உள்ளே சென்று காபி கலக்கத் தொடங்கினாள் ராஜி.

காபி, டிபன் முடிக்கும் வரை அத்தை பையனை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தாள்.. "வீட்ல அண்ணன், அண்ணி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்.. அவங்களுக்கென்ன.. அவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.."

"என்னத்தே அலுத்துக்குறீங்க.. என்னாச்சு, உங்களுக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா?"

"எனக்கு என்னம்மா.. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது.. என்னிக்கு கட்டையச் சாய்க்கப் போறேன்னு தெரியலை.. பார்ப்போம்.. "

"என்ன அத்தை அதுக்குள்ள அப்படிச் சொல்லிட்டீங்க.. உங்களுக்கு அப்படி என்ன வயசாய்டுச்சு?" என்று சொல்வதற்குள் ராஜிக்கு ஒரே திணறல் தான்.. என்ன வேண்டும் என்று நேரடியாகச் சொல்லவேண்டியது தானே. இதென்ன, பூடகமாக பேசிக் கொண்டு..

"ம்ம்.. நீ இப்படி சொல்ற.. ஆனா ஆண்டவன் வேற மாதிரி இல்ல எழுதி இருக்கான்.. "

"ஏதாச்சும் பிரச்சனையா அத்தை?"

"ரெண்டு நாள் முந்தி நம்ம தனத்தைப் பொண்ணு பார்க்க வந்தாங்க.. அதுல பாரு.. பார்க்க வந்தவங்க பெரிய இடம்.. " என்று அத்தை தொடங்கவும், ராஜிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.. இன்னும் அரை மணி நேரம் போல் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக் கதையைப் பேசிவிட்டு, மெல்ல விஷயத்துக்கு வந்தார் அத்தை..

விஷயம் சின்னது தான். அத்தைக்கு காலில் ஏதோ அடி. அதற்கு வைத்தியம் பார்த்த டாக்டர், ஒரு முழு செக்கப்பும் செய்து கொள்ளச் சொல்லி அறிவுருத்த, அதற்கு முதல் மகன் முடியாது என்று சொல்லி இருக்கிறான். "போய் உன் சின்ன மருமகளைக் கேளேன்" என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட, அத்தை இங்கே வந்துவிட்டாள்..

நேரடியாக, செக்கப்புக்குப் பணம் கொடு என்று சொல்லி இருந்தால், இந்தா என்று எடுத்துத் தந்து விடலாம். ஒரு அரை மணி பேசி, நீட்டி முழக்கி இறுதியில் கேட்டதாகவே இல்லாமல் கேட்கும் விதத்தில் ராஜிக்கு அலுப்பு தட்டிவிட்டது.

"இந்தாங்க அத்தை " என்று அவள் செக் கிழித்துத் தரும் வரை அத்தை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

*************

"ராஜி, இங்க கொஞ்சம் வாயேன்.. ஏதேதோ கேட்குறாங்கம்மா நீ கொடுத்த செக்கைப் பத்தி" என்று தொலை பேசி அழைப்பு வந்த போது ராஜி மிக முக்கியமான ஒரு கோப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எங்கேர்ந்து அத்தை பேசுறீங்க?"

"ம்ம்.. இங்க தான்.. ஆஸ்பத்திரிலேர்ந்து பேசுறேன் கண்ணு.. என்ன ஆசுபத்திரிடீ இது.. ?"

"இந்திரா ஹாஸ்பிடல், அடையார்னு சொல்லுங்கத்தே.. " அண்ணியின் குரல் கேட்டது

"அத்தை.. நான் இப்போ ரொம்ப முக்கியமான வேலைல இருக்கேன். ஒரு அரை மணி அங்கயே காத்திருக்கீங்களா.. வந்து பார்க்கிறேன்?"

"அரை மணியா?!! அதெல்லாம் முடியாது.. என்ன பெரிய கலெக்டர் உத்யோகமா பார்க்குற.. உடனே கிளம்பி வாம்மா.. இப்படி செல்லாத செக்கைக் கொடுத்து ஏமாத்த பார்க்குறியா!!"

"சரி வரேன்.. " சத்தம் அதிகமானால், ஆஸ்பத்திரி முழுவதும் அத்தையைப் பார்க்கத் தொடங்கிவிடும் என்பதாலும் அந்த மாதிரி சூழ்நிலையில் தான் சென்றால் இன்னும் திரும்பக் கூடிய முகங்களையும் நினைத்தபடி ராஜி மேனஜரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது, மேனஜரின் குரலில் சுத்தமாக இணக்கமில்லை.

"ராஜி மேடம் எப்பவும் இப்படித் தான்.. வேலையில் முழு கவனம் இல்லவே இல்லை" என்று அவர் அக்கவுண்டன்டிடம் சொன்னது தேய்ந்த ஒலியில் கேட்டது..

போக்குவரத்துப் பிரச்சனையால் பத்து நிமிடம் அதிகமாகிப் போய்விட, அத்தை கத்திய கத்தலில் ராஜி எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ, அது நன்றாகவே நடந்தது.

அத்தை பெயருக்குக் கொடுத்த செக்கை அப்படியே எடுத்து வந்து ஆஸ்பத்திரி கவுன்டரில் கொடுத்தால் அவன் என்ன செய்வான்.. எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறதோ என்று நொந்தபடி அன்றைய வேலை நேரம் அத்துடன் முடிந்து போனது ராஜிக்கு..

**********

"மோகன், பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு எனக்கு" கடலையும் அதன் அருகில் விளையாடும் பாலுவையும் பார்த்தபடி சொன்னாள்..

"என்னாச்சு ராஜி, என்ன பிரச்சனை உங்களுக்கு?"

"எனக்கு என்ன பிரச்சனை இல்லை?! ஒரு மனுஷிகிட்டேர்ந்து எத்தனை எதிர்பார்ப்பாங்க மோகன்? மேனேஜர், வேலையைச் சரியா முடிக்கணும்னு எதிர்பார்க்கிறார்.. பாலு, ஒரு நாள் சொன்னதை வாங்கிக் கொடுக்க தாமதமானதற்காக ஒரே கோபம்.. அத்தை, உங்க உறவே வேண்டாம்னு விட்டுட்டு வந்த பின்னும், தேடி வந்து பணம் கேட்கிறாங்க, அது கூட பரவாயில்லை. வேலை நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வரலைன்னு ஒரே கோபம்..... எத்தனை எதிர்பார்ப்பு?!! எங்கயாவது ஓடிடலாம் போலிருக்கு!! அதுவும் இவங்க யார்கிட்டேர்ந்த்தும் நான் எதுவுமே எதிர்பார்க்காத போது.. "

மோகன் சின்னதாக ஒரு புன்னகை பூத்தான்..

"என்ன மோகன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?!!"

மோகனின் புன்னகை இன்னும் பெரிதானது.. ராஜி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. லேசான கோபத்துடன்

"இப்போ செய்யறீங்களே.. இது எதிர்பார்ப்பில்லையா?"

"என்ன? எது?"

"நீங்க ஏதாவது சொன்னால், அதுக்குப் பதில் சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க.. சொல்லாம போனா, உங்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம்.. பாலுவிடம் இதை விட, கொஞ்சம் அதிகம் இருக்கு. உங்க அத்தையிடம் இன்னும் கொஞ்சம்.. மேனேஜரிடம் கொஞ்சம்.. அவ்வளவு தான்.. இதெல்லாம் ஒரு உரிமை தானே.. எதிர்பார்க்கக் கூடிய அளவு உங்களிடம் ஏதோ உரிமை இருக்கு.. இல்லைன்னா, ஏதோ அன்பு.. இந்த மாதிரி உரிமையும், ஒரு நாள் எதிர்பார்ப்பும், கோபங்களும் இல்லைன்னா, வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும் இல்லையா?" சொல்லிக் கொண்டே வந்தவன், செல்பேசி அழைத்ததில் எடுத்துப் பேசத் தொடங்கினான்..

"அம்மா, போன தடவை வந்தப்போ சொன்னியே சோளம் சாப்பிடலாம்னு.. நீயே கேட்பேன்னு பார்த்தேன்.. ம்ஹும்.. இனி வேண்டாம் போ..!" என்று அலுத்துக் கொண்ட பாலுவைப் பார்த்து ராஜிக்கு இந்த முறை எந்த அலுப்பும் வரவில்லை.

(நன்றி தமிழோவியம்)

Friday, September 08, 2006

உள்ளங்கையில் உறங்கும் நாள்







தோள் மேலமர்ந்து
சாமி பார்த்த நாட்கள்..

என் தலை நோகாது
உன் கை நோகக்
குளிக்க வைத்த நாட்கள்..

ஒற்றைக் கையால்
குளத்தில் எறிந்து
நீந்த வைத்த நாட்கள்..

மகளென
மலர்ந்ததில்
இழந்தது
எத்தனை?!

மீண்டும்
மழலை திரும்ப
வேண்டும்,
உன் போர்வையில் புகுந்து
உள்ளங்கைகளில்
உறங்கும்
ஒரு நாளுக்காகவேனும்


நன்றி தமிழோவியம்

Thursday, September 07, 2006

நட்புக்காலம்



நானே ரசிக்காத
என் கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்..

படிக்கவும்
ரசிக்கவும்
நிமிடங்கள் இல்லை என்னிடம்

புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!

Wednesday, September 06, 2006

ரகசியக் குறிப்பு



கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..

சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று..

பொன்ஸ் என்னும் வாசகி

என் வாழ்க்கையின் மிக அழகான விபத்துகளில் ஒன்று வலைப்பதிவுகளில் தழிழைக் கண்டுபிடித்தது. அதை விடப் பெரிய விபத்து சந்திரா அத்தைக்குக் கிடைத்த பரிசு என்று சொல்லலாம்.

பெரிய இலக்குகள் ஏதும் இல்லாத என் இலக்கியப் பயணம் தொடங்கியது என் அத்தைப் பாட்டியின் கதைகளில் தான். பெயர் தெரியாத 'ஈ' ஒன்றைப் பற்றிய செவிவழிக் கதையை, சொல்லிக் கொடுத்தவருக்கே சொந்த சரக்கு சேர்த்து, மழலை மாறாத வயதிலேயே சொல்லிக் காட்டியதில் தொடங்கி, கல்கி, சாண்டில்யனில் மூழ்கி முத்தெடுக்கும் சக எண்பதினர் போலவே தொடர்ந்து, இன்று தமிழோவியத்தின் சிறப்பு ஆசிரியர் என்பது நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி.

என் கதை கவிதைகளுக்கு என் தங்கையும், பாட்டியும், பொறுக்கி எடுத்த சில நண்பர்களுமே வாசகர்களாக இருந்த போதும், என்னை எழுத்தாளராக நான் ஒருபோதும் அடையாளப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை. எழுதுவதை விட வாசிப்பது சுகமானது.

கோகுலம், சிறுவர் மலர் என்று ஆரம்பித்த என் வாசிப்பு, மெல்ல மெல்ல வீட்டுக்கு வரும் எல்லா விதமான வெகுஜன பத்திரிக்கைகளில் தொடங்கி, காபிப் பொடி அரைக்கும் கடைகள், அப்பாவுடன் காத்திருக்கும் முடி திருத்தகங்கள், சுண்டல் மடித்தக் காகிதங்கள் என்று ஆறு வயதில் கிட்டப் பார்வைக் குறையைக் கண்டு பிடிக்கும் வரை என்னைச் சுற்றிலும் உலகம் புத்தகங்களால் நிறைந்திருந்தது.. ஆங்கில வழிக் கல்வி பாட புத்தகங்களில் இருந்தாலும், புற உலகம் தமிழால் தான் நிரம்பி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தது என் ஆர்வம் மட்டுமே.. தங்கை படித்த ஆங்கில கோகுலத்தைக் கூட நான் திருப்பிப் பார்த்ததில்லை.

பள்ளியிறுதிக்குள் என் பாட்டியின் புத்தக சாலையில் நான் இரண்டாம் முறையாகப் படிக்காத ஒரு புத்தகம் கூட இல்லாமல் போக, அதிக இலக்கியச் செறிவில்லாத என் மற்ற உறவினர் வீட்டு பாக்கெட் நாவல்களையும் விடாமல், பரண் ஏறிப் படித்துவிட்டிருந்தேன். கல்லூரிக் காலங்களில் கவனம் கொஞ்சம் மாறி, திரைப்படம் பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. கல்லூரி முடிந்து மீண்டும் வேலைக்கு என்று தமிழ்நாடு தாண்டிச் சென்றபோது நண்பர்கள் உதவியால் ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுகமாயின.

மென்பொருள் வேலையில் பெஞ்சைத் தேய்த்த சில கணங்களில் திண்ணை, தமிழோவியம், மரத்தடி முதலான இணைய பத்திரிக்கைகளையும் வாசித்திருக்கிறேன். மென்பொருள் துறையில் இருக்கும் இன்னுமொரு புத்தக வாசகியாக இருந்திருக்க வேண்டியவள், எதேச்சையாகக் கண்டு பிடித்த பதிவுலகில் தடுக்கி விழுந்து இன்று சிறப்பாசிரியராக பதவி உயர்வு.

சிறப்பாசிரியரோ, சிரிப்பாசிரியரோ.. வேறு வழியில்லை; இந்த வாரம், நம்ம ராஜ்ஜியம்! இலக்கியவாதிகளும், பத்திரிக்கை ஆசிரியர்களும் அலங்கரித்த இந்த நாற்காலியில் நானும் அமர்ந்துவிட்டேன்... உங்கள் ஆதரவுடன்..

கோப்புக்காக